Sunday 26 November 2017

சிறையில் கழகத் தோழர்கள் ! - 2.12.1957

சிறையில் கழகத் தோழர்கள் !

என் மகனுக்கு மாத்திரம் எதற்கு ஜாமீன்?

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் சென்ற மாதம் 26ந் தேதி அரசியல் சட்டத்தாளைக் கொளுத்திய திராவிடர் தோழர்களில் 34 பேர்கள் மீது தொடரப்பட்டிருந்த வழக்குகள் 19.12.57ந் தேதி திருச்சி மாவட்ட மாஜிஸ்திரேட் அவர்களால் விசாரிக்கப்பட்டு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆங்கரை ஆண்டிமகன் தவசு, மைனராய் இருந்ததால் தவசு தகப்பனாரை அழைத்து உங்கள் மகனை ஜாமீனில் அழைத்துப் போகிறீர்களா? என்று கேட்டதற்கு ஆயிரக்கணக்கான தோழர்கள் சிறையில் இருக்கும்போது என் மகனுக்கு மாத்திரம் எதற்கு ஜாமீன்? என்று மறுத்துவிட்டார். இவரது இந்த பதில் நேகார்ட்டிலிருந்த எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இச்சிறுவனுக்கு 12 வயது இச்சிறுவனையும் சேர்த்து நேற்று தண்டிக்கப்பட்டவர்கள்.
சிறுதையூர் மாரிமுத்து (திராவிட விவசாய சங்கச் செயலாளர்) பூவாளுர் தி.க. செயலாளர் வீராசாமி, வளவனூர் ஆரோக்கியசாமி ஆங்கரை ரத்தினம், அன்பில் கதப்பட நாட்டர் சிறுதையூர் சலாம் (பஞ்சாயத்து போர்டு தலைவர், உட்பட 35 பேர்கள் தோழர்கள் யாவரும் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்று சிறையேறினர்.

லால்குடி வாளாடி பெருகமணி ஆகிய ஊர்களில் சட்டத்தாள் கொளுத்திய தோழர்களுக்கு சென்ற 16ந் தேதி ஜில்லா மாஜிஸ்திரேட் தலா 2 ஆண்டு கடுங்காவல் தட்ணனை விதிக்கப்பட்டது. கொளுத்த முயற்சி செய்தவர்களுக்கு தலா 18 மாதம் கடுங்காவல் விதிக்கப்பட்டது. முத்துச் செழியன் குழுவினர் மீதுள்ள வழக்குகள் முறையே 24, 26ந் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

லால்குடி வட்டத்தைச் சேர்ந்த தோழியர்கள் சிறையில் பிரசவமான தோழியர் அஞ்சலை அம்மாள் உட்பட அனைவரும் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்டு அவர்கள் மீதுள்ள வழக்குகளும் முறையே 24, 26 தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. தாய்மார்கள் திருச்சி துணைச் சிறையில் ரிமாண்டில் இருக்கிறார்கள்.

பெரியார் பெரும்படைக்கு சிறையில் இடமில்லை

லால்குடி வட்டாரத்தில் அரசியல் சட்டம் எரித்து கைது செய்யப்பட்ட தோழர்களை திருச்சிக்கு வானில் கொண்டு வந்து மாஜிஸ்திரேட்டிடம் ரிமாண்ட் வாங்கி திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். சிறையதிகாரிகள் மத்திய சிறையில் இடமில்லையெனச் சொல்லிவிடவே அவர்களை திரும்பவவும் லால்குடி சப்ஜெயிலுக்கு கொண்டு சென்றனர் போகும் போது தொண்டர்கள் பெரியார் பெரும்படைக்கு சிறையில் இடமில்லை என ஒலி முழக்கமிட்டுக் கொண்டே சென்றனர். லால்குடி சப்ஜெயலில் அடைக்கப்பட்ட பின் இரவு 10.30 மணிக்கு கலெக்டர் சென்று மத்திய சிறையில் இடம் ஒழித்து வைத்திருப்பதாகவும் திரும்பவும் கொண்டு வருமாறும் லால்குடிக்கு செய்தி வந்தது. பின்னர் போலீஸ் வேன்கள் போதாமல் வாடகை லாரி பிடித்து இரவு 11 மணிக்கு மேல் மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர்.

சிறை மீளும் வீரர்கள் 30.11.1957 சனி, ஆர்.வி. ரங்கசாமி (ஈரோடு), பி.டி. சுப்பராயலு (கடலூர்) லட்சுமி - சுப்பராயலு (கடலூர்), கி. நடேசன் (கடலூர்), கல்யாணி - நடேசன் (கடலூர்), மா. பலராமன் (கடலூர்), ஆ. வைத்திலிங்கம் (கடலூர்), வி. புருஷோத்தமன் (கடலூர்), மா. ஜானகி ராமன் (கடலூர்), எஸ்.ராமலிங்கம் (கடலூர்), கே. வேணு (கடலூர்), கோ. வெங்கட்ராமன் (புத்தூர்).

வருத்தத்தோடு...

நன்னிலம் தாலுக்கா தி.க. தி.வி.தொ.ச. உதவி செயலாளர் என்.வி.முருகப்பா 26.11.1957ந் தேதி மாலை 4 மணிக்கு வாழ்குடி சத்தி ரைஸ் மில் பக்கத்தில் இந்திய அரசியல் சட்ட புத்தகத்தைக் கொளுத்தினார். ஏராளமான பொது மக்கள் ஆதரவு தந்தார்கள். இந்த சட்டத்தின் தத்துவத்தை விளக்கி பொது மக்களுக்கு எடுத்து உரைத்துவிட்டுக் கொளுத்தினார். போலீகார் யாரும் வரவில்லை. என்னை இதுவரையிலும் தண்டிக்கவில்லை என்று வருத்தத்தோடு தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று அவர் எழுதியுள்ளார்.

உணவு தராத போலீசார்

கடந்த 26.11.1957இல் இந்திய அரசியல் சட்டத்தை எரித்து கைதான எடமேலையூர் தோழர்களின் வழக்குகள் 3.12.1957இல் பகல் 2 மணிக்கு மன்னார்குடி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தோழர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்புக் கூறி தலா 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர்.
தோழர்கள் 35 பேருக்கு காலை உணவுடன் மாலை 6.30 மணி வரை உணவு இன்றி துன்பப்பட்டார்கள். கழகத் தோழர்கள் வாங்கி வருகிறோம் என்றாலும் மறுத்துவிட்டனர் போலீசார். பலர் மயக்கமுற்று மாலை 4.45க்கு வீழ்ந்து விட்டனர். உடனே அவர்களுக்கு தோழர்கள் காப்பி வாங்கிக் கொடுத்து தெளிவு உண்டு பண்ணினர்.
அன்பு பின்பு மாலை 6.35 மணிக்கு போலீசாரால் உணவு அளிக்கப்பட்டது. அதன்பின் இரவு சுமார் 7 மணிக்கு அவர்கள் நீடாமங்கலம் ரயில் மூலம் அனுப்பப்பட்டனர். தேழர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.


சிறை சென்ற சிறுவர் - சிறுமி

நீடாமங்கலத்தில் சென்ற 26ந் தேதி அரசியல் சட்டத் தாளைக் கொளுத்தி கைது செய்யப்பட்ட தோழர் கே.ஆர்.குமார் அவர்களின் மகள் செல்விக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சென்னையிலுள்ள மைனர் பெண்கள் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள்.

மற்றும் இதுபோலவே, கலியபெருமாள், கோவிநத்ராஜ் ஆகிய இரு சிறுவர்களுக்கும் இரண்டு ஆண்டு தண்டனை அளித்து, ஒருவரை திருநெல்வேலிச் சிறைக்கும், மற்றொருவரை செங்கற்பட்டு சிறுவர் சிறைக்கும் அனுப்பி வைத்தார்கள்.

மன்னார்குடி வட்டத் தோழர்கள் 68 பேருக்கும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதென்று முன்னர் வந்த செய்தியில் 20 பேருக்கு மட்டுந்தான் தண்டனை விதிக்கப்பட்டதென்றும், மீதமுள்ள 48 பேர் மீதுள்ள வழக்கும் 7.12.1957ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

விடுதலை - 2.12.1957

ஆம் கொளுத்தினேன் -தோழர்கள் வாக்கு மூலம் - 27.11.1957



ஆம் கொளுத்தினேன்

சென்னை ஜியார்ஜ் டவுன் 4வது மாஜிஸ்திரேட் திரு.எஸ்.வரதராசன் முன்னி லையில் அரசியல் சட்டம் கொளுத்திய வீரர்களின் வழக்கு விசாரணை, இன்று காலை 11.15 மணிக்கு ஆரம்பமாகியது. தேசிய பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்ட தோழர்கள் தோழியர்கள் அனைவரும் முக மலர்ச்சியுடன் வீற்றிருந்தனர்.

முதலில் தோழர் நடராஜன் அவர்களை கோர்ட்டார் அழைத்தனர்.
நீங்கள் பழைய ஜெயில் சி3 போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிராக அரசியல் சட்ட புத்தகத்தை கொளுத்தியது உண்மைதானா? என்று கேட்டதற்கு ஆம் கொளுத்தினேன் என்றார்.

போலீசார் மாஜிஸ்திரேட்டிடம் அவர் கொளுத்தின அரசியல் சட்ட நூலை காட்டினார்.

அடுத்து தோழர்கள் தாமோதரன் அபிபூடீன் ராமலிங்கம், வைத்தியநாதன், கன்னியப்பன், நெடுஞ்செழியன், கந்தசாமி ஆகியோர் மேலுள்ள வழக்குகள் தனித்தனியாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

தனித்தனியாக நீங்கள் அரசியல் சட்ட புத்தகத்தை கொளுத்த முயன்றீர்களா என்று கேட்டதற்கு கொளுத்தினோம் என்றனர்.

கடைசியாக தோழர் எம்.எஸ்.மணி தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள் செண்பக வல்லி அம்மாள் (கையில் சிறு பையனுடன்) புரட்சிமணி ஆகியோர் மீதுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீங்கள் சைனாபஜார் பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் முன்பாக கும்பலாக பெரியாரை விடுதலை செய் என முழக்கமிட்டுக் கொண்டும் புத்தகங்கள் ஆகியவைகளை எரிக்க முற்பட்டது உண்மையா? எனக் கேட்டனர் ஆமாம் உண்மை என அவர்கள் பதில் அளித்தனர்.

கடைசியாக போலீசார் மாஜிஸ்திரேட்டை நோக்கி தண்டணையளிப்பதில் சற்று தாராள மனப்பான்மை காட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கு இல்லை இது பெரும் குற்றம் என மாஜிஸ்திரேட் கூறினார்.

கடைசியாக மாஜிஸ்திரேட் கீழ் கண்டவாறு தண்டனை அளித்து தீர்ப்புக் கூறினார்.

தோழர் எம்.எஸ். மணி தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள், செண்பகவள்ளி (கையில் சிறுவன்) புரட்சிமணி ஆகியோரைப் பார்த்து அபராதம் விதித்தால் கட்டுவீர்களா எனக் கேட்டதற்கு கட்டமாட்டோம் என அவர்கள் பதில் கூறினார்கள்.

தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள், செண்பகவல்லி, புரட்சிமணி ஆகியோருக்கு 2 மாதம் கடுங்காவல் தண்டனையும் தோழர் நடராசன் அவர்களுக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் எம்.எஸ்.மணி, கே. கன்னியப்பன், தாமோதரன், நெடுஞ்செழியன், அபிபுடீன் ராமலிங்கம், கந்தசாமி, வைத்திய நாதன் ஆகியயோருக்கு 9 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தார்.

தோழர்கள் மேற்படி தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்று சிறைவாசம் புகுந்தனர்.
கோர்ட்டில் ஏராளமான கழகத் தோழர்கள் வந்திருந்து வழக்கை கவனித்தனர்.

விடுதலை, 27.11.1957

பெரியார் கைது - 26.11.1957


பெரியார் கைது


பெரியார் அவர்கள் சீரங்கம் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காகப் புறப்பட்டு ஆயத்தப்படுகையில் சூபரிண்டென்ட் திரு.எஸ்.சோலை அவர்கள் பெரியார் மாளிகைக்கு வந்து பெரியார் அவர்களை கிரிமினல் புரொசீஜர் கோடு 151ஆவது பிரிவுப்படி (குற்றங்களைத் தடை செய்வதற்கான சட்டப்பிரிவு) உத்தேசிக்கப்பட்ட நவம்பர் 26ந் தேதி அரசியல் சட்ட புத்தகத்தைக் கொளுத்துவதைத் தடுப்பதற்காகக் கைது செய்வதாகக் கூறி தமது காரில் அழைத்துச் சென்றார்.

பின்னர் அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் திரு. இராமச்சந்திரன் அவர்கள் முன்பாக பெரியார் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு 8 நாட்களுக்கு ரிமாண்டில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டார்.

பெரியார் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

பெரியார் அவர்கள் சீரங்கம் கூட்டத்தை முடித்துக் கொண்ட, எக்ஸ்பிரஸ் டிரெயின் மூலம் சென்னைக்கு வந்து நவ. 26ந் தேதி சென்னையில் எழும்பூர் பெரியார் திடல் (டிராம்ஷெட்) கூட்டத்தில் பேசி இறுதியில் அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்தத் திட்டமிட்டிருந்தார்கள். இதைத் தடுக்கவே முன்னேற்பாடாக போலீசார் கைது செய்தனர் என்று நம்பப்படுகிறது.
நேற்று மாலை பெரியார் அவர்களைக் கைது செய்ய போலீசார் பெரியார் மாளிகைக்கு வரும்போத அங்கு கழகத் தோழர்கள் யாரும் இல்லை. எல்லோரும் சீரங்கம் கூட்டத்திற்குச் சென்று விட்டார்கள். பெரியார் கைது செய்யப்படும்போது, திரு.ஆனைமலை நரசிம்மன் அவர்களும் திருமதி. மணியம்மையார் அவர்களும் மட்டும் உடன் இருந்தார்கள்.

விடுதலை, 26.11.1957

தந்தை பெரியார் சிறை புகு முன் விடுத்துள்ள அறிக்கை - 14-12-1957


தந்தை பெரியார் சிறை புகு முன் விடுத்துள்ள அறிக்கை! 



நான் இன்று தண்டனை அடையப்போவது உறுதி. ஏன் என்றால் இந்தியப் பிரதமர் என்னும் பதவியில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் எனது வழக்கு நடக்கிற ஊராகிய திருச்சிகே வந்து எனது வழக்கு நடைபெறும் நியாயத்தல நீதிபதியாகிய செஷன்ஸ் ஜட்ஜ் (மாவட்ட நீதிபதி) அவர்கள் முன்னிலையில் இருந்து "பார்ப்பனர்களைக் கொல்லு என்று சொல்லி இருக்கிறவர்களைக் கண்டிப்பாகத் தண்டிக்க வேண்டும். அது மாபெரும் தேசத்துரோகக் குற்றமாகப் பாவிக்க வேண்டும். இந்தக் கருத்துடையவன் ஜெயிலில் (சிறையில்) இருக்க வேண்டியவன்!" என்பதாகச் சொல்லி தூண்டிவிடும்படியான அளவுக்குப் பேசிவிட்டுப் போயிருக்கும்போது, எந்த நீதிபதிதான் என்னைத் தண்டிக்காமல் விட்டுவிட முடியும்? அதுபோலவே 'அரசமைப்புச் சட்டம் எரித்ததாகக் குற்றம் சாட்டி ஜெயிலில் (சிறையில்) பிடித்து அடைத்து வழக்குத் தொடரப்பட்டிருக்கும் 4000 குற்றவாளிகள் பற்றியும், அந்தக் குற்றம் தேசத் துரோகக் குற்றமாகும், அவர்கள் கடினமாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், ஜெயிலில் (சிறையில்) இருக்க வேண்டியவர்கள்!' என்பது ஆகவும் விசாரணை செய்துத் தீர்ப்புக் கூறவேண்டிய மாஜிஸ்திரேட் நீதிபதி முன்னிலையிலும் சொல்லிவிட்டுப் போயிருக்கும் போது எந்த ஜட்ஜ்தான், எந்த மாஜிஸ்திரேட்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டியாமல் கடினமாகத் தண்டியாமல் விடமுடியுமா?

உதாரணமாக, பண்டிதநேரு அவர்கள் திருச்சிக்கும், தமிழ்நாட்டில் மற்ற ஊர்களுக்கும் வந்து இப்படியாகப் பேசுவதற்கு முன் 3 மாதம், 6 மாதம், 9 மாதம் போட்ட வழக்குகள் இவர் வந்து இந்தப்படிப் பேசியபின் 9 மாதம், 1 வருடம், 11/2 (ஒண்றரை வருடம்) 2 வருடம் வீதம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் என்னை ஜட்ஜீ (நீதிபதி) தண்டிக்கப்போவது உறுதி.

நான் தண்டிக்கப்பட்டால் பொதுமக்களும் குறிப்பாக கழகத் தோழர்களும், "இந்தத் தண்டனையும் நம் கழக முயற்சிகளும் வெற்றிபெறும் நாள், பயனளிக்கும் காலம் நெருங்கிவிட்டது; பூக்க, காய்க்க ஆரம்பித்து விட்டது" என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு கழகப்பணி ஆற்ற ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்; பங்குகொள்ள வேண்டும்; ஆதரவளிக்க வேண்டும். எப்படியோ இது ஒரு இனப் போராட்டமாகப் பார்ப்பனர்கள் செய்துவிட்டார்கள்.

ஆதலால் கழகத் தோழர்களும், மற்றவர்களும் எவ்விதமான பலாத்காரமான, இம்சையான, கொல்வதான, நாசகரமான காரியம் எதையும் செய்ய முன்னடையாமல், மனதிலும் செய்ய நினைக்காமல் பிறர் சொல்லும்படியும் நடவாமல் சாந்தத்தோடும் சமாதானத்தோடும் கழகப்பணியில் ஈடுபட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

மற்றும் இன்று நம் தோழர்கள் 3000 பேருக்கு மேல் சிறைப்படுத்தப்பட்டுக் கடினமாகத் தண்டனைக் கொடுமை வழங்கப்பட்டிருப்பதற்கு முக்கியக்காரணம் நாம் செய்த எந்தவிதமான குற்றங்களுக்கு ஆகவும் அல்ல. அதாவது நாம் நம் உரிமைக்கு விரோதமாய், நீதிக்கு விரோதமாய், எவ்வித காரியமும் செய்துவிடவில்லை. யாருக்கும் எவ்விதமான கேடும் செய்துவிடவில்லை - ஏற்பட்டுவிடவுமில்லை.

இதை இன்றைய நம் மந்திரிமார்களே (தமிழக அமைச்சர்களே) சொல்லிவிட்டார்கள்; சொல்லியும் வருகிறார்கள். அப்படியிருந்தும் இந்த நாட்டுப் பார்ப்பனர்களின் கட்டுப்பாடான, பத்திரிகைகளின் கட்டுப்பாடான பொய் விஷமப் பிரசாரத்தின் காரணமாகவும், மத்திய அரசாங்க அதிபர்கள் ஆதிக்கக்காரர்களின் சர்வாதிகாரக்கட்டளைக்காவும் வேறு மார்க்கமில்லாமல் இணங்கி தீரவேண்டிய அரசியத்தின் காரணமாக ஏற்பட்டவைகளாகும்.

ஆதலால் நம் மக்கள் இந்த நடவடிக்கைகளுக்கும், சென்னை அரசாங்க மந்திரிகளுக்கும், பார்ப்பனரல்லாத போலீசு நீதி நிருவாக அதிகாரிகளுக்கும், எவ்வித பந்தமும் இல்லை என்பதாகக் கருதி அவர்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் கொள்ளாமல் இருக்க வேண்டும். பலாத்கார, இம்சையான, நாசமான, செயலிலும் ஈடுபடாமல், பார்ப்பனர்கள் தங்கள் கொடுமைச் செயலின் பயனை அனுபவிக்கும் வண்ணம் அதாவது தாங்கள் செய்தது தப்பு என்று உணரும் வண்ணம் அவர்களை நாம் வெறுப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அவர்கள் உறவை நீக்க வேண்டும். அவர்கள் சம்பந்தத்தை வெறுக்க வேண்டும். அவர்களுடன் எவ்வித உறவாடலும் சம்ந்தமும் கூடாது. கூடுமானவரை அவர்களுடன் பேசுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை நாம் வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது. பார்ப்பன வக்கீல்களைப் பகிஷ்கரிக்க (புறக்கணிக்க) வேண்டும். அவர்களிடம் எந்தவிதமான வியாபார சம்பந்தமும் வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் உண்டி நிலையங்களுக்கு அறவே நாம் செல்லக்கூடாது. அவர்களைக் கண்டிப்பாக நமது நன்மை தீமை ஆகிய காரியங்களுக்கு அழைக்கவோ சம்பந்தப்படுத்தவோ கூடாது. எல்லாவற்றையும் விட அவர்கள் பூசை செய்யும், தொண்டு செய்யும் எந்தக் கோவிலுக்கும் தொழுகை இடத்திற்கும் நாம் செல்லவே கூடாது. அவர்களுக்கு உணவுப் பண்டங்கள் விற்பதோ கொடுப்பதோ கூடாது. நம்முடைய வண்டி வாகனக்காரர்கள் அவர்களை (பார்ப்பனர்களை) ஏற்றக்கூடாது. இன்னும் உள்ள எவ்வித சம்பந்தங்களிலிருந்தும் நாம் விலகி நிற்க வேண்டும். எல்லாவற்றையும்விட பார்ப்பனப் பத்திரிகைகளைப் பகிஷ்காரம் (புறக்கணிப்புச்) செய்யும்படி பிரச்சாரம் செய்ய வேண்டும். மற்றும் இந்தப் பார்ப்பனர்களைப் போலவே வட நாட்டார்களையும் கருதவேண்டும். பார்ப்பனர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்பது மேலே எடுத்துக்காட்டிய அவ்வளவையும் வட நாட்டாருடனும் வைத்துக் கொள்ள வேண்டும். நடந்து கொள்ள வேண்டும். உடனடியான நிருமாணத்திட்டமாக வடநாட்டான் கடைகளை வியாபாரத்துறைகளில் பகிஷ்கரிக்க புறக்கணிக்க ஏற்பாடு செய்ய கழக செயற்குழுவைக் கூட்டி யோசித்து நடத்த வேண்டும். வட நாட்டான் கடைகளில் நம்மவர் வியாபாரம் செய்யக்கூடாது என்று நம்மவர்களை வடநாட்டான்கள் வியாபார தலங்களில் நின்று சமாதான முறையில் சாந்தமான தன்மையில் வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்விதக் காரியங்களை அரசாங்கத்தார் தடுத்தால் அதற்கு மாத்திரம் நாம் இணங்காமல் இருக்கலாம் என்பது எனது கருத்து.

தமிழ்நாடு முழுவதிலும் கன்னியாகுமரி மாவட்டம் முதல் எல்லா மாவட்டங்களிலும் கழகங்களை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு இலட்சம் உறுப்பினகர்களையாவது சேர்க்க வேண்டும்.

அங்கத்தினர்களைச் சேர்ப்பதற்கு நல்லபடி படித்த பெண்களை மாவட்டத்திற்கு இருவர் அல்லது மூவர் வீதம் தேவையான அளவுக்கு அலவன்ஸ் (செலவுப்படி) கொடுத்து உறுப்பினர் சேர்க்கும் ஃபாரங்கள் (படிவங்கள்) இலட்சக்கணக்கில் அச்சடித்துக் கொடுத்து, சேர்க்கச் செய்ய வேண்டும்.

அவர்கள் மூலமே இயக்கப் புத்தகங்களையும் இந்த அறிக்கை முதலியவற்றையும் குறைந்த விலைக்கு விற்கச் சொல்ல வேண்டும். இந்தப் பெண்களுக்குச் சிவப்புக்கரை போட்டக் கருப்புச் சேலை, சிவப்புரவிக்கை சப்ளை செய்ய வேண்டும். திருமதி நாகரசம்பட்டி விசாலாட்சி அம்மையார், ஆனமலை ராமகிருஷ்னம்மாள் முதலியவர்கள் இந்த நிருவாகத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டிக் கொள்ளச் செய்ய வேண்டும். மாவட்டத்திற்கு ஒருவர் அல்லது இருவர் ஆண் தோழரை இக்காரியத்திற்கு ஏற்படுத்தி அவர்களுக்கும் தேவையான அவலன்ஸ் (செலவுப்படி) கொடுத்து இந்த வேலைகளைச் செய்யச் செய்ய வேண்டும். முழுநேரத் தொண்டர்களாக வரும் ஆண்களையும், பெண்களையும் ஏற்று அவர்களுக்கு உணவு போக்குவரத்துச் செலவு அளித்து மேற்படி வேலை செய்யச் செய்யலாம். ஒவ்வொருவரின் வேலையையும், செய்த அளவையும் அறிந்து வேலைக்குத்தக்கபடி உற்சாகப்படுத்தி அலவன்ஸ் (செலவுப்படி) கொடுத்து வேலை செய்யச் செய்ய வேண்டும்.

மற்றக் கட்சிக்காரர்களைப்பற்றியோ, கோஷ்டியைப் பற்றியோ, காங்கிரசைப் பற்றியோ, கோஷ்டியைப் பற்றியோ, மந்திரிகளைப் பற்றியோ எவ்விதக் குற்றம் குறைகளும் நம் பேச்சாளர்கள் யாரும் பேசக்கூடாது. அவர்கள் நம்மீது சுமத்தும் விஷமப்பிரசாரக் குற்றங்களுக்குக் கண்ணியமான முறையில் சமாதானம் சொல்லலாம். நமது இயக்கத்தின் தலைவர்கள் பொறுப்பானவர்கள் என்கின்ற முறையில் உயர் திரு.தி.பொ.வேதாசலம் அவர்களும், திருமதி. மணியம்மை அவர்களும் மற்றும் பல நண்பர்களும் வெளியில் இருக்கிறார்கள். திரு.வேதாசலம் அவர்கட்கு உடல் நலம் சரியாக இல்லாததால் முழுப்பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது எனக்குக் கலக்கமாக இருக்கிறது. என்றாலும் தோழர்கள் அவர்களது கட்டளையை மதிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

திருமதி. மணியம்மையார் கூடுமான அளவு தக்க பேச்சாளர்களுடன் நாடு முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்வார்கள். அங்காங்குள்ள நமது கழகம் அமைத்தல், மெம்பர் (உறுப்பினர்) சேர்த்தல், புத்தகம் அறிக்கை விற்றல் ஆகிய காரியங்களைக் கவனிப்பார்கள்.

நான் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் தண்டிக்கபட்டு சிறைவாசம் செய்து திரும்பிவரும் வாய்ப்பு இருந்து வந்து சேருவேனேயானால் ஒரு லட்சம் அங்கத்தினர், மூவாயிரம் கழகங்கள், 1500 ரூபாய்க்குக் குறையாத அறிக்கைப் புத்தக விற்பனைக் கணக்கு காண்பேனேயானால் நானும் மற்றும் அன்பான தோழர்கள் 4000 பேரும் சிறை சென்றது நல்ல பயன் அளித்தது என்றே கொள்ளுவோம்.

பல நண்பர்கள் நமக்குக் கூடுமான அளவு பொருளுதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள். முக்கியமாக ஒரு நண்பர் பெரும் அளவுக்கு அதாவது 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வாக்களித்துள்ளார்.

இந்தச் சிறைப்பிடிப்பில் போக முடியாமல் வெளியில் இருப்பவர்களும், சிறைப்பிடித்து நாள் கணக்கில் வைத்திருந்து விடுதலையானவர்களும் மேற் குறித்த எனது வேண்டுகோள் பணிக்கு நல்ல ஆதரவு தரவும், எங்கள் தண்டனைக் கால அளவுக்கு முழு நேரத்தொண்டு செய்யவும், பலர் தாங்களாகவே முன் வந்திருக்கிறார்கள். தயாராய் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை நான் இதில் குறிப்பிடவில்லை யென்றாலும் அவர்களது முழு சம்மதத்துடன் பெயர்களை மணியம்மையார், திருவாளர்கள் வேதாசலனார், சுப்பிரமணியம், திருநாவுக்கரசு ஆகியவர்களுடன் யோசித்து வெளியிடுவார்கள். அவர்களைக் கழகத்தோழர்கள், அபிமானிகள் (பற்றாளர்கள்) ஆதரவாளர்கள் நல்லபடி பயன்படுத்திப் கொள்ள வேண்டுகிறேன்.

கடைசியாக பலாத்காரம், இம்சை, நாசவேலை, கலவரம், சாந்த சமாதான பங்கம், தனிப்பட்டவர்களிடம் நேரிடையான வாக்குவாதம், கலவரம் ஆகிய காரியங்கள் எதுவும் சிறிதும் தலைகாட்ட இடமில்லாமல் என்னுடைய தோழர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அப்படி ஏதாவது தாறுமாறாக நடந்து கொண்டால் அவர்கள் எனக்கு எதிரிகளும் கழகத்திற்குக் கேடு செய்பவர்களும் ஆவார்கள்.

என் பிறவி காரணமாக, என் இன இழிவுக் காரணமாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதும் என் இனமக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும், தாய்நாடான தமிழ் நாட்டை பனியா, பார்ப்பனர்களின் அடிமைத் தளையிலிருந்தும் சுரண்டலில் இருந்தும் மீட்டு சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான 'தனித்தமிழ் நாடு' பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்.

அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல் பொருள் ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன், சென்று வருகிறேன்.

வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!!



14-12-1957 பெரியார் ஈ.வெ.ரா. அறிக்கை : “விடுதலை”, 15.12.1957

26ஆம் தேதி கிளர்ச்சியில் நீதிமன்றத்தில்ல் கூற வேண்டியது !


26ஆம் தேதி கிளர்ச்சியில் நீதிமன்றத்தில்ல் கூற வேண்டியது !

நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப் படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.
ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக்-கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து-கொள்ள விரும்பவில்லை. நான் எதிர்-வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்-கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
- பெரியார் அறிக்கை  (விடுதலை 23-11-1957)

Thursday 16 November 2017

சட்டத்தைக் கொளுத்துங்கள்! - 16.11.1957

சட்டத்தைக் கொளுத்துங்கள்!


சட்டத்தைக் கொளுத்துங்கள்!

சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள்!!

சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன்மூலம், அரசாங்கத்தினர் ‘சாதியைக் காப்பாற்றித்தான் தீர வேண்டும்’ என நமக்குச் சவால்விட்டு இருக்கின்றனர்.

இந்தச் சவாலுக்கு, நீங்கள் சட்டம் கொளுத்தாவிட்டால் மனிதர்கள்தானா?

சட்டம் கொளுத்திச் சாம்பலைச் சட்டம் செய்த மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள்! சட்டம் கொளுத்தின மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன்மூலம் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளட்டும்!

 ‘விடுதலை’ 16.11.1957

நான் எதற்காகச் சிறை செல்கிறேன்? - 09-11-1957


நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?

சூதாடிய குற்றத்துக்காகவா?
கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்கா கவா?
கொள்ளைக் குற்றத்துக்காகவா?
கொலைக் குற்றத்துக்காகவா?
மோசடிக் குற்றத்துக்காகவா?
பலவந்தப் புணர்ச்சிக் குற்றத்துக்காகவா?
பதுக்கல் – கலப்படம் குற்றத்துக்காகவா?
சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா?
என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்?

சாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்!
சிறை சென்றேன்! சர்க்கார் கண் விழிக்கவில்ல. ஆகவே, சாதிக்கு ஆதாரமான சட்டத்தை கிழித்துத் தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் (அரசின்) மனதை மாற்றலாமா, என்று கருதி அதைச் செய்தேன்.

இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா ? எந்தப்பொருளுக்கேனும் நாசமுண்டா?

இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால், இதை நான் மகிழ்ச் சியுடன் வரவேற்க வேண் டாமா?
‘சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை வாசஞ்செய்தான்’ என்பதைவிடப் பெரும்பேறு, முக்கியக் கடமை, வேறென்ன இருக்கிறது?

இந்த விதமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

–  விடுதலை 09-11-1957