Monday 28 February 2022

தாலி எதற்காகக் கட்டப்படுகிறது?

 தாலி எதற்காகக் கட்டப்படுகிறது?


கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே!

நான் பொதுத் தொண்டையே முக்கியமாகக் கருதுபவன். ஆனதனாலே, நம் மனித சமுதாயம் முன்னேற வேண்டும் என்பவன் ஆனதனாலே, பழைமைகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவன் ஆனதனாலே, என் கண் முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு, அதன்படி மனிதன் முன்னேற வேண்டுமென்று நினைப்ப வனாவேன்.

இன்றைக்கு நமக்கு என்ன வேண்டுமென்பது வள்ளுவனுக்கு எப்படித் தெரியும்? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே இருந்தவனுக்கு மனிதன் எப்படி ஆவான் என்பது எப்படித் தெரியும்?

அதற்கு முன் பெண்களைப் பார்த்தாலே அவள் அணிந்திருக்கும் நகை - உடைகளை வைத்து, அவள் எந்த  ஜாதியைச் சேர்ந்தவள் என்று சொல்ல முடியும். இப்போது  யாரைப் பார்த்தாலும் ஒன்றாகவே தோன்றுகிறது. புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு வளர்ச்சி யடைந்து விட்டது.

தாலி எதற்காகக் கட்டப்படுகிறது என்பதை நம் பெண்கள் இன்னும் உணரவில்லை. ராஜா மனைவியாக இருந்தாலும், பெரிய ஜமீன்தார் மனைவி - பணக்காரன் மனைவி என யாராக இருந்தாலும், அவன் செத்தவுடன் அறுப்பதற்காகத் தானே அந்தப் பெண்ணை முண்டச்சியாக்கத் தானே பயன்படுகிறது. வேறு எதற்குத் தாலி பயன்படுகிறது? 100 வருடங்களுக்கு முன் வரை உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது. 

அது மதப்படி ஒரு சடங்காகச் செய்யப்பட்டு வந்தது. வெள்ளைக்காரன் வந்து அது கொலைக் குற்றம் என்று ஆக்கிய பின் தான் நின்றது. இப்போது என்ன சொல்கிறோம், இப்படி ஒரு காட்டுமிராண்டிக் காலமா இருந்தது? என்று எண்ணுகின்றோம், ஆச்சரியப்படுகின்றோம். அதுபோல் தான் நாளைக்கு வரும் பெண்கள் நினைப்பார்கள். பெண்களுக்குத் தாலி கட்டும் பழக்கம் கூடவா இருந்தது என்று! நாட்டிலே காட்டுமிராண்டித் தன்மைகள், கொடுமைகள் நிறைந்து விட்டன. பார்ப்பான் வந்தான், அவன் யோசனை சொல்பவனாக ஆகிவிட்டான்.

பெண்கள் ஆண்களின் சொத்துகள். அவன் சொல்படி நடந்து கொள்ள வேண்டியவர்கள் என்றும்  ஆக்கி விட்டான்.

நம் இலக்கியம், புராணம் இவற்றில் வரும் பெண்களை அடிமைகளாகவே காட்டி விட்டான்.

கண்ணகி - அரிச்சந்திரன் - திரவுபதி இந்தக் கதைகள், பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும், கணவன் சொல்படியே நடந்து கொள்ள வேண்டும், அதுதான் பெண்கள் கற்புடையவர்கள் என்பதற்கு இலக்கணம். இதுபோன்று நடக்கிற பெண்கள் தான் மோட்சத் திற்குப் போக முடியும் என்று எழுதி வைத்து விட்டான்.

இந்தக் கதை எழுதினவனெல்லாம் முட்டாள் என்று கூடக் கருத முடிய வில்லை. மகா அயோக்கியன்கள் என்று தான் கருத வேண்டி இருக்கிறது!

அந்தக் காலத்து முட்டாள் கதை எழுதினான் என்றால், இந்தக் காலத்து முட்டாள் அவற்றுக்குச் சிலை வைக்கிறான்.

இந்த நாடு - காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து விலகாமல், மக்களைச் சிந்திக்க விடாமல் பாதுகாத்து, முட்டாள்களாக்கவே பாடுபடுகின்றார்கள். அதனால் தான், நம் நாடு இன்னமும் முன்னேற்றமடையாமல், காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது. தமிழன் பண்பாடு - தமிழின நன்மை - தமிழின வாழ்வு என்று போனால், இன்னும் 2,000 ஆண்டுகளுக்குப் பின் தானே செல்வோம். ஓர் அடி கூட முன்னே செல்ல முடியாதே!

தனக்கு வேண்டிய கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய உரிமை கூட பெண்களுக்கு இல்லை என்றால், இது என்ன சுதந்திரம்? ஆறறிவுள்ள மனிதனுக்கு இதுதானா பயன்? பெரிய குறை - பெண்கள் அடிமையாக இருந்ததற்குக் காரணம் பெண்களுக்குக் கல்வி அறிவு, படிப்பு வாசனை இல்லாமல் செய்ததே யாகும்.

பெண்கள் படித்தாலே கெட்டு விடுவார்கள் என்று ஒரு தவறான கருத்தே நீண்ட காலமாக மக்களிடமிருந்து வந்தது. எதுவரை இருந்தது என்றால், வெள்ளைக்காரன் வந்து 150 வருடம் வரை நம்மை ஆட்சி செய்தும், பெண்கள் படிக்கவேயில்லை. 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு நம் உணர்ச்சி கிளம்பிய பிறகுதான் பெண்கள் படிக்கவே ஆரம்பித்தனர்.

பெண்கள் உருப்படியாக வேண்டுமானால், இத்திருமண முறையையே உடன்கட்டை ஏறுதல் போல் சட்டப்படி கிரிமினல் குற்றமாக்க வேண்டும். அப்போது தான் பெண்கள் சமுதாயம் சுதந்திரம் பெற்று சமுதாயத்திற்குப் பயன்பட முடியும்.

இப்போது அரசாங்கத்தில் பெண்களின் திருமண வயது வரம்பை 21-க்கு உயர்த்திச் சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள். இதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம், 21 வயதில் திருமணம் செய்தால் மூன்று குழந்தைகள் குறையும் என்பதாகும். நாம் சொல்வது அது மட்டுமல்ல, பெண்கள் அந்த வயதுக்குள் நல்ல அளவு கல்வி கற்று, தாங்களே உத்தியோகம், தொழில் செய்யும் அளவுக்கு அறிவு பெற்று விடுவர். அதன் பின் தனக்குத் தேவையான ஒத்த உரிமையுள்ள, தனக்கு ஏற்ற துணைவனைத் தாங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய தன்மையும் பெற்று விடுவார்கள் என்பதுதான்.

தாய்மார்கள் தங்கள் பெண்களை நிறையப் படிக்க வைக்கவேண்டும். அதோடு ஒரு தொழிலையும் கூடக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்வை நடத்தக் கூடிய வருவாய் கிடைக்கும்படியான நிலைமை பெற வேண்டும். பெண்கள் கெட்டுப் போவார்கள் என்ற எண்ணமே பெற்றோர்களுக்கு இருக்கக் கூடாது.

பெண்கள் இனி சமையல் செய்யக் கூடாது. பின் எப்படி என்றால், ஹோட்டலுக்கு, ரெஸ்டாரென்ட்டுக்குப் போய் தங்கள் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஆரம்பித்தால் நல்ல ரெஸ்டாரன்ட்டுகளும் ஏற்பட்டு விடும். வெளிநாடுகளில் எல்லாம் அப்படித்தான்! ஆணும், பெண்ணும் தங்கள் தங்கள் வேலைக்குச் சென்று விடுவார்கள். தங்குவதற்கு ஒரு அறையையே வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள்.

அதற்குள் ஒரு  பீரோ, கட்டில், இரண்டு நாற்காலிகள் இவை தான் இருக்கும். பொதுவான குளியலறையும் - கக்கூசும் இருக்கும். இரவு தூங்குவார்கள். தேவைக்குப் பொது குளியலறை, கக்கூசைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனால் ருசியான உணவு கிடைக்கிறது; வீட்டு வாடகை குறைகிறது; நேரம் மிச்சமாகிறது; உணவிற்காகச் செலவிடும் பணமும் குறைகிறது.

இன்னும் கொஞ்ச நாள் போனால், பொது உணவு விடுதிகளில் உண்ணும் முறை தான் இங்கு வரும். இதுதான் சுபலமானதாகும்.

நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடுகின்றோம். பெண்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு நகை - உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சி தான் ஏற்படுமே ஒழிய, சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.

மனிதன் காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம் ஆனதோடு - திருமணங்கள் மதத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால், கடவுளோடு சம்பந்தப்படுத்தி விட்டதால் இதனைவிட துணிவின்றி பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்.

வாழ்த்துவது என்பது ஒரு சம்பிரதாயப் பழக்கம் என்பதைத் தவிர, இதில் எந்தப் பொருளோ, பலனோ இல்லை. வசை மொழிகளுக்கு என்ன பலனோ, அதே பலன்தான் இதற்கும் என்பதை உணர வேண்டும்.

அறிவோடு - சிக்கனமாக வாழ வேண்டும். வரவிற்கு மேல் செலவிட்டுப் பிறர் கையை எதிர்பார்ப்பதும், ஒழுக்கக் கேடான காரியங்களுக்கு இடம் கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டு, கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்.

--- 9.2.1968 அன்று தஞ்சை - லால்குடி வாழ்க்கை ஒப்பந்த விழாக்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரையிலிருந்து... (விடுதலை 20.2.1968).


இந்து என்றால் என்ன?

 இந்து என்றால் என்ன?


பிறக்காத, இருக்காதவர்களுக்கு எந்தவிதக் காரியமும் செய்யாதவர் களுக்கு முதலில் பிறந்த நாள் கொண் டாடினார்கள் - அதுதான் கடவுளின் பிறந்தநாள் விழாக்கள் ஆகும்!

கடவுளுக்கு இலக்கணம் கூறியவர் கள் கடவுள் இறக்காதவன், பிறக்காத வன் உருவம் அற்றவன் என்று கூறி விட்டுப் பிறகு, கடவுள் பிறந்தான் - சிவன் பூரத்தில் பிறந்தான்; கிருஷ்ணன் அட்டமியில் பிறந்தான்; இராமன் நவமி யில் பிறந்தான்; கணபதி சதுர்த்தியில் பிறந்தான்; கந்தன் சஷ்டியில் பிறந்தான் என்று கூறி விழாக்கள் - உற்சவங்கள் கொண்டாடினார்கள்.



பிறகு நிஜமாகவே பிறந்தவர்களுக் கும், பிறக்காதவர்களுக்கும் அவர்கள் செய்தவைகளையும், செய்யாத சங்கதி களையும் புகுத்தி விழாக் கொண்டாடி னார்கள். அதுதான் ஆழ்வார்கள் திரு நட்சத்திரம், நாயன்மார்கள் பிறந்த நாள் குருபூசை என்பது போன்றவை.

இவை எல்லாம் மக்களை முட்டாளாக் குவதற்கான ஒரு கொள்கையினைப் பிரச்சாரம் செய்யவே இப்படிச் செய்கின்றார்கள்.

பிறகு, இப்போதுதான் நிஜமாகவே பிறந்தவர்களுக்கும், நிஜமாகவே தொண்டு செய்தவர்களுக்கும், செய்கின்றவர்க ளுக்கும் பிறந்த நாள் விழாக்கள் நடக் கின்றன. அதுதான் எனது பிறந்தநாள். அண்ணா பிறந்த நாள். காந்தி பிறந்த நாள். காமராஜர் பிறந்த நாள் போன்றவை.

இதுவும் யார் யார் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றதோ அவர்களின் தொண்டினைப் பிரசாரம் செய்யவும் - பரப்பவுமே செய்யப்படுகின்றன.

அதில் ஒன்று தான் எனது பிறந்த நாள் என்பதும் ஆகும். இப்படி எனது பிறந்த நாள் கொண்டாடுவதை எனது கொள்கையினைப் பிரசாரம் செய்ய வாய்ப்பென்று கருதியே நானும் அனு மதிக்கிறேன். மக்களும் எனது தொண் டுக்கு உற்சாகம் உண்டு பண்ணும் வகை யில் பணம் பல பொருள்கள் முதலியன வும் அளிக்கின்றீர்கள்.

நாங்கள் யார் என்பதை நீங்கள் நன்றாக உணரவேண்டும். நாங்கள் சமுதாயத் தொண்டுக்காரர்களே தவிர அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் தேர்தலுக்கு நிற்பதோ, ஓட்டுக்காகப் பொதுமக்களிடம் வருவதோ எங்கள் வேலை அல்ல. நாங்கள் பதவிக்குப் போகக்கூடாது என்பதைக் கொள்கை யாகத் திட்டமாகக் கொண்டவர்கள்.

நாங்கள் யார் பதவிக்கு வந்தாலும் எங்கள் கொள்கைக்கு அனுசரணையாக நடக்கக் கூடியவர்களாக இருந்தால் ஆதரிப்பதும் எதிர்ப்பவர்களாக முரண் பாடு உடையவர்களாக இருந்தால் எதிர்ப் பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்து வந்து இருக்கின்றது.

எங்களுடைய பிரதானத் தொண்டு எல்லாம் சமுதாயத் தொண்டு தான். சமுதாயச் சீர்கேடுகளைப் போக்கப் பாடுபடுவது தான் ஆகும்.

இப்படிப்பட்ட சமுதாயத் தொண்டு செய்ய இன்றைக்கு 2000 ஆண்டுகளாக எவனுமே முன்னுக்கு வரவே இல்லை. வேண்டுமானால் நமது சமுதாயத்தை மேலும் மேலும் இழிதன்மையிலும், அடிமைத்தனத்திலும், ஆழ்த்தக்கூடிய தொண்டுகளைச் செய்யக்கூடியவர்கள் வேண்டுமானால் ஏராளமாகத் தோன்றி இருக்கின்றார்கள்.

இப்படிச் சமுதாயத் தொண்டு செய்ய முன் வந்தவர்கள் நாங்கள் தான். நான் தான் என்று சற்று ஆணவமாகக் கூறுவேன். எங்கள் பிரச்சாரம், தொண்டு காரணமாக இன்றைக்கு எந்தப் பார்ப் பானும் நம்மை இழிமக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளைகள் என்று சொல்லத் துணியவில்லை. நாங்கள் முன்பு சொன்னோம். சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி என்று சொன்னோம். அதன் காரணமாகப் பார்ப்பான் மனதுக்குள் நம்மைச் சூத் திரன் என்று எண்ணிக் கொண்டு இருந் தாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.

முன்பு ஓட்டல்களில் சூத்திரருக்கு ஓர் இடம், பார்ப்பானுக்கு வேறு இடம் என்று இருந்தது. ரயில்வே உணவு விடுதிகளி லும் பார்ப்பானுக்கு வேறு இடம், சூத்திரனுக்குத் தனி இடம் என்று இருந்ததே! இது மட்டும் அல்ல. சர்க்கார் ஆபீசுகளிலும், பள்ளி களிலும், கல்லூரி களிலும் பார்ப்பானுக்கு வேறு தண்ணீர்ப் பானை சூத்திரர்களுக்கு வேறு தண்ணீர்ப் பானை என்று இருந்ததே. இவை எல்லாம் இன்று எங்கே போயின? எங்கள் பிரச்சாரம் காரணமாக அடியோடு ஒழிந்து விட்டது.

அடுத்துப் பார்ப்பான் உத்தியோகத் துறையில் பெரும் பகுதி இடங்களைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தான். பெரும் பெரும் பதவிகள் எல்லாம் பார்ப்பனர்களும், பியூன் லஸ்கர், போலீஸ்காரர்கள் போன்ற சிறு வேலைகள் தான் நமக்கும் இருந்தன. இன்றைக்கு அத் துணையும் தலை கீழாக மாற்றிவிட்டோம். இன்றைக்கு உத்தியோகத்துறை - எந்தவித மான உத்தியோகமாக இருந்தாலும் நமது மக்களுடைய கையில் தான் உள்ளது.

இன்றைக்கு அரசியல் துறையிலாகட் டும், மற்ற மற்றத் துறையில் ஆகட்டும் பார்ப் பனர்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையிலும் நாம் இழி மக்களாக தாழ்த்தப்பட்ட மக்களாக சூத்திரர்களாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்கின்றோம்.

இதற்கு இனி பார்ப்பானைக் குறைகூறிப் பயன் இல்லை. பார்ப்பான் யாரும் உன்னை இன்று இழி மகன், சூத்திரன் என்று சொல்லவில்லையே! பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நீங்கள் தானே தங்களை ஆமாம் நாங்கள் சூத்திரர்கள் தான் என்று கூறிக் கொள்ளும் முறையில் நடந்து கொள்கின்றீர்கள்.

இங்குக் கூடியிருக்கின்ற நீங்கள் எல் லாம் எங்களைத் தவிர, தி.மு. கழகத்தில் பகுதிப் பேர்களைத் தவிர, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்ப்பனர்கள் தவிர, மற்றவர்கள் எல்லாம் வெட்கம், மானம், ஈனம் இன்றி இந்துக்கள் என்று தானே சொல்லிக் கொள்கின்றீர்கள்.

இந்து என்றால் என்ன பொருள்? இந்து என்றால் பார்ப்பானைப் பொறுத்தவரையில் உயர்வு பொருள் உண்டு. பார்ப்பனர் அல்லா தாருக்கு இந்து என்றால் என்ன பொருள்? சூத்திரர், தாசிபுத்திரர்கள் என்பதுதானே.

இந்து என்றால் எப்படி அய்யா நாங்கள் தாசி புத்திரர்கள் ஆவோம் என்று கேட்கக் கூடும். அதற்கும் பதில் கூறுகின்றேன். இந்து மதப்படி இருவிதமான பிரிவுகள் தான் உண்டு. ஒன்று பிராமணன். மற்றொன்று சூத்திரர்கள். இதன்படி பார்ப்பானைத் தவிர்த்த மற்றவர்களாகிய நீங்கள் சூத்தி ரர்கள் தானே. எவனோ எழுதி வைத்தான் இந்து என்றால், நான் எப்படிச் சூத்திரன் என்று கேட்க நினைக்கலாம்.

அவர்களுக்கு விளக்குகின்றேன். நீங்கள் குளித்து முழுகி, பட்டுடுத்தி, தேங்காய், பழம் எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போகின் றீர்கள். போகின்ற நீங்கள் தங்கு தடை இன்றி நேரே உள்ளே போகின்றீர்களா? இல்லையே! ஒரு குறிப்பிட்ட இடம் போன தும் மின்சாரம் தாக்கியவன் போல `டக்கென்று நின்று கொள்கின்றீர்களே ஏன்? அதற்கு மேலே கர்ப்பக் கிரகத்துக்குள் போகக் கூடாது. போனால், சாமி தீட்டுப்பட்டு விடும் என்று நிற்கின்றீர்கள். ஏன்? எப்படித் தீட்டுப்பட்டு விடுகின்றது. நீ சூத்திரன். ஆகவே, நீ உள்ளே போகக் கூடாது என்பது தானே! பார்ப்பான் யாரும் உன்னை உள்ளே வர வேண்டாம், வந்தால் தீட்டுப் பட்டுப் போய்விடும் என்று கழுத்தைப் பிடித்து நெட்டவில்லையே! நீயாகத் தானே வெளியே நின்று நான் சூத்திரன் என்று காட்டிக் கொள்கின்றாய்.

அடுத்து, நீ சாமியைத் தொட்டுக் கும்பிடாதே - எட்டே இருந்துதானே குரங்கு மாதிரி எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுகின்றாய். காரணம் என்ன? நீ தொட்டால் சாமி தீட்டுப் பட்டுப் போகும் என்றுதானே வெளியே நிற்கின் றாய் என்பதுதானே! எனவே, நீங்கள் எது வரைக்கும் இந்து என்று உங்களை எண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டு இருக் கின்றீர்களோ அதுவரைக்கும் நீங்கள் இழி மக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப் பாட்டி மக்கள் தானே!

உங்களுக்குப் புத்தி வந்து மானம், ரோஷம் பெற்று உங்களை இழி மக்களாக - சூத்திரர்களாக ஆக்கி வைத்துள்ள இந்து மதத்தையும், கோயிலுக்குப் போவதையும், சாமியைக் கும்பிடுவதையும் விட்டு ஒழித் தால் ஒழிய நீங்கள் மனிதத்தன்மை உடைய மக்களாக, மானமுள்ள மக்களாக ஆக முடியாதே.
இனிப் பார்ப்பானேயே குறைகூறிப் பிரயோசனம் இல்லை. உங்களுக்குப் புத்தி வந்து இவற்றை விலக்கி முன்னுக்கு வரவேண்டும்.

அப்படிச் செய்யாமல் நாங்கள் இன்னும் 100 ஆண்டு கத்தியும், பிரச்சாரம் செய்தும் ஒரு மாற்றமும் செய்ய முடியாதே!

தோழர்களே! இந்த மதமும், கடவுளும், கோயிலும் இல்லாவிட்டால் மனிதச் சமுதாயம் எதிலே கெட்டு விடும்?

இன்றைக்கு ரஷ்யாவை எடுத்துக் கொள் ளுங்கள். அங்கு உள்ள மக்களுக்குக் கட வுளும், மதமும், கோயிலும் கிடையாதே. சிறுவர்கள் கடவுள் என்றால் என்ன என்று கேட்பார்களே.

அந்த நாடு கடவுளை, மதத்தை, கோயிலை ஒழித்த நாடானதனால் அங்குப் பணக்காரன் இல்லை. ஏழை இல்லை. உயர்ந்தவன் இல்லை. தாழ்ந்தவன் இல்லை. காரணம் கடவுள், மதத்தை ஒழித்த காரணத் தினால் பேதமான வாழ்வு ஒழிந்துவிட்டது. மக்கள் மக்களாகவே வாழ்கின்றார்கள்.

மற்ற நாட்டு மக்கள் தங்கள் அறிவு கொண்டு முன்னேறுகின்றார்கள். நாம் அறிவற்ற மக்களாக, காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம்.

தோழர்களே! இன்று மானமுள்ள - யோக்கியமுடைய மக்களுக்கு நடக்கக் கூடாத எல்லாம் இன்றைக்கு அரசி யல் பேரால் நடந்துகொண்டு இருக்கின்றது. காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலிய காலித்தனங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இந்த நாட்டில் ஜனநாயக அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி நடக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? 51 பேர்கள் சொல்கின்றபடி 49 பேர்கள் நடப்பதற்குப் பேர் தானே ஜனநாயகம். அதனை விட்டு, பெருவாரியான மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்துப் பதவிக்கு வந்தவர்களே - பதவிக்கு வர வாய்ப்பு இழந்தவர்களும், எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்களும், காலிகளையும், கூலிகளையும் தூண்டி விட்டுக் காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலியவற்றின் மூலம் இந்த ஆட்சியைக் கவிழ்த்துப் போடலாம் என்று முயற்சி செய்து வருகின்றார்கள்.

தோழர்களே! நான் இப்போது சொல்ல வில்லை. இந்த நாட்டிற்கு என்றைக்கு ஜனநாயகம் என்று கூறப்பட்டதோ அன் றைக்கே காலிகள் நாயகம் தான் ஏற்படப் போகின்றது. காலித்தனம் தான் தலை விரித்து ஆடப் போகின்றது என்று சொன் னேன். இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றவர்கள் இந்த ஆட்சி இன் னது செய்ய வில்லை. இன்ன கோளாறு செய்தது. ஆகவே, ஒழியவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறவில்லையே.

காலித்தனத்தின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம் என்றுதான் கனவு காண்கின்றார்கள். சொத்துகள், பஸ்கள் சேதப்படுத்தப்படுகின்றன - நாசப் படுத்தப்படுகின்றது என்றால் இது பொதுமக்கள் உடைமை அல்லவா? கோடிக்கணக்கில் நாசமாவது பற்றி எந்தப் பொதுமக்களுக்கும் புத்தியே இல்லையே.

நாளுக்கு நாள் காலித்தனம், ரகளை, நாசவேலைகள் எல்லாம் அரசியல் பேரால் வளர்ந்த வண்ணமாகவே உள்ளன.

தோழர்களே! இன்றையத் தினம் நாம் தமிழர்கள் ஆட்சியில் உள்ளோம். இன் றைக்கு நாம் நல்ல வாய்ப்பு உள்ள மக் களாகவே உள்ளோம். நமது சமுதாயத்திற்கு இருந்து வந்த குறைபாடுகள் எல்லாம் படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.

இன்றைக்கு ஆளுகின்ற மந்திரிகளை எடுத்துக் கொண்டால் அத்தனை பேரும் தமிழர்கள் - பார்ப்பனர் அல்லாதவர் களாகத் தானே இருக்கிறார்கள். ஒரு பார்ப்பானுக்குக் கூட இடமே இல்லையே! அசல் தனித்தமிழர் மந்திரி சபையாக அல்லவா உள்ளது.

இன்றைக்கு அய்க்கோர்ட்டில் 18 ஜட் ஜுகள் உள்ளார்கள் என்றால், 16 பேர்கள் பார்ப்பனர் அல்லாத மக்களாக உள்ளார் களே. எந்தக் காலத்தில் அய்யா இந்த நிலை நமக்கு இருந்தது.

பியூன் வேலை, பங்கா இழுக்கின்ற வேலை தானே நமக்கு முன்பு இருந்து வந்தது. சகல துறைகளிலும் வேலைகளி லும், பதவிகளிலும் பார்ப்பான் தானே புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தினான்.

இன்றைக்கு அந்த நிலை இருக்கின் றதா? அடியோடு மாறி விட்டதே. சகல துறைகளிலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் தானே இன்று உத்தியோகங்களிலும், பதவிகளிலும் இருக்கின்றார்கள்.

இதற்கு எல்லாம் காரணம் இந்த ஆட்சி அல்லவா? தமிழர் நலன் கருதிக் காரியம் ஆற்றும் இந்த ஆட்சிக்கு விரோதமாக நடந்து கொள்கின்றவனை எப்படித் தமிழன் என்று ஒப்புவது?

இன்றைக்கு எம்.ஜி.ஆர். பெயரில் கலவரம் நடைபெற்றது. இது யோக்கிய மில்லாத, தேவை இல்லாத கலவரம் ஆகும். ஓர் ஆட்சியை ஒழித்து ஒரு கட்சி பதவிக்கு வரவேண்டும் என்றால், காலித்தனம் தான் பரிகாரமா? எனவே, நாட்டின் பொது ஒழுக் கம் அரசியல் பேரால் மிக மிகக் கெட்டுப் போய்விட்டது என்று எடுத்துரைத்தார்கள்.

மேலும், பேசுகையில், எம்.ஜி.ஆர். சுயநலம் காரணமாக தி.மு. கழகத்தில் இருந்துப் பிரிந்து அதனை எதிரிக்குக் காட்டிக் கொடுக்க முன்வந்தமை பற்றியும் திண்டுக்கல் தேர்தலில் பெண்கள் சினிமா மோகம் காரணமாக எம்.ஜி.ஆர். கட்சிக்கு ஓட்டுப் போட்ட கேவல நிலைபற்றியும் விளக்கினார்கள்.

--- 29-5-1973 அன்று புதுவையிலும், 30.5.1973 அன்று வில்லியனூர், முதலியார்பேட்டை ஆகிய ஊர்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு-"விடுதலை", 12.6.1973.

பார்ப்பனரல்லாத மாணவர் படிப்பின் கஷ்டமும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமையும்

 

பார்ப்பனரல்லாத மாணவர் படிப்பின் கஷ்டமும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமையும்


எங்கு பார்த்த போதிலும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமையானது சகிக்க முடியாத அளவில் பெருகிக் கொண்டே வருவதாக தினமும் நமக்குச் சங்கதிகள் எட்டிக் கொண்டே வருகின்றன. அவற்றுள் அநேகம் வெளியிடவே மனம் கூசுகின்றது. அரசாங்கக் கல்வி இலாகா மந்திரி ஒரு பார்ப்பனரல்லாதாராயிருந்தும், ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்களும், மற்றும் தனிப்பட்ட பள்ளிக் கூடங்களின் நிர்வாகஸ்தர்களும் பார்ப்பன ரல்லாதாரராகவே இருந்தும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளின் கஷ்டம் சற்றாவது நிவர்த்தியானதாகக் காண்பதற்கில்லை. இனி சீக்கிரத்தில் நிவர்த்தி யாவதற்கு மார்க்கம் ஏற்படும் என்றும் கருதுவதற்கில்லை.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்ப்போமானால் அநேகமாய் கல்வி இலாகா உத்தியோகங்களில் பெரிதும் பார்ப்பனர்களே அதிகாரிகளால் இருந்து வருவதும், பரீட்சை அதிகாரிகளும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும், அவர்களது சலுகைக்குப் பாத்திரமான உபாத்தியாயர்களும் தலைமை உபாத்தியாயர்களும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும் தவிர வேறு காரணம் சொல்வதற்கில்லை என்றே சொல்லுவோம். யோக்கியமாகவும், நியாயமாகவும் பேசுவோமேயானால் கல்வி இலாகாவில் பார்ப்பனர்கள் என்பவர்கள் கண்டிப்பாய், அதிகாரியாகவோ உபாத்தியாயர்களாகவோ இருக்கக் கூடாதென்றே சொல்லுவோம்.

பார்ப்பனர்கள் மூலம் மக்களுக்குக் கல்வி போதிக்க எண்ணுவதை விட கல்விச் சாலைகளை அடைத்துவிடுவது மேலென்று கூடச் சொல்லத் துணிவோம். ஏனெனில் முதலாவதாக இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனனும் தன்னை உயர்ந்த சாதி என்றும், அதாவது வருணாச்சிரமப்படி தாம் ‘பிராமண’ரென்றும், மற்றவர் ‘சூத்திர’ரென்றும் எண்ணிக் கொண்டிருப்பவர்கள். எந்த கொள்கைப்படி தன்னை ‘பிராமணரென்றும்’, மற்றவனை ‘சூத்திர’ரென்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றார்களோ, அதே கொள்கையின்படி பிராமணன் ‘சூத்திரனை’ப் படிக்க வைக்கக் கூடாதென்றும், ‘சூத்திரன்’ படித்தால் வருண தர்மம் கெட்டுப் போகுமென்றும், பிராமணனுக்கு ஆபத்தாய் முடியுமென்றும், ‘சூத்திரனை’ப் படிக்க வைத்தப் பிராமணர் ‘நரகத்தை அடைவார்’ என்றும் கருத்துப்பட ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்தக் கொள்கையை மனப்பூர்வமாக நம்பின பார்ப்பனர்கள் உபாத்தியாயராயிருந்தால் பார்ப்பனரல்லாத பிள்ளைகளை அவர்கள் படிக்க விடுவார்களா? படித்தாலும் பாசாக சம்மதிப்பார்களா? என்பதை வாசகர்களே யோசித்து முடிவு கட்டிக் கொள்ள விரும்புகின்றோம்.

கல்வியில் இருக்கும் சூதுகள் அநேகமாக நம்மவர்களுக்குத் தெரியாதென்றே சொல்லலாம். உதாரணமாக பார்ப்பனரல்லாத பிள்ளைகள் பி.ஏ.பாஸ் செய்வதென்றால் பிள்ளைகளுக்கு 22, 23, 24 வருடங்களாகி விடுகின்றன. ஆனால் பார்ப்பனப் பிள்ளைகள் 18, 19, 20 வயதிற்குள் பி.ஏ.பாசு செய்து விடுகின்றன. இதற்குக் காரணம் என்ன? என்பது நம்மவர்களுக்கு தெரியுமா? யாரையாவது காரணம் கேட்டால், “அது பிராமணப் பிள்ளை,. அதற்குப் படிப்பு சீக்கிரம் வருகின்றது. நம்ம பிள்ளை ரொம்பவும் மந்தம்,. அதனால் சீக்கிரம் வருவதில்லை” என்று ஒரு வார்த்தையால் பதில் சொல்லி விடுவார்கள். ஆனால் நம் பிள்ளைகளும் ஒரு வருடமாவது தவறாமல் ஒவ்வொரு வகுப்பிலும் பாசு ஆகிக் கொண்டே போனாலும் எப்படியும் பி.ஏ. பரீட்சைக்குப் போக 22 வயதாய் விடுகின்றது. ஒன்று அல்லது இரண்டு வருடம் தவறினால் இருபத்து நான்கு வயதாய் விடுகின்றது. மூன்று வருடம் தவறினால் இருபத்தைந்தாய் விடுகின்றது. பிறகு சர்க்கார் உத்தியோகத்திற்கு லாயக்கில்லாதவர்களாகி விடுகின்றார்கள்.

ஆனால் பார்ப்பனப் பிள்ளைகளோ ஒன்று இரண்டு வருஷம் தவறினாலும் கூட 20, 21-ல் பி.ஏ. படித்து முடித்து விடுகின்றார்கள். இதன் ரகசியம் என்னவென்றால் நம் பிள்ளைகளை 7-வது வயதில் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி அரிவரி வகுப்பில் சேர்க்கின்றோம். 7-வது வயதில் அரிவரியில் சேர்ந்தால், அவன் தவறாமல் பாசு செய்தால்கூட 22-ல்தான் பி.ஏ. பரீட்சைக்குப் போக முடியும். ஏனென்றால் அரிவரி வகுப்புக்கும் பி.ஏ. பாசு செய்யும் வகுப்புக்கும் இடையில் 15 வருஷம் வேண்டியிருக்கின்றது. அதாவது அரிவரியில் இருந்து 4-வது வகுப்புக்கு ஐந்து வருடமும், 4-வதிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி. அல்லது 6-வது பாரத்திற்கும் 6 வருஷம். அதிலிருந்து பி.ஏ.க்கு 4 வருஷம் ஆகவே தவறாமல் பாசு செய்தாலும் 15 வருஷ சாவகாசம் வேண்டியிருக்கின்றன.

ஆனால் பார்ப்பனர்களோ தங்கள் குழந்தைகளை 5-வது முதலே வீட்டில் கொஞ்சம் சொல்லிக் கொடுத்து ஆறாவது வயதிலோ அல்லது ஏழாவது வயதிலோ பள்ளிக் கூடத்திற்குக் கொண்டு போய் முதல் பாரத்தில் சேர்த்து விடுகின்றார்கள். தலைமை உபாத்தியாயர்கள் பார்ப்பனர்களானதால் கணக்கில் சாதாரண 2 கேள்வியும் இங்கிலீஷில் இரண்டு வார்த்தைக்கு அர்த்தத்தையும் கேட்டுவிட்டு “முதல் பாரத்திற்கு லாயக்கு” என்று சொல்லி விடுகின்றார்கள். இதில் அவர்களுக்கு ஐந்து வருடப் படிப்பும் காலமும் செலவும் மீதியாகி விடுகின்றன. 14 வயதுக்கு கீழ்பட்ட பிள்ளைகளை எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு எடுப்பதில்லை என்கின்ற நிபந்தனையினால் பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளைகளை முதல் பாரத்தில் சேர்க்கின்றார்கள். அந்த நிபந்தனையும் இல்லாதிருக்குமானால் மூன்றாவது பாரத்தில் கூட சேர்த்து விடுவார்கள். தவிர 18, 19-ல் அவர்கள் பி.ஏ.பாசு செய்து விடுவதால் 25-வது வயது வரைக்கும் 5 அல்லது 6 வருட காலம் உத்தியோகம் தேட அவர்களுக்குச் சாவகாசமிருக்கின்றது. ஆகவே அவர்கள் பி.ஏ. படித்து விட்டால் எப்படியும் யாரையாவது பிடித்து என்ன செய்தாவது உத்தியோகம் சம்பாதித்துக் கொள்ள போதிய சௌகரியம் இருக்கின்றது.

நம்முடைய பிள்ளைகளோ சிறு வயதில் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினால் தலைமை உபாத்தியாயராயிருப்பவர், “இவன் ரொம்பவும் சின்னப் பையன். இன்னும் ஒன்று இரண்டு வருடம் பொறுத்து அப்புறம் கூட்டிக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லுவதும், “குழந்தைகள் நன்றாய் ஆடிப்பாடி விளையாடட்டுமே, நன்றாய் எட்டு வருடம் ஆன பின்பு பள்ளியில் வைத்தால் போதாதா? ஏன் இப்படிக் குழந்தைகளை வதைக்கின்றீர்கள்” என்று 'பரிதாபப் பட்டு' திருப்பி அனுப்பி விடுகின்றார்கள். தவிர, நாம் நிர்ப்பந்தப்படுத்தி சேர்த்தாலும் அவன் தகுதியைவிட ஒரு வகுப்பு கீழாகவே சேர்க்கிறார்கள். அன்றியும் பள்ளிக்கூட பரீட்சைகளில் கூடுமானவரை ஒவ்வொரு வருடமும் அழுத்தி வைக்கவே பார்க்கின்றார்கள்.

பிறகு பல வழிகளிலும் அதாவது உனக்கு படிப்பு வராது, வேறு வேலை பார்த்துக் கொள், வீணாய்ப் பணம் செலவழிக்காதே, பெஞ்சுக்கு வாடகை கொடுக்காதே என்று பேசி பிள்ளையின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கெடுப்பதிலேயே கவலை கொள்ளுகின்றார்கள். பையன்களைச் சர்க்கார் பரீட்சைக்கு அனுப்புவதிலும் உபாத்தியாயர்களுக்கே அந்த உரிமை இருப்பதால் சட்டத்தின் மூலம் எவ்வளவோ தகராறு செய்து பார்த்தும் மீறினால் வேறு வழியில் தகராறும் சொல்லி நிறுத்திவிடவே பார்க்கின்றார்கள்.

இவ்வளவும் தாண்டிப் பரீட்சைக்கு போய் எழுதினாலும் பரீட்சை பரிசோதகர், மார்க்கு கொடுப்பவர், முடிவு சொல்வதில் முக்கியமானவர் ஆகியவர்கள் எல்லோரும் பார்ப்பனர்களே. கடைசியாக பாசானாலும் சர்க்கார் உத்தியோகத்திற்கு போவதற்கு வேண்டிய வயது தாண்டி விடுகின்றது. ஒரு சமயம் மீதி இருந்தாலும் ஒரு வருடம் அல்லது ஆறு மாதமே இருக்குமாதலால். அவசரத்தில் எங்காவது போய் குழியில் விழுவது போல் சிறிய உத்தியோகந்தான் சம்பாதிக்க முடிகின்றது. பரீட்சையில் தவறிப் போனாலோ அதோ கதிதான்.

வெளிப்படையாய் இவ்வளவு கஷ்டம் நமக்கு இருப்பதுடன் மறைமுகமாய் செய்யக் கூடிய கொடுமைகள் எவ்வளவோ இருக்கின்றன. எனவே இந்த நிலையில் நமது கல்வி சாதனம் இருந்து வருகின்றது. ஆதலால் சட்டசபையில் இந்த விஷயங்களை விளக்கி இதற்காக ஒரு கமிட்டி ஏற்பாடு செய்து இக்கஷ்டங்கள் உண்டா, இல்லையா என்று விசாரித்துப் பார்த்து உண்மை என்று பட்டால் இதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜனப்பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சட்டசபை அங்கத்தினர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

பார்ப்பனரல்லாத மாணவர்களும் நமக்கு எழுதிக் கொண்டிருப்பதைவிட இதற்காக ஒரு மாணவர் மாகாநாடு ஏற்பாடு செய்து தங்கள் குறைகளை அதில் விளக்கிக் காட்டி பரிகாரத்திற்குச் சில தீர்மானங்கள் செய்து அதை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று யோசனை சொல்லுகின்றோம். மற்றபடி பிள்ளைகளுக்கு தனிப்பட்ட முறையில் இருந்துவரும் கொடுமைகளை மற்றொரு சமயம் விளக்குவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 07.07.1929)

தாலி கட்டுவது அடிமை உணர்ச்சியைத்தான் குறிக்கின்றது

 தாலி கட்டுவது அடிமை உணர்ச்சியைத்தான் குறிக்கின்றது


பட்டீஸ்வரத்தில் சீர்திருத்தத் திருமணம்

சகோதரிகளே! சகோதரர்களே!! இன்று நீங்கள் சுயமரியாதைத் திருமணம் எப்படி நடத்தப்பட்டது என்பதைப் பார்த்தீர்கள். இம்மாதிரியான விவாகங்கள்தான் முழு சுயமரியாதைத் திருமணங்களென்று கூறிவிட முடியாது. பெண்களுக்குப் போதிய அறிவில்லாதிருப்பதனாலும், அவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கப்படாதிருப்பதனாலுமே முழு சுயமரியாதை முறையில் திருமணம் என்பது நடைபெற முடியவில்லை. எப்பொழுது மணமகனால் மணமகளுக்கு கழுத்தில் தாலி கட்டப்பட்டதோ அது அடிமைத் தனத்தைத்தான் குறிப்பிடுகின்றது. நியாயமாகவே மணமகள் தாலிகட்டிக் கொள்ளத் தனது கழுத்தை அளித்தே யிருக்கக்கூடாது. மண மகளுக்குத் தாலி கட்டினால், மணமகனுக்கும் மணமகளால் தாலி கட்டப்பட வேண்டும். புரோகிதம் இல்லாவிட்டாலும், புகைச்சல் இல்லா விட்டாலும் கூட, இந்த விவாகத்தில் “புரோகிதச்” செலவு குறைக்கப்பட்டிருப்பதாக நான் கருதுவதற்கில்லை.

சகோதரர்களே! நாம் பொதுவாக விவாகத்தைக் கூடக் கடவுளின் தலையிலேயே சுமத்தி விடுகின்றோம். “என்ன செய்வது! விவாகம் திடீரென கூடி விட்டது! அந்த நேரம் (தாலி கழுத்துக்கு ஏறும் நேரம்) வந்துவிட்டால் யார்தான் என்னசெய்ய முடியு?” மென்பதாக உரைக்கின்றோமேயல்லாது, விவாகத்தின் உண்மைத் தத்துவத்தை அறிந்து நமது நாட்டில் விவாகங்கள் நடைபெறுவதாகப் புலப்படவில்லை. இருவருடைய சம்மதமுமின்றியே, அவர்களுடைய வயதையும் கவனியாமலும்கூட,“நாங்கள் செய்து வைக்கின்றோம். உனக்கென்ன கவலை வந்தது?” என்று சொல்லியேதான் அநேக விவாகங்கள் நமது நாட்டிலின்றும் நடைபெறுகின்றன.

நாம் ஒரு விவாகம் செய்வதென்றால் தம்பதிகளின் அபிப்பிராயத்தையும், வயதையும், யோக்கியதையும் கவனியாமலே, புரோகிதர்களிடம் 4-அணா கொடுத்து, இருவருக்கும் பொருத்தம் சரியாயிருக்கின்றதா என்றுதான் கேட்டுத் தெரிந்து கொள்ளுகின்றோம். அவன் பணத்தை வாங்கிக் கொண்டு இருவருக்கும் பொருத்தமிருப்பதாகக் கூறிவிட்டால் உடனே விவாகமும் நடந்து விடுகின்றது. நமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களும், நிர்பந்தங்களும், சந்தேகங்களுமே இதற்குக் காரணமாகும். மேல்நாடுகளில் தம்பதிகள் இருவரும் ஒருவரை யொருவர் நன்றாய் அறிந்து, பழகிக் கொண்டு, இவர்களுக்குள்ளாக நிச்சயம் செய்து கொண்ட பிறகுதான், அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தெரிய வரும். அவர்களுக்கு ஒருவித சடங்குகளுமில்லை. சர்ச்சுக்குப் போய் சாக்ஷிகளின் முன்னிலையில் ஒருவரை யொருவர் விவாகம் செய்துகொள்ள சம்மதிப்பதாக எடுத்துரைத்து கையெழுத்து செய்து விடுவார்கள். அவ்வளவேதான். இப்பொழுது நம்மை ஆண்டு கொண்டிருக்கும் நமது அரசரின் விவாகமும் அவ்விதமே தான் நடந்தது.

இஸ்லாமானவர்களில் கூட, மாப்பிள்ளைப் பெண்ணைப் பார்க்கா விட்டாலும்கூட, ஒருவித சடங்குமில்லாமல் தங்களுடைய பந்துக்களின் முன்னிலையில், முல்லாக்களை வைத்துக் கொண்டு, தங்களுடைய விவாக ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொள்ளுவார்கள். உலகத்தில் 100க்கு 90 விவாகங்கள் இம்மாதிரியேதான் நடைபெறுகின்றன. நமக்குப் போதிய அறிவில்லாததால், அனேக கஷ்டங்களுக்குள்ளாகி, பலவித சடங்குகளை வைத்துக் கொண்டு, நெருப்பையும், அம்மியையும், குழவியையும் சட்டி பானைகளையும் சாக்ஷியாக வைத்துக் கொண்டு, உலக வாழ்க்கையை நடத்த ஆரம்பிக்கின்றோம்.

நாம் பெண்களை அடிமைகள்போல நடத்துகின்றோமேயன்றி, அவர்களை சமமாகவும், கூட்டாளிகளாகவும் பாவித்து நடத்துவதில்லை. அப்படிக் கொடுமைப்படுத்தப் பட்டாலும், விவாகத்தை ரத்து செய்து கொண்டு, விலகிக் கொள்ள இருவருக்கும் உரிமையில்லை. சிறிது நாட்களுக்கு முன்னதாகதான், பரோடா அரசாங்கம் “கல்யாணமான புருஷன் பெண்ஜாதி இருவருக்கும் தங்களில் யாருக்கு பிரியமில்லா விட்டாலும், தங்களுடைய விவாக ஒப்பந்தத்தை ரத்து செய்து, விலகிக்கொள்ளலா”மென்பதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி யிருக்கின்றது.

நமது நாட்டில், அடுத்த வீட்டுப் பெண்களும், பெற்றோரும் மணமகளுக்கு “மாமி வீட்டில் நீ நல்ல அடிமையாய் இரு. அடித்தாலும், உதைத்தாலும் வருத்தப்படாதே, புருஷன் மனம் கோணாமல் நட” என்று உபதேசம் செய்து, மணமகன் வீட்டுக்கு அனுப்புவதும் வழக்கமாயிருக்கின்றது. இதனுடைய கருத்து அவர்களை ஆடவர்களுக்கு எப்பொழுதும் அடிமைகளாகவும், ஒருவித சுதந்திரமாவது அல்லது உரிமையாவது இல்லாதிருக்கும்படி செய்வதற்கேயாகும். அவர்களுடைய உபதேசங்களைக் கேட்டு, மணமகன் வீட்டுக்குச் செல்லும் அந்தப் பெண்ணும் தன்னை ஓர் அடிமையென்றே கருதி, புருஷன், மாமனார், மாமி, நாத்தி இன்னுமிருக்கக் கூடிய பந்துக்களுக்கும் பயந்து, அவர்களுடைய பிரியத்தை சம்பாதிப்பதிலேயே தன்னுடைய வாழ்க்கையை நடாத்தி உயிருள்ள பிணமாக வாழ்கிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் உபத்திரவங்கள் அளித்த போதிலும் அவைகளைப் பொருமையுடன் சகித்துக் கொள்ள வேண்டியவளாகிறாள்.

மேலும், நாம் கடன் வாங்கி, கலியாணங்கள் ஆடம்பரமாக செய்வதினால் அவர்களுடைய தலையின்மீது அக்கடனையும் சுமத்தி விடுகிறோம். கடனை வைப்பதுமல்லாமல், அவர்களைத் தனி வாழ்க்கை நடத்தும்படியாக வேறாகவும் வைத்து விடுகிறோம். நாம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குப் பயந்து கொண்டு, அதிக செலவு செய்வதினாலும், சடங்குகள் பல செய்வதினாலும் கடன் ஏற்பட்டு விடுகின்றது. இந்த யெண்ணம் மக்களை விட்டு நீங்க வேண்டும். அதிலும் பெண்களை விட்டுத் தான் நீங்க வேண்டும். அப்படி நீங்குவதாக யிருந்தால் பெண்களின் அறிவு விருத்தியாக வேண்டும். உலகப் போக்கை அனுசரித்து நடக்கும்படி அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சிலவிடங்களில் சுயமரியாதைக் கலியாணத்திற்கு ஆண்கள் மட்டும் ஏராளமாய் வந்திருப்பார்கள். பெண்களோவெனில் 5 அல்லது 10 பெயர்கள் தான் வருவார்கள். பெண்கள் வந்தால் கெட்டுப் போவார்களாம்! இதற்குக் காரணம், நாம் அவர்களுக்கு உலக ஞானத்தையூட்டி, அறிவு புகட்டாதிருப்பதைத் தவிர்த்து வேறில்லை. ஆணுக்கும், பெண்ணுக்கும், வித்தியாசமில்லை யெனவும், பெண்கள் அடிமைகள் அல்லவென்றும் அவர்கள் கருதுவார்களானால், அப்பொழுது நகைகளும், ஆடைகளும் வேண்டுமென்றும் போராடுவதை அறவே விட்டு விடுவார்கள். அவர்கள் தங்களைத் தாழ்ந்தவர்களெனக் கருதிக் கொண்டிருப்பதால்தான் தங்களை அழகுபடுத்திக் கொண்டு, ஆடவர்களை மயக்க வேண்டிய அவசியம் நேரிடுகின்றது.

நமது பெண்களுக்கு, மேலும், குழந்தைகளை வளர்க்கும் முறைகளும் தெரியாது. குழந்தைகளுக்கு அறிவு, யூகம், சுதந்திர உணர்ச்சி ஆகியவைகளை யூட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏதாகிலும் வியாதி வந்து விட்டால், நாம் உடனே மாரியம்மன் கோவிலுக்கும், ஐயர், பண்டாரம் ஆகியவர்களின் வீட்டுக்கும்தான் செல்லுகிறோமே யல்லாது, அவ்வியாதி ஏன் வந்தது என்பதை ஆராய்ந்து, அதற்குறிய மருந்துகளை அளிக்கும் வைத்தியர்களின் வீட்டுக்குச் செல்லுவதில்லை. சில இடங்களில், குழந்தைகளின் வயிறு நிறைந்திருப்பதையும் அறிந்து கொள்ளாமல், அக்குழந்தைகளின் வயிற்றை அமுக்கிப் பார்த்து அறிந்து கொள்ளுகிறார்கள். இவைகளுக்குக் காரணம் நமக்குப் போதிய கல்வியறிவும், தைரியமும் இல்லாமையேயாகும். ஊரில் காலரா முதலிய நோய்கள் வந்தால், உடனே ஓங்காளியம்மனுக்குப் பொங்கலிடுவதிலும் “நாம் என்ன செய்ய முடியும்? அவனுடைய சீட்டு கிழிந்து விட்டது. போவதுபோய்தானே தீரும்” என்று சொல்லக் கூடியவர்களாகத் தானிருக்கிறோம். நாம் நமது அறிவை உபயோகப்படுத்தி நடந்தால், இத்தகைய கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியதில்லை.

நமது வாலிபர்கள் படித்த பெண்களை மட்டும் விவாகம் செய்து கொள்வதாக ஒரு வைராக்கியம் கொள்ளுவார்களேயாகில், அப்பொழுது பெண்களைப் பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகளுக்கு கல்வியறிவை யூட்டுவார்கள். படித்த பெண்களாகப் படாவிட்டால் கலியாணம் செய்து கொள்ளாமலிருக்க வேண்டும். படியாத பெண்கள் கிழவர்களுக்கு 2ந் தாரம் 3ந்தாரமாக போய் சேரட்டும். இதுதான் படியாத பெண்களுக்கு தண்டனை யாகும். சில சுயமரியாதை விவாகங்களில், பெண்களுக்குத் தாலி கட்டும் வழக்கம் கிடையாது. முனிசிபாலிட்டிகளில் நாய்களுக்குக் கழுத்தில் பட்டை கட்டுவதைப் போல், விவாகமாகும் பெண்களுக்கு நாம் ஒரு தாலியை கட்டி விடுகின்றோம். அப்படி தாலி கட்டுவதாகயிருந்தால், மாப்பிள்ளைக்கும் சேர்த்துதான் கட்ட வேண்டும். எப்பொழுது மாப்பிள்ளை கட்டிக் கொள்ள சம்மதிக்கவில்லையோ, அப்பொழுது பெண்களும் தாலிக் கட்டிக் கொள்ள சம்மதிக்கக்கூடாது. தாலி கட்டுவது அடிமையுணர்ச்சியைத் தான் குறிக்கின்றது.

பெண்களுக்கு நாம் அறிவையூட்டி சமத்துவத்தை அளித்துக் கொண்டு வர வேண்டும். அவர்களைப் பல கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய மூடநம்பிக்கைகள் நீங்கும். நமது பந்துக்கள் வர மாட்டார்களே யெனப் பயப்படக்கூடாது. ஜாதி யைப் பற்றி, நாம் கொஞ்சமும் கவலையடையக் கூடாது. நம்முடைய கொள்கைகளை ஆதரிப்பவர்களிடம் நாம் சம்பந்தம் செய்து கொள்ளலாம். எந்த ஜாதியாக இருந்த போதிலும் சரியே, அவர்களுக்கு அறிவு, யோக்கியதை முதலியவைகளிருந்தால் அவர்களிடம் சிநேகிக்கலாம். அறிவுக்கும், அனுபவத்துக்கும் ஒத்திருப்பவைகளை நாம் கவனித்து நடக்க வேண்டுமே யல்லாது பெரியவர்களின் பழக்க வழக்கங்களையே நாம் கண்மூடித்தனமாய் பின்பற்றலாகாது. இவைகள் யாவும் வாலிபர்களால் தான் நடைபெற வேண்டியிருக்கின்றது. வீண் ஆடம்பரங்களின்றியும், அதிக செலவில்லாமலும், சடங்குகளின்றியும் தம்பதிகளிருவரும் தங்களுடைய விவாகத்தை இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் ரிஜிஸ்தர் செய்து கொள்ளுவதே போதுமானது.

(குறிப்பு: 25.06.1931 இல் கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் நடைபெற்ற திரு துரைசாமி - திருமதி காந்திமதி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 05.07.1931)

பெண்களுக்கு பிள்ளைப் பைத்தியம் இருப்பது மிகவும் புத்தி கெட்டத்தனமாகும்

 

பெண்களுக்கு பிள்ளைப் பைத்தியம் இருப்பது மிகவும் புத்தி கெட்டத்தனமாகும்


கும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம்

சகோதரிகளே! சகோதரர்களே! இன்று இங்கு நடக்கும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகின்றது. இதை நான் முழு சுயமரியாதைத் திருமணம் என்று ஒப்புக் கொள்ள முடியாது. பார்ப்பான் வரவில்லை என்பதையும், அர்த்தமற்ற சடங்குகள் அநேகமாயில்லை என்பதையும், வீண்மெனக்கேடான காரியமும் வீண் செலவுமான காரியமும் இல்லையென்பதையும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் தாலி கட்டத் தயாராயிருப்பதாகத் தெரிகிறேன். பெண் உட்கார்ந்திருக்கும் மாதிரியைப் பார்த்தால் பெண்ணும் மாப்பிள்ளையும் இதற்கு முன் அறிமுகம் கூட ஆனதில்லை போல் காணப்படுகின்றது.



சுயமரியாதைக் கல்யாணத்தின் முறைகள் இன்னின்னது என்று இப்போது வரையறுப்பது என்பது காதால் கேட்பதற்கே முடியாத காரியமாயிருக்கும். கல்யாணம் என்பதே வேண்டியதில்லை என்று சொல்லக்கூடிய திட்டம் சுயமரியாதை இயக்கக் கொள்கையில் ஒரு காலத்தில் வரக்கூடும். எந்தப் பெண்ணும் எந்த மாப்பிள்ளையும் புருஷன் பெண் ஜாதிகளாகப் போகிறார்கள் என்று பெற்றோர்களுக்குக் கூடத் தெரிய முடியாத நிலைமை ஏற்படும். இந்த மாப்பிள்ளைக்கு இதற்கு முன் எத்தனை பெண் கல்யாணமாயிற்று? இந்தப் பெண்ணுக்கு இதற்குமுன் எத்தனை புருஷன் கல்யாணம் ஆயிற்று? என்கின்ற கணக்குப் போடக்கூடிய காலம் வரும். மற்றும் அதைப் பற்றியே மக்கள் விசாரிக்க - யோசனை செய்யக்கூடிய அவசியமே இல்லாமலும் போகக்கூடும். அந்த மாதிரி கல்யாண முறையும் இன்றைய குடும்ப வாழ்க்கை முறைகள் ஒழிந்து ஆணும் ஆணும் சிநேகமாய், அன்பாயிருப்பது போலவே ஏதோ ஒரு பெண்ணும் ஏதோ ஒரு ஆணும் பெண்ணும் சிநேகமாயிருக்கின்றார்கள் என்கின்ற அளவில் மாத்திரமே சம்பந்தமிருக்கும்படியான காலமும் வரும். இதெல்லாம் அநேகமாய் பெண் மக்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சியும், சுயமரியாதை உணர்ச்சியும், உண்மைச் சுதந்திரம் என்பது என்ன என்கின்ற உணர்ச்சியும் வந்தவுடனே ஏற்பட்டுவிடும்.

இப்போது பெண்கள் அடிமைப் பொருள்கள் என்றும் தாங்கள் மற்றவன் அனுபவிக்கும் பொருள் என்றும்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ள நினைப்பதே அவர்களின் அடிமை உணர்ச்சியின் அறிகுறியாகும். அந்தக் கருத்துக் கொண்டுதான் அவர்களுக்கு நடை, உடை அணி முதலியவைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு தாசி என்பவள் அதாவது தான் பிறர் அனுபவிப்பதற்காக இருக்கின்றவள், அதன் பயனாய் ஜீவிக்கின்றவள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒருத்தி தன்னை அலங்கரித்துக் கொள்வதில் இருக்கும் மனோபாவத்திற்கும் மற்றப் பெண்கள் அலங்கரித்துக் கொள்ளுவதில் இருக்கும் மனோபாவத்திற்கும் அதிக வித்தியாசமிருப்பதாக நான் கருதுவதில்லை.

மிருகம், பட்சி ஆகியவைகள் ஆணைவிட பெண் தாழ்ந்ததென்று கருதுவதில்லை. “ஆணுக்காகத்தான் பெண் இருக்கிறோம்” என்று கருதி, தங்கள் மீது ஆண்கள் ஆசைப்பட வேண்டும் என்று சிறிதும் முயற்சிப்பதில்லை. ஆண்கள் ஆசைப்படும்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கருதுவதுமில்லை. ஆனால் பெண் ஜன்மம் எடுத்து தாங்கள் அலங்கரித்துக் கொண்டு ஆண்கள் ஆசையை எதிர்பார்ப்பதற்கே ஏற்பட்டதென்பதாய் கருதுகிறார்கள். தன் சொந்தப் புருஷனை சந்தோஷிக்கச் செய்யவோ திருப்தி அடையச் செய்யவோ என்று செய்யுங் காரியங்களும் கூட ஒரு வித அடிமை எண்ணத்தில் பட்டதே ஆகும். நடை, உடை பாவனைகளில் புருஷனை விட மாறுபட்டிருக்க வேண்டும் என்கின்ற மனப்பான்மையும் அடிமை மோகமே யாகும். இவைகள் எல்லாம் இயற்கைக்கு மாறுபட்டவையே யாகும். எப்படியோ ஆதியில் இம்மாதிரி ஏற்பாடு செய்து விட்டதால் அந்த பத்ததிகள் இனியும் நடந்து வருகின்றன. ஆண்களும் அனேகமாய் தனது வீட்டை, வண்டியை, மாட்டை அலங்கரிப்பதில் என்ன மனோபாவம் கொள்ளுகின்றார்களோ அதே மனோபாவம்தான் தன் பெண் ஜாதியை சிங்காரிப்பதிலும் கொள்ளுகிறான். ஆகையால் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வது என்கின்ற மனப்பான்மையை ஒழிக்க வேண்டியது பெண்கள் விடுதலையில் - சுதந்திரத்தில் ஒரு திட்டமாகும்.

தவிர திருமணம், கல்யாணம் என்பவைகள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது தவிர மற்றபடி இதில் வேறு ஒன்றுமே இல்லை. இந்த ஒப்பந்தமும் இருவர் சௌகரியத்தை பொருத்த காரியங்களுக்கு மாத்திரமே அல்லாமல் மற்றொன்றுக்கும் இல்லை. அதுவும் இருவருடைய சமமான சௌகரியத்திற்குத் தானேயொழிய ஒருவருக்கு அதிக சௌகரியம் ஒருவருக்கு குறைந்த சௌகரியம் என்பதாக சிறிது வித்தியாசங்கூட கொண்டதாயிருப்பதல்ல. அதிலும் இருவரது சுதந்திரங்களும் சமமாய்க் கருதப்பட்டதாகவும் அதற்கு எவ்விதத்தடையும் இருப்பதாகவும் இருக்கக் கூடாததாகும். அனேகமாய் இந்த ஒப்பந்தங்கள் எழுதி ரிஜிஸ்டர் செய்வதுதான் இனிப் பொறுத்தமானதாக இருக்கும். வேண்டுமானால் புதுவீடு குடிபோதல், புதிய தொழில் வியாபாரம் முதலிய காரியங்கள் துவக்கப்படுபவை ஆகியவைகளுக்காக எப்படி முதலிலேயே சற்று விளம்பரம் இருந்தால் அனுகூலம் என்று கருதுகின்றோமோ அதுபோல் நண்பர்கள், நான்கு பந்துக்கள், அக்கம் பக்கத்தார்கள் ஆகியவர்களுக்கு தெரியக்கூடியதாய் இருப்பதும் நன்மையானதுதான். அதிலும் ரிஜிஸ்டர் இல்லாத திருமணங்களுக்கு சாக்ஷிகள் இருக்க வேண்டியது அவசியம் என்கின்ற முறையில் பலர் அழைக்கப்படு வதும் சரிதான். ஆனால் இதற்காகவே அதிகச் செலவும் மெனக்கேடும் கூடாது என்பது மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். திருமணச் சடங்கு என்று ஒன்றை தனிப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

மணமக்கள் சபைக்கு வந்து தங்கள் தங்கள் ஒப்பந்தங்களைச் சொல்லி ஒப்புக் கொண்டதற்கு அறிகுறியாய் தங்கள் தங்கள் சுருக்கெழுத்துள்ள மோதிரம் மாற்றிக் கொள்வதோ மாலை மாற்றிக் கொள்வதோ போதுமானதே யாகும். இதற்காகவென்று ஏன் அதிகப் பணச்செலவு செய்ய வேண்டும்? என்பதுதான் எனக்கும் புரியவில்லை. புதுச்சேலை, புதுநகை தாம்பூலம் இவைகளெல்லாம் பயனற்ற செலவாகவே ஆகின்றன. அனேக சுயமரியாதை கல்யாணங்களில் மாப்பிள்ளை சாதாரண உடுப்புடன் இருந்திருக்கிறார்கள். பெண்கள்தான் உயர்ந்த சேலையும், விலையுயர்ந்த நகைகளும் அணிந்து ஒரு ஆணானவன் பெண் வேஷம் போட்டிருப்பது போல் விளங்குகின்றார்கள். இவையெல்லாம் நாகரீகம் என்பதோடு பெண் மக்களின் தன்மையையே குறைத்து விடுகின்றது. பெண்கள் சுதந்திரத்துக்கும், பெண்கள் விடுதலைக்கும் அவர்கள் மனப்பான்மை சற்று மாறியேயாக வேண்டும். “நான் அடிமையாய்த்தான் இருப்பேன் நீ மாத்திரம் எனக்கு எஜமானனாய் இருக்கக் கூடாது” என்பதில் அர்த்தமேயில்லை.

தவிர பெண்களுக்கு பிள்ளைப் பைத்தியம் இருப்பது மிகவும் புத்தி கெட்டத்தனமாகும். பிள்ளைகள் பெறாமல் இருப்பதற்கு எவ்வளவு சௌகரியம் செய்து கொள்ளக்கூடுமோ அவைகளை செய்து கொள்ள வேண்டும். கொஞ்சுவதற்கென்று பிள்ளைகளைப் பெற்று அவற்றைக் காப்பாற்றுவதற்கு என்று அதற்கு நேர் விரோதமாய் என்னென்னமோ செய்து அஞ்ச வேண்டியதாகி விடுகிறது. எவ்விதத்திலும் பொறுப்பில்லாதவர்கள் வெகுதாராளமாய் “16 பிள்ளைகள் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்” என்று ஆசீர்வாதம் செய்துவிடுகிறார்கள். பிள்ளை பெற்று வளர்க்கக் கஷ்டப் படுகின்றவர்கள் யார் என்பதை யோசித்துப் பாருங்கள். நமது அறிவீனமானது இக் கஷ்டங்களை உணரச் செய்யாமல் செய்து விடுகிறது. உணர்ந்தாலும் அதற்கு நாம் ஜவாப்தாரியல்ல என்று நினைத்துக் கொள்வதால் அக்கஷ்டத்திலிருந்து விலக முடிவதில்லை.

(குறிப்பு : கும்பகோணம் சாக்கோட்டையில் 12-06-1931 அன்று நடந்த ‘ராகு காலத்’ திருமணத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 21.06.1931)

மரகதவல்லி மணம் - மறுமணமும் கலப்பு மணமும் கலந்த காதல் மணம்

 மரகதவல்லி மணம் - மறுமணமும் கலப்பு மணமும் கலந்த காதல் மணம்

அருமை மணமக்களே! இங்கு கூடியுள்ள சகோதரிகளே! சகோதரர்களே! இங்கு நடைபெற்ற மணத்தைப் பார்த்த பின்பு சீர்திருத்த மணமென்பது எத்தகையது என்பது இப்போது உங்களுக்கு நன்றாய் விளங்கியிருக்கும். பண்டைக் காலத்திலும் நம் நாட்டில் இம்முறையில்தான் மணங்கள் நடை பெற்று வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இடையில் இம்முறை எப்படி மாறிற்று என்பதுதான் அதிசயமாய் இருக்கின்றது. இப்போது நம் நாட்டில் நடைபெற்று வரும் மணங்கள் பெரிதும் மணத்தின் உண்மைத் தத்துவமற்றதும், அர்த்தமற்ற வெறும் சடங்கையே முக்கியமாக கொண்டதுமாய் நடைபெறுகின்றன.



மணமக்கள் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை காப்பாற்றுதற்குப் பலர் முன் உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மண முறையானது தற்காலம் வெறும் சடங்குகளையும் அர்த்தமற்ற பழக்க வழக்கங்களையும் காப்பாற்றும் முறையாய்த் திகழ்கின்றது. மணத்தின் லட்சியம் முழுவதும் சடங்காய் ஏற்பட்டு விட்டது. இயற்கை எழுச்சியாலும் உணர்ச்சியாலும் ஏற்பட வேண்டிய மணம் செயற்கையில் நிகழ வேண்டியதாய் விட்டது.

அது போலவே, இயற்கைக் காதலும் இன்பமும்கூட செயற்கைக் காதலாகவும் இன்பமாகவும் மாறி விட்டது. மணமக்கள் ஒருவரை ஒருவர் தாங்களாகவே தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டியதற்குப் பதிலாக வேறு ஒருவர் தெரிந்தெடுத்து மணமக்களை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டிய தாயிருக்கின்றது.

அநேக மணங்களில் மணம் நிகழும்வரை, அதாவது தாலியைப் பெண் கழுத்தில் கட்டும் வரை ஆண் இன்னார், இப்படிப்பட்டவர் என்று பெண்ணுக்கும், பெண் இன்னார், இப்படிப்பட்டவர் என்று ஆணுக்கும் தெரியாமலேயே இருக்கின்றது. சில மணங்களில் தாலி கட்டி சில நாள் வரை கூட தெரிவதற்கில்லாமல் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் முன்னைக் கூட்டியே தெரிய வேண்டாமா என்று யாராவது கேட்டால், “அன்று பிரமன் போட்ட முடிச்சை இனி அவிழ்த்து வேறு முடிச்சு போடவா போகிறான்” என்று சமாதானம் சொல்லி விடுகின்றார்கள்.

எங்கள் பக்கங்களில் கல்யாணப் பெண்கள் இரண்டு கைகளைக் கொண்டும் கண்களை நன்றாய் பொத்திக் கொண்டும் தேம்பித் தேம்பி அழுது கொண்டும் இருக்க, மற்றொரு பெண் கையைப் பிடித்து தரதரவென்று மணவறைக்கு இழுத்துக் கொண்டு வருவது வழக்கம். தாலி கட்டுவதற்குக் கூட கைகளைப் பிடித்து விலக்கித்தான் கட்ட வேண்டும். யார் தாலி கட்டினதென்று பெண்ணுக்கு தெரியவே தெரியாது.

இப்படி அழுது கொண்டும் கண்களை மூடிக் கொண்டும் இருக்கும் பெண்கள்தான் நல்ல உத்தமப் பெண்கள் என்று சொல்லுவார்கள். பெண்களுக்கு கல்யாணம் என்பது தன்னை மற்றொரு வீட்டிற்கு அடிமையாய் விற்பது என்பது அர்த்தமாயிருக்கின்றதேயொழிய ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதற்கு செய்யும் காரியம் என்பது இன்னமும் அநேக பெற்றோர்களுக்குத் தெரியவே தெரியாது.

கல்யாணச் சடங்கு நடந்து பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும் போது பெண் வீட்டாரும், நெருங்கின சுற்றத்தாரும் அழுது கொண்டும், பெண்ணும் தேம்பித் தேம்பி அழுது கொண்டும் தான் அனுப்பப்படுகின்றது, “கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன்” என்று சொல்லி, புருஷன் சொன்னபடியும், மாமி, மாமன், நாத்தி, கொழுநன் சொன்னபடியும் நட என்று பெண்களுக்கு படிப்பிக்கப்படுகின்றது. இம்மாதிரி உபதேசத்தில் கட்டுப்பட்ட பெண்கள் தங்களை மாமியின் வேலைக்காரிகள் என்று எண்ணிக் கொள்ளுவார்களே தவிர இயற்கை இன்பத்தை எப்படி அனுபவிக்க முடியும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

வாழ்க்கை, மணம், இன்பம், காதல் என்பவைகள் ஒவ்வொரு தனி மனிதனின் உரிமையாகும். அன்றியும் அவை அவரவரின் தனி இஷ்டத்தைப் பொறுத்ததுமாகும். இவற்றில் அன்னியருக்குச் சற்றும் இடமில்லை. ஆனால் இப்போது இவை மற்றவர்களுடைய திருப்திக்கும் இஷ்டத்திற்கும் ஏற்றபடி நடக்கின்றது. மணமக்களுக்கு தங்கள் தங்கள் காதலின் மேல் ஏற்படும் மணம்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்க முடியும்.

ஆதலால் இன்று நடந்த மணமானது உண்மையான சீர்திருத்த மணமாகும். இங்கு வந்திருக்கும் பெரியார்களையும் அன்பர்களையும் பார்க்கும்போது இம்மாதிரி மணத்திற்கு இதுசமயம் நாட்டில் உள்ள பேராதரவு நன்கு விளங்குகின்றது.

திரு.முருகப்பர் அவர்கள் நாட்டின் நிலையையும் தேவையையும் நன்கறிந்தவர். அவருடைய எழுத்தும் பேச்சுமே அவருடைய தெளிவைக் காட்ட போதுமானதாகும். சென்ற பத்து பதினைந்து வருஷங்களாக இவர் சீர்திருத்தத் துறையில் உழைத்து வருபவர். சீர்திருத்த முறையைச் சொல்லில் மாத்திரமல்லாமல் செயலிலும் காட்டி விட்டார். நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் திரு.முருகப்பர் - திரு.பிச்சப்பா சுப்பிரமணியம் முதலியவர்கள் மிகுதியும் உழைத்து வந்திருக்கின்றார்கள். இப்போது அந்த சமூகம் எல்லாத் துறையிலும் முன்போக்கடைந்து நாட்டுக்கு வழிகாட்டியாய் இருப்பதற்குப் பெரிதும் இவர்கள் போன்றவர்களே பொறுப்பாளிகளாவார்கள். பொதுவாகவே நாட்டில் சீர்திருத்தத்திற்கு அதிக ஆதரவு ஏற்பட்டு வருகின்றது. நாளுக்கு நாள் நிலைமை அனுகூலப்பட்டுக் கொண்டே வருகின்றது. சாதாரணமாக சென்ற வருஷத்தை விட இவ்வருஷம் எவ்வளவோ பெரிய மனமாறுதல் ஏற்பட்டு இருக்கின்றது.

சென்ற இரண்டு மாதத்திற்கு முன் நடந்த திரு.அருணகிரி திரு.சுந்தரி திருமணமும் இம்மன மாறுதலுக்கு உதாரணமாகும்.

திரு.மரகதவல்லி அம்மாளும் மிகவும் பாராட்டற்குரியவராவார். அவர்களைப் பட்டுக்கோட்டையில் சந்தித்த போது அவ்வம்மையார் தமது அபிப்பிராயத்தை சிலரிடம் தெரிவித்தார்கள். நாம் அதை அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளும்படி சொல்லி விட்டோம். அதில் அவர்களுக்கு அனுகூலம் கிடைக்காததால் தாமாகவே முயற்சி எடுத்துக் கொண்டது மிகவும் பாராட்டத்தக்கதாகும். நம் நாட்டு விதவைத் தன்மையின் கொடுமையை நன்றாய் அனுபவித்தவர்களானதாலும், “குடி அரசு” முதலிய பத்திரிகைகளை பார்த்து வந்ததனாலும், அவர்கள் தைரியமாய் முன்வர நேர்ந்தது.

மற்றபடி உலகத்தில் எத்தனை பெண்கள் இம்மாதிரி கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பதை நினைத்தால் மனம் பதறும். திரு.காந்தி அவர்களைச் சில “விதவைகள்” ஒன்று கூடி தங்கள் கஷ்டத்திற்கு வழி என்ன என்று கேட்டபோது, அவர்கள் “உங்கள் இஷ்டத்தை உங்கள் தாய் தகப்பன்மாரிடம் சொல்லிப் பார்த்து அவர்கள் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்யவில்லையானால் தைரியமாய் வெளிக்கிளம்பி உங்களுக்கு ஏற்ற மணாளனை நீங்களே தெரிந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார். அந்த உபதேசத்தை முறைப்படி திரு.மரகதவல்லியே முதன் முதலாய் நிறைவேற்றி இருக்கின்றார். அதாவது, திரு.மரகதவல்லிக்கு இது இரண்டாவது மணமாகும். முதல் மணக் கணவன் காலமாய் விட்டார். மறுமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இன்று தமது இச்சையை நிறைவேற்றிக் கொண்டார். இதுதான் இயற்கைத் தத்துவம்.

எப்படி எனில், ஒரு புருஷன் தன் மனைவி இறந்து விட்டாலோ அல்லது அது தனக்கு சரிப்படாவிட்டாலோ உடனே மறுமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்கிறான். மனைவி காயலாவாய் இருக்கும்போதே பிழைக்காது என்று தெரிந்தால் வேறு பெண்ணை மனதிலேயே தேடுகின்றான். மனைவி இறந்து போனவுடன் மறு கல்யாணத்திலேயே கவலையாய் இருக்கின்றான். பந்துக்களிடம் சென்று “அணைந்து போன விளக்கை மறுபடியும் ஏற்றி வைக்க வேண்டியது உங்கள் கடமை”, என்று சொல்லி பெண் கேட்கின்றான். வருஷத்திற்குள் மறு கல்யாணம் செய்து கொள்ளுகின்றான். அப்படியிருக்க, பெண்கள் மாத்திரம் ஏன் அந்த மாதிரி செய்து கொள்ளக் கூடாது? ஆகவே, திரு.மரகதவல்லி மற்ற பெண்களுக்கு ஒரு வழி காட்டியாக துணிந்து மணம் செய்து கொண்டதற்கு நான் மிகவும் போற்றுகின்றேன்.

மணமக்கள் இருவரும் நல்ல கல்வியும் அறிவும் உள்ள தக்க ஜதையானதால் இன்று இவ்வைபவத்தைக் கண்டு ஆனந்திக்க முடிந்தது. அன்றியும் இம்மண வைபவம் ஆடம்பரமின்றியும் வீண் சடங்குகளின்றியும் வெகு சிக்கனமாகவும் சுருக்கமாகவும் முடிவு பெற்றது மிகவும் போற்றத் தக்கதாகும். இம்மணமக்கள் இனியும் இவ்வித காரியங்களுக்கு வழிகாட்டியாய் இருந்து ஒத்த இன்பத்துடன் வாழ்ந்து உலகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதாக ஆசைப்படுகின்றேன்.

(குறிப்பு : 29.06.1929 ஆம் நாள் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் திரு முருகப்பர் அவர்களுக்கும் திரு மரகதவல்லி அவர்களுக்கும் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களைப் பாராட்டி சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 07.07.1929)

Sunday 20 February 2022

மண்ணுருண்டை மாளவியாக்கள்

 மண்ணுருண்டை மாளவியாக்கள்

திரு. காந்தியார் அவர்கள் தீண்டாதார்க்கு ஏற்பட்டிருந்த தனித் தொகுதியை ஒழிக்கும் பொருட்டுச் சில தினங்களுக்கு முன் உண்ணா விரதமிருக்கத் தொடங்கியதும், அதன் பின் தலைவர்கள் என்பவர்கள் பம்பாயில் சமரச மகாநாடு கூட்டியதும், அதில் தீண்டாதாரின் தனித் தொகுதி முறை பலிகொடுக்கப்பட்டதும் பழய சங்கதிகளாகி விட்டனவென்று கூற முடியாது. இவ்வாறு தலைவர்களின் மகாநாட்டைக் கூட்டி ஒரு சமரச முடிவை யுண்டாக்கப் பாடுபட்டவர்களில் திரு. பண்டித மாளவியாவே முதன்மை யானவர் என்று எங்கும் புகழப்பட்டு வருகிறது. தனித்தொகுதியை ஒழிக்க விரதமிருந்த திரு. காந்தியாரோ தனித் தொகுதியை ஒழிப்பது மட்டும் போதாது, தாழ்த்தப் பட்டார்க்கு “ஜாதி இந்துக்களுக்கு இருந்து வரும் சகல உரிமைகளும் கொடுக்கப்படவேண்டும்” என்று கூறினார். ஆகையால் தீண்டாதார் தலைவர்கள் தனித் தொகுதியை விட்டுக் கொடுத்துப் பொதுத் தொகுதித் தேர்தல் முறையை ஒப்புக் கொள்ளும்படி செய்வதற்காக நாடெங்கு முள்ள காங்கிரஸ் வாதிகளும், சீர்திருத்தவாதிகளும் தீண்டாமையை விலக்கு வதற்கு முயற்சி செய்வதாகப் பாவனைகள் செய்தனர். வடநாட்டில் பல கோயில்களைத் திறந்து விட்டு விட்டதாகவும் சில இடங்களில் தீண்டாத வகுப்பினருடன் உயர்ந்த வகுப்பு இந்துக்கள் சமபந்தி போஜனம் செய்த தாகவும், தண்ணீர் அருந்தியதாகவும், தின்பண்டம் தின்றதாகவும் செய்திகள் வெளிவந்தன.

தீண்டாதார்க்குப் பூணூல் போட்டு தீட்சை செய்வித்து அவர்கள் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் “சண்டாளத்துவ”த்தைப் போக்க முயற்சித்த திரு. மாளவியா புரோகிதர், ஒரு நிபந்தனையுமில்லாமல் தன்னுடைய வீட்டிற்குத் தீண்டாதாரை அழைத்துச் சென்றதாகவும் தனது வீட்டிலுள்ள சொந்தக் கோயிலைத் தீண்டாதார்க்காகத் திறந்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வெளிவந்தன. வேதங்களையும், ஆகமங்களையும், ஸ்மிருதிகளையும், புராணங்களையும் உருப்போட்டு உருப்போட்டு மூளையில் சுரணையே இல்லாமல் இருக்கும் மரக்கட்டை வைதீகர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கும் திரு. பண்டித மாளவியாவே பூணூல் போடுதல், தீiக்ஷ செய் வித்தல், கங்கையில் குளிப்பாட்டுதல் ஆகிய ஒரு சடங்குமில்லாமலேயே தீண்டாமையை ஒழித்துவிட்டார் என்னும் செய்தியைக் கேட்டவுடன் பத்திரிகைகளெல்லாம் அவரை அளவு கடந்து புகழத் தொடங்கின; வைதீகப் பார்ப்பனர்கள் ஒன்றும் சொல்லுவதற்கு வழியில்லாமல் திகைப்படைந்தனர்.

ஆனால் நாம் மாத்திரம், இவைகளெல்லாம், தீண்டாதார்களை ஏமாற்றித் தனித் தொகுதித் தேர்தல் முறையை ஒழிப்பதற்காகச் செய்யப்படும் கண்கட்டி வித்தைகள் என்றே கூறிவந்தோம்.

இந்து மதத்தை அப்படியே வைத்துக் கொண்டு இந்துமத சாஸ்திரங்களை அப்படியே வைத்துக் கொண்டு தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று கூறுவது சுத்த அயோக்கியத்தனம் என்று சொல்லிக் கொண்டே வந்தோம். இத்தகைய நமது அபிப்பிராயம் சிறிதும் குற்றமுள்ள தல்ல என்பதைக் காட்ட திரு. மாளவியாவைப் பற்றித் தற்போது வெளி வந்திருக்கும் செய்தி ஒன்றே போதுமானதாகும்.

“வைதீக மாளவியா தீண்டாமையை ஒழிப்பதற்கு முனைந்து விட்டார் என்று புகழப்பட்ட வருணாச்சிரம தரும மாளவியா, களிமண்ணும் கங்கா ஜலமும் எடுத்துக் கொண்டு இங்கிலாந்துக்குக் கப்பலேறிச் சென்ற மாளவியா, பம்பாயைச் சேர்ந்த கல்பதேவி என்னுமிடத்தில் சென்ற 2 – 10 -32ல் ஒரு கூட்டத்தில் பேசும்போது ‘பழய கருப்பனே கருப்பன்’ என்னும் சங்கதிக்கு வந்து விட்டார். அவர்,

“சம்பந்தி போஜனம், கலப்புமணம் இவைகளைப் பொறுத்த வரையில் ஜாதிக் கட்டுப்பாடுகளை ஒழிக்கும் விஷயத்தை நான் ஒப்புக் கொள்ள முடியாது. தனிப்பட்ட வகையினாலோ, குடும்ப சம்பந்தத்தினாலோ இம்முறைகளை அனுசரிக்க முயற்சிப்பது முடியாது காரியம்”

என்று பேசியுள்ளார். இதிலிருந்த திரு. மாளவியா புரோகிதரின் மனப்பான்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஜாதிக் கட்டுப்பாடு அதாவது வருணாச்சிரம தர்மம் இருக்கும் வரையிலும் தீண்டாமை ஒழியும் என்று பகுத்தறியும் மூளையையுடைய எவராவது ஒப்புக் கொள்ள முடியுமா? இன்று நமது நாட்டு மக்கள் ஒருவரை ஒருவர் துவேஷிப்பதற்கும், ஒரு வகுப்பினர்க்கு மற்றொரு வகுப்பினர் கொடுமை செய்வதற்கும் காரணமாயிருப்பது பாழும் ஜாதிக்கட்டுப்பாடு, அதாவது வருணாச்சிரம தருமம் என்பதை கடுகளவு புத்தியுள்ளவர்கள் கூட மறுக்க முன் வரமாட்டார்களே. உயர்ஜாதி இந்துக்கள் தாம் வசிக்கும் தெருவில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்தால் தீட்டுப்பட்டுவிடும் என்று நினைப்பது ஜாதி அகங்காரமல்லவா? அவர்கள் தம்முடன் சமத்துவமாக உட்காரக் கூடாதென்று நினைப்பதும், பள்ளிக்கூடங்கள், காப்பி கிளப்புகள்  முதலியவைகளில் தம்முடன் சமமாக உட்கார்ந்து படிக்கவோ சாப்பிடவோ இடந்தராமலிருப் பதற்கும் காரணம் அர்த்தமற்ற ஜாதிக் கட்டுப்பாடு அல்லவா? ஆகையால் ஜாதிக் கடுப்பாட்டை வைத்துக் கொண்டால் ஜாதி உயர்வு தாழ்வை அப்படியே வைத்துக் கொண்டால் வருணச்சிரம தருமம் என்னும் அர்த்தமற்ற கொள்கையை ஒப்புக் கொண்டால் எப்படித் தீண்டாமை அடியோடு போக முடியும் என்று யோசனை செய்து பார்க்கும் படி கூறுகின்றோம்.

உண்மையிலேயே தீண்டாமை ஒழிய வேண்டுமானால் முதலில் சாதி வித்தியாசம் ஒழிந்தாக வேண்டும். சாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமானால் சாதிக்கட்டுப்பாடும், வருணாச்சிரம தருமங்களும் குழிவெட்டிப் புதைக்கப் பட்டாக வேண்டும். இவைகளை நிறைவேற்றச் சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் எங்கும் நடைபெற வேண்டும். தீண்டாதார்கள் மக்கள் எல்லாம் வைதீகப் பார்ப்பனர்களின் வீட்டு மாப்பிள்ளைகளாகவும், மருமக்கள்                     களாகவும் வேண்டும். வைதீகப் பார்ப்பனர்களுடைய மக்களும் தீண்டாதார் கள் வீட்டு மாப்பிள்ளைகளாகவும் மருமக்கள்களாகவும் ஆக வேண்டும். இவ்வாறே ஒவ்வொரு சாதிகளும் தமக்கு மேற்பட்ட சாதிகளுடனும், கீழ்ப்பட்ட சாதிகளுடனும் கலந்து ஒன்றாக வேண்டும். இப்படியே “பஞ்சமர்” முதல் “பார்ப்பனர்” வரையுள்ள எல்லா வகுப்புகளும் கலந்து ஒன்றாகும் வரையிலும் ஜாதிகள் ஒழியாது தீண்டாமையும் ஒழியாது.

இன்று இக்காரியங்களுக்குத் தடையாய் இருப்பன இந்து மதமும், அதில் உள்ள வேத, புராண, இதிகாச சாஸ்திரங்களும், அவைகளைப் படித்து விட்டுச் சொந்த புத்தியில்லாதிருக்கும் திரு மாளவியா போன்ற மண்ணு ருண்டைகளுமே யாகும்.

ஆனால் இந்த திரு. மாளவியா பண்டிதர், தீண்டாதார்களுக்குக் கோவில் பிரவேசம் அளிக்க வேண்டும் என்றும், குளம், கிணறு, நடைபாதை, பள்ளிக்கூடம் முதலியவைகளில் சமத்துவம் அளிக்க வேண்டும் என்று மாத்திரம் பேசுகிறார். இதன் பொருட்டுத் தென்னாட்டிற்கும் பிரசாரம் பண்ணவரப் போகிறாராம். அவர் தென்னாட்டிற்கு வருவாரானால் கட்டாயம் அவமானப்படுவார் என்று மாத்திரம் தெரிவிக்க விரும்புகிறோம்.

சாதிகள் ஒழியாமல் – சாதி கட்டுப்பாடுகள் அழியாமல் – வருணாச்சிரம தருமம் மாளாமல் – திரு. மாளவியா சொல்லும்  தீண்டாமை ஒழியப் போவ தில்லை; ஒரு சமயம் சட்டத்தின் மூலம் கோயில் பிரவேசம் மற்றும் பொது ஸ்தாபனங்களில் சம உரிமை முதலியவைகளை ஏற்படுத்தாமலும் அதனால் தாழ்த்தப்பட்டார்க்கு எள்ளத்தனையும் நலங்கிடைக்கப் போவதில்லை. உயர்ந்த வகுப்பினர் என்பவர்கள் வாயில்லாப் பூச்சிகளாகிய அவர்களை இன்னும் ஈவு இரக்கமின்றிக் கொடுமைப் படுத்தவே முன்வருவார்கள் என்பது திண்ணம்.

தீண்டாமை ஒழிவதற்காக “இன்னொரு முறை பட்டினிகிடக்கப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் திரு. காந்தியடிகளும் இதே கொள்கையுடையவர் தான் என்பதை நாம் இப்பொழுது கூறவேண்டிய தில்லை. நமது “குடி அரசு” வாசகர்களுக்கெல்லாம் நன்றாய்த் தெரிந்த விஷயமாகும். ஆகையால்தான் திரு. காந்தியார், திரு. மாளவியா போன்ற வர்களின் ஆதிக்கத்தில் உள்ள ‘காங்கிரஸ்” சபையில் மதப் பாதுகாப்பையும் ஜாதிப் பாதுகாப்பையும், சாஸ்திரப் பாதுகாப்பையும்,  நாகரீகப் பாதுகாப்பை யும் திட்டங்களாக அமைத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் முன்பே பல தடவைகள் விளக்கிக் கூறப்பட்ட விஷயமாகும். ஆகையால் தற்போதைய கொள்கையையுடைய காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கும் வரை யிலும் திரு. காந்தியார், திரு. பண்டித மாளவியா போன்றவர்கள் காங்கிரசைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும் வரையிலும் – ஜாதியோ, வருணாச்சிரம தருமமோ; ஜாதிக் கட்டுப்பாடோ, தீண்டாமையையோ ஒழிவதற்குச் சிறிதும் வழியேயில்லை யென்று சத்தியமாகக் கூறுவோம்.

இது நிற்க, இனி, திரு. மாளவியா அவர்களும் திரு. காந்தி அவர்களும் சொல்லுகிறபடியாவது, கோயில்களிலும் குளம் கிணறு நடைபாதை பள்ளிக் கூடம் முதலியவைகளிலுமாவது தீண்டாதார்க்குச் சமவுரிமையளிக்க நமது நாட்டு வைதீகர்கள் சம்மதிப்பார்களா என்று கேட்கின்றோம். தமிழ் நாட்டில், இப்பொழுதே எங்கும் பகுத்தறிவற்ற மண்ணுருண்டைக் கூட்டத்தார், “மதம் போச்சு, சாஸ்திரம் போச்சு, பழக்க வழக்கம் போச்சு” என்று கூச்சலிட ஆரம் பித்து விட்டார்கள். சில தினங் களுக்கு முன் (2 – 10 – 32) தஞ்சையில் வாயள வில் வைதீகம் பேசும் வக்கீல் பார்ப்பனர்கள் கூடிய வருணாச்சிரம தர்மக் கூட்டத்தில் தீண்டாதார்க்குக் கோயில் பிரவேசம் அளிக்கும் விஷயத்தைக் கண்டித்துத் தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அக்கூட்டத்தினர், கோயில் பிரவேசத்தின் பொருட்டு குருவாயூரில் திரு. கேளப்பன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்ததைக் கண்டித்தும், கள்ளிக் கோட்டை சாமொரின் அவர்கள் குருவாயூரில் கோயிலைத் தீண்டாதார்களுக்குத் திறந்து விடா மலிருந்த செய்கையைப் பாராட்டியும் தீண்டாமையை ஒழிக்க முயலுவதும், கோயில் பிரவேசமளிக்க முயலுவதும் இந்து மத ஆகம, வேத, புராண சாஸ்திரங்களுக்குப் பொருத்தமுடையதல்ல வென்றும் தீர்மானங்கள் நிறை வேற்றியிருக்கின்றார்கள். இன்னும் கோயில் பிரவேசத்தின் பொருட்டுச் சென்னைச் சட்டசபையில் சட்டம் நிறைவேற்ற அனுமதியளிக்கக் கூடாது என்று கவர்னர் வைசிராய் முதலியவர்களை வேண்டிக் கொள்ளுவதாகவும் தீர்மானம் பண்ணியிருக்கிறார்கள்.

மற்றொரு வைதீகராகிய திரு. ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் தீண்டாமை ஒழிக்கும் விஷயத்தில் அரசாங்கமே கவனம் செலுத்திவரும் சுதேச முஸ்லிம் சமஸ்தானமாகிய ஹைதராபாத்திற்குப் போய் தீண்டாமை விலக்குக்கு எதிர் பிரசாரம் பண்ணுகிறார். ஹைதராபாத்தில் சென்ற 30 – 9 – 32ல் கூடிய வக்கீல்களில் மகாநாட்டில், திரு. ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் தலைமை வகித்துப் பேசும் போது,

“சமூக, மத சம்பந்தமான விஷயங்களில் அரசாங்கத்தார் தலையிடக்கூடாது”

என்றும்,

“இந்து மதமும், இஸ்லாம் மதமும் கடவுளால் வெளியிடப் பட்ட மதமாதலால் இவைகளில் சட்டத்தைப் புகுத்துவது சரியாகாது”

என்றும் வைதீகப்பிரசாரம் பண்ணியிருக்கிறார். திரு. ஆச்சாரியார் இந்து மதத்துடன் மதத்தையும் சேர்த்துக் கொண்டு பேசியது முஸ்லிம் மதத்தைப் பற்றி அவருக்குள்ள கவலையைக் காட்டவா? அல்லது ஹைதராபாத் அரசாங்கத்தாரை ஏமாற்றவா? என்று கேட்கின்றோம்.

இன்னும் வைதீக பார்ப்பனர்களுடைய பிடிவாதத்தை அறிய வேண்டு மானால் சில நாட்களுக்கு முன் ஒரு பிரபலமான தமிழ் தினசரி ஒன்றில் பார்ப்பன கனபாடி ஒருவர் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையில் உள்ள சில விஷயங்களைக் கவனித்தால் உண்மை விளங்கும். அவை:-

“ஒரு வகுப்பாரது நோக்கத்தை நிறைவேற்ற இன்னொரு வகுப்பாரது உணர்ச்சி பாதிக்கப் படலாகாது. நமது தேசத்தவர் “ஹிந்துக்கள்” என ஒரு வழிப்பாடாய் அழைக்கப்பட்டாலும், வெவ்வேறு வகுப்பிற்குரிய வாழ்க்கையையும் உடையவர்களாகவே இருக்கின்றனர். ஒரு வகுப்பாரைப் புண்படுத்திப் பட்டினிகிடந்து ஒன்றைப் பெறுவது சிலாக்கிய மல்ல”

என்று குறிப்பிட்டிருப்பதைக் கொண்டு, தற்போதிருக்கும், ஜாதி வித்தி யாசங்களும், பழக்கவழக்கங்களும் மாற்றுவதும் மாற்றுவதற்கு முயலுவதும் சரியல்ல என்பதே வைதீகர்களின் எண்ணம் என்பதை உணரலாம். ஆகவே, இனி திரு. காந்தியவர்கள் பட்டினி கிடந்தாலும் அதை எந்த வைதீகரும் ஆதரிக்கப் போவதில்லையென்பதையும் இப்போழுதே நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். மேலும்,

“உத்சவ காலங்களில் சுவாமி ஊர்வலம் வருவதும், உத்சவ முடிவில் நடக்கப்படும் ரதோத்சவமும் தாழ்ந்த வகுப்பினருக்குக் காட்சி கொடுக்கவே யென்பதை யாவரும் அறியலாம். ரதோத்சவ காலங்களில் தீண்டாதார்கள் என்பவர்களைத் தீண்டலும் தகும் என்பது வைதீகர்களது கொள்கை.  எனவே தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்கள் சமஉரிமை கொடுத்துச் சகோதரர்களாகவே பாவிக் கின்றனர். இப்பொழுது புதிய வழியில் அவர்களைக் கோவில்களில் புகுந்து வணங்கச் செய்ய வேண்டுமெனத் தலைவர்கள் முயலுவதைக் கண்டு வைதீகர்களாகிய நாங்கள் வருந்துகிறோம்.”

என்று குறிப்பிட்டிருப்பதைக் கொண்டு கோயில் பிரவேச விஷயத்தில் வைதீகர் கொண்டுள்ள மனப்பான்மையை அறியலாம்.

மேற்கூறிய பல விஷயங்களையும் உதாரணங்களையுங்கொண்டு, திரு. மாளவியா பண்டிதர் பிரசாரம் பண்ணப் போவதாகக் கூறும் போலித் தீண்டாமை ஒழிப்புப் பிரசாரத்தைக் கூட ஆதரிக்க எந்த வைதீகரும் தயாராயில்லை என்பதை அறியலாம்.

ஆகவே யாரும் திரு. காந்தியோ அல்லது, திரு. மாளவியாவோ, அல்லது காங்கிரசோ செய்யும் தீண்டாமை விலக்குப் பிரசாரத்தைக் கண்டு ஏமாற வேண்டாம், தீண்டாமை ஒழிப்புப் பிரசாரம் பண்ணும் காங்கிரஸ் பார்ப்பனர்களை “ஜாதிகளை அழிப்பதற்கும் ஜாதிக்கட்டுப்பாடுகளை அழிப்பதற்கும், காரணமாக இருக்கும் கலப்பு மணத்தையும் சமபந்தி போஜனத்தையும் ஒப்புக் கொள்ளுகிறார்களா” என்று கேட்டால் அவர் களுடைய குட்டு வெளிப்பட்டுப் போகும். சமபந்தி போஜனத்திற்கு அனேகர் ஒப்புக் கொண்டாலும், கலப்பு மண விஷயத்தை ஒப்புக் கொள்ளத் துணிய மாட்டார்கள். இதற்கு நமது நாட்டு பார்ப்பனர்கள் சிலர் மனப்பூர்வமா ஒப்புக் கொண்டாலும், திரு. மாளவியா போன்ற வைதீகர்கள் ஒரு நாளும் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். ஆகையால் எல்லோருக்கும் இந்து மதப்பிரசாரம் பண்ணும் காங்கிரசிடமும் அதன்பிரச்சாரகர்களிடமும் ஜாக்கிரதையாயிருக் கும்படி எச்சரிக்கை செய்கின்றோம்.

-- குடி அரசு – தலையங்கம் – 09.10.1932

தாழ்த்தப்பட்டார் விடுதலை

 

தாழ்த்தப்பட்டார் விடுதலை


இந்துக்கள் மாயவலை

பொதுவாக உலகில் வாழும் ஜீவப் பிராணிகளெல்லாம் இன்பத்தையே அடைய விரும்புகின்றன. இது உலக சுபாவமாகும். இது போலவே அறிவில் சிறந்தவர்கள் என்று கருதப்படும் மனிதர்களும் இன்பத்தோடு வாழ விரும்புவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் மற்ற ஜீவப் பிராணி களுக்கும், மனிதர்களுக்கும் தாங்கள் சௌக்கிய மடையும் விஷயத்தில் ஒரு வித்தியாசம் மாத்திரம் உண்டு. மற்றய பிராணிகள் வேறுள்ள ஜீவன் களையெல்லாம் தங்களுக்கு அடிமையாக வைத்துக்கொண்டு, அவைகளின் உழைப்பால் தாங்கள் கஷ்டப்படாமல் சௌக்கியமாக ஜீவிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஒவ்வொரு ஜீவப் பிராணி வகையும் தாமே உழைத்து வருந்திச் சௌக்கியமடைகின்றன. ஆனால் மனிதன் மாத்திரம் பிற மனிதன் தமக்குக்கீழ் அடங்கி நடக்கும்படி செய்து, அவர்கள் உழைப்பைக் கொண்டு, தான் சிறிதும் கஷ்டப்படாமல் சுகம் அனுபவிக்க ஆசைப் படுகின்றான். இக் குணம் முற்காலத்தில் ஒரு மனிதனிடம் உற்பத்தியாகி, பின்பு அது பல மனிதர்களிடம் பரவி, கடைசியில் ஒரு கூட்டத்தினரிடம் நிலைத்து விட்டது என்று யூகித்துக் கூறுவது பொருத்தமாக இருக்கலாம். இக்குணத்திற்கே ‘சுயநலம்’ என்று சொல்லப்படுவது. இக்குணத்தையே தொழிலாகக் கொண்ட ஒரு கூட்டம் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக உலகில் இருந்து கொண்டுதான் வருகிறது.

இக்கூட்டத்தினரின் சூழ்ச்சியினால் தான் உலகில் தற்போது நமது கண்முன் காணப்படும் எண்ணற்ற சாதிப் பிரிவுகளும், மதவேற்றுமைகளும், கொடுமைகளும், குருட்டுப்பழக்க வழக்கங்களும் ஏற்பட்டு நிலை பெற்று வருகின்றன,

எங்கும் “சமத்துவம்” “சகோதரத்துவம்” “விடுதலை” “சுதந்திரம்” என்னும் வார்த்தைகள் தோன்றி சுயநலக்கூட்டத்தாரின் சூழ்ச்சியால் அடிமைப்பட்டு மனிதத் தன்மையை மறந்து கிடந்த மக்களை விழிக்கச் செய்கின்ற இக்காலத்திலும் பரம்பரையாக கஷ்டமின்றிச் சுகம் அனுபவித்து வந்த கூட்டத்தார் தங்கள் சுயநலத்தை விட்டுக்கொடுக்கச் சம்மதிக்கா மலிருப்பதில் ஆச்சரியமில்லை.  நெடுங்காலமாக அனுபவித்து வந்த சௌக்கியத்தைத் திடீரென்று எப்படி தியாகம் பண்ணிவிட முடியும்?  தங்கள் சமத்துவத்திற்குப் போராடத் தூக்கத்தினின்று எழுந்து புதிய ஊக்கத்துடன் முன்வந்திருக்கும் மக்களை மீண்டும் அடிமைப்படுகுழியில் வீழ்த்தவே முயற்சி செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால் “மனுதருமத்தை”ச் சட்டமாகவும், அதை ஆக்கிய பார்ப்பனர்களை மந்திரிகளாகவும், குருமார்களாகவும் வைத்துக் கொண்டு அரசாண்ட இந்திய மன்னர்களின் அரசாட்சி ஒழிந்து “பிரிட்டிஷ்” அரசாட்சி ஏற்பட்டதின் பலனாக, இன்று மனிதத்தன்மையை மறந்து அடிமையாகக் கிடந்த மக்கள், தங்கள் மனிதத் தன்மையைப் பெற முயற்சிக்கின்றனர். பழய இந்து மன்னர்களின் அரசாங்கம் இப்பொழுதும் நமது நாட்டில் நிலைத்திருக் குமாயின் இன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் விரும்புவது போலவும், கிளர்ச்சி செய்வது போலவும், சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் கிளர்ச்சி செய்வார் களானால் கட்டாயம் அச்சமூகத்தார் முழுவதும் சித்திரவதைக்கும் சிரச்சேதத் திற்கும் உட்படுவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டபின் தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் கொஞ்சம் கல்விப் பெற்றதன் பயனாலும், தாங்களும் மற்றவர்களைப் போல் மனிதர்கள் தான் என்பதை உணர்ந்ததன் பயனாலும், தாங்கள் உழைக்க பிறர் அதைக் கொண்டு உயிர் வாழ்ந்து, தங்கள் தலை மேலேயே உட்கார்ந்து கொண்டு அமிழ்த்திக் கொண்டிருக்கும் கொடுமையை உணர்ந்ததன் பயனாலும், தாங்கள் இந்துக்களினின்றும் தனியாகப் பிரிந்தாலொழிய தங்களுக்கு ஒருவித விமோசனமும் ஏற்படாது என்பதை அறிந்து அதற்காகக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இக்கிளர்ச்சி சமூகத்திலிருந்து ஆரம்பித்து அரசியலிலும் நுழைந்து விட்டது.

இந்துக்களின் அரசாட்சி ஒழிந்துவிட்ட கால முதலே அவர்கள் ஆதிக்கமும் குறைந்துவிட்டது. ஆகையால் எப்பொழுதும் அடக்கி ஆண்டு வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை மதத்தைக் கொண்டாவது. வேத சாஸ்திரங்களைக் கொண்டாவது, பலாத்கார அதிகாரத்தைக் கொண்டாவது இனியும் அடக்கி வைத்திருக்க முடியாது என்பது நிச்சயம். ஆகவே அரசியல் ஆதிக்கம் பெற்றால் தான் அவர்களை முன்போல அடக்கி ஆளமுடியும். இந்தக் காரணத்தால் தான் வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து தங்கள் கையில் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் வைத்துக் கொள்ளக் கூடிய “சுயராஜ்ய”த்திற்காகச் செய்யப்படும் கிளர்ச்சியில், உயர்ந்த சாதிக்காரர் களும், வைதீகர்களும், மத பக்தர்களும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

 திரு. காந்தி உள்ளிட்ட காங்கிரஸ்காரர்களும், பண்டித மாளவியா, திரு மூஞ்சே யுள்ளிட்ட இந்து மகாசபைக்காரர்களும் தாழ்த்தப்பட்ட கூட்டத் திற்குத் தனித் தொகுதி ஏற்படுத்தக் கூடாது என்று பலமாக எதிர்ப்பதற்குக் காரணம் இதுவேயாகும். முஸ்லீம்கள் தனித் தொகுதி வேண்டிப் பிரிந்து நிற்கும் காலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும், மற்ற சிறுபான்மைச் சமூகத்தாரும், தனித்தொகுதி பெற்றுப் பிரிந்து நிற்பார்களாயின் இந்து சமூகத்தாரின் கூட்டம் சட்ட சபைகளில் மைனாரிட்டியாகி விடும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறாகி விட்டால், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தமக்கு வேண்டிய சௌகரியங்களை முஸ்லீம்களுடையவும் மற்றச் சிறுபான்மைச் சமூகத்தினருடையவும் பிரதிநிதிகளின் உதவி பெற்றுச் சட்ட சபைகளின் மூலம் செய்து கொள்ளலாம் என்பதில் சந்தேக மில்லை. இவ்வகையாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் பெறக்கூடிய சந்தர்ப்பம் பெற்று விட்டால் அது, இதுவரையிலும் அவர்களைக் கொடுமைப் படுத்தி அடக்கியாண்டு வந்த உயர்ந்த சமூக இந்துக்களின் சுயநலத்திற்குப் பாதகம் உண்டாக்காமற் போகாது. இக் கருத்துகளைக் கொண்டுதான் “காங்கிரஸ்” பிரதிநிதி என்ற பெயரோடு “வருணாச்சிரம தரும”த்தின் பிரதிநிதியாகச் சென்ற திரு. காந்தி யவர்களும் மற்ற இந்து மகாசபையைச் சேர்ந்தவர்களுமான வட்டமேஜை மகாநாட்டுப் பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி ஏற்படுத் துவதை ஒரே அடியாக எதிர்த்தார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஆனால்  இச்சூழ்ச்சியை அறிந்த தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களுக்குத் தனித் தொகுதியே வேண்டுமென விரும்புகின்றனர். அச்சமூகத்தின் தலைவர்களாகிய திருவாளர்கள் டாக்டர் அம்பெட்கார், ஆர். சீனிவாசன், எம், சி. ராஜா, வி. ஐ. முனுசாமி பிள்ளை போன்ற தலைவர்களெல்லாம் தங்களு டைய சமூகத்திற்குத் தனித் தொகுதியே வேண்டுமென்று கிளர்ச்சி செய்தனர். இவர்களில் திரு. எம். சி. ராஜா அவர்களைத் தவிர மற்றவர்கள் இன்றும் தனித் தொகுதி வேண்டுமென்பதிலேயே உறுதியாக இருக்கின்றனர்.

திரு. எம். சி. ராஜா மட்டிலும், எவ்வித சூழ்ச்சியினாலோ ஏமாற்றப்பட்டு இந்து மகாசபையைச் சேர்ந்த திரு. மூஞ்சே அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தனித் தொகுதியை எதிர்த்தும், கூட்டுத் தொகுதியை ஆதரித்தும் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகிறார். உண்மையில் இப்பிரசாரத்திற்கு காரணம், இந்துக்களின் சூழ்ச்சி என்பதில் சிறிதும் ஐயமில்லை. .இந்துக்களின் வலையிற் சிக்கி இருக்கும், திரு, எம். சி. ராஜா அவர்களைப்போல் அவர் களுடைய வலையிற் சிக்கிய வெகு சிலரே ராஜாவின் பேச்சை ஆதரிக் கின்றார்கள்.

ஆனால் திரு. ராஜா அவர்களின் அபிப்பிராயந்தான் தாழ்த்தப்பட்ட வர்களின் அபிப்பிராயம் என்று நினைக்குமாறு, இந்துக்களின் ஆதிக்கத் திலிருக்கும் தேசீயப் பத்திரிகைகள் எனப் பெயர் வைத்துக் கொண்டிருப் பவை, திரு. ராஜாவை ஆதரித்து விளம்பரம் பண்ணிக் கொண்டு வருகின்றன.

உண்மையில் தாழ்த்தப்பட்ட சமூகம் சமத்துவம் பெற வேண்டு மானால், அவர்கள் இந்துக்களினின்றும் பிரிந்து தங்கள் கால்பலத்தில் நின்று கொண்டே கிளர்ச்சி செய்தால் தான் முடியும் என்பதை நாம் அடிக்கடி எடுத்துக் காட்டியிருக்கிறோம். ஆகவே டாக்டர். அம்பெட்கார், சீனிவாசன், வி. ஐ. முனிசாமி பிள்ளை ஆகியவர்கள் விரும்புகிறபடி அரசியல் சீர்திருத் தத்தில் தனித் தொகுதி பெற்றால் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெற முடியும். இவர்கள் கூறுவது தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் அபிப்பிராயம் என்பதையும், திரு. எம். சி. ராஜாவின் அபிப்பிராயம் இந்துக்களின் அபிப் பிராயமே தவிர தாழ்த்தப் பட்ட சமூகத்தாரின் அபிப்பிராயம் அல்ல வென்ப தையும் சென்ற 5-5-32ல் கமிட்டியில் திரு. வி.ஐ. முனுசாமி பிள்ளை அவர்கள் தலைமையின் கீழ் கூடிய அகில இந்திய தாழ்த்தப்பட்டார் காங்கிரஸ் தீர்மானத்தைக் கொண்டும், சென்ற 10-7-32ல் பம்பாயில் திரு. எம். சி. ராஜா அவர்கள் தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டார் மகாநாட்டைக் கொண்டும் அறியலாம். டாக்டர் அம்பெட்கார் கட்சியை ஆதரிப்போரால் கூட்டப்பட்ட கமிட்டி காங்கிரசுக்கு, பல மாகாணங்களிலிருந்தும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் வந்திருந்தனர். தனித் தொகுதியை எதிர்க்கும் கட்சி யினரும் வந்திருந்தனர். அவர்கள் மிகச் சிலராக இருந்த காரணத்தால் மகாநாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஆகவே தனித்தொகுதியை ஆதரிப்பதாகவும், இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டின் போது இங்கிலாந்தில் செய்து கொள்ளப்பட்ட சிறுபான்மையோர் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாகவும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த மகாநாட்டிற்கு இந்துக்களின் எதிர்ப்பு இருந்ததே தவிர ஆதரிப்பு சிறிதும் இல்லை. ஆகவே இம் மகாநாட்டுத் தீர்மானங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் உண்மையான அபிப்பிராயம் என்று கூறுவதற்கு என்ன தடையுண்டு?

பம்பாயில் திரு. எம். சி. ராஜா கட்சியினரால் கூட்டப்பட்ட மகா நாட்டிற்கு சுமார் 200, பிரதிநிதிகளே வந்திருந்தனர். மகாநாட்டிற்கு எதிராகத் தனித் தொகுதியை ஆதரிக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் 250 பேர்கள் மகாநாட்டுக் கொட்டகைக்குள் விடப்படாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனர். 250 என்னும் எண்ணிக்கை,  பொதுத் தொகுதியை ஆதரிக்கும் தேசீயப் பத்திரிகை களில் காணப்படுகின்றதாதலால், இது உண்மையாக இருக்க முடியாது. 250க்கு மேல் அதிகமாகத்தான் இருக்க வேண்டும். அன்றியும் இம் மகாநாடு இந்துக் களின் ஆதரவின் மேல்தான் கூட்டப்பட்டதாகும். ஆகவே இம் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானங்கள் இந்துக்களின் அபிப்பிராயத்தைச் சேர்ந்தனவே யொழிய, தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் அபிப்பிராயத்தைச் சேர்ந்தவை யென்று கூற முடியாது என்பது நிச்சயம். இம் மகாநாட்டில் தான் கூட்டுத் தொகுதியை ஆதரிப்பதாகவும், “ராஜா – மூஞ்சே ஒப்பந்த”த்தை ஆதரிப்பதாகவும், வட்டமேஜை மகாநாட்டில் செய்யப்பட்ட ‘சிறுபான்மை யோர் ஒப்பந்த’த்தை எதிர்ப்பதாகவும் தீர்மானித்திருக்கிறார்கள்.

இந்து மகாசபைக்காரர்களின் தூண்டுதலால் நடத்தப்பட்ட இந்த மகா நாட்டில் தலைமை வகித்த திரு. எம். சி. ராஜா அவர்கள் பேச்சில் காணப்படும் வாதங்களிலும் ஒரு புதுமையும் தோன்றவில்லை. வழக்கம்போல் இந்துக் களை ஆதரித்தால்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு அரசாங்கத்தில் மந்திரி முதலிய உத்தியோகப் பதவி கிடைக்குமென்றும், இந்துக்களின் துணையோ, உதவியோ இல்லாமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தார் சமத்துவமோ, சுதந்திரமோ பெற முடியாதென்றும் கூறியிருக்கிறார்.

அடிக்கடி இவர் மந்திரி பதவியையே கூட்டுத்தொகுதிக்கு உதாரண மாகக் கூறி வருவதைக் கொண்டு, மந்திரிப் பதவி மோகத்தினாலேயே இந்து மகாசபைக்காரரின் பாட்டுக்குத் தாளம் போடுகிறார் என்று கூறுகிறார்கள். அது எப்படியாவது இருக்கட்டும். இந்து சமூகத்தினரின் உதவியோ, துணையோ இல்லாமல், தாழ்த்தப்பட்டார் சமத்துவம் பெற முடியாது என்னும் வாதத்தை மாத்திரம் கவனிப்போம்.

இது வரையிலும் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்துக் களின் தயவை எதிர்பார்த்து வாழ்ந்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு அவர்கள் செய்த நன்மை என்ன? தாழ்த்தப்பட்டவர்களைக் கல்வி கற்க அனுமதிக்காமலும் தெருவில் நடக்க அனுமதிக்காமலும், நல்ல உடை உடுத்த அனுமதிக்காமலும், கிணறு குளங்களில் தண்ணீர் எடுக்க அனுமதிக்காமலும் செய்ததுதான் கிடைத்த பலன். பிரிட்டிஷ் அரசாங்கம் இருக்கின்ற இக் காலத்தில் கூட தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பொது இடங்களில் சமத்துவம் கொடுக்க மறுக்கிறார்கள் என்றால் பிரிட்டிஷ் அரசாங்கமில்லாமல் தங்கள் கையிலேயே எல்லா அதிகாரமும் இருக்குமானால் என்னதான் செய்ய மாட்டார்கள் என்று கேட்கிறோம். இதைபற்றி நாம் அதிகமாக விரித்துக் கூற வேண்டியதில்லை. “இந்துக்களின் தயவை எதிர்பார்த்துக் கொண்டும், தங்களையும் இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டும் இருக்கும் வரையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விமோசனமே உண்டாகப் போவதில்லை” யென்று கோபுரத்தின் மேல் நின்றும் கூறுவோம்.

ஆகையால் இந்து மகாசபைக்காரர்களின் வலையிற் சிக்குண்டு கிடக்கும்  திரு எம். சி. ராஜா கூட்டத்தாரின் பேச்சைக் கேட்டு ஏமாறக்கூடாது என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

கொடுமைபடுத்தப்பட்டு, நசுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டுக் கிடக்கும் சமூகத்தின் சமத்துவத்திற்கும், முன்னேற்றத்திற்கும், உண்மையாகப் பாடுபடுகின்றவர்கள் யார் என்பதை வெகு சுலபமாகத் தெரிந்து கொள்ள ஒரு வழியுண்டு. அவ்வழியாவது:-

தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் விடுதலைக்கு உண்மையாக பாடுபடுபவர் அச்சமூகத்தைத் தாழ்த்தி வைத்திருக்கும் கூட்டத்தினரால் கட்டாயமாக எதிர்க்கப்படுவார்கள், தூஷிக்கப்படுவார்கள். பல விதமான பழிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பது நிச்சயம். ஆதலால் தாழ்த்தப் பட்ட சமூகத்தினரின் பரம்பரை விரோதிகளாகிய உயர்ந்த சமூகத்தினரால் ‘தேசத்துரோகி’ என்றும் ‘சமூகத்துரோகி’ ‘தேசாபிமான மில்லாதவர்” என்றும் தூற்றப்படுகின்றவர்கள் யாரோ அவர்களே அச்சமூகத்தின் உண்மை யான சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் பாடுபடுகின்றவர்கள் என்பதை உணரலாம்.

இப்படி இல்லாமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் விரோதிகளாகிய உயர்ந்த சமூகத்தினரால், தாழ்த்தப்பட்ட சமூகத்தலைவர்கள் என்றும் விடுதலைக்குப் பாடுபடுகிறவர்கள் என்றும், “தேசாபிமானிகள்” என்றும், இவர்கள் பேச்சைக் கேட்டால்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு விடுதலை உண்டு என்றும் பிரசாரம் செய்யப்படுபவர்களால் அச்சமூகத்திற்கு உண்மை யான விடுதலை ஏற்பட முடியாது என்பது நிச்சயம், ஆகையால் எவர் தங்கள் சமூகத்தின் உண்மையான விடுதலைக்குப் பாடுபடுகின்றவர் என்பதை அறிந்து அவர்களைப் பின்பற்றுமாறு தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு எச்சரிக்கின்றோம்.

இந்து மகா சபைக்காரர்களின் சூழ்ச்சி வலையிற் சிக்கியும், தேசா பிமான வேஷக்காரர்களின் பசப்பு வார்த்தைகளுக்கும், தட்டிக் கொடுத் தலுக்கும் ஏமாற்றமடைந்தும், தங்கள் சமூக நன்மையை, இதுவரையிலும் விரோதிகளாகவே இருந்து வரும் சமூகத்தார் கையிலேயே ஒப்படைக்க வேலை செய்யும் ஏமாந்தவர்களின் பேச்சைக் கேட்டு மோசம் போகாம லிருத்தலே தாழ்த்தப்பட்டார் கடமையாகும்.

குடி அரசு – தலையங்கம் – 17.07.1932