Showing posts with label ஆதி திராவிடர்கள். Show all posts
Showing posts with label ஆதி திராவிடர்கள். Show all posts

Tuesday, 11 April 2017

"தினமணி"யின் ஊளை - 06.02.1938

"தினமணி"யின் ஊளை - 06.02.1938

நீடாமங்கலம், காங்கரஸ் அரசியல் மகாநாட்டில், ஆதி திராவிடத் தோழர்களுக்கு நேரிட்ட கொடுமையை, ஆதார பூர்வமாக, ருசுக்களுடன், கொடுமைக்கு ஆளானவர்களின் ஸ்டேட்மெண்டுகளுடன், நாம் எடுத்துக்காட்டியது, உள்ளபடியே தமிழ் நாட்டில், ஒரு பெருங்கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டதுடன் காங்கரசின் உடுக்கைகளுக்கு, கிலி பிடித்துவிட்டது. இந்தக்கொடுமையை விபரமாக விளக்கிக் காட்ட காங்கரஸ் சிகாமணிகளின் யோக்கியதையும், இவர்களுக்குத் தாளம் போடும், தன்னலக்காரரின் வண்டவாளமும் வெளிப்பட்டு, சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவே, போகும் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள, கையில் எது அகப்படுகிறதோ அதை எடுத்துப்போர்த்துக்கொள்ளலாயினர். வறுமை காரணமாக, மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லாத ஏழை மக்கள், தங்கள் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள கந்தலையும், தழையையும், கைகளையும் உபயோகித்துக்கொள்வதுபோல, "தினமணி"க்கு ஒரு பரிதாபகரமான நிலை ஏற்பட்டது காண, நமக்கு ஒரு பக்கம் இரக்கமும், மற்றொரு பக்கம் அது பேசும் "லண்ட" பாஷையைக்கண்டு சிரிப்புமே வருகிறது.

அபத்தம் தவிர வேறொன்றும் "தினமணிக்கு" அகப்பட ஏதுவில்லை! ஏன்? நீடாமங்கலத்துக் கொடுமை மறைக்க, மறுக்க மறக்க முடியாத உண்மை. விஷயம் எவ்வளவு தூரம் வளர்ந்தாலும், அதிகார பலம் முழுதும்கொண்டு எதிர்ப்பதானாலும், நம்மால் உண்மையை விளக்கப் போதுமான ருசுக்கள் தயாராக இருக்கின்றன. ஆகவே இடையிடையே, தமது மானம் போவதால் ஏற்படும் துக்கங் காரணமாக, இவர்கள் ஊளையிடுவதை நாம் பொருட்படுத்தப்போவதில்லை என்றாலும், விஷயங்களை மறுபடி ஒருமுறை விளக்கமாகக் கூறி, எவ்வளவு அநாச்சாரமான, அயோக்கியத்தனமான, பேடித்தனங் கலந்த போக்கிரித்தனமான சூழ்ச்சிகளை நமது எதிரிகள் கையாளுகிறார்கள் என்பதைப் பொது மக்கள் உணர வேண்டுமென இதை எழுதுகிறோம்.

நேற்றைய "தினமணி"யில் ஒரு ஒட்டை வேட்டு, கிளப்பப்பட்டிருக்கிறது. அது எழும்பியவிதம், அதை வெளிப்படுத்திய ஆசாமி, அவருக்கும் நீடாமங்கல அக்ரமத்திற்கும் உள்ள தொடர்பு, அதைப் பரிசாக ஏற்றுக்கொண்ட பிரமுகர், அதற்கு "ததாஸ்து" கூறும் புளுகுமணி இவைகளின் யோக்யதையை இனி அலசுவோம். நாற்றம் அதிகமாகத்தான் இருக்கும். இருப்பினும் இது நமது குற்றமல்லவே! ஆப்பை அவர்களாக அசைத்துவிட்டுத் தானே அவஸ்தைப்படுகிறார்கள்!

நீடாமங்கலத்தில் நடந்த காங்கரஸ் அரசியல் மகாநாட்டு, சமபந்தி விருந்தில் கலந்து கொண்டதற்காக, ஆதி திராவிடத் தோழர்களை மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தி, தலையை மொட்டை அடித்து, சாணிப்பால் ஊற்றிய கொடுமையை நாம், ஜனவரி 3ந் தேதி வெளியிட்டோம். அதை மறுக்கும் நாணயஸ்தர்கள் யார் வருகிறார்கள் பார்ப்போம் என பொறுத்துப்பார்த்தோம். எங்கும் நிசப்தம், உப்புக்கண்டம் பறி கொடுத்த பாப்பாத்தி போல, இவர்கள் முக்காடிட்டுத் திரிந்தார்கள்! ஜனவரி 12ந் தேதி, கோவை ஜில்லா, "ஹரிஜன்" ஊழியராகிய , தோழர் எம்.கோளப்பன் என்பவர், "விடுதலை" மூலமாக பிரதம மந்திரிக்கே ஒரு "சவால்" விடுத்தார். மந்திரியார் ஏதாவது வாயைத் திறந்தாரா? அவரது கோஷ்டி ஏதாவது முணுமுணுத்ததா? இல்லை! மறுபடியும், பழைய மெளனந்தான். பகிரங்கமாக ஒன்றும் சொல்வதற்கில்லாமற்போகவே திரைமறைவிலே சூழ்ச்சிகள் நடைபெற ஆரம்பித்தன. அடிபட்ட - மானத்தைப் பறிகொடுத்த ஆதி திராவிடரை, ஆசை காட்டியும் பயமுறுத்தியும் நாணயமற்ற முறையிலே ஒரு மறுப்பு வாங்கப் பிரயத்தனம் செய்யப்பட்டது. நமது நிருபர் இதை ஜனவரி 16ந் தேதி தெரிவித்தார். இந்தச்சூது நடக்குமென நாமும் ஜனவரி 17ந் தேதியே "விடுதலை"யில் வெளியிட்டோம். அதன்படியே 18ந் தேதி "தினமணி" யில் சு.ம.புளுகு என்ற விஷயமும், தோழர்கள் தேவசகாயம், சூசை, ஆறுமுகம் ஆகியவருடைய போட்டோ, ஒரு ஸ்டேட்மெண்டுடன் வெளி வந்தது மறுதினமே, அதாவது ஜனவரி 19ந் தேதியே நாம் "புளுகுவது எது, தினமணியா விடுதலையா" என மகுடமிட்டு, உபதலையங்கமெழுதி எம்மிடம் சகல ருசுக்களும் தயாராக இருப்பதையும் எவ்வித நடவடிக்கைக்கும் நாம் தயார் எனவும் எழுதினோம். மறுபடியும் நமது எதிரிகள் குதிருக்குள் குதித்துப் பதுங்கிக் கொண்டனர். நமது நிருபரை நீடாமங்கலம் சென்று சகல விஷயங்களையும் பரிசீலனை செய்யும்படி அனுப்பினோம். அப்போது காங்கரஸ்காரர் தப்பு ஸ்டேட்மெண்டு வாங்க கையாண்ட கேவலமான முறைகள் நமக்குத் தெரிய வந்தன. அடிபட்ட- ஹிம்சிக்கப்பட்ட தோழர்களை நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்து வாங்கப்பட்டது. அதற்கு உடந்தையாக இருந்தவரே தோழர் சூசை என்பவர். அவர் மகாநாட்டு விருந்திலோ, அதற்குப் பிறகு நடந்த "மிருகத்தனத்திற்கோ" ஆளாகாதவர்; சம்பந்தப்படாதவர். மற்ற இரு தோழர்களும், ஜாதி ஆணவக்காரரிடம் அகப்பட்டு அவஸ்தைப்பட்டவர்கள் தான்.

தங்கள் ஜாதிக்கே நேரிட்ட அவமானத்தை, காங்கரஸ்காரரின் கொடுமையை உலகறியட்டும் என்பதற்காகவே, எக் கஷ்டம் வரினும் ஏற்போம் என முடிவு செய்துகொண்டு, தோழர் தேவசகாயம், தனக்கும் தன் தோழர்களுக்கும் செய்யப்பட்ட கொடுமைகளையும், அதை மறைக்க தம்மை மிரட்டி தப்பு அறிக்கை வாங்கப்பட்ட சூதையும் விளக்கி, "ஹரிஜன" விவசாய மந்திரியான கனம் முனிசாமிப் பிள்ளைக்கும் "ஹரிஜன" மேயர் தோழர் சிவஷண்முகத்திற்கும் நமக்கும் மகஜர்கள் அனுப்பினார். நாம் அந்த மகஜரை தோழர் தேவசகாயத்தின் போட்டோவுடன் 26-ந் தேதி "விடுதலை"யில் பிரசுரித்தோம். ஆதி திராவிட வகுப்பில் பிறந்து, அந்தப் பெயரை உபயோகித்து பட்டம் பதவி பெற்று பரிமளிக்கும் அப்பிரமுகர்கள், "தேவசகாயம் மகஜருக்கு" ஏதாவது பரிகாரந் தேடினார்களா? அல்லது மறுக்கவாவது முன் வந்தார்களா? இல்லை! மறுபடியும் பழைய மெளனம். திருடனை தேள் கொட்டினால் அலறியா அழுவான்! விம்முவான். அதை போன்றே ஹரிஜன மந்திரியும், மேயரும் வாயைப் பொத்திக் கொண்டிருந்து விட்டனர். இந்த பேசாமடந்தைகளைப் பேச வைக்கவேண்டுமென ஜனவரி 27-ந் தேதி கனம் முனிசாமிப் பிள்ளை நேரில் வந்தால், கொடுமைக்காளான தோழர்களைக் காட்டுவதாக ஒரு " சவால்" விடப்பட்டது. 28-ந் தேதி ஈரோடு பொதுக்கூட்டத்திலே, தோழர் தேவசகாயம், நீடாமங்கல அக்ரமத்தை விளக்கிக்கூறினார். 29ந் தேதி சேலம் பொதுக்கூட்டத்தில் தோழர் தேவசகாயம், மட்டுமல்ல மற்றும் கொடுமைக்காளான தோழர் ரத்தினம், மொட்டையடித்த "பள்ளப்பரியாரி" ஆறுமுகம், ஆகிய மூவரும் பிரசன்னமாக இருந்தனர். தம் குறைகளையும் தெரிவித்தனர். நாணயமுள்ள யாவரும் மனங் கசிந்தனர். பிப்ரவரி முதல் தேதி மூன்று தோழர்களுமாகச் சேர்ந்து விரிவான அறிக்கையை "விடுதலை"யில் வெளியிட்டனர். அத்துடன் தோழர் ரத்தினத்தின் போட்டோவும் வெளிவந்தது. பிப்ரவரி 2ந் தேதி, பரியாரி மொட்டை அடித்த கதையை விளக்கினார். அதுவும், அவர் போட்டோவுடன் வந்தது. இவ்வளவும் நடந்து கொண்டிருக்கையில் சூரர்கள் என்ன செய்தார்கள்? மெளனமாகவே இருந்தனர்.

திடீரென, ஒரு ஒட்டை வேட்டு, "தினமணி" யில் பிப்ரவரி 2ல் வெளியாயிற்று. அதுதான் அபத்தத்தின் சிகரம்! அநாகரீகத்தின் உச்சி. போக்கிரித்தனமும் பேடித்தனமும் கலந்த விஷமம்!

நீடாமங்கல கோர நாடகத்தில் சம்பந்தப்படாத, தோழர் சூசை என்பவர், விளம்பர மந்திரி கனம் ராமநாதனிடம் நேரில் செய்து கொண்ட விண்ணப்பமாம்! அடிபட்ட தோழர்கள் மகஜர் அனுப்பியது, அவர்கள் ஜாதிக்காரப் பிரமுகர்களான, கனம் முனிசாமிப் பிள்ளைக்கும் மேயருக்கும்; அதற்குப் பதில் இல்லை! பதில் கூற வக்கில்லை. ஆனால் விளம்பர மந்திரியிடம் விஷயத்தில் சம்பந்தப்படாத தோழர் சூசை, " உண்மையை " விளக்குகிறாராம்! என்ன போக்கிரித்தனமான ஆபாசம்!!

தோழர் சூசை கூறுவது முழுதும் அபாண்டம். முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கிறார்-அல்ல-கதர்த்துப்பட்டியில் மறைக்கிறார் என்று கூறுவோம். ஏன்? இவர் சம்பவத்தில் சம்பந்தப்படாதவர். தன் சமூகத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்க முன்வராது, எதிரிகளிடம் கையாளாக இருக்கிறார். அபத்தமான இந்த அறிக்கையையும் சற்று அலசிப் பார்ப்போம். அதற்குள் சில கேள்விகளைப் பொது மக்கள் கவனத்திலிருத்த வேண்டுகிறோம். ஜனவரி 3ல் வெளி வந்த குற்றச்சாட்டிற்கு "தினமணி" பதில் கூற 15 நாள் ஆனதேன்? கயிறு திரிக்க 15 நாள் தேவையாக இருந்தது போலும். "ஹரிஜன" மந்திரியும் மேயரும் வாயை மூடிக்கொண்டிருப்பதேன்? வெளியில் சொல்லப்போனால் வெட்கக்கேடு என்பதினால்? பிரதம மந்திரிக்கு விடப்பட்ட சவாலுக்கு அவரும் மெளனமாக இருந்ததேன்? நடந்த உண்மையை எப்படி மறுப்பது என்பதினாலா அன்றி "அறிக்கைகள்" தயாராகாத குறையினாலா? அந்த சமயங்களிலெல்லாம் "தினமணி" யின் வாய் அடைந்து கிடந்த காரணமென்ன? ஒரே அடியாக "பொய்" பேச தினமணியின் வாயுங் கூசிற்றா? அன்றி, இவ்வளவு பிரமாண்டமான பொய் சொன்னால் பொது மக்கள் சும்மாவிட மாட்டார்களே என்ற திகிலா?

நிற்க தோழர் சூசை, "எங்களுக்கு 12.1.38 தபாலில் தனித்தனியாக அச்சடித்த காகிதங்கள் கிடைத்தன. அதை எடுத்துக்கொண்டு மறுநாள் மகாநாடு நடத்திய நீடாமங்கலம் உடையார் அவர்களிடம் போய்க்காட்டினேன்" என்று கூறுகிறார். இங்கு தான் இரகசியம் இருக்கிறது! நீடாமங்கல விஷயமாகத் தனக்கு வந்த கடிதத்தை உடையாரிடம் காட்டுவானேன்? தோழர் சூசை தற்குறியல்ல. மூன்றாவது பாரம்வரை படித்தவர். ஒரு பள்ளியில் உபாத்தியாயராகக்கூட இருக்கிறாராம். அப்படி இருக்க உடையாரை நாடிய காரணம் என்ன? "காரியம் மிஞ்சிவிட்டதே என்ன செய்வது என்று கைகளைப் பிசைந்துகொண்டு, மந்திராலோசனை செய்யச் சென்றாரா என்று கேட்கிறோம். "மறுபடியும் 15-ந் தேதி, நீடாமங்கலம் பங்களாவிற்குப் போனோம். நாங்கள் போனபோது மகாநாட்டை நடத்திய சில காங்கரஸ்காரர்களும் அங்கு இருந்தார்கள். மன்னார்குடி காங்கரஸ்காரர்களும் அங்கு இருந்தார்கள். மன்னார்குடி காங்கரஸ் காரியதரிசியான பிள்ளை அவர்களும் இருந்தார்" என்கிறார் தோழர் சூசை. 12ந் தேதி சென்ற பயணம் பலிக்காது, 15-ந் தேதி வேறே செல்லவேண்டி வந்ததோ எனக் கேட்கிறோம்? "அப்பொழுதுதான் 3.1.38 "விடுதலை" யிலிருந்து இது காப்பி என்று தெரிந்தது" என்ற தோழர் சூசை கூறுகிறார். பாபம்! அவ்வளவு உலக மறிந்தவராக இருக்கிறார். இவர் தான் இப்போது "ஹரிஜன"ங்களுக்கு இந்த "கைங்கரியம்" செய்ய முன் வருகிறார். அடிபட்ட தோழர்களிடம், "மகாநாட்டிலும் போஜனத்திலும் கலக்காத என்னை வலிய இப்படி சந்தியில் ஏன் இழுத்து விட வேண்டும்" என தோழர் சூசை அன்று சொன்னதை மறந்துவிடக்கூடிய அளவு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. நிற்க, அன்றே போட்டோ எடுக்கப்பட்டதாகவும், அப்போது தோழர் தேவசகாயத்திற்கு லு அங்குலம் மயிர் தலையிலிருந்ததாகவும், முன்புறம் மட்டும் க்ஷவரம் செய்திருந்தது எனவும் கூறி 26-ந் தேதி "விடுதலை"யில் வந்த போட்டோவைப் பார்த்தால், தோழர் தேவசகாயம் "அவன் உருவே மாறி" இருப்பதாக தோழர் சூசை உருகுகிறார். அவரை உருக வைக்கும் அற்புதத்தை நாம் அறிவோம். பொது மக்கள் "தினமணியில்" வந்த போட்டோவையும், ஒப்பிட்டுப்பார்த்து உண்மையை உணரட்டும் எனக் கூறுகிறோம். போட்டோ எடுத்த அன்று ஒரு தடவை தோழர் சூசை, "சு.ம. புளுகை" எழுதிக் கொடுத்தாராம். அத்துடன் நின்றாரா? இல்லையே! 16-ந் தேதி காங்கரஸ் காரியதரிசி நேரிலேயே அனுமந்தபுரம் வந்தாராம். அப்போது தோழர் சூசை தன் கையாலேயே மறுபடியும் விஷயத்தை எழுதிக்கொடுத்தாராம். மற்றத் தோழர்களுக்கு வாசித்துக் காட்டினாராம். சரிதான் என்று சம்மதித்தே தோழர் ஆறுமுகம் முதலில் கையெழுத்துப் போட்டாராம். அவருக்குத் தமிழ் எழுதப்படிக்கத்தெரியுமாம்! எழுதப்படிக்கத் தெரிந்த தோழர் ஆறுமுகம் இருக்கையில், ஏனோ பாவம், இந்த தோழர் சூசை இவ்வளவு கஷ்டப்பட்டு 2 நகல் எழுதி படித்துக் காட்டினார்? தோழர் தேவசகாயம் சிலரின் துர்ப்போதனையால் ஊரை விட்டுப்போனது அவனது பெற்றோருக்கும் மற்றுமுள்ள ஏழை ஹரிஜனங்களுக்கும் கவலையாக இருக்கிறதாம்! தோழர் தேவசகாயத்தின் உற்றார் பெற்றோரின் மனோ நிலையை விளக்கி நமக்கு கடிதம் வந்திருக்கிறது. தோழர் சூசை போன்ற ஏழை "ஹரிஜன"ங்களின் கவலையும் நமக்குத் தெரியும். "தினமணி" யே நீடாமங்கல அக்ரமத்தைக் கண்டித்து சென்னை தாழ்த்தப்பட்டார் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனவரி 17-ந் தேதி பிரசுரித்திருக்கிறது. அப்போதெல்லாம் தோழர் சூசையும், அந்தப் பொம்மையை ஆட்டி வைக்கும் சூத்திரதாரிகளும் மெளனமாக இருந்துவிட்டு, இப்போது சு.ம.காரர்கள், தேவசகாயத்தை அபகரித்து கொண்டுபோய், மொட்டை அடித்து பொய்ப்பிரசாரம் செய்து வருவதாகக் கூறுவது பேடித்தனங்கலந்த போக்கிரித்தனமன்றி வேறென்ன என்று கேட்கிறோம். விஷயம் விபரீதமாய் போகாதபடி, சப்பைக்கட்டுகட்டுவது இனி சாயாது. விளம்பர மந்திரியாய் இதில் சற்று முடுக்காகவே முனைந்து நிற்கிறார் என்ற தகவல் நமக்குக் கிடைத்துமிருக்கிறது. ஆனால் நாம் இதற்காக அஞ்சப் போவதில்லை. நம்மிடம் மறுக்கமுடியாத ருசுக்கள் இருக்கின்றன. எந்தவிதமான "அக்கினி" பரீட்சைக்கும் நாம் தயார். நாணயமும், ரோஷமும், மானமும் உள்ளவர்களானால் நேரிடையாக, பகிரங்கமாக விசாரணை நடத்தட்டும். திரைமறைவிலே, சில பொம்மைகளை வைத்துக் கொண்டு கோமாளிக்கூத்துக் காட்டுவது அசட்டுத்தனம். அதைப்பொதுமக்கள் லட்சியப்படுத்த மாட்டார்கள். தோழர்கள் தேவசகாயம் முதலியோருக்கு அன்று லு அங்குல மயிர் தலையில் இருந்தது, இன்று உருமாறி விட்டது என உருகும் சூசையோ, அன்றி மற்றவரோ, இந்த "மயிர் ஆராய்ச்சி"யை வேண்டுமானாலும் கூடச் செய்யட்டும். எதையும் நாணயமாக, பகிரங்கமாக செய்யட்டும். அதற்குத் தயார் தானா? என்றே நாம் கேட்கிறோம். மொட்டை அடிக்கும் தொழில் நமக்குக் கிடையாது. மொட்டை அடித்துவிட்டு மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் தொழிலில் "தினமணி" இறங்கியிருக்கிறது. இது வெற்றி பெறாது என்பதுடன் இந்தத் துடுக்குத்தனம், இனி சாயாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

- விடுதலை,தோழர் பெரியார், குடி அரசு -  06.02.1938

நீடாமங்கலத்துக்கு நீதி 19-௦6-1938

நீடாமங்கலத்துக்கு நீதி - 19-௦6-1938


நீடாமங்கலத்தில் 28-12-1937இல் நடைபெற்ற காங்கிரஸ்காரர்கள் மகாநாட்டில் நடந்த சாப்பாட்டு பந்தியில் சில ஆதிதிராவிட கிறிஸ்தவ தோழர்கள் உட்கார்ந்து சாப்பிட்டதற்காக அவர்களை அடித்துத் தொந்தரவு செய்து மொட்டை அடித்து அவமானப் படுத்தியதாக விடுதலைப் பத்திரிகையில் வந்த செய்தியை அம்மகாநாட்டை நடத்திய பிரமுகர்கள் பொய் என்று மறுத்ததுடன் அச்செய்தி வெளியானதால் தனக்கு மான நஷ்டம் ஏற்பட்டு விட்டதென்று விடுதலைப் பத்திரிகை பிரசுரிப்பவர் மீதும், ஆசிரியர் மீதும் டிப்டி மேஜிட்ரேட் கோர்ட்டில் பிராது கொடுத்திருந்ததும், அந்த வழக்கு சுமார் 4,5-மாதமாக நடந்து வந்ததும் வாசகர்கள் அறிந்த விஷயமேயாகும். இந்த 4,5-மாதமாக நடந்த வழக்கு சகல விசாரணையும் முடிந்த பிறகு இம்மாதம் 15தேதி முடிவு கூறப்பட்டது. அம்முடிவானது விடுதலை பிரசுரிப்பவரான தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர் களுக்கு ரூ. 200 அபராதமும் விடுதலை பத்திராதி பரான தோழர் பண்டித முத்துச்சாமிப்பிள்ளை அவர் களுக்கு ரூ. 200 அபராதமுமாக தண்டனை விதித்து முடிவு பெற்றுவிட்டது.
இந்த வழக்கின் முடிவு இப்படித்தான் முடியலாம் என்று ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப்பட்டதென்றே சொல்லலாம். ஏனெனில் காங்கிரஸ் தலைவர்களால் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் எதுவாய் இருந்தாலும் அதைக் குற்றமானதென்று காங்கிரஸ் ராஜ்ஜியத்தில் ஒரு வேலை காயமில்லாத நீதிபதியிடம் இருந்து நீதி பெற்றுவிடலாம் என்று யாரும் கருதமாட்டார்கள். காங்கிரஸ் பார்லிமெண்டரி செகரட்டரி என்பவர் பெட்டியேறிச் சரியாகவோ, தப்பாகவோ ஒரு கட்சிக்குச் சார்பாய்ச் சாட்சி சொல்லி இருக்கும்போதும் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களும் ஒரு கட்சிக்கு அனுகூலமாய்ச் சாட்சி சொல்லியிருக்கும்போதும் ஒரு மேஜிஸ்ட்ரேட் நீதிபதி அதற்கு மாறாக முடிவு கூறுவ தென்றால் இது சராசரி யோக்கியதையுள்ளவர் களிடம் எதிர்பார்க்கக்கூடாத காரியமேயாகும். ஆதலால்தான் இந்த முடிவு ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப்பட்ட தென்றே சொல்ல வேண்டியதாயிற்று. இந்த முடிவினால் யாரும் கலங்கவோ அல்லது நீடாமங்கலம் தோழர்களுக்கு காங்கிரஸ்காரர்கள் செய்த கொடுமை உண்மையற்றதாய் இருக்குமோ என்று யாராவது சந்தேகப்படவோ வேண்டிய தில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எந்தத் தைரியத்தைக்கொண்டு அப்படிச் சொல்லு கிறோமென்றால் நீடாமங்கலம் சம்பவம் நடந்ததாக விடுதலை, குடிஅரசு பத்திரிகைகளில் சேதி வந்தவுடன் அதன் உண்மையை விசாரிக்க சென்னை மாகாண தேவேந்திர வேளாள சங்கத்தார் உடனே ஒரு கூட்டம் கூடி இந்த விஷயத்தைப் பற்றி விசாரித்து முடிவு தெரிவிக்கும்படி ஒரு கமிட்டியை நியமித்து விட்டார்கள். அக்கமிட்டியில் சாதாரண ஆள்களை நியமிக்காமல் அச்சங்கத்தின் மாகாண பிரசிடெண்டான தோழர் எம். பாலசுந்தரராஜ் அவர்களையும், அச்சங்கத்தின் காரியதரிசி தோழர் விஜயராஜ் அவர்களையும், அக்கமிட்டியின் பொருளாளரும் காங்கிரஸ் எம்.எல். ஏயுமான தோழர் எ. சி. பாலகிருஷ்ணன் அவர்களையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மெம்பரான தோழர் ஏ. அய்யனார் அவர்களையும், தோழர் ஜே. தேவாசீர்வாதம், தோழர் எ.வி. அக்கினிமுத்து ஆகியவர்களையும் நியமித்தார்கள். அக்கமிட்டியார் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி நீடாமங்கலம் சென்று நீடாமங்கலத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அநேக சாட்சிகளை முறைப்படி விசாரித்து சாட்சி பதிவு செய்து கவலையோடு ஆராய்ந்து பார்த்து முடிவு எழுதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அவ்வறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் - இந்த கமிட்டியார் உடனே புறப்பட்டு போய் நீடாமங்கலம் முதலிய சுற்றுப் பக்கங்களில் விசாரித்ததில் தாழ்த்தப்பட்ட மக்களுக் குச் செய்யப்பட்டக் கொடுமைகள் உண்மையானவை என்று தெரிந்தார்கள் என்பதாகவும் மற்றும் கட்டி வைத்து அடித்ததைப் பற்றியும், மொட்டை அடிக்கப் பட்டதைப் பற்றியும், சாணிப்பால் ஊற்றி அவமானப்படுத்தப்பட்டதைப் பற்றியும் பலபேர் சாட்சி சொன்னார்கள் என்றும், இதை மறைக்க  பலர் முயல்வதாய்த் தெரிகிறதென்றும் சொல்லி இருக்கிறார்கள்.
எனவே, இந்த விஷயம் நடந்தது உண்மையா? பொய்யா? என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை என்பதோடு கோர்ட் நடவடிக்கையில் நியாயம் கிடைக்காத தால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மேற்படி கேஸ் சம்பந்த மான கோர்ட் ஜட்ஜ்மெண்டை நாம் பார்க்காததால் அதன் உள் விஷயங்களைப் பற்றி நாம் ஒன்றும் எழுத முற்படவில்லை என்றாலும், அந்த ஜட்ஜ்மெண்ட் எப்படிப் பட்டதாய் இருந்தாலும் நீடாமங்கலம் சம்பவம் சம்பந்தமாய் ஒரு முடிவுக்கு வருவதை அது தடுக்கவில்லை என்றே கருதுகிறோம். அதாவது, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமுகத்தில் ஒரு மனிதனாய் இருந்து கொண்டு மானத் துடன் வாழ முடியாது என்பதுடன் இம்மாதிரியான அவமானங்களுக்கும் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாது என்பதேயாகும். அவமானப்பட்டு, அடிபட்டு, உதைபட்டு, துன்பப்பட்ட ஆட்களில் கிறிஸ்துவர்கள் அதிகமாய் இருந்துங்கூட அவர்களுக்கும் நியாயம் கிடைக்க முடிய வில்லை. ஆனால், இவர்கள் முஸ்லிம்களாய் இருந்து இப்படிப்பட்ட அவமானம் நடந்திருந்தால் இதற்குப் பரிகாரம் கிடைக்காமல் இருந்திருக்குமா என்பதை நீடாமங்கலம் ஆதி திராவிட தோழர்கள் சிந்தித்துப் பார்க்கும்படி வேண் டிக் கொண்டு இதை இப்போது முடிக்கிறோம். மற்றவை ஜட்ஜ்மெண்ட் பார்த்தபிறகு விளக்குவோம்.
குடிஅரசு - தலையங்கம்  - 19.06.1938

நீடாமங்கல உண்மை - 30.01.1938

நீடாமங்கல உண்மை - 30.01.1938


நீடாமங்கலத்தில் நடந்த தென் தஞ்சை ஜில்லா 3- வது அரசியல் மகாநாட்டில் ஆதி திராவிட தோழர்கள் சிலர் சாப்பாட்டுப் பந்தியில் கலந்து கொண்டதற்காக அவர்களை துன்புறுத்தி மொட்டையடித்து சாணி ஊற்றிக் கொடுமை செய்து தண்டித்த நடத்தையைப்பற்றி அவர்கள் பெயர்கள் உட்பட நமக்கு கிடைத்த உண்மையான சேதி “விடுதலை” “குடிஅரசு” பத்திரிகைகளில் வெளியாக்கப்பட்டதை வாசகர்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால் அதை காங்கரஸ் தோழர்கள் கவனித்து சமாதானம் சொல்லாமல் நடந்த விஷயத்தையே அடியோடு மறுத்துக் கூறுவதுடன் அவற்றைப் பொய்யாக்கிக் காட்ட தப்பான வழியில் முயற்சித்து வருவது மிகவும் வெறுக்கத்தக்கதாகும்.
பொறுப்புள்ள ஆதி திராவிட சமூகப் பிரமுகர்களுங்கூட இவ் விஷயத்திற்காகத் துக்கப்படாமல் பரிகாரம் தேட முயற்சிக்காமல் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு அடியோடு மறைக்க ஆசைப்படுவது மிகமிக வெறுக்கத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான செய்கையாகும். “விடுதலை”யில் இது விஷயமாய் வெளியான சேதிகளுக்கு 15 நாள் பொறுத்து – நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு அடிபட்ட உதைபட்ட மொட்டை அடித்து சாணி அபிஷேகம் செய்யப்பட்ட ஆதி திராவிட மக்கள் சிலரை பிடித்துக்கொண்டு வந்தும் மிரட்டி அம்மாதிரியான காரியம் ஒன்றுமே நடக்கவில்லையென்று எழுதிக்கொண்டு அதில் அவர்களது கையெழுத்து வாங்கி அதில் சேராதவர்களின் போட்டோவையும் வாக்குமூலத்தையும் பத்திரிகைகளில் போட்டு மக்களை ஏமாற்றப் பார்ப்பதுடன் “விடுதலை பத்திரிகை பொய்யான சேதியை வெளிப்படுத்திற்று” என்று தலைப்புக் கொடுத்து சேதி போடுவது என்றால் இக்கூட்டத்தார் தீண்டாமை ஒழிக்கவோ ஆதி திராவிடர்களை சமமாக நடத்தவோ ஆசைப்படுகிறார்களா? அல்லது பழய ராமராஜியப்படி சாமி கும்பிட்டதற்காக ஒரு பார்ப்பனரல்லாதவனின் தலையை வாங்கியது போல் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டதற்காக அவனை கொலை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியை கிளப்புகிறார்களா என்று பயப்பட வேண்டியிருக்கிறது.
தஞ்சை ஜில்லாவில் ஆதிதிராவிடர்களின் நிலைமை இந்திய சமதர்மவாதிகளும் தேசீயவாதிகளும் தேசபக்தர்களும் அறிய வேண்டிய காரியமாகும். தஞ்சை ஜில்லாவில் ஆதிதிராவிடர்கள் நிலைமை பழயகால அடிமைத் தன்மையே ஆகும். அங்குள்ள நிலங்களில் உள்ள மரங்கள் எப்படி அந்த நிலக்காரனுக்கு சொந்தமோ அது போலவும் அந்த நிலம் விற்கப்பட்டால் எப்படி மரமும் வாங்கினவனுக்கு சேருமோ அது போலவும் ஒவ்வொரு நிலத்துக்கும் சில ஆதிதிராவிட மக்கள் அடிமைகளாக இருந்து பூமி கை மாறியவுடன் அவர்களும் கூடவே பூமியை விலைக்கு வாங்கினவனுக்கு அடிமையாவது இன்றும் வழக்கம். அந்த ஆதிதிராவிடன் அந்த வயல் நிலத்தில் வயல்காரனுடைய கருணையால் குடியிருக்க வேண்டியவனாவான். நந்தன் கதையில் உள்ளது போல் அந்தந்த வயலுக்கு அங்கங்கிருக்கும் ஆதிதிராவிடனே பரம்பரை பண்ணை ஆளாக இருக்க வேண்டியவனாவான். அவனுடைய சகல சுதந்திரமும் வாழ்வும் மிராசுதாரர் என்று அழைக்கப்படுகிற பூமிக்குடையவனை சேர்ந்ததாகும். பூமிக்குடையவன் அவனை அடித்தாலும் உதைத்தாலும் வேறு என்ன கொடுமை செய்தாலும் கேட்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அந்த மிராசுதாரன் மீது பிராது செய்யவும் எவனும் துணிய மாட்டான். அப்படி ஏதாவது பிராது செய்து விட்டால் அவனுக்கு வேறு போக்கிடம் கிடையாது. அப்படிப்பட்டவன் குடியிருக்க இடமில்லாமலும் சாப்பாட்டுக்கு வகை இல்லாமலும் பட்டினி கிடந்து தெருவில் செத்துக் கிடக்க வேண்டியதுதான். வேறு மிராசுதாரன் இதற்கு சிபார்சுக்கு வரவோ ஆதரிக்கவோ ஆரம்பித்தால் பிறகு அவனது அடிமையை அவன் மீது ஏவி விட்டு விடுவார்கள். ஆதலால் மிராசுதாரர் கொடுமைக்கு ஆளாக இஷ்டப் படவில்லையானால் ஒரு ஆதிதிராவிடன் மலாய் நாட்டுக்கோ, மோரீஷிக்கோ ஓட வேண்டியதுதானே தவிர அவனுக்கு அந்நாட்டில் போக்கிடம் கிடையாது. ஆதலால் அங்கு ஆதிதிராவிடர்கள் மிருகங்களிலும் கேவலமாக கருதப்படுகிறார்கள்.
இதனாலேயே சிங்கப்பூர், மோரீஷ், சுஞ்சிபார் முதலிய தீவுகளில் அதிகம் தஞ்சை ஜில்லா ஆதி திராவிடர்களே கூலிகளாய் ஓடிப்போய் இருக்கிறார்கள். இந்த விஷயத்தை உணர்ந்த ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தஞ்சை ஜில்லா ஆதிதிராவிடர்களுக்கு குடி இருக்க நிலம் வாங்கிக் கொடுக்கும்படி சர்க்காரில் ஏற்பாடு செய்தார்கள். அது சமயம் தஞ்சை மிராசுதாரர்கள், பார்ப்பனர்கள் உள்பட கூப்பாடு போட்டதால் அக்காரியம் சரிவர நடத்தப்பட முடியாமல் போய்விட்டது.
இந்த நிலையில் அவர்கள் இவ்வளவு இழிநிலைக்கும், கஷ்டத்துக்கும் ஆளாகி வருகிறார்கள். இதைப் பற்றி கவனிக்க இந்த காங்கரஸ் ராஜியத்தில் யாரையும் காணோம். ஆதிதிராவிட மந்திரி கனம் முனிசாமி பிள்ளை அவர்கள் இந்தக் கொடுமையை மறைக்க உடந்தையாய் இருப்பதும், இக்குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்காமல் இருப்பதும் யோக்கியமாகுமா? என்று கேட்க வேண்டி இருக்கிறது.
இந்த லட்சணத்தில் கனம் முனிசாமி பிள்ளை அவர்கள் திருநெல்வேலியில் இதை மறைத்துப் பேசும்போது நீடாமங்கல சேதி பொய்யென்றும் அயோக்கியத்தனமான விஷமப் பிரசாரமென்றும் பேசியிருக்கிறார். இவர் ஆதிதிராவிடர்களுக்கு யோக்கியமான பிரதிநிதியா என்று கேட்கிறோம். அப்படி இருந்தும் அவர் அதே சமயத்தில் தன்னை அறியாமலே வேறு ஒரு உண்மையை கக்கி விட்டார்.
அதாவது அங்கு அவர் பேசுகையில் “திருப்பதியில் ஒரு ஆதி திராவிடர் சாமி கும்பிட்டதற்காக அவனை அடித்து துன்புறுத்தினார்கள். இது நியாயமா” என்று கேட்டிருக்கிறார்கள். இந்தச் சேதி 21.1.38ம் தேதி தினமணி 8-ம் பக்கம் 4வது கலத்தில் இருக்கிறது.
மற்றும் கனம் முனிசாமி பிள்ளை மதுரை கள்ள அழகர் கோவிலில் வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காகவும் அதுசமயம் கோவில் அதிகாரிகள் அவருக்கு மரியாதை செய்ததற்காகவும் கோவில் அதிகாரிகள் பேரில் நடவடிக்கை நடத்துவதாக சொல்வதல்லாமல் கோவில் சுத்தம் செய்ய வேண்டுமென்றும் இந்த மாகாண மதுரை வருணாச்சிரம சுய ராஜ்ஜிய சங்கத் தலைவர் தோழர் மதுரை நடேச சாஸ்திரியார் அவர்கள் கோவில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். கனம் மந்திரிக்கும் இதைப்பற்றி கண்டித்தெழுதி இருக்கிறார். இது 25.1.38 தேதி இந்து பத்திரிகையில் 8 பக்கம் 6வது கலத்தில் இருக்கிறது.
மற்றும் தோழர் கனம் முனிசாமி பிள்ளை அவர்கள் “வேறு மதத்திற்கு போனால்தான் ஆதிதிராவிடர்களுக்கு சட்ட உரிமை கிடைக்கும்” என்பதாகவும் அங்கு பேசி இருக்கிறார்.
ஆகவே அவர் தங்கள் சமூகங்களுக்கு இந்து மேல் ஜாதியார்களும் குறிப்பாக பார்ப்பனர்களும் செய்யும் கொடுமையை உணர்ந்து கொண்டே 500 ரூ சம்பளத்துக்கும், 300 ரூ படிக்கும் பார்ப்பனர்களுக்கு – மேல் ஜாதியாருக்கு வக்காலத்து பேசுகிறார் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த லக்ஷணத்தில் நீடாமங்கலம் சேதியை விடுதலை பிரசுரித்திருப்பதற்காக அதன் பிரசுரகர்த்தா தோழர் உ.ங. கிருஷ்ணசாமி மீதும், ஆசிரியர் தோழர் கு.முத்துசாமி பிள்ளை மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப் போவதாக தஞ்சை வக்கீல் தோழர் கே.டி. பாலசுப்பரமணிய அய்யர் பி.ஏ., பி.எல்., அவர்கள் ஒரு உடையாருக்காக நோட்டீசு கொடுத்திருக்கிறார்கள். தோழர் சந்தான ராமசாமி உடையார் அவர்கள் சிறுவயது. சுமார் 20 வயதே இருக்கும். அவரை இந்தப் பார்ப்பனர்கள் சுவாதீனப்படுத்திக்கொண்டு அவர்களது பணத்துக்கு தாறுமாறாக செலவு வைப்பதுடன் சிவில் கிரிமினல் கோர்ட்டுகளில் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுவதாகவும் நம்மை பயமுறுத்துகிறார்கள். உண்மையில் நாம் இவ்விஷயத்தில் எந்த தனிப்பட்ட நபரிடமோ தனிப்பட்ட ஜாதியாரிடமோ குறோதம் வைத்தோ குறைவு படுத்த எண்ணம் வைத்தோ இவ்விஷயங்களை எழுதுவதில்லை, பேசுவதில்லை. சம்மந்தப்பட்ட நபர்களைப் பற்றி நமக்கு விஷயமும் தெரியாது அறிமுகமும் கிடையாது. ஆனால் இந்த 20வது நூற்றாண்டில் பிரிட்டிஷ் சர்க்கார் இந்த நாட்டில் ஆட்சி செய்யும்போது பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு அடித்து துன்புறுத்தி மொட்டையடித்து சாணி அபிஷேகம் செய்து விட்டு இந்த விஷயத்தை வெளிப்படுத்தினதற்கு நம்மீது சிவில் கிரிமினல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுவது என்றால் இந்த நாட்டில் மக்கள் வாழ முடியுமா? என்று பயப்பட வேண்டியிருக்கிறது.
துன்புறுத்தப்பட்ட தோழர்களான பலர் இனி அந்த கிராமத்தில் வாழ முடியாதென்று வேறு ஊருக்கு ஓடிவிட்டார்களாம். அவர்களது வாழ்வுக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பும் இது வெளியிட்டதற்கு ஆக சிவில் கிரிமினல் கோர்ட்டுகளில் நடவடிக்கைகளுக்கு சமாதானம் சொல்ல வேண்டிய பொறுப்பும் அதற்காக 1000, 2000 ரூபாய்கள் செலவிட வேண்டிய பொறுப்பும் நம் தலையில் விடியும் போல் இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் நமது நிலைமை எவ்வளவு கஷ்டமாயிருக்கிறது என்பதையும், காங்கரஸின் தன்மை மேல் ஜாதியாரின் யோக்கியதை அவர்களடைந்த சுயராஜ்யத்தின் போக்கு எப்படி இருக்கிறது என்பதையும் ஊன்றி கவனித்து பார்க்கும்படி தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 30.01.1938

நீடாமங்கலம் வன்கொடுமை - முன்னுரை


நீடாமங்கலம் வன்கொடுமை - முன்னுரை

தமிழகத்தில் திராவிட இயக்கம் குறிப்பாகத் திராவிடர் கழகம்/ சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது என்ற கேள்வியும் தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எதுவும் செய்யவேயில்லை என்ற பொய்ப் பரப்பலும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அவர்களுக்கு விடையளிக்கும் நிகழ்ச்சியாக அமைவது நீடாமங்கலம் நிகழ்ச்சியாகும்.

 நீடாமங்கலத்தில் நடந்த தென் தஞ்சை மாவட்ட  காங்கிரஸ் அரசியல் மாநாட்டில் ஆதி திராவிடத் தோழர்கள் சிலர் சாப்பாட்டுப் பந்தியில் கலந்து கொண்டதற்காக அவர்களை அடித்துத் துன்புறுத்தி மொட்டையடித்துச் சாணி ஊற்றிக் கொடுமை நடந்தது. பெரியாரே அதைப் பற்றி எழுதி போராட்டம் நடத்தி ஒரு கிளர்ச்சி நடக்கக் காரணமாய் இருந்தார்.

அதில் பாதிக்கப்பட்ட தோழர் தேவ சகாயம் 26.1.1938 அன்று ஈரோட்டில் ஆற்றிய உரை 30.1.1938 அன்று விடுதலையில் வெளியானது.

ஆண்டமாரே! நாங்கள் நீடாமங்கலம் காங்கிரஸ் கூட்டத்திற்கு வேடிக்கை பார்க்கப் போனோம். அங்கு எல்லோரும் சாப்பாட் டிற்குப் போகும்போது எங்களையும் கூப்பிட் டார்கள். நாங்களும் சாப்பாட்டிற்குப் போனோம். பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எங்களை ஒரு சபாபதி உடையார் என்பவர் வந்து தலைமயிரைப் பிடித்து இழுத்து ஏண்டா பள்ளப் பயல்களா? உங்களுக்கு இவ்வளவு ஆணவமா, இந்தக் கூட்டத்தில் வந்து உட்கார்ந்து சாப்பிடலாமா? என விறகுக் கட்டையால் அடித்தார்கள். அடி பொறுக்க மாட்டாமல் சிலர் ஓடி ஆற்றில் விழுந்து அக்கரைக்குப் போய்விட்டார்கள். நாங்கள் சிலர் அடிபட்டு வீட்டிற்குப் போய் விட்டோம். மறுநாள் நாங்கள் வயலில் அறுவடை அறுத்துக் கொண்டிருக்கும்போது கூட்டத் தில் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டது யார்? அவர்களைக் கொண்டு வா என்று கிருஷ்ணமூர்த்தி அய்யர் வந்து சொன் னார். நான் போனேன். அப்போது அய்யர் அவனைச் சும்மா கொண்டு வருகிறாயா? அடிபடவாவை என்று சொன்னார். தலை யாரி மாணிக்கம் தடிக்கம்பால் அடித்துக் கொண்டு வந்தார். அடி பொறுக்க மாட்டாமல் ஓட ஆரம்பித்தேன். என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விளா மரத்தில் கட்டி வைத்து மறுபடி 10 அடி தடிக்கம்பால் அடித்தார். நாட்டாமைக்காரர் அடைக்கலம், நாட்டாமை ராமன் ஆகியவர்களை அய்யர் கூப்பிட்டு இவனை அவிழ்த்துக் கொண்டு போய் மொட்டை அடித்துச் சாணியை ஊத்தி விடு என்று சொன்னார். அந்தப் பிரகாரம் பாரியாரிமகன் ஆறுமுகம் மொட்டை அடித் தார். தலையாரி மாணிக்கம் சாணி ஊத்தி னார். பிறகு நாங்கள் தலையை முழுகிவிட்டு வீட்டிற்குப் போய்விட்டோம்.

நீடாமங்கலம் காங்கிரஸ் அரசியல் மாநாட் டில் ஆதி திராவிடத் தோழர்களுக்கு நேரிட்ட கொடுமையை ஆதாரபூர்வமாகச் சாட்சிகள டன் கொடுமைக்கு ஆளானவர்களின் அறிக் கைகளோடு குடிஅரசு எடுத்துக்காட்டியது உண்மையிலேயே ஒரு பெருங்கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. காங்கிரஸ் சிகாமணிகளின் யோக்கியதையும் இவர்களுக்குத் தாளம் போடும் தன்னலக்காரரின் வண்டவாளமும் வெளிப்பட்டுச் சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டது.

குடிஅரசு ஏட்டில் மட்டுமல்லாது, விடு தலை ஏட்டிலும் இச்செய்தி வெளியாயிற்று. ஆனால் அதைக் காங்கிரஸ் தோழர்கள் அடியோடு மறுத்துக் கூறியதுடன் அவற்றைப் பொய்யாக்கிக் காட்டத் தப்பான வழிகளில் முயற்சித்தனர். இச்செய்தி வெளியான 15 நாள் கழித்து, அடிபட்டு- உதைபட்டு மொட்டை அடித்துச் சாணி அபிடேகம் செய் யப்பட்ட ஆதிதிராவிடர் பலரைப் பிடித்துக் கொண்டு வந்தும் மிரட்டி, அம்மாதிரியான செயல் ஒன்றுமே நடக்கவில்லையென்று எழுதிக்கொண்டு, அதில் அவர்களது கையெ ழுத்து வாங்கி அதில் சேராதவர்கள் புகைப் படத்தையும், வாக்குமூலத்தையும் பத்திரிகை களில் போட்டு மக்களை ஏமாற்றப் பார்த்த துடன் விடுதலை பத்திரிகை பொய்யான சேதியை வெளிப்படுத்திற்று என்று தலைப்புக் கொடுத்து தினமணி முதலிய பத்திரிகைகள் பிரச்சாரம் செய்தன. அத்தோடு நிற்காமல் காங்கிரசார் வழக்கும் தொடர்ந்தனர். அதை உறுதியுடன் எதிர் கொண்ட பெரியார் நீதிமன்றம் அபராதம் விதித்தாலும் அது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெற்றத் தீர்ப்பு என்று துணிவுடன் குடியரசிலும், விடுதலையிலும் எழுதினர்.