Sunday, 17 September 2017

தந்தை பெரியார் 90-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 90-வது பிறந்தநாள் செய்தி


எனது நிலை
எனக்கு வயது 90.
உடல் நிலை மிகவும் மோசம். கைகால் நடுக்கம் அதிகம். சிறுநீர் கழிக்கும்போது சப்தம் போட்டுக்கொண்டுதான் கழிக்கிறேன் அதாவது அவ்வளவு வலி. தூக்கம் சரியாய் வருவதில்லை.
நினைத்தபோது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலியேற்பட்டு சில ஏப்பமோ காற்றுப் பிரிவோ ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது. உண்ட உணவு சரியானபடி ஜீரணமாவதில்லை. முன்போல் உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை. எந்தக் காரியம் பற்றியும் மனதிற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை. களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. நெஞ்சில் வலி திடீரென ஏற்படுவதும் வந்த பிறகு குறைவுதுமாக இருக்கிறது. எதைப் பற்றியும் சலிப்பும், வெறுப்பும் ஏற்பட்டு விடுகிறது.

சுருக்கமாக சொல்வதானால் வாழ்வே வெறுப்பாக இருக்கிறது.
என்றாலும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள்.
அந்தப் படி என்னை மக்கள் அழைக்காமல் இருப்பதற்காகவே எனது வழிச் செலவுத் தொகையை ரூ.100-ல் இருந்து ரூ.150ஆக ஏற்படுத்தி விட்டேன்.
நூறு ரூபாய் எனக்கு வண்டிச் செலவு, ரிப்பேர் செலவு, வைத்தியச் செலவு முதியவைகளுக்கு அனேகமாக சரியாய்ப் போய் விடும். சில சமயங்களில் போதாமல் போகும். ஒரு தடவையில் 2,3 பயணம் ஏற்பட்டால் ஒரு அளவு மீதியாகி பிரசாரத்திற்கு பயன்படும்.
இப்போது எனக்குப் பெரிய வண்டி வரப்போகிறது. செலவு அதிகமாகும். எனக்கு பிராசாரத்திற்கே வேறு அநேக செலவு இருக்கிறது. எனக்கு இனி பிரசாரத்தில் ஆசை இல்லை. ஒரு வாரப்பத்திரிக்கைத் துவக்கி அதற்கு ஆசிரியனாக இருந்து எழுதிக் கொண்டு இருக்க வேண்டும் எனபதில் தான் ஆசை அதிகமாக இருக்கிறது. வெளியாக்கப்பட வேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது. இதற்காக எளிதில் காணமுடியாத ஒரு தனி இடத்திற்கு போகலாமா அல்லது ஈரோட்டிற்கே போய் விடலாமா என்று கூட எண்ணுகிறேன்
இனி என் ஆயுள் எவ்வளவு இருக்க முடியும் என்பதில் எனக்கு கவலை இல்லை. இருந்தவரைக் தொண்டு செய்யலாம் என்றுதான் திட்டம் போடுகிறேன்.
ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதும், ஏற்படுவதும் இயற்கையேயாகும். அது போல் என் முடிவும் இருக்கலாம்.
பொதுவாக என் மனம் குழப்பமாக இருக்கிறது. துறவி ஆகிவிடுவேனோ என்னவோ !
ஈ.வெ.ராமசாமி கழக தோழர்களுக்கு:
சுய மரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களும், தி.மு.க.விலும், காங்கிரசில் உள்ளவர்களில் பகுத்தறிவு, தமிழர் இனஉணர்ச்சி உள்ளவர்களும், அரசியலில் அதிகாரிகளாய், குமாஸ்தாக்களாய், பணியாளர்களாய் உள்ளவர்களில் தமிழர் உணர்ச்சியாளர்களாய் இருப்பவர்களும் தங்கள் தங்கள் வீட்டில், தொழில் மனைகளில் வாகனங்களில் உள்ள கடவுள், மத, புராண, இதிகாச கதைகள் முதலியவை சம்பந்தமான உருவப்படங்கள் எதுவானாலும் அவைகைள அப்புறப்படுத்திவிட வேண்டும், கணடிப்பாய் அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று மிக்க மரியாதையாய் வணக்கமாய் வேண்டிக் கொள்ளுகிறேன்.
பார்ப்பனரைப் பார்த்து பிழையுங்கள்
அரசாங்கப்பணி மனையில் தொங்கும் படங்களை எடுத்துவிடுங்கள் என்று சொன்னவுடன் எல்லாப் பார்ப்பனர்களுக்கும் எவ்வளவு ஆத்திரம் வந்தது ? நீங்கள் தான் பார்த்தீர்களே இராஜாஜி மிரட்டுகிறார் , “மித்திரன்’ ‘தினமணி” “இந்து” “மெயில்” “எக்ஸ்பிரஸ்” முதலிய பார்ப்பன பத்திரிகைகள்
மிரட்டுகின்றன ; விஷமப் பிரசாரங்கள் செய்கின்றன. இந்த ஒரு பிரச்சனையைக் கொண்டே தி.மு.க ஆட்சியையே கவிழ்க்கப் பார்க்கின்றனர். ஏன் ?
தங்கள் ஜாதி உயர்வும், நம் ஜாதி இழிவும் அந்தப் படங்கள் தொங்குவதில் உயிர்வாழ்கின்றன. அவை(படங்கள்) போய்விட்டால் உயர்வு தாழ்வு போய்விடுமே என்கின்ற கவலைதானே மற்றபடி அப்படங்களில் என்ன இருக்கின்றது? அவர்கள் சமுதாய உயர்வுக்கு அவர்கள் (பார்ப்பனர்கள்) அவ்வளவு பாடுபடுகின்றார்கள்.
நமக்கு மானஉணர்ச்சி வேண்டாமா ?
நமக்கு புத்தி-மான உணர்ச்சி இருக்க வேண்டாமா ? அந்தப் படங்களில் கடவுள் இல்லை என்பதற்குஆக அவற்றை எடுத்து எறியாவிட்டாலும் நமது ஈனநிலை, இழிவு நிலை பார்ப்பான் உயர்வு நிலை அதில் இருக்கிறது என்பதற்கு ஆகவாவது அவற்றை நமது அரசியல் பணி மனைகளிலிருந்தும் அதைவிட நமது வீடுகளிலிருந்தும் தொழில் ஸ்தாபனங்கங்களிலிருந்தும் எடுத்து எறிய வேண்டாமா என்று கேட்கிறேன்.
தோழர்களே! இனியாவது செய்து நீங்கள இழி ஜாதிமக்கள் அல்ல என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டாமா ?
உங்கள் தாயார், சகோதரி, மனைவி, மகள்கள் பார்ப்பானுக்கு வைப்பாட்டி, காமக்கிழத்தி ஆனவர்கள் அல்ல, ஆக வேண்டியவர்கள் அல்ல என்பதை காட்டிக்கொள்ள வேண்டாமா ?
இதற்குஆக நான் 45 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறேன். அதன் பலன் இதுவாகவாவது (இந்தப்படங்களை அப்புறப்படுத்த வாவது) பயன்பட்டது என்று இருக்க வேண்டும்.

என் 90-வது பிறந்தநாள் பரிசாக செய்து காட்டுங்கள்
நம் நல்வாய்ப்பாக தி.மு.க. ஆட்சி ஏற்பட்டது, அதை ஒழியும்படி செய்தீர்கள் ஆனால் பிறகு உங்கள் கதி என்ன ஆவது ? நானும் இனியும் (90க்கு மேல்) வாழ முடியுமா ? எனக்குப்புறம் உங்களுக்கு இதை யார் சொல்லுவார்கள் ? தி.மு.க. ஆட்சிக்கு அப்புறம் யார் இந்த உத்தரவு போடுவார்கள் ? எல்லோரும் மாறான காரியத்தை அல்லவா செய்வார்கள் ! நீங்கள் பழைய நிலைக்குத்தான் போக வேண்டி இருக்கும். ஆகவே எனக்கு 90-வது ஆண்டு பிறந்தநாள் பரிசாக இதையாவது செய்யுங்கள் செய்து காட்டுங்கள் என்று வணங்கி கேட்டுக் கொள்கிறேன். இது கிடைக்கப் பெற்ற ஒவ்வொருவரும் இதை மற்றவருக்குப் படித்துகாட்டுங்கள்.
ஈ.வெ.ராமசாமி


குறிப்பு: இந்த அறிக்கை வந்த சமயம் அண்ணா சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார். இதைப் படித்துவிட்டு மனம் பதைபதைத்து பெரியார்க்குக் கடிதம் எழுதினர்.

தந்தை பெரியார் 89-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 89-வது பிறந்தநாள் செய்தி


பிறந்தநாள் விண்ணப்பம்
எனக்கு இன்று முதல் 89வது வயது தொடங்குகிறது. என் வாழ்வு எவ்வளவோ கவலை, தொல்லைத் துன்பங்களுக்கு, ஆட்பட்டதாய் இருந்தாலும் சாரசரிமக்கள் வாழவுக்குக்குறைந்ததாய் இல்லாமல் மேம்பட்ட வாழ்வாகவே நடந்திருக்கிறது.
நான் என்றென்றும் சுதந்தர எண்ணமுடையவன்
நான் சிறுவயது முதற்கொண்டே சுதந்திர எண்ணமுடையவ னாகவும், நான் சொல்கிறபடி மக்கள் நடக்கவேண்டுமென்கின்ற உணர்ச்சியுள்ளவனாகவுமிருந்தே வாழ்ந்திருக்கிறேனே ஒழிய மற்றொருவர் சொல்கிறபடி நடக்க வேண்டுமென்கின்ற எண்ணமற்றவனாகவே இருந்திருக்கிறேன். இன்றைக்கும் அப்படியே இருக்கிறேன்.
எனது சரித்திரத்தில் எனக்கு தலைவனே இருந்ததில்லை.
எனது பத்தாவது வயதில் பிரைமரி நான்காவது வகுப்பு பாஸ் செய்துவிட்டு வியாபாரத் துறையில் எனது தகப்பனார் மணடிக் கடையில் கையாளாக ஆகிவிட்டேன்.
எனது குழந்தை பருவ வளர்ச்சி
என் குழந்தைப் பருவத்தில் என் தாயாருக்கு உள்ள இரண்டு குழந்தைகளில் நான் இரண்டாவது குழ்நதையாக இருக்கும் போது என்னை என் தகப்பனாருடைய சிறிய தாயாருக்கு வளர்த்துக் கொள்ளும்படி "தத்து’ போல் கொடுத்துவிட்டார்கள். அதனால் நான் ஒரு அடங்காப்பிடாரியாகவும்,தறுதலை என்று சொல்லும் படியாகவும், சில சமயங்களில் ஒரு நாள் இரண்டு நாள் கூட வீட்டுக்கு வராமல் ஊர் சுற்றிக்கொண்டு திரிபவனாகவும் இருந்தி ருக்கிறேன். அப்போது எனது வளர்ப்புத்தாய நான் என்னைப் பெற்ற தாய் வீட்டிற்குப் போயிருப்பேனோ என்று தேடாமலும், கவலைப்படாமலும் இருந்துவிடுவார்கள்.
எனக்கு நானே தலைவன்
இப்படிப்பட்ட என் சிறுவயதில் இதுபோன்ற சில பையன்கள் சேர்க்கை எனக்குண்டு. அந்தச் சேர்க்கைக் கூட்டத்திற்கு நான் தான் மேலாளாக (தவைனாக) இருப்பேன். தெரு சுற்றிக்கொண்டு திரிவதில் ஜாதி பார்ப்பதோ, எச்சில், சுத்தம், அசுத்தம் பார்ப்பதோ கிடையாது. எச்சில் பீடியை பொறுக்கி வந்து பீடி புகைப்போம். அப்பொழுது குழந்தைகளுக்கு சாந்தி கழிப்பது என்ற வழக்கம் அதிகம். அமாவாசை ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசை சில "விசேஃ” நாட்களில் சாந்தி கழித்த அந்த சாந்திப்பண்டங்களை முச்சந்தியில் கொண்டு வந்து கொட்டிவிட்டுப் போய் விடுவார்கள். நாங்கள் அவைகளில் உள்ள பண்டங்களைப் பொறுக்கி எடுத்து வந்து பங்குபோட்டுக் கொண்டு சாப்பிடுவோம். புத்து வயதாகி கடைக்கு கையாளாக ஆனவுடன் இந்த நேசமும் பழக்கமும் மறைந்துவிட்டது. என்றாலும், கடைக்கு வருகிறவர்களுடன் பெரிய வாயாடி போல் எதையாவது பேசி அரட்டை அடிப்பதில் பழக்கம் அதிகமாகி யாரும் என்னை விரும்பும்படி ஆகிவிட்டேன். கடை வியாபாரம் என்றால் அது தரகுமண்டி வியாபாரம். அதாவது கிராமத்து மக்கள், மிளகாய், மஞ்சள் மற்றும் விளைந்த தானியங்கள் முதலியவைகளைக் கொண்டுவந்து எங்கள் கடையில் போட்டு விற்றுக் கொடுக்கச் சொல்லுவார்கள். இதுபோலவே சில கிராம வியாபாரிகளும் கிராமங்களிலும் கிராமச் சந்தைகளிலும் வாங்கிய சரக்குகளை எங்கள் கடையில் போட்டு விற்றுக்கொடுக்கச் சொல்லுவார்கள். இப்படியாக ஒரு நாளைக்கு சராசரி இருபது பேர் முப்பது பேர் வருவார்கள். சில நாளைக்கு அய்ம்பது பெர் கூட வருவார்கள். இவர்களிடம் அரட்டை அடிப்பது தான் என் ஒழிந்த நேர வேலை. இந்த அரட்டை, எங்கள் கடைக்கும், வீட்டிற்கும் காசு பெற வரும் பக்தர்கள்,புலவர்கள், பாகவதர்கள், சன்யாசிகள் இவர்களிடமும் அவர்கள் வேஷத்தையும், அவர்கள் பேசும் விஷயங்களையும் பற்றி கேலி செய்யும்படியும் வளர்ந்தவிட்டது.
எனக்குள் நான் செய்துகொண்ட வாதமே என்னை பகுத்தறிவுவாதியாக்கியது. இப்படிப்பட்ட அரட்டையும், வாதமும் தான் 1900லேயே அதற்கு முன்பே என்னைப் பகுத்தறிவுவாதியாக (நாத்திகனாக) ஆக்கிவிட்டது.
அப்படியிருந்தாலும் ஆத்திகமான காரியங்களில் கலந்து கொள்வதில் நான் பின்வாங்குவதில்லை. அதில் ஏற்படும், அதனால் வரும் பெருமைகளை அடைவதில் நான் தவறுவதில்லை.
காரணம் அக்காலத்தில் ஈரோட்டில் எங்கள் கடை தான் பெரிய கடை எங்கள் வீடுதான் பெரிய வீடு , எங்கள் தகப்பனார் தான் ஊருக்கு பெரிய மனிதர் ஒரு அளவுக்குப் பணக்காரரும் கூட!
இந்த நிலையில் எல்லாக் காரியங்களிலும் கல்ந்து கொள்வது போல் ஆத்திகக் காரியங்களிலும் கலந்து கொள்ளுவேன்.
என் முழு முதற்பணி, மூடநம்பிக்கை ஒழிப்பே
நான் தேவஸ்தான கமிட்டி, செகரட்டரியாக, தலைவனாக 15 ஆண்டு போல் இருந்திருக்கிறேன். அந்தக் கடைமைகளிலும் நான் தவறவிவ்லை. ஆனாலும் மக்கள் மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும் மக்களைப் பகுத்திறவுவாதிகளாக ஆக்க வேண்டுமென்பதிலும் எனக்கு 1925-ஆம் அண்டு முதல் உறுதியான எண்ணமும் ஆசையும் உண்டு. இதற்குக் காரணம் ஆத்திகத்தால் (கடவுள்,மத நம்பிக்கை ஆதிக்கத்தால்) தான் இந்த நாட்டில் ஜாதி (பார்ப்பான் “பிராமணனாய்’ வாழ்வதும்) அரசியல் மத ஆதிக்கத்தில் பார்ப்பான் இருந்து கொண்டு சமுதாய வளர்ச்சியையும், அறிவு (விஞ்ஞான) வளர்ச்சியையும் தடைசெய்து கொண்டு இருக்கிறான் என்பதும் எனது உறுதியாக எண்ணம் என்பதோடு நான் எந்த ஸ்தாபனம் வைத்திருந்தாலும், எந்தக் கட்சியை ஆதரித்தாலும், யாரோடு சேர்ந்தாலும், யாரை விரோதித்தாலும் அவற்றிற்கெல்லாம் இதுவே காரணமாகும்.
இப்பொழுது காங்கிரஸ்காரர் பலரை வெறுக்கிறேன் என்றாலும் திமுககாரர் பலரை நேசிக்கிறேன என்றாலும் இதுவே தான் காரணம்.
இந்திய சரித்திரத்திலேயே புத்தன், அசோகன் ஆட்சிக்குப் பிறகு நமது நாட்டுக்கு இன்றுதானே பகுத்திறவாளர் (நாத்திகர்) ஆட்சி ஏற்பட்டிருக்கிறது. இதை ஆத்திகர் எதிர்க்கலாம். ஆனால் பகுத்திறவாளர் (நாத்திகர்) என்பவர்களின் கடமை என்ன ?
அரசியல் குறை எல்லா ஆட்சியிலும் நடக்கும்
அரசியல் “குற்றம் குறை” என்பது யாருடைய ஆட்சியிலும் எந்த அளவுக்காவது நடந்து தான் தீரும்.
அக்காலத்தில் ஜஸ்டிஸ் (திராவிடர் கழக) ஆட்சியைக் காங்கிரஸ்காரர்கள் எப்படி யெப்படி யெல்லாம் எதிர்த்தார்களோ (“தாலியறுத்தார் இராமசாமி முதலியார்”என்று சொல்லி) அப்படியெல்லாம் அப்போதும் சொல்லுவார்கள் : எதிர்ப்பார்கள். தப்பு பிரச்சாரம் செய்வார்கள். நல்ல காரியம் எதையும் செய்யவிடாமல் தடுப்பார்கள் கலகம் குழப்பம் செய்வார்கள் நமது மக்களுக்கு அவற்றை உணரும் சக்தியில்ல்ை இருக்காது என்றாலும் இதில் சுயமரியாதை இயக்கத்தார், திராவிடர் கழகத்தார் கடமை என்னவென்பதை நல்லவண்ணம் சிநதித்து நடந்து கொள்ளவேண்டும்.
காங்கிரஸ் பிரசாரமுறை மாறவேண்டும்
இந்தியாவில் சரிபகுதி காங்கிரசிற்கு எதிர்ப்பாகிவிட்டது. என்றாலும் காங்கிரசார் மக்களைத் தாங்கள் பக்கம் திருப்ப மக்களிடம் பிரசாரம் செய்வதை விட்விட்டு எதிர்ப்பு ஸ்தாபனங்களை அழிக்கப்பாடுபடுகிறாாகள். இது “தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிற கதை'யாகத் தான் முடியும். காங்கிரசார் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று காட்டிக் கொள்ளாதவரை நாம் எப்படி இன்று காங்கிரசை ஆதரிக்க முடியும் ?
சு-ம, தி.க.வை எதிர்த்தால், தி.மு.க. படகு கவிழ்ந்துவிடும்!
தி.மு.க.காரரும் என்ன செய்தாவது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்கின்ற ஆர்வத்தில் தாங்கள் இருவரும் படகில் ஒட்டை ஏற்படும்படிச் செய்து கொள்வதும் ஒரு வழியென்று நினைப்பார்களாளனால் அது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதாகாது. மூழ்கடித்துக் கொள்வதுதானாகும். அவர்கள் முயற்சியில் கூடியவரை சுயமரியாதைக்காரரையும் திராவிடர்கழகத்தாரையும் விரோதித்துக் கொள்ளமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தங்கள் மக்களுக்கு அடக்கத்தைப் போதிக்க வேண்டும். சிறுதகராறு, கோளாறுகளை சிறிது விட்டுக் கொடுத்தாவது பொறுமைகாட்டி சரிப்படுத்திக் கொள்ளவேண்டும். இன்னும் இரு கூட்டத்திலும் தங்களை ஒருவருக்கொருவர் விரோதிகள் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். அது தவறு.
இன்று பார்ப்பனரும் காங்கிரசாரும் ஒன்றாகிவிட வில்லையா ? ஒருவருக்கொருவர் எவ்வளவு சிபாரிசு , எவ்வளவு ஆதரவு! அந்தப் புத்தி நமக்கு வரவேண்டாமா ?
பகுத்திறவு பிரசாரத்தில் ஈடுபடவேண்டும்
தலைவர்களுக்கு மிக்க பொறுப்பு வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் அடக்கிக்கொண்டுதான் வருகிறேன். ஒருநாள் இரண்டுநாள் அல்ல இன்னும் நாலரை வருடம் இருக்கிறது. அடுத்த எலக்ஃன் எப்படி ஆனாலும் எனக்கு கவலையில்லை. அது வரை தி.மு.க. ஆட்சி நல்லபடி நடக்கவேண்டும். பல அரிய காரியங்களைச் செய்ய வேண்டும். கட்டுப்பாடு, ஒற்றுமை, எதிர்க்கட்சியாரிடம் பொறுமை, அடக்கம் வேண்டும். நமது தோழர்கள் இனி பகுத்தறிவுப் பிரசாரத்தில் தான் கவலை கொள்ளவேண்டும். மக்களிடம் இலட்சக்கணக்கில் அவர்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று கையொப்பம் வாங்க வேண்டும். கையொப்பம் வாங்க அலவன்ஸ் கொடுத்துத் தொண்டர்களை நியமிக்க வேண்டும். தங்களுக்கு வேலை இல்லையென்று யாரும் நினைக்கக்கூடாது.இது தான் நமது நிர்மாணத்திட்டம்.

நான் எதற்கும் தயார் ! உங்கள் கடடை என்ன ?
எனது காயலா சற்று கடினமானது தான். எளிதில் குணமாகாது. மூத்திரவழியில் கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக்கணக்கில் காலமாகும். ஒருசமயம் ஆபரேசன் (அறுவை சிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராகவே இருக்கிறேள். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது. உங்கள் கடமையிலிருந்து தவறாதீர்கள்.

ஈ.வெ.ராமசாமி


தந்தை பெரியார் 88-வது பிறந்தநாள் செய்தி



தந்தை பெரியார் 88-வது பிறந்தநாள் செய்தி


எனது விண்ணப்பம்

எனக்கு இன்று (17-9-66 பராபவ புரட்டாசி2ம் தேதி) முதல் 88-ம் ஆண்டு பிறக்கிறது. நான் பேராசைக்காரனாக இல்லாமல், இயற்கையை ஒரளவுக்காவது உணர்ந்தவனாக இருப்பவனானால் உங்கள் எல்லோரிடமும் முடிவுப் பயணம் சொல்லிக் கொள்ள வேண்டியவயேயாவேன்.
அது மாத்திரமல்லாமல் நான் சிறிதளவாவது பகுத்தறிவு உடையவனாகயிருந்தால் என் வாழ்வில், எனது இலட்சியத்தில் முழு திருப்தியடைந்து ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டியவனாவேன்.
என் உடலைப் பற்றிய எவ்வித கவலையும் இன்றி, நேர்ந்தபடி நடந்து, கிடைத்ததையெல்லாம் நேர் கூறு இன்றி உண்டு அனுபவித்து வந்த நான் 87 ஆண்டு முடிந்து 88-ம் வயதில் புகுகின்றேன் என்ற அதிசயத்தை நினைத்துத்தான் இனிமேலும் வாழ ஆசைப்படுவது பேராசை என்று குறிப்பிட்டேன்.
இலட்சிய வெற்றியிலேயே திருப்தி
அதுபோலவே தான் ஒரு சார்பும் இல்லாதவனாக தனித்து எந்த ஒரு ஆதரவும் அற்றவனாகி என்னையே எண்ணி நின்று பாமர மக்களுடையவும்,படித்தவர்களுடையவும், பிறவி ஆதிக்காரர்களாகிய பார்ப்பனருடையவும், சாவ் சக்தி உள்ள பத்திரிகைகாரர்களுடையவும், போராக்குறைக்கு அரசாங்கத்தாருடையவும் வெறுப்புக்கும், அதிருப்திக்கும், எதிர்ப்புக்கும், விஷமப்பிரசாரத்திற்கும், ண்டனை கண்டனைகளுக்கும் ஆளாக இருந்து, எதிர்ப்பையும், போராட்டங்களையும், சூழ்ச்சிகளையும் சமாளித்து பொதுமக்களால் கனவு என்று கருதப்பட்ட எனது இலட்சியங்களைஇவை கனவு அல்லஉண்மை நினைவேகாரிய சாத்தியமேஎன்று கூறிவந்து அவை (எனது இலட்சியங்)களின் நடப்புகளையும், நடப்புக்கு ஏற்ற இலட்சியத்தில் என் தகுதிக்கு ஏற்ற அளவில் முழுதிருப்தி அடைகிறேன் என்று குறிப்பிட்டேன்.
விளக்கம்

நான் காங்கிரசிலிருந்து விலகிய
1925-ம் ஆண்டிலேயே அன்றைய நிலைமைகளைக் கருதிஇனி இந்தியாவின் ஆட்சி ஜனநாயகமாகத்தான் இருக்க வேண்டும்என்று இந்த நாட்டில் முதல் முதல் கருதியவன் நான் தான். அதற்கு ஆதாரம் 1919-ல் நான் துவக்கியகுடி அரசுஎன்று பெயர் வைத்தது.
 
ஜனநாயகம்எனபது வடமொழி. அதற்கு நேரான தமிழ் மொழி தான்குடி அரசுஎன்பது.
காங்கிரசின் கொள்ளையெல்லாம் 1885 முதல் 1945 வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் குடியேற்ற நாட்டு அந்தஸ்து இதற்கு காந்தியார் விளக்கம் சொன்ன போதுமக்கள் இஷ்டப்படி பிரிட்டிஷ் சர்க்கார் ஆட்சி நடைபெற வேண்டும்என்று கூறினார்.
காங்கிரசில் ஒரு சிறு சாரார் தங்களை தீவிரவாதிகளாக மக்கள் கருத வேண்டும் என்ற கருத்தில்இந்தியாவுக்கு வேண்டியது பூரண சுயராஜ்யம்என்று சிலர் கூறி வந்தார்கள். இவையெல்லாம் கூட“குடி அரசுபத்திரிகை பிரசாரம் ஆரம்பித்த 10, 15 ஆண்டுகளுக்கு பிறகு தான்.
இந்த பிரச்னை அமுலுக்கு எடுத்தக் கொள்ளப்பட்டது போல் 1950 வாக்கில்இந்திய ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்க வேண்டுமென்று பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது.


40 ஆண்டுகட்கு முன்பே சமதர்மம் கோரி பிரசாரம்
குடி அரசு ஆட்சியின் கொள்கை சமதர்மமாக இருக்க வேண்டுமென்று 1927, 1928ம் ஆண்டிலேயுே சுயமரியாதை இயக்க மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி 1930ம் ஆண்டு ஈரோடு மாநாட்டில் சமதர்மத்திற்கு விளக்க தீர்மானங்களாக :
ஒரு நபர் ஒன்றுக்கு 5 ஏக்கர் நிலத்திற்கு மேல் இருக்கக்கூடர்து என்றும், அதுவம் உழுகிறவனுக்குத் தான் நிலம் இருக்க வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.1934ம் ஆண்டு சென்னை விக்டோரியா மண்டபத்தில் நடந்த ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் சுயமரியாதை இயக்க தீர்மானமாக சமதர்ம தீாமானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

அதோடு மாத்திரமல்லாமல் பொது உடைமைக் கொள்கைகளும் பிராசாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது.
இவற்றை ஏன் இப்போது குறிப்பிடுகிறேன் என்றால் மேலே குறிப்பிட்ட எனதுகனவுகளை நினைவாக, நேரிடையாக செயல்படவிருக்கும் நிலையை மக்களுக்கு தெரிவிக்கவும், இவைகள் எனக்கு எதிர் காலத்தைப் பற்றி திருப்தி அளிக்கக் கூடியவையல்லவா என்பதை விளக்குவதற்கேயாகும்.
மற்றும் பண்டங்கள் உற்பத்தி செய்பவர்களுக்கும், உபயோகிப்போருக்கும் இடையில் எந்த உருவ தரகர்களும் இருக்கக்கூடாது என்பதும் ஈரோட்டு தீர்மானமாகும். அதுவும் நல்ல அளவுக்கு அமுலில் வர இருக்கிறது.
கல்வி இலட்சியம் நிறைவேறிவிட்டது
கல்வி விஷயம் எனது இலட்சியத்திற்கு மேலாகக் கூட போகும் போல் இருக்கிறது !அதாவது பி.யூ.சி. அன்றைய பத்தாவது வகுப்பு இன்றையபதினொன்றாவது'வகுப்பு வரை தான் சர்க்கார் அளிக்கும் இலவசக் கல்வியாக இருக்க வேண்டும். மற்ற உயர்தரக் கல்வி  தேவை உள்ள ஆள்களுக்கு மாத்திரம் சார்க்கார் கல்வி அளித்துவிட்டு பொதுமக்களை (எல்லாச் செலவும்) தங்கள் தங்கள் செலவிலேயே கற்று வரும்படி செய்ய வேண்டும். உயர்தரக் கல்விக்கு (காலேஜ் கல்விக்கு) சர்க்கார் ஒரு காசும் செலவு செய்யக்கூடாதுஎன்று சுயமரியாதை இயக்க மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறேன். ஆனால் அது அன்று எல்லா மக்களுக்கும் எல்லா செலவுகளும் சர்க்காரே ஏற்று இலவசக் கல்வியாக ஆக்கப் போவதாக தெரிகிறது.
எனவே நான் எனது இலட்சியத்தில் மனக்குறையுடைய வேண்டிநிலையில்லாதவனாக இருக்கிறேன்.இதை 45 மாதங்களுக்கு முன் காமராஜர் புகழ்ச்சியோடு வெளியிட்டார்.அதாவது
பெரியாருக்கு இன்று என்ன குறை? அவர் போட்ட பாதையில் தான் இன்று காங்கிரஸ் போய்க் கொண்டிருக்கிறது ; அவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லைஎன்பதாகப் பேசினார்.

மக்களின் கவலையற்ற தன்மையே என் மனக்குறை
இனி எனக்கேதாவது குறை,கவலை இருக்குமானால் அது மக்கள் இடையில் காணப்படும் கவலையற்ற தன்மையும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன்மையும் பற்றித்தான். இந்த நிலைமை காரியத்தைக் கெடுக்கும்படியான அவ்வளவு பலம் அடைய என்றுமே முடியாது என்பதோடு, அதிக காலம் நிலைக்கவும் முடியாது. ஆகையால் அதை ஒரு குறையாகக் கருத வேண்டியதில்லை. ஆனால் சண்டித் தொல்லையாகக் கருதுகின்றேன். மனிதன் துன்பத்திற்கு ஆளாகாவிட்டாலும் தொல்லைக்கு ஆளாவது சகஜம்தான்.


புரடசிக்கு தயாராயிருங்கள் !
எனது அருமைத் தோழர்களுக்கு தேர்தல் முடியும் வரை காங்கிரசை நிபந்தனை இன்றி ஆதரித்து காங்கிரஸ் முழு வெற்றியடையப் பாடுபட வேண்டுமென்பது தான் எனது கட்டளை போன்ற விருப்பமாகும். தேர்தலுக்குப் பிறகு பெரிய புரட்சிப் பணி நமக்கு இருக்கிறது. அதற்குள் தோழர்கள் தங்கள் குடும்பப் பணிகளையும் முடித்துக்கொண்டு போர் முனைக்குச் செல்லும் போர்வீரன் போல் தாய்,தந்தை,மனைவி,மக்களிடம் பயணம் சொல்லிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.

ஈ.வெ.ராமசாமி


தந்தை பெரியார் 87-வது பிறந்தநாள் செய்தி



தந்தை பெரியார் 87-வது பிறந்தநாள் செய்தி


எனது விண்ணப்பம்

சுயமரியாதை இயக்கத் தோற்றம்
நான் 1925-ம் அண்டில் காங்கிரசில் இருந்து விலகிய பின் அரசியல் என்பது நமது நாட்டைப் பொறுத்தவரையில் பார்ப்பன ஆதிக்கத்திற்குப் பார்ப்பனாரால் நடத்தப்படும் போராட்டமேயொழிய, பொதுஜன நன்மைக்கேற்ற ஆட்சி முறை வகுப்பதற்கோ அல்லது வேறு எந்த விதமான பொது நல நன்மைக்கேற்ற லட்சியத்தைக் கொண்டதோ அல்ல என்பதை தெளிவாக உணர்ந்து அப்படிப்பட்ட பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதையும், எந்தக் காரணம் கொண்டும் நமது நாட்டில் இனியும் பார்ப்பன ஆதிக்கம் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது என்பதையும் கருதி, பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஊற்றாக இருந்து வரும் கடவுள், மத, ஜாதித் தத்துவங்களையும், இந்தத் தத்தவத்திற்கு இடமாக விருக்கிற மூட நம்பிக்கையும், மூட நம்பிக்கையை அரசியல், கடவுள், மதம், சாத்திரம், தர்மம் ஆகியவற்றின் பேரால் வளர்க்கும் பாார்ப்பன சமுதாயத்தையும் ஒழிப்பது என்ற கொள்ளை மீது “சுயமரியாதை இயக்கம்” என்பதாக ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்து, நானே தோற்றுவித்தவனாகவும், தொண்டாற்றுபவனாகவுமிருந்து பல தோழர்களின் ஆதரவு பெற்று அதை நடத்தி வந்தேன். இந்த நிலையில் காங்கிரசானது அரசியல் ஆதிக்கத்தில் பிரவேசிப்பதில்லை யென்றும், சமுதாயத் தொண்டே தான் காங்கிரசின் பிரதான கொள்கை சொல்லி நிர்மாணத் திட்டம் என்னும் பேரால் பொய் நடிப்பு நடித்து மக்களை ஏமாற்றி வந்த (காங்கிரஸ்) தனது வேடத்தை மாற்றிக் கொண்டு அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றத் துணிந்து வெளிப்படையாகவே அரசியலில் புகுந்து ஆட்சியை கைப்பற்ற முன்வந்து விட்டதையும் உணர்ந்தேன்.
அரசியலில் பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு
பிறகு எனது நிலை மேலே குறிப்பிட்டபடி கடவுள், மதம், ஜாதி, தர்ம, சாத்திர, சம்பிரதாய, பார்ப்பன சமுதாய ஒழிப்பு வேலைகளுடன், அரசியலில் பார்ப்பனர் நுழையாதபடியும், ஆதிக்கம் பெறாமல் இருக்கும்படியும் தொண்டாற்ற வேண்டிய அவசியத்திற்கு ஆளாக நேரிட்டுவிட்டது. அதாவது இவ்வளவு துறையிலும் பாடுபட வேண்டியதே எனக்கு சமுதாயத் தொண்டனாக ஆகிவிட்டது. இதன் பயனாய் எனது வேலை இரட்டித்துவிட்டதுடன் எதிர்நீச்சல் ேெபால மிக மிகக் கஃடமான காரியமுமாகிவிட்டது. எப்படி எனில் நான் கடவுள், மத, சாஸ்திர, சம்பிரதாய, ஜாதித் துறையில் பாடுபட்டால் எதிரிகள் (பார்ப்பனர்) அரசியல் துறையில் முன்னேறி விடுகிறார்கள். அரசியல் துறையில் ஈடுபட்டால் எதிரிகள் (பார்ப்பனர்) கடவுள், மத, சாஸ்திர, சம்பிரதாய, ஜாதித் துறையில் முன்னேறி விடுகிறார்கள். ஆதலால் இரு துறைகளில் மூடநம்பிக்கையுள்ள பாமரமக்கள் இடையில் வேலை செய்வதென்பது எனக்கு மேற்சொன்னபடி மிக மிகக் கஷ்டமாகவும் காட்டு வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் வேலை போலும் திணற வேண்டியதாகிவிட்டது,
துரோகிகளால் தொல்லை
இதற்கிடையில் எனக்கேற்பட்ட மற்றொரு மாபெரும் தொல்லையென்னவென்றால் என் தொண்டுக்கு ஆதரவாக சேர்ந்து எடத்து அணைத்து பக்குவப்படுத்தி வந்த தோழர்கள் எல்லாம் 100க்கு 100 பேரும் பக்குவமடைந்தவுடன், விளம்பரம் பெற்று பொது மக்கள் மதிப்புக்கு ஆளானவுடன் அத்தனை பேரும் எதிரிக்கு கையாள்களாகவே (எதிரிகளால் சுவாதீனம் செய்யப்பட்டு) எதிரிகளுக்கு பலவழிகளிலும் பயன்படுவர்களாகிவிட்டதோடு எனக்கும், எனது தொண்டிற்கும் எதிரிகளாக, முட்டுக்கட்டைகளாக பலர் விளங்க வேண்டியவர்களாகிவிட்டர்கள். இதற்குக் காரணம் (பிரஹலாதன், விபீஃணன் போல்) நமது ஜாதிப் பிறவித்தன்மை தான் என்று சொல்லவேண்டியதைத் தவிர எனது 40 வருட பொதுத் தொண்டின் அனுபவத்தில் வேறொன்றும் சொல்ல முடியவில்லை.
இந்த நிலையில் 40 ஆண்டுகளாகத் தொண்டாற்றி வந்து இன்றுள்ள நிலையில் எனது தொண்டின் பயனும், நிலையும் இருக்கிதென்றால் என்னைப்பற்றி அறிஞர்கள் தான் விலை மதிக்க வேண்டும்.

எதிர்ப் பிரசாரங்கள்
என்னை விட்டு விலகி எதிரிகளானவர்கள் எதிரிகளின் கையாள்களானவர்கள் ஒழுக்கத்தில் என் மீது குற்றமிருந்து, என் நடத்தையில் கோளாறு இருந்து விலகி இருப்பார்களேயானால் அதற்காக நான் வெட்கப்பட வேண்டியது தான் நியாயமாகும். ஆனால் விலகியவர்கள் அத்தனை பேரும் எதிரிகளோடு சேர்ந்தார்கள் என்பது மாத்திரமல்லாமல் எந்தக் கொள்கைக்காக என்னுடன் இருப்பதாக நடித்தார்களோ அதை அடியோடு விட்டுவிட்டு நேர் எதிரிடையான கொள்கையை மேற்கொண்டும், அதற்கு ஆக்களமளித்தும் முட்டுக்கட்டை போட்டு வருவதும் தான் நமது சமுதாயத்திற்கென்றே ஏற்பட்ட கெட்ட வாய்பப்பாகும் என்று மறுபடியும் சொல்ல வேண்டி இருக்கிறது.
விபீஷணர்களால் பார்ப்பனர் திருப்தி
இந்தியாவிற்கு சமீபத்தில் வந்து போன ஒரு ரஷ்ய பிரமுகரை ஒரு பார்ப்பனர் “இந்தியாவிற்கு யார் வந்தாலும் சங்கராச் சாரியாரைப் பார்த்துவிட்டுப் போவது தான் முக்கிய காரணம்” என்று சொல்லி சங்கராச்சாரியாரிடம் அழைத்துப் போனாராம் ! அந்த ரஷ்யா’ சங்கராச்சாரியாரிடம் பல விஷயங்களைப் பேசிவிட்டு கடைசியாக “உங்கள் நாட்டில் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும், உங்கள் சமுதாயத்திற்கும் விரோதமாக பெரியார் ஒரு இயக்கம் நடத்துகிறாரே அவை பற்றி உங்கள் கருத்து என்ன ? ” என்று கேட்டாராம். அதற்கு சங்கராச்சாரியார் “ ஆமாம் அப்படி ஒரு இயக்கம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது என்றாலும் அது இன்றைக்கு பதினேழு வருடங்களுக்கு முன் வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. ஆனால் இந்த பதினேழு வருடமாக (1948ல் இருந்து) எங்களுக்கு அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. அதன் பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும் இன்று அதனால் எங்களுக்கு எந்த விதத் தொந்தரவும் இல்லை” என்று சொன்னாராம்.
“இப்படி அவர் சொல்லக் காரணம் என்ன?’ என்று அந்த ரஷ்யர் என்னிடம் வந்து கேட்டார் ஆவர் இப்படி என்னைக் கேட்கும் போது ஒரு பார்ப்பனரும் கூட இருந்தார். அதற்கு நான் சொன்ன பதில் “ அது ஒரு நல்ல அளவுக்கு உண்மை தான். எப்படியென்றால் “சுதந்தரம்” வந்த 17 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அது பார்ப்னருக்கு வந்த சுதந்தரமேயாகும் என்பதோடு அதன் பயனாய் நம்மிலிருந்து விளம்பரம் பெற்ற, மக்களிடம் செல்வாக்குப் பெற்ற ஒரு கூட்டம், பார்ப்பனருக்கு (நல்ல நிபந்தனையற்ற) அடிமைகளாகக் கிடைத்துவிட்டது. இந்த இரண்டின் ஆதரவில் பார்ப்பனர் தாங்கள் இழந்ததையெல்லாம் பெற்றுக் கொண்டதோடு மேலேறவும் அவர்களுக்கு நல்ல வசதி ஏற்பட்டுவிட்டது.
பார்ப்பன ஆட்சி மீண்டுவிட்டதே
இது மத்திரமல்லாமல் நானும் இப்படிப்பட்ட பாப்ப்பன சுதந்தரத்தை எதிர்க்கும் வேலையை விட்டு விட்டு இராஜாஜியை ஆட்சியை விட்டு வெளியேற்றி விட்டோம் என்ற ஆணவத்தாலும், காமராஜரிடத்தில் வைத்த அளவுக்கு மீறிய நம்பிக்கையாலும் ‘சுதந்தரத்தை' இ காங்கிரசை, அரசாங்கத்தை ஆதரிக்கும் பணியில் தீவிரமாக பாடுபட்டு வந்தாலும், காமராஜர் ஆட்சியை விட்டுப் போய்விட்டதாலும், அதற்குப் பிறகு "அசல் பார்ப்பனிய” ஆட்சியே தங்கு தடையின்றி நடந்து வருவதாலும், இதனால் பயனாய் சமுதாயத்துறையிலும், மதத்துறையிலும், உத்தியோகத் துறையிலும், கல்வித்துறையிலும் யாதொரு குறைவுமில்லாமல் மேலே போகும்படியான நிலையில் அவர்கள் (பர்ப்பனர்) நிலை இருப்பதாலும் சங்கராச்சாரியார் அவ்விதம் கூறி இருக்கிறார். மற்றும் இன்னறைய ஆட்சியின் பயனாய் நம் சமுதாயத்திற்கு எவ்வளவு கேடும் இழிவும் ஏற்பட்டாலும் அதை மனதார வெளியில் சொல்லி அழுது திருப்தி அடையக்கூட வாய்ப்பில்லாத நிலையில் நான் காங்கிரசை ஆதரித்துத் தீரவேண்டியவனாய் இருக்கிறேன். இது "பார்ப்பனர்களுக்கு இலாபகரமான விஷயமாகிவிட்டது’ என்று பதில் சொன்னேன். இரஷ்யப் பிரமுகர் இது கேட்டுப் புன்சிரிப்புடன் பரிதாபப்பட்டார்.
மதப்பாதுகாப்பு ஆட்சியே
நிற்க, இன்றைய “சுதந்தர” ஆட்சி ஒரு மதப் பாதுகாப்பு ஆட்சியாகவே ஆட்சி நடத்துகிறது. இதை பயனளிக்கும்படியான அளவுக்கு கிளர்ச்சி செய்யவோ, கனடிக்கவோ தக்கபடி எதிர்ப் பிரசாரம் செய்யவோ கூட தொண்டாற்ற முடியவில்லை. பத்திரிகைகள் யாவும் கூண்டோடு பார்ப்பன ஆதிக்கப் பிரசாரத்தில் இறங்கிவிட்டன். ரேடியோ, சினிமா, ஜோசியம், புராணம், உற்சவம், காலட்சேபம் ஆகியவைகளையே விளம்பரம்செய்யும் சாதனங்களாக ஒன்று கூடவிலக்கில்லாமல் எல்லா பத்திரிகைகளும் விளங்குகின்றன. இராஃடிரபதி, கவர்னர் உட்பட எல்லா மந்திரிகளும் கோவில், பக்தி பிரசாரம் செய்து வருகின்றார்கள் . அதிகாரிகள் நியமனம் பெறவும், தங்கள் குற்றங்களை மறைத்துக் கொள்ளவும், பிரமோஷன்கள் பெறவும் மந்திரிகளையே தான் பின்பற்றுகிறார்கள். காங்கிரசிலுள்ள மெம்பர்கள், காங்கிராஸ்காரர்கள் 100க்கு 90க்கு மேற்பட்டவர்கள் தங்களின் உண்மை நிலையையும், நிறத்தையும் மறைத்துக் கொள்ள மநிதிரிகளைப் பின்பற்றுவதுடன் பக்த கோடிகளாக விளங்குகிறார்கள். சமுதாய நலம் காரணமாகவே பார்ப்பனர்கள் கூண்டோடு காங்கிரசை ஒழித்துக்கட்ட, தோல்வியடையச் செய்ய பாடுபட்டாலும் , அப்பார்ப்பன சமுதாய நலத்திற்கேற்ப எல்லாக் காரியங்களையும் நமது ஆட்சி மூலம் நிறைவேற்றிக் கொள்ள மந்திரிகளும், அதிகாரிகளும், காங்கிரஸ்காரர்களுமே தெரிந்தோ, தெரியாமலோ அவர்களுக்கு எல்லாவித உதவியான காரியங்களையும் செய்து வருகிறார்கள்.
இயக்கமும் ஆதரவும் பெருகி வருகிறது
இந்த நிலையில் எனது தொண்டு இப்படிப்பட்ட காங்கிரசை, மந்தரிகளை, அதிகாரிகளை “பாதுகாப்பதற்கு” என்பதல்லாமல் வேறு எதற்குப் பயன்படக் கூடுமென்பது எனக்கு விளங்கவில்லை. இந்த நிலையில் எனக்குள்ள ஒரே ஆறுதல் என்னவென்றால் இவ்வளவு எதிர்ப்பிலும், ஏமாற்றத்திலும் எனது தொண்டுக்கு சாதனமாகவிருக்கும் சுயமரியாதை இயக்கதிலும், திராவிடர் கழகத்திலும் சுயநலமற்று தன்னலத் தியாகத்துடன் எவ்வித பிரதிப்பிரயோஜனத்தையும் எதிர்பாராமல் ஒழுக்கம், நாணயம் என்பதில் இருந்து சிறிதும் வழுவாமல் தமிழ்நாட்டில் சென்னை முதல் குமரி வரை ஒவ்வொரு குறிப்பிட்ட இடங்களிலும் ஆர்வமும் முயற்சியும் உள்ள தோழர்கள் நல்ல அளவுக்கு இருந்து எனக்கு ஆதரவளித்து உற்சாக மூட்டுவதுடன், நெறி தவறாமல், படிந்து தொண்டாற்றவது தான் எனக்கு உயிரூட்டி சலிப்படையாமல் உழைக்கச் செய்து வருகிறது. மேலும் நமது இயக்கத்தால் உழைப்பால் மனித சமுதாயத்தின் நடத்தையில் பெரிய மாறுதல் ஏற்பட்டுவிடவில்லை என்றாலும் பெருவாரியான மக்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருப்பதை உணருகிறேன். மற்றும் நம் எதிரிகளான பார்ப்பனர் “ எங்கள் நிலைமை இப்போது சீரடைந்துவிட்டது, இனி பயப்படத் தேவை இல்லை” என்று சொன்னாலும் அது வாயளவில் கொள்ளும் தைரியமே அல்லாமல் மன அளவில் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நடத்தையில், முயற்சியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
பக்தி மூலம் பணவிரயம் கொஞ்சமா ?
இன்று என்றுமில்லாத அளவுக்கு கோவில் திருப்பணி, கோயில் உற்சவம், கோவில் கும்பாபிசேகம், புதுக்கோவில் உண்டாக்குதல், புராணப் பிராசாரம் செய்தல், கவர்னர், மந்திரி முதலியவர்களை ஸ்தல யாத்திரை செய்யச் செய்தல், இவைகளைப் பற்றிய விளம்பரங்களைப் பெரிய அளவில் செய்தல், பத்திரிகைகளில் எல்லாம் கடவுள் பிரசாரம், கடவுள் கதைப் பிரசாரம், மதப் பிரசாரம், சாஸ்திர தர்ம பிரசாரம், பஜனை, காலட்சேபம் செய்தல் முதலிய காரியங்களில் எப்போதையும் விட அதிகமாக மிக மிக அதிகமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.அரசாங்கத்தில் இன்று மக்களின் மூடநம்பிக்கையால், முட்டாள்தனத்தினால் சமுதாயத்தில் மிக மிக சிறுபான்மையராகிய “பெரிய ஜாதியாரும்” பணக்காரர்களும் “பெரிய படிப்புக்காரர்” என்பவர்களுமே சூழ்ச்சியால் பெரிதும் மந்திரிகளாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு ஒட்டு செய்பவர்கள் இவர்களைகப் பேல் 30 பங்கு அதிகமான சமுதயாத்தில் கீழ்நிலையிலிருக்கும் மக்களாக இருக்கிறார்கள் ஆனதால் மக்களை மூடநம்பிக்கையிலிருந்து ஈடேறாமல் செய்து மேலும் மேலும் மடையர்களாக ஆக்கி இன்றுள்ள நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே செய்கிறார்கள் என்றால் மேல்நிலையிலுள்ள சிறுபான்மையோருக்கு பயம் வந்துவிட்டது, பயத்தால் துடிக்கிறார்கள் என்று தானே ஏற்படுகிறது ?
மக்கள் அறிவுபெறச் செயதல் அவசியம்
நாட்டில் படிக்காதநல்ல படிப்பு வாசனை அற்ற மக்கள் 100க்கு 80 பேர் இருக்கிறார்கள். அதுபோலவே உழைப்பாளி ஏழை மக்கள் 100க்கு 80 பேர் இருக்கிறார்கள். சமுதாயத்தில் கீழ்ஜாதி மக்கள் எனப்படுவோர் 100க்கு 90க்கு மேற்பட்டமக்கள் இருக்கிறார்கள்.இந்த நிலையில் மேல்ஜாதிக்காரர்களும், பணக்காரர்களும், படித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் ஆட்சியிலும், ஆதிக்கத்திலும் இருக்கிறார்கள் என்றால் இந்த நிலையை ஜனநாயக சுதந்தரமென்றால் மேலே குறிப்பிட்டபடி இதற்கு மக்களின் முட்டாள்தனமும், மூடநம்பிக்கையுமல்லாமல் வேறு என்ன காரணம் சொல்லமுடியும் ? ஆதலால் தான் மக்கள் அறிவு பெற்றுச் சுயமரியாதைக்காரர்களாகி விட்டால் தங்களின் இன்றைய நிலை என்ன ஆவது என்கின்ற பயம் ஆதிக்கக்காரர்களுக்கு ஏற்படும் அளவுக்காவது நமது தொண்டு பயன்பட்டிருக்கிறது என்று சொல்லித்தானாக வேண்டும் , என்றாலும் செய்ய வேண்டிய அளவுக்கு நாம் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. இமயமலை பனிக்கட்டியால் குளிரில் அவஸ்தைப்படுகிறது என்று கருதி சால்வையை மலைக்கு போர்த்துகிறவனைப் போல் நாம், காங்கிரைச “காப்பாற்று’கிற வேலையில் ஈடுபட்டுக் சமயத்துறையில் பெரிய அளவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய நன்மையை மாறுதலை இழந்துவிட்டோம் என்பதை நாம் ஒப்பக்கொண்டுதானாக வேண்டும்.
காங்கிரசை எதிர்த்திருந்தால் வகுப்பகித முறை வந்திருக்கும்
நாம் காங்கிரசை “காப்பாற்றும்” தொண்டில் இறங்காம லிருந்து இந்த 10-12 வருடத்தில் காங்கிரசை எதிர்த்து இரண்டு மூன்று முறை பதினாயிரக்கணக்கில் சிறை சென்றிருந்தால் “வகுப்புவாரி பிரதிநிதிதவ' முறையில் கணடிப்பாய் நல்ல அளவிற்கு வெற்றி பெற்றிருப்போம். கல்வித்துறையில் மேலும் முன்னுேறி இருப்போம். சமுதாயத்துறையில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகவும், முழுஆலயப் பிரவேசம் முதலிய உரிமை பெறவுமான பல உரிமைகளை பெற்றிருப்போம். நீதித்துறையில் வக்கீல்களின் தொல்லையை நல்ல அளவுக்கு குறைத்துக் கொண்டிருப்போம். இந்த காரியங்கள் ஈடேறாமல் இருப்பதற்குக் காரணம் நமது கவனத்தை வேறு வழியில் திருப்பிக் கொண்டது பெரும் காரணமாகும். இப்போதும் நாம் இனியும் ஒன்றரையாண்டு காலத்திற்கு 18 மாதங்களுக்கு இந்தப் போக்கிலேயே இருக்க வேண்டியவர்களாய் இருப்பதால் அதற்குள் நமது நலம் வெகுதூரம் பாதிக்கப்பட்டு எதிரிகள் மிகவும் வளர்ந்து விடுவார்களோ என்று அச்சப்பட வேண்டியவர்களாகத்தான் இருக்கிறோம். நமது தொண்டுக்காக நமக்கு நமது இலட்சியத்திற்குச் செய்யாவிட்டாலும், நன்றிகாட்டாவிட்டாலும் நமது லட்சியத்திற்குக் கேடு பயக்கும் பணியையாவது காங்கிரஸ் ஆட்சி செய்யாமலிருக்கலாம். ஆனால் அபபடிக்கில்லாமல் நம்மால் காங்கிரசுக்கு, ஆட்சிக்கு “ஒரு பயனும் ஏற்படவில்லை தொல்லைகள் தாம் ஏற்படுகிறது” என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறபோது நமது நிவர்த்தி இல்லாத முட்டாள்தனத்தைப் பற்றி வெட்கப்பட வேண்டியதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
இன்று காங்கிரசுக்கு எதிராக எப்படியாவது காங்கிரசை, காங்கிரஸ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவது என்கின்ற இலட்சியத்தில் பொதுமக்களுக்கும், ஆட்சிக்கும் எவ்வளவோ கொடுமைகளையும் துரோகங்களையும் நாசங்களையும் நட்டத்தையும் கொடுத்து வரும் எதிர்க்கட்சிக்காரர்கள் இந்த ஆட்சியினால் மரியாதையும் பெருமையும் பெற்று வருகிறார்கள். எனவே நமது தொண்டு, எனது தொண்டு எதிரிகள் நகைக்கும்படியான பலனளித்தது என்று சொல்லி வெட்கப்படுகின்றேன்.
ஆகவே இனி நமது தொண்டு காங்சிரசுக்கு அடுத்து வரும் தேர்தலில் நல் வெற்றி கிடைக்கும்படிச் செய்ய வேண்டியது பெருங்கடமையானாலும் அதோடு அதைவிட பெருங்கடமையாகக் கொண்டும் தொண்டாற்ற வேண்டியவனாக இருக்கிறேன் - இருக்கிறோம் என்பதை கழகத் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஈ.வெ.ராமசாமி


தந்தை பெரியார் 86-வது பிறந்தநாள் செய்தி


தந்தை பெரியார் 86-வது பிறந்தநாள் செய்தி


நான் இப்புவியில் 85 ஆண்டுகள் வாழ்ந்து 86-வது ஆண்டில் புகுகிறேன்.
இந்த நாட்டில் மக்கள் வாழும் சராசரி வயது 10 ஆண்டுகளுக்கு முன் 32 வயதாக இருந்து, இன்று 48 வயதாக மாறியுள்ள இக்காலத்தில் ஒரு மனிதன் 85 ஆண்டு வாழ்ந்து , அதுவும் ஒய்வு என்பதை அறியாத தொண்டும், சுகம் என்பதை அறியாத வாழிவும், கிடைத்ததைத் தின்று கொண்டு, வாய்த்த இடத்தில் தூங்கிக் கொண்டு திரிந்த நான் 85 ஆண்டு வாழந்துவிட்டேன் என்றால் என் ஆயுளைப்பற்றி நான் பாராட்டிக் கொள்ள வேண்டாமா ?
என்ன செய்து சாதித்துவிட்டாய் ? என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பதில் நீங்களே (வாசகர்கள) தான் தேடிப்பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒய்வு ஒழிச்சல் இன்றி, சோம்பல் கழிப்பிணித்தனமின்றி உழைத்தேன். திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாய் நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுகள், தகாத காரியங்கள் ஏற்பட்டு இருக்கலாம். என்னையே நீதிபதியாகக் கொண்டு எனக்கு சரி என்று பட்டதையும் தேவை என்று பட்டதையும் செய்தேன். அதுவும் ஒளிவு மறைவு இல்லாமல் செய்து வந்தேன்.
வாழ்வில் , செயலில் பல ஏமாற்றம் அடைந்து இருக்கலாம், ஆனாலும் அதையே ஒரு படிப்பினையாகக் கொண்டு முயற்சியில் சளைக்காமல் நடந்து கொண்டு தான் வருகிறேன்.
நன் ஒரு அநாமதேய வாழ்வு வாழவில்லை என்பதும், அநாவசிய மனிதனாய் அருந்துவரவில்லை என்பதும் எனக்கு ஒரு ஆறுதல் தரத்தக்க விசயமாய் இருந்து வந்தது.
இப்படிப்பட்ட எனது வாழ்நாள் பற்றிய விள்க்கம் என்னவென்றால் 1964 செப்டம்பர் 17-ந் தேதி வியாழக்கிழமைக்கு சரியான குரோதி வருடம் புரட்டாசி மாதம் 1-ந் தேதிக்கு எனக்கு 85 வயது முடிகிறதென்றால் அது நான் பிறந்து ஒராயிரத்து இருபது (1020) மாதங்கள் ஆகிறதுடன், நான் பிறந்து இன்றைக்கு (17-9-64-க்கு) முப்பத்தி ஒராயிரத்து நாற்பத்தேழு நாட்கள் வாழ்ந்துவிட்டேன் என்று ஆகிறது.
மற்றும் நான் 1034 ஒராயித்து முப்பத்தி நான்கு அமாவாசையையும் , 1034 பவுணர்மியையும், 1034 பிறைகளையும் கண்டவிட்டேன் என்று ஆகிறது.
“ஆயிரம் பிறை கண்டவன் முழுஆயுள் வாழந்தவனாவான்” என்று சொல்லுவார்கள். அதுபோல் முழு வாழ்நாள் வாழ்ந்துவிட்டேன்.
எனவே கிரமப்படி பார்ததால் உங்களிடம் நாண் பயணம் சொல்லிக் கொள்ள வேண்டியது தான் எனது நேர்மையான
அதற்கேற்ப எனக்கு புத்திக்கோளாறு ஒன்றும் இல்லை என்று நான் கருதினாலும், ஞபாகக் கோளாறு அதிமாகிவிட்டது. பேசப்பேச பேச்சுத் தொடர் மறந்து போகிறது, வெகு கெட்டிக்காரத்தனமாய் சமாளித்துக் கொள்ளுகிறேன். காது 100க்கு 40 சதவிகிதம் சப்தம் கேட்பதில்லை. கண்கள் கண்ணாடி போட்டாலும் 10 அல்லது 20 வரி (அதுவும் பைக்கா12 பாயிண்ட் எழுத்து)க்கு மேல் படிக்க முடிவதில்லை. கண்களில் கண்ணிர் வந்து மறைத்துவிடுகிறது. நடை 10 எட்டு, அதாவது 15 அடி தூரத்துக்கு மேல் நடந்தால் நெஞ்சுத்துடிப்பு அதிகமாகி களைப்பு வந்துவிடுகிறது. அதுவும் துணை பிடிப்பு இல்லாமல் நடக்க முடுடிவதில்லை. ஹெர்னியா என்னும் நோய் ( குடல் வாதம்) இருப்பதில் உட்கார்ந்திருக்கும் போது ஒர இளநீர் அளவு பரிணாமம் குடல் இறங்கி சிறு வலி கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நடந்தால் ஃபுட்பால் (உதைபந்து) அளவுக்கு பெருகி பெருவலி கொடுக்கிறது.
இந்தக் காரணங்களால் நானே என்னை கண்டெம்டுமேன் வேலைக்குப் பயன்படமுடியாத தள்ளப்பட்ட மனிதன் - என்றே கருதி வாழ்ந்து வருகிறேன். இவ்வளவு குறைபாடுகளும் இயலாமை யும் இருந்தும் மக்கள் என்னிடம் வைத்து இருக்கும் அன்பும்,
மரியாதையும் ஜன்னி வந்தவனுக்கு ஏற்படும் பலம் சகிப்புத்தன்மை போல் எந்நிலை அறியாத அளவுக்கு வேலைகளையும், பொறுப்புக்களையும் நானான மேற்போட்டுக் கொண்டு தொந்தரவடைந்து வருகிறேன். இப்படிப்பட்ட தொந்தரவுகளால் நான் அவஸ்தைப்படாமல் இருக்கத்தக்க வண்ணம், நோய் தெரியாமல் இருப்பதற்கு, டாக்டர்கள் குளோஃபாரம் (மயக்க மருந்து) கொடுப்பது போல் , பணம், பண்டம் (ரூபாய்) தாராளமாயக் கொடுத்து உற்சாகப்படுத்தி விடுகிறார்கள்.
ஆதலாலேயே உடல்நிலையைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் தொண்டாற்றி வர முடிகிறது என்று சொல்லுவேன். நல்ல அளவுக்கு, என் தகுதிக்கு ஏற்ப பணம் தேடிவிட்டேன். அதுவம் யாரையும் ஒரு காசு அளவுகூட தயவாய்க் கேட்காமல் வேண்டுகோள் விடுத்தும், கட்டளை இடுவதும், ரேட் (விகிதம்) ஏற்படுத்துவதும், மக்கள் தாங்களாகவே மேல்விழுந்து கொடுக்க வருவதுமான தன்மையிலேயே இயக்கத்திற்குப் பணம் சேர முடிந்தது.அதைக் கொண்டு இயக்க நடப்புக்கும், பிரச்சாரத்துக்கும், காரியாலயக் கட்டடங்களும், இடமும், வயலும், தோப்பும், காலி மனைகளும், வீடுகளும், மண்டபங்களும், பள்ளிகளும், பள்ளிப் பிள்ளைகளுக்கு பயன்படும் தங்குமிடங்களும் ஒரு அளவு ஏற்பாடு செய்துமிருக்கிறேன்.
இவைகளையெல்லாம்விட குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று என்னவென்றால், திருச்சியில் ஒரு கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என்று இரண்டு ஆண்டுகட்கு முன் முயற்சித்து சென்ற ஆண்டில் பெண்கள் கல்லூரியாக ஏற்படுத்த அரசாங்கத்தால், யுனிவர்ஸிட்டியில் அனுமதி பெற்று செயலில் இறங்கும் போது, அதற்கு மேலும் கட்டடம், நில ஆர்ச்சிதம் முதலிய காரியங்களும், துவக்கியத்தில் அதிகச் செலவு மாத்திரமல்லாமல் பல தொந்தரவுகளும் ஏற்படுவதாயிருந்தது பற்றி சிந்தித்து, செயல்பட இருக்கும்போது, இதை அறிந்த திருச்சி தோழர்கள் பலர் திருச்சிக்கு இப்போது அவசரமாய் வேண்டியிருப்பது ஆண்கள் கல்லூரி என்று பல காரணங்களைச் சொல்லி முறையிட்டார்கள். எனது 10,15 வருச திருச்சி வாசத்தில் நான் கண்ட அனுபவம் அம்முறையீடுகளை உண்மைப்படுத்தியதால், பெண்கள் கல்லூரி விசயம் பின்னால் கவனிக்கலாம். இப்போது அவசரமாக ஆண்கள் கல்லூரி கவனிக்கவேண்டிய தாகும் என்பதாக எனக்கு தோன்றியதால், அரசாங்க கல்வி அதிகாரியை அணுகி இதற்கு யோசனை கேட்டதில் அவர்கள் அங்கு ஏற்கனவே மூன்று காலேஜிகள் ஆண்களுக்கு இருக்கின்றன. இரண்டு காலேஜிகள் பெண்களுக்கு இருக்கின்றன.மேற்கொண்டு இப்போது அவசரமில்லை என்று சர்க்கார் நினைக்கிறது” என்று சொல்லிவிட்டர்கள்.
பிறகு மேலும் அவர்களை வேண்டிக்கொண்டதன் மீது 5 லட்சம் ரூபாய் பொருளதவி செய்தால் அரசாங்கம் கவனிக்கும் என்று சொல்லிவிட்டார்கள் நாம் சொந்தத்தில் வைப்பதானால் 50 ஏக்கர் இடமும், சுமார் 4.5 லட்சம் ரூபாய் செலவிட வேண்டியதுதான கட்டிடமும், 2,3 லட்ச ரூபாய்க்கு மேலாக தளவாட சாமான்களும், இவை தவிர காலேஜ் ஏற்பட்ட பிறகு 2,3 ஆண்டுகளுக்கு மாதத்துக்கு ரூ.2000-3000 சிப்பந்திகள் செலவும் செய்ய வேண்டி வரும் என்று தெரியவந்ததால் அரசாங்க விருப்பப்படி அவர்கள் கேட்கும் தொகையைத் தருவதாக ஒப்புக்கொண்டு தொகையும் செலுத்தப்பட்டாய்விட்டது. அநேகமாக அடுத்த ஆண்டு காலேஜூம் துவக்கப்படலாம்.
மற்றபடி நமது இயக்கப் பிரசார வேலைகள் எப்போதும் போல் நடந்து வந்தாலும் சில விஷயங்களில், அதாவது நம் மக்கள் எண்ணிக்கைப்படி அரசாங்கப் பள்ளிகளிலும், உத்யோகங்களிலும், பதவிகளிலும் விகிதாசார உரிமைபெற சில கிளர்ச்சிகள் நடத்தப்பட வேண்டியது நமது சென்ற ஆண்டினுடையவும், வரும் அண்டினுடையவும் திட்டமாக இருந்தாலுமு, அரசாங்கத்தால் மற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியத்தை முன்னிட்டு, நாம் ஒரு அளவுக்கு அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டிய காரியத்தைச் செய்யவேண்டியது அவசியமாகத் தோன்றுகிறபடியால், மற்ற கிளர்ச்சிகளை சிறிது தள்ளிப்போட வேண்டியதாகிவிட்டதால், இப்போது அது விசயமாய் (வகுப்புவரி உரிமை விசயமாய்) பிரசார அளவில் இருக்க வேண்டியதாகிவிட்டது.
நமது அரசாங்கத்தின் சமதர்ம (சோஷியலிச) திட்டம் எளிதான திட்டம் அல்ல. அரசாங்கத்திற்கு மிகவும் சிரமமும், தொல்லை தரத்தக்கதுமான திட்டமாகும். நம் நாட்டில் பாமர மக்கள் பகுத்திறவற்றவர்களாக இருப்பதாலும், ஆதிக்கத்தில் இருந்துவரும் பார்ப்பனரும், செல்வான்களும் எந்தக் கேடான காரியமும் செய்யத்தக்க அளவுக்கு துணிவும், வசதியும் உடையவர்களாக இருப்பதாலும், இவர்கள் ஆதரவால் காலிகளும், முஸ்லீம்களும் பொறுப்பற்ற தன்மையில் அரசாங்கத்திற்கு எதிரிகளாய் இருப்பதாலும் அரசாங்கத்திற்கு பொதுமக்கள் ஆதரவு மிக மிகத் தேவைப்படுகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அரசாங்கத்தின் சோஷியலிசத் திட்டம் நல்ல அளவுக்கு நிறைவேறும்படி செய்வோமானால், நமது திட்டங்கள் ஒரு நல்ல அளவுக்கு நிறைவேற வாய்ப்பு இருக்கிறது என்பது எனது கருத்தாகும்.
இப்போது அரசாங்கக் கலிவத் திட்டத்தினால் மக்களின் பாமரத்தன்மை ஒழிந்து வரும் என்பதில் ஆட்சேபனையில்லை. இந்த நிலை ஜாதி ஒழிப்புக்கு நல்ல ஆதரவான நிலையாகி விடும்.
பொருளாதார பேதம் ஒழியவேண்டியது அவசியமேயானாலும், முதலில் கவனம் செலுத்தவேண்டியது ஜாதி ஒழிப்பு வேலையே ஆனதால் அந்தக் காரியத்திற்கு, அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க வேண்டியவர்களாகிறோம்.
பொருளாதார பேதம் பெரிதும் உலகமெங்கிலும் இருந்துவரும் பேதம் என்பதோடு, அதை அவ்வளவு அளிதில் ஒழித்துவிடுவது என்பது மிக்க சிரமத்தைத் தரத்தக்கதாகும். ஏன் எனில் ஆடசி ஜனநாயகமானாலும், ஆட்சியாளர்கள் ஜாதி ஆணவக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதோடு, பொருளாதார உணர்ச்சி கொண்டவர்களாக இருந்து வருகிறார்கள்.பொவாக சொல்லுவதானால் நமது நாட்டு ஆட்சியர்கள் கட்சியான காங்சிரசில் பார்ப்பனர் ஆதிக்கத்தைவிட பணக்காரர்கள் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. மந்திரிமார்கள் பெரிதும் செல்வவலான்களும், செல்வத்தைப் சேர்க்க வேண்டும் ஷஎன்ற பேராசை உள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள். அதோடு செல்வவான்கள் ஆட்சியில் நல்ல அளவுக்கு செல்வாக்கு பெற்றவர்களாகவும், தங்கள் செல்வ விருத்தியை முன்னிட்டே காங்கிரசை ஆதரிப்பவர்களாகவும் இருப்பதால், ஒரே சமயத்தில் இருவர் எதிர்ப்பையும் சமாளிப்பது அரசாங்கத்திற்கு பெருந் தொல்லையாக இருக்கும்.
ஆதலால் நமது மேற்கண்ட இரு திட்டங்களும் இன்று அரசியல் திட்டங்களாக இருக்கும் நேரத்தில் நாம், மற்ற திட்டங்கள் விசயமாய் பிரசாரத்திலும், மாநாடு கூட்டுவதிலும் லட்சியமாக இருக்க வேண்டியதுடன், கிளர்ச்சிக்காரர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படக்கூடாது என்பது எனது கருத்து.
நமது இயக்க தோழர்கள் இன்று எந்தக் கிளர்ச்சிக்கும் தயாராயிருக்கிறார்கள் எனபதும், கிளர்ச்சி துவக்காத காரணத்தாலேயே என் மீது பலருக்கு சலிப்பு என்பதும் எனக்கு தெரியும். ஆனாலும் நமக்கு, அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதும், ஆட்சியின் சோஃயலிச் திட்டநடப்புக்கு எதிராக ஏற்படும் சமுதாய விரோதிகளின் கிளர்ச்சியையும், தொல்லைகளையும் முறியடிப்பதும் தான் இன்று முக்கியமான காரியமாக இருக்கவேண்டும். காங்கிரசுக்கு நம்மால் கூடியவரை பலம் ஏற்படும்படி செய்ய வேண்டும்.
தமிழர்களாகிய நமக்கு பெரிதும் அவரவர் சுயநலம் தான் முக்கியமே தவிர இனநலம் அலட்சியமாகக் கருதக்கூடியதாக இருந்து வருகிறது. ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், தமிழன் என்ற உரிமையால் பதவிக்கு வந்து ஒட்கொடுக்கும் தமிழர்களில்100-க்கு 90 பேர் அரசாங்க எதிரிகளாகவும் எதிரிகளின் கையாட்களாகவும் இருக்கிறார்கள்.இன்று அரசாங்கத்துக்கு தமிழர்களில் படித்தவன் ஆதரவும் இல்லை. பணக்காரன் ஆதரவும் இல்லை. பதவி பெற்று ஒய்வெடுத்தவர்கள் ஆதரவுமில்லை. இது மாத்திரமல்லாமல் அரசாங்க பெரும்பதவி, சிறு பதவியில் இருப்பவர்கள் ஆதரவும் இல்லை. நாம் அப்படிப்பட்ட பிறவியாளர்களாக ஆகிவிட்டோம்.
ஆனதனால் நம் தலையில் விழுந்திருக்கும் பொறுப்பு மகத்தானது. இன்னும் சொல்ல வேண்டுமானால் அரசாங்கம் நம்மை ஒரு நல்ல அளவுக்கு நம்பித்தான் இவ்வளவு தீவிர திடட்த்தில் இறங்கி இருப்பதாக உணருகிறேன். இப்போது நாம் மேற்சொன்னபடி நிபந்தனை அற்ற ஆதரவாளர்களாக இல்லையானால் நாமும் மேற்கண்ட தமிழர் விரோதிகள் கூட்டத்தில் சேர்ந்தவர்கள் ஆகிவிடுவோம்.
இன்று தமிழர் சமுதாயத்திற்கு மாத்திமல்லாமல், ஏழை எளியவர்கள் சமுதயாத்திற்கும் இரட்சகர் என்கின்ற முறையில் காமராஜர் இருந்து வருகிறார். அவர் இல்லாவிட்டால் உள்ளது ஒன்றுமே இல்லை. இருக்கவேண்டியது ஒன்றுமே இல்லை எனபது மாத்திமல்லாமல் எல்லாக் கேடுகளும் நம்மைச் சுற்றிக்கொண்டு இருக்கும்.
எனவே காமராஜரை உற்சாகப்படுத்தும் அளவுக்கு நமது ஆதரிப்பு ஆட்சிக்கும், காங்கிரசுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். இன்றியமையாத அவசியமாகும்.
இதுவரை நாம் ஒன்றும்செய்யவில்லை என்று கருதிவிடாதீர்கள். அரசியல் ரீதியில் இன்று காங்கிரசுக்கு, காமராஜருக்கு எதிர்ப்பு இல்லாமல் ஆக்கியது, நமது இயக்கம் தான். பார்ப்பான் குள்ளநரி ஆகிவிட்டான். முஸ்லீம்லீக் இன்று சொல்லாக்காசு ஆகிவிட்டது. கண்ணிர்த்துளி நாட்டுக்கு நியூசென்சாகிவிட்டது. இது யாரால் ? இதற்கு காங்கிரஸ் என்ன பாடுபட்டது ? ஆதலால் நாம் ஒன்றும் செய்யவில்லை என்று கருதி விடக்கூடாது.
ஆகவே நாம் ஒன்றும் செய்யவில்லை என்றால், நமக்கு திட்டமில்லை என்றே, கருதாமல் சலிப்படையாமல் நமது தோழர்கள் கடவுள், மதசாஸ்திர, சம்பிரதாய ஒழிப்புக்காரியங்களைத்திட்டமாகக் கொண்டு பிரசாரம் செய்வது, மாநாடு கூட்டுவது ஆகிய காரியங்களில் ஈடுபட்டு தீவிரமாகக் காரிங்கள் செய்ய வேண்டிக்கொள்ளுகிறேன்.
கழக ஸ்தாபனங்கள், மாநாடுகள் கூட்ட வேண்டும். காங்கிரஸ்காரர்களை அவர்கள் கலந்து கொள்ள ஆசைப்படும் அளவுக்கு அழைக்கலாம்.நாமும் அவர்கள் விரும்பும் அளவுக்கு கலந்து கொள்ளலாம். நம் தனிமையை எப்போதும் மறந்துவிடாமல் தொண்டாற்றலாம்.
இது தான் எனது 86-ம் ஆண்டு வேண்டுகோள் செய்தியாகும்.
ஈ.வெ.ராமசாமி