Sunday 26 November 2017

ஆம் கொளுத்தினேன் -தோழர்கள் வாக்கு மூலம் - 27.11.1957



ஆம் கொளுத்தினேன்

சென்னை ஜியார்ஜ் டவுன் 4வது மாஜிஸ்திரேட் திரு.எஸ்.வரதராசன் முன்னி லையில் அரசியல் சட்டம் கொளுத்திய வீரர்களின் வழக்கு விசாரணை, இன்று காலை 11.15 மணிக்கு ஆரம்பமாகியது. தேசிய பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்ட தோழர்கள் தோழியர்கள் அனைவரும் முக மலர்ச்சியுடன் வீற்றிருந்தனர்.

முதலில் தோழர் நடராஜன் அவர்களை கோர்ட்டார் அழைத்தனர்.
நீங்கள் பழைய ஜெயில் சி3 போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிராக அரசியல் சட்ட புத்தகத்தை கொளுத்தியது உண்மைதானா? என்று கேட்டதற்கு ஆம் கொளுத்தினேன் என்றார்.

போலீசார் மாஜிஸ்திரேட்டிடம் அவர் கொளுத்தின அரசியல் சட்ட நூலை காட்டினார்.

அடுத்து தோழர்கள் தாமோதரன் அபிபூடீன் ராமலிங்கம், வைத்தியநாதன், கன்னியப்பன், நெடுஞ்செழியன், கந்தசாமி ஆகியோர் மேலுள்ள வழக்குகள் தனித்தனியாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

தனித்தனியாக நீங்கள் அரசியல் சட்ட புத்தகத்தை கொளுத்த முயன்றீர்களா என்று கேட்டதற்கு கொளுத்தினோம் என்றனர்.

கடைசியாக தோழர் எம்.எஸ்.மணி தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள் செண்பக வல்லி அம்மாள் (கையில் சிறு பையனுடன்) புரட்சிமணி ஆகியோர் மீதுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீங்கள் சைனாபஜார் பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் முன்பாக கும்பலாக பெரியாரை விடுதலை செய் என முழக்கமிட்டுக் கொண்டும் புத்தகங்கள் ஆகியவைகளை எரிக்க முற்பட்டது உண்மையா? எனக் கேட்டனர் ஆமாம் உண்மை என அவர்கள் பதில் அளித்தனர்.

கடைசியாக போலீசார் மாஜிஸ்திரேட்டை நோக்கி தண்டணையளிப்பதில் சற்று தாராள மனப்பான்மை காட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கு இல்லை இது பெரும் குற்றம் என மாஜிஸ்திரேட் கூறினார்.

கடைசியாக மாஜிஸ்திரேட் கீழ் கண்டவாறு தண்டனை அளித்து தீர்ப்புக் கூறினார்.

தோழர் எம்.எஸ். மணி தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள், செண்பகவள்ளி (கையில் சிறுவன்) புரட்சிமணி ஆகியோரைப் பார்த்து அபராதம் விதித்தால் கட்டுவீர்களா எனக் கேட்டதற்கு கட்டமாட்டோம் என அவர்கள் பதில் கூறினார்கள்.

தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள், செண்பகவல்லி, புரட்சிமணி ஆகியோருக்கு 2 மாதம் கடுங்காவல் தண்டனையும் தோழர் நடராசன் அவர்களுக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் எம்.எஸ்.மணி, கே. கன்னியப்பன், தாமோதரன், நெடுஞ்செழியன், அபிபுடீன் ராமலிங்கம், கந்தசாமி, வைத்திய நாதன் ஆகியயோருக்கு 9 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தார்.

தோழர்கள் மேற்படி தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்று சிறைவாசம் புகுந்தனர்.
கோர்ட்டில் ஏராளமான கழகத் தோழர்கள் வந்திருந்து வழக்கை கவனித்தனர்.

விடுதலை, 27.11.1957

No comments:

Post a Comment