Showing posts with label சுயமரியாதைத் திருமணம். Show all posts
Showing posts with label சுயமரியாதைத் திருமணம். Show all posts

Monday, 28 February 2022

தாலி கட்டுவது அடிமை உணர்ச்சியைத்தான் குறிக்கின்றது

 தாலி கட்டுவது அடிமை உணர்ச்சியைத்தான் குறிக்கின்றது


பட்டீஸ்வரத்தில் சீர்திருத்தத் திருமணம்

சகோதரிகளே! சகோதரர்களே!! இன்று நீங்கள் சுயமரியாதைத் திருமணம் எப்படி நடத்தப்பட்டது என்பதைப் பார்த்தீர்கள். இம்மாதிரியான விவாகங்கள்தான் முழு சுயமரியாதைத் திருமணங்களென்று கூறிவிட முடியாது. பெண்களுக்குப் போதிய அறிவில்லாதிருப்பதனாலும், அவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கப்படாதிருப்பதனாலுமே முழு சுயமரியாதை முறையில் திருமணம் என்பது நடைபெற முடியவில்லை. எப்பொழுது மணமகனால் மணமகளுக்கு கழுத்தில் தாலி கட்டப்பட்டதோ அது அடிமைத் தனத்தைத்தான் குறிப்பிடுகின்றது. நியாயமாகவே மணமகள் தாலிகட்டிக் கொள்ளத் தனது கழுத்தை அளித்தே யிருக்கக்கூடாது. மண மகளுக்குத் தாலி கட்டினால், மணமகனுக்கும் மணமகளால் தாலி கட்டப்பட வேண்டும். புரோகிதம் இல்லாவிட்டாலும், புகைச்சல் இல்லா விட்டாலும் கூட, இந்த விவாகத்தில் “புரோகிதச்” செலவு குறைக்கப்பட்டிருப்பதாக நான் கருதுவதற்கில்லை.

சகோதரர்களே! நாம் பொதுவாக விவாகத்தைக் கூடக் கடவுளின் தலையிலேயே சுமத்தி விடுகின்றோம். “என்ன செய்வது! விவாகம் திடீரென கூடி விட்டது! அந்த நேரம் (தாலி கழுத்துக்கு ஏறும் நேரம்) வந்துவிட்டால் யார்தான் என்னசெய்ய முடியு?” மென்பதாக உரைக்கின்றோமேயல்லாது, விவாகத்தின் உண்மைத் தத்துவத்தை அறிந்து நமது நாட்டில் விவாகங்கள் நடைபெறுவதாகப் புலப்படவில்லை. இருவருடைய சம்மதமுமின்றியே, அவர்களுடைய வயதையும் கவனியாமலும்கூட,“நாங்கள் செய்து வைக்கின்றோம். உனக்கென்ன கவலை வந்தது?” என்று சொல்லியேதான் அநேக விவாகங்கள் நமது நாட்டிலின்றும் நடைபெறுகின்றன.

நாம் ஒரு விவாகம் செய்வதென்றால் தம்பதிகளின் அபிப்பிராயத்தையும், வயதையும், யோக்கியதையும் கவனியாமலே, புரோகிதர்களிடம் 4-அணா கொடுத்து, இருவருக்கும் பொருத்தம் சரியாயிருக்கின்றதா என்றுதான் கேட்டுத் தெரிந்து கொள்ளுகின்றோம். அவன் பணத்தை வாங்கிக் கொண்டு இருவருக்கும் பொருத்தமிருப்பதாகக் கூறிவிட்டால் உடனே விவாகமும் நடந்து விடுகின்றது. நமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களும், நிர்பந்தங்களும், சந்தேகங்களுமே இதற்குக் காரணமாகும். மேல்நாடுகளில் தம்பதிகள் இருவரும் ஒருவரை யொருவர் நன்றாய் அறிந்து, பழகிக் கொண்டு, இவர்களுக்குள்ளாக நிச்சயம் செய்து கொண்ட பிறகுதான், அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தெரிய வரும். அவர்களுக்கு ஒருவித சடங்குகளுமில்லை. சர்ச்சுக்குப் போய் சாக்ஷிகளின் முன்னிலையில் ஒருவரை யொருவர் விவாகம் செய்துகொள்ள சம்மதிப்பதாக எடுத்துரைத்து கையெழுத்து செய்து விடுவார்கள். அவ்வளவேதான். இப்பொழுது நம்மை ஆண்டு கொண்டிருக்கும் நமது அரசரின் விவாகமும் அவ்விதமே தான் நடந்தது.

இஸ்லாமானவர்களில் கூட, மாப்பிள்ளைப் பெண்ணைப் பார்க்கா விட்டாலும்கூட, ஒருவித சடங்குமில்லாமல் தங்களுடைய பந்துக்களின் முன்னிலையில், முல்லாக்களை வைத்துக் கொண்டு, தங்களுடைய விவாக ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொள்ளுவார்கள். உலகத்தில் 100க்கு 90 விவாகங்கள் இம்மாதிரியேதான் நடைபெறுகின்றன. நமக்குப் போதிய அறிவில்லாததால், அனேக கஷ்டங்களுக்குள்ளாகி, பலவித சடங்குகளை வைத்துக் கொண்டு, நெருப்பையும், அம்மியையும், குழவியையும் சட்டி பானைகளையும் சாக்ஷியாக வைத்துக் கொண்டு, உலக வாழ்க்கையை நடத்த ஆரம்பிக்கின்றோம்.

நாம் பெண்களை அடிமைகள்போல நடத்துகின்றோமேயன்றி, அவர்களை சமமாகவும், கூட்டாளிகளாகவும் பாவித்து நடத்துவதில்லை. அப்படிக் கொடுமைப்படுத்தப் பட்டாலும், விவாகத்தை ரத்து செய்து கொண்டு, விலகிக் கொள்ள இருவருக்கும் உரிமையில்லை. சிறிது நாட்களுக்கு முன்னதாகதான், பரோடா அரசாங்கம் “கல்யாணமான புருஷன் பெண்ஜாதி இருவருக்கும் தங்களில் யாருக்கு பிரியமில்லா விட்டாலும், தங்களுடைய விவாக ஒப்பந்தத்தை ரத்து செய்து, விலகிக்கொள்ளலா”மென்பதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி யிருக்கின்றது.

நமது நாட்டில், அடுத்த வீட்டுப் பெண்களும், பெற்றோரும் மணமகளுக்கு “மாமி வீட்டில் நீ நல்ல அடிமையாய் இரு. அடித்தாலும், உதைத்தாலும் வருத்தப்படாதே, புருஷன் மனம் கோணாமல் நட” என்று உபதேசம் செய்து, மணமகன் வீட்டுக்கு அனுப்புவதும் வழக்கமாயிருக்கின்றது. இதனுடைய கருத்து அவர்களை ஆடவர்களுக்கு எப்பொழுதும் அடிமைகளாகவும், ஒருவித சுதந்திரமாவது அல்லது உரிமையாவது இல்லாதிருக்கும்படி செய்வதற்கேயாகும். அவர்களுடைய உபதேசங்களைக் கேட்டு, மணமகன் வீட்டுக்குச் செல்லும் அந்தப் பெண்ணும் தன்னை ஓர் அடிமையென்றே கருதி, புருஷன், மாமனார், மாமி, நாத்தி இன்னுமிருக்கக் கூடிய பந்துக்களுக்கும் பயந்து, அவர்களுடைய பிரியத்தை சம்பாதிப்பதிலேயே தன்னுடைய வாழ்க்கையை நடாத்தி உயிருள்ள பிணமாக வாழ்கிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் உபத்திரவங்கள் அளித்த போதிலும் அவைகளைப் பொருமையுடன் சகித்துக் கொள்ள வேண்டியவளாகிறாள்.

மேலும், நாம் கடன் வாங்கி, கலியாணங்கள் ஆடம்பரமாக செய்வதினால் அவர்களுடைய தலையின்மீது அக்கடனையும் சுமத்தி விடுகிறோம். கடனை வைப்பதுமல்லாமல், அவர்களைத் தனி வாழ்க்கை நடத்தும்படியாக வேறாகவும் வைத்து விடுகிறோம். நாம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குப் பயந்து கொண்டு, அதிக செலவு செய்வதினாலும், சடங்குகள் பல செய்வதினாலும் கடன் ஏற்பட்டு விடுகின்றது. இந்த யெண்ணம் மக்களை விட்டு நீங்க வேண்டும். அதிலும் பெண்களை விட்டுத் தான் நீங்க வேண்டும். அப்படி நீங்குவதாக யிருந்தால் பெண்களின் அறிவு விருத்தியாக வேண்டும். உலகப் போக்கை அனுசரித்து நடக்கும்படி அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சிலவிடங்களில் சுயமரியாதைக் கலியாணத்திற்கு ஆண்கள் மட்டும் ஏராளமாய் வந்திருப்பார்கள். பெண்களோவெனில் 5 அல்லது 10 பெயர்கள் தான் வருவார்கள். பெண்கள் வந்தால் கெட்டுப் போவார்களாம்! இதற்குக் காரணம், நாம் அவர்களுக்கு உலக ஞானத்தையூட்டி, அறிவு புகட்டாதிருப்பதைத் தவிர்த்து வேறில்லை. ஆணுக்கும், பெண்ணுக்கும், வித்தியாசமில்லை யெனவும், பெண்கள் அடிமைகள் அல்லவென்றும் அவர்கள் கருதுவார்களானால், அப்பொழுது நகைகளும், ஆடைகளும் வேண்டுமென்றும் போராடுவதை அறவே விட்டு விடுவார்கள். அவர்கள் தங்களைத் தாழ்ந்தவர்களெனக் கருதிக் கொண்டிருப்பதால்தான் தங்களை அழகுபடுத்திக் கொண்டு, ஆடவர்களை மயக்க வேண்டிய அவசியம் நேரிடுகின்றது.

நமது பெண்களுக்கு, மேலும், குழந்தைகளை வளர்க்கும் முறைகளும் தெரியாது. குழந்தைகளுக்கு அறிவு, யூகம், சுதந்திர உணர்ச்சி ஆகியவைகளை யூட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏதாகிலும் வியாதி வந்து விட்டால், நாம் உடனே மாரியம்மன் கோவிலுக்கும், ஐயர், பண்டாரம் ஆகியவர்களின் வீட்டுக்கும்தான் செல்லுகிறோமே யல்லாது, அவ்வியாதி ஏன் வந்தது என்பதை ஆராய்ந்து, அதற்குறிய மருந்துகளை அளிக்கும் வைத்தியர்களின் வீட்டுக்குச் செல்லுவதில்லை. சில இடங்களில், குழந்தைகளின் வயிறு நிறைந்திருப்பதையும் அறிந்து கொள்ளாமல், அக்குழந்தைகளின் வயிற்றை அமுக்கிப் பார்த்து அறிந்து கொள்ளுகிறார்கள். இவைகளுக்குக் காரணம் நமக்குப் போதிய கல்வியறிவும், தைரியமும் இல்லாமையேயாகும். ஊரில் காலரா முதலிய நோய்கள் வந்தால், உடனே ஓங்காளியம்மனுக்குப் பொங்கலிடுவதிலும் “நாம் என்ன செய்ய முடியும்? அவனுடைய சீட்டு கிழிந்து விட்டது. போவதுபோய்தானே தீரும்” என்று சொல்லக் கூடியவர்களாகத் தானிருக்கிறோம். நாம் நமது அறிவை உபயோகப்படுத்தி நடந்தால், இத்தகைய கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியதில்லை.

நமது வாலிபர்கள் படித்த பெண்களை மட்டும் விவாகம் செய்து கொள்வதாக ஒரு வைராக்கியம் கொள்ளுவார்களேயாகில், அப்பொழுது பெண்களைப் பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகளுக்கு கல்வியறிவை யூட்டுவார்கள். படித்த பெண்களாகப் படாவிட்டால் கலியாணம் செய்து கொள்ளாமலிருக்க வேண்டும். படியாத பெண்கள் கிழவர்களுக்கு 2ந் தாரம் 3ந்தாரமாக போய் சேரட்டும். இதுதான் படியாத பெண்களுக்கு தண்டனை யாகும். சில சுயமரியாதை விவாகங்களில், பெண்களுக்குத் தாலி கட்டும் வழக்கம் கிடையாது. முனிசிபாலிட்டிகளில் நாய்களுக்குக் கழுத்தில் பட்டை கட்டுவதைப் போல், விவாகமாகும் பெண்களுக்கு நாம் ஒரு தாலியை கட்டி விடுகின்றோம். அப்படி தாலி கட்டுவதாகயிருந்தால், மாப்பிள்ளைக்கும் சேர்த்துதான் கட்ட வேண்டும். எப்பொழுது மாப்பிள்ளை கட்டிக் கொள்ள சம்மதிக்கவில்லையோ, அப்பொழுது பெண்களும் தாலிக் கட்டிக் கொள்ள சம்மதிக்கக்கூடாது. தாலி கட்டுவது அடிமையுணர்ச்சியைத் தான் குறிக்கின்றது.

பெண்களுக்கு நாம் அறிவையூட்டி சமத்துவத்தை அளித்துக் கொண்டு வர வேண்டும். அவர்களைப் பல கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய மூடநம்பிக்கைகள் நீங்கும். நமது பந்துக்கள் வர மாட்டார்களே யெனப் பயப்படக்கூடாது. ஜாதி யைப் பற்றி, நாம் கொஞ்சமும் கவலையடையக் கூடாது. நம்முடைய கொள்கைகளை ஆதரிப்பவர்களிடம் நாம் சம்பந்தம் செய்து கொள்ளலாம். எந்த ஜாதியாக இருந்த போதிலும் சரியே, அவர்களுக்கு அறிவு, யோக்கியதை முதலியவைகளிருந்தால் அவர்களிடம் சிநேகிக்கலாம். அறிவுக்கும், அனுபவத்துக்கும் ஒத்திருப்பவைகளை நாம் கவனித்து நடக்க வேண்டுமே யல்லாது பெரியவர்களின் பழக்க வழக்கங்களையே நாம் கண்மூடித்தனமாய் பின்பற்றலாகாது. இவைகள் யாவும் வாலிபர்களால் தான் நடைபெற வேண்டியிருக்கின்றது. வீண் ஆடம்பரங்களின்றியும், அதிக செலவில்லாமலும், சடங்குகளின்றியும் தம்பதிகளிருவரும் தங்களுடைய விவாகத்தை இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் ரிஜிஸ்தர் செய்து கொள்ளுவதே போதுமானது.

(குறிப்பு: 25.06.1931 இல் கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் நடைபெற்ற திரு துரைசாமி - திருமதி காந்திமதி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 05.07.1931)

பெண்களுக்கு பிள்ளைப் பைத்தியம் இருப்பது மிகவும் புத்தி கெட்டத்தனமாகும்

 

பெண்களுக்கு பிள்ளைப் பைத்தியம் இருப்பது மிகவும் புத்தி கெட்டத்தனமாகும்


கும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம்

சகோதரிகளே! சகோதரர்களே! இன்று இங்கு நடக்கும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகின்றது. இதை நான் முழு சுயமரியாதைத் திருமணம் என்று ஒப்புக் கொள்ள முடியாது. பார்ப்பான் வரவில்லை என்பதையும், அர்த்தமற்ற சடங்குகள் அநேகமாயில்லை என்பதையும், வீண்மெனக்கேடான காரியமும் வீண் செலவுமான காரியமும் இல்லையென்பதையும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் தாலி கட்டத் தயாராயிருப்பதாகத் தெரிகிறேன். பெண் உட்கார்ந்திருக்கும் மாதிரியைப் பார்த்தால் பெண்ணும் மாப்பிள்ளையும் இதற்கு முன் அறிமுகம் கூட ஆனதில்லை போல் காணப்படுகின்றது.



சுயமரியாதைக் கல்யாணத்தின் முறைகள் இன்னின்னது என்று இப்போது வரையறுப்பது என்பது காதால் கேட்பதற்கே முடியாத காரியமாயிருக்கும். கல்யாணம் என்பதே வேண்டியதில்லை என்று சொல்லக்கூடிய திட்டம் சுயமரியாதை இயக்கக் கொள்கையில் ஒரு காலத்தில் வரக்கூடும். எந்தப் பெண்ணும் எந்த மாப்பிள்ளையும் புருஷன் பெண் ஜாதிகளாகப் போகிறார்கள் என்று பெற்றோர்களுக்குக் கூடத் தெரிய முடியாத நிலைமை ஏற்படும். இந்த மாப்பிள்ளைக்கு இதற்கு முன் எத்தனை பெண் கல்யாணமாயிற்று? இந்தப் பெண்ணுக்கு இதற்குமுன் எத்தனை புருஷன் கல்யாணம் ஆயிற்று? என்கின்ற கணக்குப் போடக்கூடிய காலம் வரும். மற்றும் அதைப் பற்றியே மக்கள் விசாரிக்க - யோசனை செய்யக்கூடிய அவசியமே இல்லாமலும் போகக்கூடும். அந்த மாதிரி கல்யாண முறையும் இன்றைய குடும்ப வாழ்க்கை முறைகள் ஒழிந்து ஆணும் ஆணும் சிநேகமாய், அன்பாயிருப்பது போலவே ஏதோ ஒரு பெண்ணும் ஏதோ ஒரு ஆணும் பெண்ணும் சிநேகமாயிருக்கின்றார்கள் என்கின்ற அளவில் மாத்திரமே சம்பந்தமிருக்கும்படியான காலமும் வரும். இதெல்லாம் அநேகமாய் பெண் மக்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சியும், சுயமரியாதை உணர்ச்சியும், உண்மைச் சுதந்திரம் என்பது என்ன என்கின்ற உணர்ச்சியும் வந்தவுடனே ஏற்பட்டுவிடும்.

இப்போது பெண்கள் அடிமைப் பொருள்கள் என்றும் தாங்கள் மற்றவன் அனுபவிக்கும் பொருள் என்றும்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ள நினைப்பதே அவர்களின் அடிமை உணர்ச்சியின் அறிகுறியாகும். அந்தக் கருத்துக் கொண்டுதான் அவர்களுக்கு நடை, உடை அணி முதலியவைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு தாசி என்பவள் அதாவது தான் பிறர் அனுபவிப்பதற்காக இருக்கின்றவள், அதன் பயனாய் ஜீவிக்கின்றவள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒருத்தி தன்னை அலங்கரித்துக் கொள்வதில் இருக்கும் மனோபாவத்திற்கும் மற்றப் பெண்கள் அலங்கரித்துக் கொள்ளுவதில் இருக்கும் மனோபாவத்திற்கும் அதிக வித்தியாசமிருப்பதாக நான் கருதுவதில்லை.

மிருகம், பட்சி ஆகியவைகள் ஆணைவிட பெண் தாழ்ந்ததென்று கருதுவதில்லை. “ஆணுக்காகத்தான் பெண் இருக்கிறோம்” என்று கருதி, தங்கள் மீது ஆண்கள் ஆசைப்பட வேண்டும் என்று சிறிதும் முயற்சிப்பதில்லை. ஆண்கள் ஆசைப்படும்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கருதுவதுமில்லை. ஆனால் பெண் ஜன்மம் எடுத்து தாங்கள் அலங்கரித்துக் கொண்டு ஆண்கள் ஆசையை எதிர்பார்ப்பதற்கே ஏற்பட்டதென்பதாய் கருதுகிறார்கள். தன் சொந்தப் புருஷனை சந்தோஷிக்கச் செய்யவோ திருப்தி அடையச் செய்யவோ என்று செய்யுங் காரியங்களும் கூட ஒரு வித அடிமை எண்ணத்தில் பட்டதே ஆகும். நடை, உடை பாவனைகளில் புருஷனை விட மாறுபட்டிருக்க வேண்டும் என்கின்ற மனப்பான்மையும் அடிமை மோகமே யாகும். இவைகள் எல்லாம் இயற்கைக்கு மாறுபட்டவையே யாகும். எப்படியோ ஆதியில் இம்மாதிரி ஏற்பாடு செய்து விட்டதால் அந்த பத்ததிகள் இனியும் நடந்து வருகின்றன. ஆண்களும் அனேகமாய் தனது வீட்டை, வண்டியை, மாட்டை அலங்கரிப்பதில் என்ன மனோபாவம் கொள்ளுகின்றார்களோ அதே மனோபாவம்தான் தன் பெண் ஜாதியை சிங்காரிப்பதிலும் கொள்ளுகிறான். ஆகையால் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வது என்கின்ற மனப்பான்மையை ஒழிக்க வேண்டியது பெண்கள் விடுதலையில் - சுதந்திரத்தில் ஒரு திட்டமாகும்.

தவிர திருமணம், கல்யாணம் என்பவைகள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது தவிர மற்றபடி இதில் வேறு ஒன்றுமே இல்லை. இந்த ஒப்பந்தமும் இருவர் சௌகரியத்தை பொருத்த காரியங்களுக்கு மாத்திரமே அல்லாமல் மற்றொன்றுக்கும் இல்லை. அதுவும் இருவருடைய சமமான சௌகரியத்திற்குத் தானேயொழிய ஒருவருக்கு அதிக சௌகரியம் ஒருவருக்கு குறைந்த சௌகரியம் என்பதாக சிறிது வித்தியாசங்கூட கொண்டதாயிருப்பதல்ல. அதிலும் இருவரது சுதந்திரங்களும் சமமாய்க் கருதப்பட்டதாகவும் அதற்கு எவ்விதத்தடையும் இருப்பதாகவும் இருக்கக் கூடாததாகும். அனேகமாய் இந்த ஒப்பந்தங்கள் எழுதி ரிஜிஸ்டர் செய்வதுதான் இனிப் பொறுத்தமானதாக இருக்கும். வேண்டுமானால் புதுவீடு குடிபோதல், புதிய தொழில் வியாபாரம் முதலிய காரியங்கள் துவக்கப்படுபவை ஆகியவைகளுக்காக எப்படி முதலிலேயே சற்று விளம்பரம் இருந்தால் அனுகூலம் என்று கருதுகின்றோமோ அதுபோல் நண்பர்கள், நான்கு பந்துக்கள், அக்கம் பக்கத்தார்கள் ஆகியவர்களுக்கு தெரியக்கூடியதாய் இருப்பதும் நன்மையானதுதான். அதிலும் ரிஜிஸ்டர் இல்லாத திருமணங்களுக்கு சாக்ஷிகள் இருக்க வேண்டியது அவசியம் என்கின்ற முறையில் பலர் அழைக்கப்படு வதும் சரிதான். ஆனால் இதற்காகவே அதிகச் செலவும் மெனக்கேடும் கூடாது என்பது மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். திருமணச் சடங்கு என்று ஒன்றை தனிப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

மணமக்கள் சபைக்கு வந்து தங்கள் தங்கள் ஒப்பந்தங்களைச் சொல்லி ஒப்புக் கொண்டதற்கு அறிகுறியாய் தங்கள் தங்கள் சுருக்கெழுத்துள்ள மோதிரம் மாற்றிக் கொள்வதோ மாலை மாற்றிக் கொள்வதோ போதுமானதே யாகும். இதற்காகவென்று ஏன் அதிகப் பணச்செலவு செய்ய வேண்டும்? என்பதுதான் எனக்கும் புரியவில்லை. புதுச்சேலை, புதுநகை தாம்பூலம் இவைகளெல்லாம் பயனற்ற செலவாகவே ஆகின்றன. அனேக சுயமரியாதை கல்யாணங்களில் மாப்பிள்ளை சாதாரண உடுப்புடன் இருந்திருக்கிறார்கள். பெண்கள்தான் உயர்ந்த சேலையும், விலையுயர்ந்த நகைகளும் அணிந்து ஒரு ஆணானவன் பெண் வேஷம் போட்டிருப்பது போல் விளங்குகின்றார்கள். இவையெல்லாம் நாகரீகம் என்பதோடு பெண் மக்களின் தன்மையையே குறைத்து விடுகின்றது. பெண்கள் சுதந்திரத்துக்கும், பெண்கள் விடுதலைக்கும் அவர்கள் மனப்பான்மை சற்று மாறியேயாக வேண்டும். “நான் அடிமையாய்த்தான் இருப்பேன் நீ மாத்திரம் எனக்கு எஜமானனாய் இருக்கக் கூடாது” என்பதில் அர்த்தமேயில்லை.

தவிர பெண்களுக்கு பிள்ளைப் பைத்தியம் இருப்பது மிகவும் புத்தி கெட்டத்தனமாகும். பிள்ளைகள் பெறாமல் இருப்பதற்கு எவ்வளவு சௌகரியம் செய்து கொள்ளக்கூடுமோ அவைகளை செய்து கொள்ள வேண்டும். கொஞ்சுவதற்கென்று பிள்ளைகளைப் பெற்று அவற்றைக் காப்பாற்றுவதற்கு என்று அதற்கு நேர் விரோதமாய் என்னென்னமோ செய்து அஞ்ச வேண்டியதாகி விடுகிறது. எவ்விதத்திலும் பொறுப்பில்லாதவர்கள் வெகுதாராளமாய் “16 பிள்ளைகள் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்” என்று ஆசீர்வாதம் செய்துவிடுகிறார்கள். பிள்ளை பெற்று வளர்க்கக் கஷ்டப் படுகின்றவர்கள் யார் என்பதை யோசித்துப் பாருங்கள். நமது அறிவீனமானது இக் கஷ்டங்களை உணரச் செய்யாமல் செய்து விடுகிறது. உணர்ந்தாலும் அதற்கு நாம் ஜவாப்தாரியல்ல என்று நினைத்துக் கொள்வதால் அக்கஷ்டத்திலிருந்து விலக முடிவதில்லை.

(குறிப்பு : கும்பகோணம் சாக்கோட்டையில் 12-06-1931 அன்று நடந்த ‘ராகு காலத்’ திருமணத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 21.06.1931)

Saturday, 1 January 2022

சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் புரோகிதத்தின் லக்ஷணம் என்ன? - தோழர் பெரியார்

 சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் புரோகிதத்தின் லக்ஷணம் என்ன?

தோழர்களே!

இன்று இங்கு நடந்த திருமண ஒப்பந்தத்தை கேட்டதோடு அதன் வினைமுறைகளையும் பார்த்தீர்கள். இதைத்தான் இன்று பலர் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லுகிறார்கள். மற்றும் சிலர் சீர்திருத்த திருமணம் என்றும் சொல்லுகிறார்கள். இரண்டும் ஒன்றுதான். எப்படிச் சொன்னாலும் சரி, வயது வந்த ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கு ஆக தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்த வினையைத்தான் இன்று நாம் திருமணம் என்கிறோம்.



அந்த வினைகள் பல விதமாக செய்யப்பட்டு வருகின்றன. அத்தனை விதங்களுக்கும் ஆதாரமோ அவசியமோ என்ன என்பதற்கு யாராலும் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ பழக்க வழக்கம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் கௌரவங்களையும் நினைத்துக்கொண்டு என்ன என்னமோ செய்து வருகிறார்கள்.

உலகில் மக்கள் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு துறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதுபோல் இத்திருமணம் என்கின்ற முறையிலும் காலதேச வர்த்தமானத்தை உத்தேசித்து பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. மற்றும் பல துறைகளிலும் அனாதியான பழக்க வழக்கம் என்பவைகளிலும் கூட அறிவு விசாலத்தை முன்னிட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

மற்றும் பல துறைகளில் வெறும் மாறுதலை விரும்பியே பல பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இவை உலக இயற்கையே யாகும். ஏதோ ஒரு விதத்தில் மாறுதல்கள் ஏற்படுவது தள்ள முடியாத காரியமாகும். இந்த உண்மையை நமது வாழ்க்கையையும் அனுபவத்தையையும் ஞாபகப் படுத்திப் பார்த்தால் அதன் விபரம் பூராவும் நமக்கு நன்றாய்விளங்கும்.

நாம் மாறுதல்களுக்கு கட்டுப்பட்டவர்களும் அடிமைப்பட்டவர்களும் ஆசைப்பட்டவர்களும் ஆவோம்.

ஆதலால் அந்த மாறுதலேதான் அதுவும் அறிவு ஆராய்ச்சி ஆகிய காரணங்களைக் கொண்டுதான் இந்தத் திருமணமுறையில் காணப்படுகிற மாறுதல்கள் ஏற்பட்டவைகளாகும்.

திருமணங்களை இப்போது பெரும்பாலும் ஒரு நாளில் முடித்து விடுவது என்பது பெரும்பாக மக்களுக்குள் அதுவும் அறிவாளிகளான மக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஒப்புக்கொண்ட விஷயமாகி விட்டது. அதோடு சடங்கு முதலியவைகளும் கூட பெரிதும் சவுகரியத்திற்கு ஏற்றபடி நழுவவிட்டும் மாற்றியும் அமைத்துக்கொண்டாகி விட்டது. நகை உடை ஆகியவைகளும் முன்பு சமயத்துடனும் சடங்குடனும் பிணைத்திருந்ததெல்லாம் இப்போது விடுவிக்கப்பட்டு சௌகரியம்போல் அமைத்துக் கொள்ளப்பட்டு விட்டது. பெரிதும் பாமரத்தன்மை உள்ள வகுப்புகளில்தான் ஏதோ பல பிடிவாதங்களை காண்கின்றோமே அல்லாமல் மற்றபடி அனேக விஷயங்கள் திருத்தி அமைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றதை காண்கின்றோம். எப்படியோ மக்கள் மாறுதல்களை விரும்பவும் சகிக்கவும் வந்து விட்டார்கள். ஆனால் அவை வெறும் மாறுதல்களுக்கு ஆகவே இல்லாமல் அறிவுக்கும் அனுபவ சவுகரியத்திற்கும் ஒத்ததாக இருக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை. அது தான் இன்று நமது தொண்டும் ஆகும். இந்தத் திருமணத்தில் நாம் காணும் மாறுதல்கள் அதை அனுசரித்தன என்று தான் உங்களிடம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

இத்திருமணத்தில் நீங்கள் என்ன மாறுதல் காண்கிறீர்கள்?

புரோகிதன் இல்லை; அது ஒரு முக்கிய மாறுதல். ஆனால் புரோகிதன் எதற்கு? புரோகிதன் என்றால் என்ன? என்பது முதலில் யோசிக்கத்தக்கதாகும். இன்று புரோகிதன் என்பவனுக்கு உள்ள லட்சணம் எல்லாம் முதலில் அவன் பெரிய ஜாதிக்காரனாக இருக்கவேண்டும். அவனுடைய நடத்தை தன்மை முதலியவைகளைப்பற்றி நமக்கு கவலையில்லை. பெரிதும் நமக்கு தெரியாத பாஷையில் அவசியம் புரியாத சடங்குகளைச் செய்யச் சொல்லி பணம் வசூலித்துக்கொண்டு போகிறவனையேதான் இன்று புரோகிதன் என்கின்றோம். மற்றும் அவன் காலில் நாமும் மணமக்களும் விழுந்து கும்பிடுகிறோம்; அவனை சாமி என்று அழைக்கிறோம். இவற்றைத் தவிர புரோகிதனுக்கு வேறு லக்ஷணம் சொல்லுங்கள் பார்க்கலாம். அல்லது வேறு பயனையாவது சொல்லுங்கள் பார்க்கலாம். இந்தப் புரோகிதன் நமக்கு எதற்கு என்று உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? அவன் நமது தமிழ் மக்கள் திருமணங்களில் எந்தக் காலத்தில் வந்து கலந்து கொண்டான் என்று உங்களுக்குள் யாருக்காவது தெரியுமா? அவனால் வகுக்கப்பட்ட சடங்குகள் மந்திரங்கள் முதலியவை எதற்கு ஆக எப்போது என்ன அவசியத்தின் மீது ஏற்பட்டதென்று உங்களுக்கு யாருக்காவது தெரியுமா? உங்கள் பழய இலக்கியங்கள் பழய ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவைகளில் இந்த புரோகிதனுக்கும் சொற்களுக்கும் அவன் சடங்குகளுக்கும் ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றனவா? ஆகவே புரோகிதம் என்பது ஏதோ உங்கள் பழக்கம் அல்லது முன்னோர்கள் நடந்த வழி என்பது அல்லாமல் வேறு எந்த அவசியத்தைக் கொண்டது என்று யோசித்துப் பாருங்கள். ஆதலால் இங்கு புரோகிதன் இல்லாத ஒரு மாறுதலானது ஒன்றும் பிரமாத மாறுதல் அல்ல என்பதோடு அவனில்லாததால் எவ்வித குறையும் ஏற்பட்டு விடவில்லை என்பதையும் உணருகிறீர்கள்.

மற்றொரு மாறுதல் மணமக்களின் ஒப்பந்தம் என்பதில் நிகழ்ந்ததாகும். அதாவது பழய முறைப்படி செய்யப்படும் மண ஒப்பந்தத்தில் எஜமான் அடிமை ஒப்பந்த வாசகம் இருக்கும். அதாவது ஆணுக்கு பெண் அடிமை, பெண்ணுக்கு ஆண் எஜமான் என்பதும், பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதும், அதற்கெல்லாம் பெண் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதுமான அடிமை முச்சலிக்காவே ஒப்பந்தத்தில் மிளிரும்.

ஆனால் இந்த திருமண ஒப்பந்தத்தில் இருவரும் சமம் என்றும் வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவபாவம் மிளிரும். இந்த மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக்கொண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளையும் அன்பு சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப்பாருங்கள். உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளா யிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு சம சுதந்தரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தினிடமிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாய் வாழவேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும் நமது சகோதரிகள் விஷயத்திலும் நமது பெண் குழந்தைகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா? நமது வாழ்க்கைத் துணைகளிடத்திலும் கவனிக்கப்பட வேண்டாமா? அந்தப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால் அதற்கு இந்த சந்தர்ப்பத்தைவிட வேறு சந்தர்ப்பம் எது என்று கேட்கின்றேன். இத்திருமணத்தை சீர்திருத்த மணம் என்றும் வைதீக மணம் என்றும் சொல்லாமல் இது ஒரு சுயமரியாதை மணம் என்றும் நாஸ்திக மணம் என்றும் சொல்லப்படுவதற்கு அந்த இரண்டு காரியங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் தான். அதாவது புரோகிதம் இல்லாததாலேயே நாஸ்திகம் என்றும் பெண்ணுக்கு சம சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதாலேயே சுயமரியாதை திருமணம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படி சொல்லப்படுவதற்கு ஆக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. திருமணங்களில் ஆஸ்திக நாஸ்திகத்துக்கு இடமே இல்லை. நாஸ்திகம் அவரவர்கள் உணர்ச்சி ஆராய்ச்சிதிறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல ஒரு கக்ஷி அல்ல; ஒரு மத மல்ல. ஆகையால் இத் திருமணமுறை மாறுதல்களில் நாஸ்திகத்திற்கு இடமில்லை. கடவுள் நம்பிக்கைகாரர்கள் இந்த இடத்தில் கடவுள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இந்த திருமணம் கடவுள் சித்தமில்லாமல் நடைபெற்றது என்று சொல்லிவிட முடியுமா? என் போன்றவர்கள் அப்படி சொல்லுவதானாலும் எந்த கடவுள் நம்பிக்கைக்காரராவது அதை நம்ப முடியுமா? ஆதலால் இதில் நாஸ்திகத்தை புகுத்துவது சரியல்ல. புரோகிதன் இல்லாததே நாஸ்திகம் என்றால் அவன் இல்லாமல் நாம் செய்யும் மற்ற அனேக காரியங்கள் நாஸ்திகம் என்று தான் அருத்தம். ஆதலால் அதையும் நாம் லக்ஷியம் செய்ய வேண்டியதில்லை. மற்றொரு விஷயமான ஆண் பெண் சமத்துவம் என்கின்ற சுயமரியாதை சிலருக்கு பிடிக்கவில்லையானால் நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆண் பெண் சமத்துவமாய் பாவிக்கப்பட்டு சமத்துவமாய் நடத்தப்படுவதாய் இருந்தால் தான் இம்மாதிரி வாழ்க்கை ஒப்பந்தங்கள் அதாவது திருமண காரியங்கள் இருக்கவேண்டுமே ஒழிய அப்படி இல்லாவிட்டால் பெண்கள் “திருமணம்” இல்லாமல் தனித்து வாழ்வதே மேல் என்று சொல்லுவேன். எதற்காக ஆணுக்கு பெண் அடிமையாக இருக்க வேண்டும்? இஷ்டப்படா விட்டால் என்ன செய்யமுடியும்? அதற்கு என்ன நிர்ப்பந்தம் செய்ய யாருக்கு பாத்திய முண்டு? ஆகையால் வேறு எந்த காரியங்களில் மாறுதல் இல்லாவிட்டாலும் இந்த வாழ்க்கை சுதந்திரத்தில் சமசுதந்திரம் என்பது ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். சுயமரியாதை இயக்கத்தின் முதல் லட்சியமே அதுவாகும். ஆதலால் அது விஷயத்தில் உள்ள ஏற்படப்போகும் மாறுதலை மக்கள் வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.

மற்றபடி இத்திருமணத்தில் உள்ள மாறுதல் செலவு சுருக்கம் என்பது. இதையெல்லோரும் ஒப்புக்கொள்ளுவீர்கள் என்றே நினைக்கிறேன். இந்தியாவின் பொருளாதார நிலையைப்பற்றி கண்ணீர் வடிக்காத அரசியல்வாதிகள் கிடையாது. அதை நம்பி கோவிந்தா போடாத பாமர மக்களும் கிடையாது. அது உண்மையாய் இருக்குமானால் இந்த மாதிரி ஒரு 5 நிமிஷ காரியத்துக்கு ஆக 4 வரி ஒப்பந்த வார்த்தைக்கு ஆக ஆயிரக்கணக்காகவும் பதினாயிரக்கணக்காகவும் செலவழிக்க அனுமதிக்கப் படலாமா என்று கேட்கிறேன். இப்படி செலவு செய்வது கிரிமினல் குற்றமாகாதா என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு அணா வரும்படி என்கிறார்கள். அப்படியானால் தினம் நான்கு அணாவே வரும்படி உள்ள ஒரு ஜோடிக்கு இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்திற்கு எவ்வளவு ரூபாய் செலவழிப்பது. குறைந்தது 250 ரூபாய் செலவானாலும் 1000 நாளைய வரும்படி செலவழிக்கப்படுகிறதா இல்லையா என்று பாருங்கள். இந்த வழக்கம் இது வரை அனுமதிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இந்த நாட்டில் பொறுப்புள்ள சீர்திருத்தக்காரரோ, பொருளாதார துணைவர்களோ, நல்ல அரசியல் தலைவர்களோ, ஜீவகாருண்யமுடையவர்களோ, தேசீயவாதிகளோ இல்லை என்று அருத்தமாகவில்லையா? நான் ஒரு நிமிஷம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் இம்மாதிரியான பொருள் விரையத்தை தடுக்கவே தூக்கு தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். இம்மாதிரியான பொருள் நஷ்டம் தான் இன்று இந்தியாவுக்கு பிடித்த பெரும்பிணி என்று சொல்லுவேன். சம்பாதனை மார்க்கங்கள், பொருள் உற்பத்தி மார்க்கங்கள் நாளுக்கு நாள் அருகிக்கொண்டு போகின்றன. செலவு மார்க்கங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகின்றன. நமது மக்கள் வாழ்க்கைக்கு பொருளாதார கணக்கு வரவு செலவுத் திட்டமே கிடையாது. அப்படிப்பட்ட நாடு எந்தக் காலத்திலும் எந்த ஆட்சியினும் பொருளாதார சவுக்கியத்தை உண்டாக்கவே முடியாது. நமது திருமணங்கள் மாத்திரமல்லாமல் நமது தெய்வங்களின் திருமணங்கள் நமக்கு பெரியதொரு கழுத்தறுப்பாகும். மற்றவை நம் வாழ்க்கை சடங்கு முறைகள், ஜாதி ஆச்சார முறைகள் ஆகியவைகளில் உள்ள பொருளாதாரக் கொடுமையாகும். இவைதவிர பாடுபட ஒருவன், பயன் அடைய ஒருவன், உட்கார்ந்து சாப்பிட ஒருவன் என்கின்ற முறை நமது பொருளாதாரத்தை எவ்வளவு பாதிக்கிறது என்பதை நாம் உணருவதில்லை. ஆகையால் இம்மாதிரி திருமணங்களில் மக்களின் சராசரி வரும்படியில் ஒரு 10 நாள் அல்லது 15 நாள் வரும்படிக்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கவே கூடாது. மற்றும் நாள் சுருக்கமும் ஒரு மாறுதலாகும். இதை இன்று வைதீக ஜாதியான பார்ப்பனர் முதல் ஒப்புக்கொண்டு விட் டார்கள். ஆதலால் அந்த மாறுதல் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதே யாகும்.

இன்னும் பல மாறுதல் செய்ய வேண்டியதும் உண்டு. அவை தம்பதிகள் தங்களில் தெரிந்தெடுத்துக்கொள்ள வேண்டியதும், தக்க பொருத்தம் இருக்க வேண்டியதும் தக்க வயதும் தொழிலும் ஏற்பட்ட பின் மணத்தில் இறங்க வேண்டியதும் மற்றும் பல காரியங்களும் உண்டு.

-- 06.12.1936 ஆம் நாள் திருப்பூரில் நடைபெற்ற எஸ்.ஆர். சுப்பிரமணியம் சென்னியம்மாள் திருமணத்திலும் 09.12.1936 ஆம் நாள் நடைபெற்ற துரைசாமி லட்சுமிபாய் அம்மாள் திருமணத்திலும் தலைமைவகித்து ஆற்றிய சொற்பொழிவு. --"குடி அரசு" சொற்பொழிவு 13.12.1936