Sunday 30 April 2017

மே தினம்

மே தினம்

தோழர்களே!

மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.

மே தினம் என்பது இன்று உலகமெங் கும் எல்லா தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும், ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படு கின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவது போல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படு வது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.

அதுபோலவேதான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண் டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை.

ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிட வில்லை.

ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும், முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.

இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொறுத்ததாகும்.

இங்கிலாந்து, பிரெஞ்சு முதலிய தேசங் களில் கொண்டாடுவதின் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப் படுவதாகும்.

எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாதமான வித்தி யாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளா தாரத்திலும் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலை மைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.

ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத் தில் ஒவ்வொரு விதமாகவே இருக் கிறார்கள். மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் பொறுத்து இருக்கிறார்கள்.

அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியென்றும், வகுப்புப் போர் என்றும் சொல்லப்படு கின்றது.

ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய் கொள் ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும் பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கிய மானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்றக் கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.

ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.

நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்வதன் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும். அய்ந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதி யான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண் டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.

இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.

இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானா லும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.

பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99 பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப்படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல் லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் - அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல் லாமல், ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு, அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப் பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக் காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப் பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழி லாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா? என்று பாருங்கள்.

மற்றும் ஜாதி காரணமாகவே, தொழி லாளிகளாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும் படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக் கிறார்களா இல்லையா? என்றும் பாருங்கள்.

இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதான மாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.

இந்தியாவில் வகுப்புப் போர் என்ப தற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும், ஏழைகளாகவும், மற்றவர் களுக்கே உழைத்துப் போடுகின்றவர் களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும். இன்று முதலாளி, தொழிலாளி என்ப தற்கு நாம் என்ன வியாக்கியானம் செய் கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும், பாடுபடுகின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லு கின்றோம்.

ஆகவே, ஜாதியையும், அதற்கு ஆதார மான மதத் தன்மையையும்  அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி,
தொழிலாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.

இந்தியாவில் ஏழை மக்களுக்காக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரா னாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும், மதத் தன் மையையும் ஒழிக்க சம்மதிக்க வில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர் களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.

ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நித்திய கூலிக்கோ, மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசிவிடுவதனாலேயே அல்லது அத்தொழிலாளிகள் விஷயமாய் பேசி விடுவதனாலேயே அல்லது அவர் களுக்குத் தலைமை வகிக்கும் பெரு மையைச் சம்பாதித்துக் கொண்ட தினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடுபட்டவர்களாக கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல், தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களா கவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.

இந்து மக்களின் மதமும், அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி, முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத் தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக்கொண்டாட்டத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லு கிறேன். இந்த முதலாளி, தொழிலாளி நிலை மைக்கு வெள்ளையர், கறுப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், தொழி லாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களாகும். அந்த முறை மாற்றப் படக் கூடாது என்பதை மதமாகக் கொண் டிருக்கிறவர்களே கறுப்பர்களாகும்.

ஆகையால், இதில் வெள்ளையர், கறுப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.

இந்திய தேசியம் என்பதுகூட ஜாதி யையும், மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருக்கிறதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழி லாளி, முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி, முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். இன்று நம் நாட்டிலுள்ள பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி, முதலாளி கிளர்ச் சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனா கவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி, முதலாளி வகுக் கப்பட்டிருப்பது ஒரு அளவு மாறி வரு கின்றது. இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும், தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.

இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர் கள், பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந்தனைகளைப் பார்த் தால் வகுப்புத் துவேஷம், வகுப்புக் கொடுமை என்பவை யாரால் செய்யப் பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.

நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி, தொழிலாளி கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டி யதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாக வும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப் பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.

நிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண் டும். ஏனெனில், நமது பண்டிகைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப் படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடு வது இந்நாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவையோ அல்ல.

பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவை தான் சிறிது ஓய்வும், சந்தோஷமும் கொடுக்கின்றன.

தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக் கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவ தில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படு வதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக் கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கை விடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.

ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.

(காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில் தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை)
குடிஅரசு - சொற்பொழிவு - 12.05.1935


Friday 28 April 2017

நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி– 15.05.1938

நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி


நம்நாட்டுப் பார்ப்பனீயமானது “தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து இப்போது மனிதனைக் கடிக்க வந்துவிட்டது” என்பது போல் உத்தியோக வேட்டை ஆடி, பிறகு நம் பிரமுகர்களையும் நமது ஸ்தாபனங்களையும் ஒழிக்க முயற்சியெடுத்து வெற்றி பெற்று பதவியும் ஆதிக்கமும் பெற்றவுடன் இனி என்றென்றும் தமிழ் மக்கள் சமூகமே தலையெடுக்க வொண்ணாதபடி செய்வதற்கு பல வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த முறைகளை திரை மறைவில் கையாடி வந்து இன்று வெளிப்படையாகவே வெளிவந்து ஹிந்தி என்ற கத்தியுடனும், வார்தா கல்வித்திட்டம் என்ற சூலாயுதத்துடனும் நின்றுகொண்டு தமிழர்களை வெட்டியும் குத்தியும் கொன்று புதைக்க முனைந்து விட்டது.

பார்ப்பனீயப் போராட்டம்:

தமிழ் மக்களில் எவருடைய ஆக்ஷேபணையையும் எப்படிப் பட்டவர்களுடைய கூக்குரலையும், யாருடைய அழுகையையும் லòயம் செய்யாமல் ஒரே அடியாய் “சம்ஹாரம் செய்து விட்டுத்தான் அமருவேன்” என்ற ஆணவத்துடன் அது (பார்ப்பனீயம்) தலைவிரித்தாடுகிறது. தமிழனுக்கு இன்று கதி இல்லை, நாதி இல்லை, நடுத் தெருவில் பெண்டு பிள்ளைகளுடன் இழுத்துப் போட்டு உதை உதை என்று உதைத்தாலும், அடி அடியென்று அடித்தாலும், பெண்டு பிள்ளைகளை நிர்வாணத்துடன் புரட்டிப் புரட்டி மானபங்கப்படுத்தினாலும் ஏன் என்று கேட்க ஆளில்லாமல் போய்விட்டது என்று கருதும்படியான சந்தர்ப்பமும் ஏற்பட்டு விட்டது.

தமிழ்ப் பிரதிநிதிகள் துரோகம்

தமிழன் பிரதிநிதி, தமிழ் நாட்டின் பிரதிநிதி என்று வேஷம் போட்டு வெளிவந்து தமிழ் மக்களை ஏமாற்றி காசு, பணம், பதவி, பட்டம் பெற்று பெரிய மனிதனான மக்களில் பெரும்பாலோர் இன்று தம் சமூகத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், உயிர் வாழவுமான இழி நிலைக்கு வந்து விட்டார்கள். தாம் தமிழர் தமிழ்மக்கள் சந்ததி என்கின்ற சாக்கை சொல்லி உத்தியோகம் பெற்று பணம் தேடி அதனால் தங்களது பிள்ளைக்கும் குட்டிகளுக்கும் உத்தியோகமும், மேன்மையும் தேடிக்கொண்ட தமிழ் மக்கள் இன்று தமிழ் மக்களுக்கு வந்துள்ள இம் மாபெரும் நெருக்கடியைப் பார்த்துக் கொண்டு அறியாதவர் போல் மாய்மாலம் செய்து எதிரிகளின் கால் பெருவிரலை சூப்பிக்கொண்டு தனது வாழ்வில் சுயநல வேலையில் ஒரு இம்மியளவும் குறைவராமல் பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எதிரிகளுக்கு உதவி:

அரசியல் மன்றங்களுக்கும் மற்றும் பிரதிநிதி ஸ்தாபனங்களுக்கும் தமிழன் பேரால் தமிழ் மக்கள் பிரதிநிதியாய் ஆவதற்குத் தன்னை உண்மைத் தமிழ் மகன் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களின் வாக்குகளைப் பெற்று பிரதிநிதி ஸ்தானம் அடைந்த தமிழ் மக்கள் இன்று தாம் தமிழ் மக்கள் என்பதை மறந்ததோடு மாத்திரமல்லாமல் தமிழர்களின் எதிரிகளிடம் சரண் புகுந்து அவ்வெதிரிகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் கொடிய வஞ்சகங்களை அலட்சியமாய்க் கருதி அவர்களுக்கு உதவி செய்து தன் சமூகத்தையே ஒழிக்க கத்தி தீட்டிக் கொடுப்பதான இணையில்லா இழிதொழில் செய்து வயிறு வளர்த்து வாழ வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள் என்றால், தமிழ் மக்கள் இது சமயம் சக்தியற்று நாதி அற்றுக் கிடக்கிறார்கள் என்பதற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும் என்று கேட்கின்றோம்.

மாஜி மந்திரிகள் என்ன செய்கிறார்கள்?

வெளிப்படையாகவே பேச ஆசைப்படுகிறோம். இன்று தமிழ் மக்களுக்கு இந்தியாவிலும், வார்தா கல்வித்திட்டத்தாலும் ஆபத்து இல்லை, கேடில்லை, தமிழன் மனிதத் தன்மையோடு வாழுவதற்கு தடையில்லை என்று எந்த தமிழ் மாஜி மந்திரியாவது கருதுகிறாரா? இல்லையே. எல்லா மாஜி மந்திரிகளும் ஒரு முகமாக இந்தியும் வார்தா கல்வித் திட்டமும் தமிழனுக்கு கேடு என்றும் தமிழன் தன்மானத்துக்கு தடையென்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டாய் விட்டது. இந்நிலையில் அந்த மாஜி மந்திரிகள் அக் கொடுமையிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற என்ன முயற்சி செய்தார்கள்? செய்கிறார்கள்? செய்ய முன் வருகிறார்கள்? என்று கேட்கின்றோம்.

தமிழ் உத்தியோகஸ்தர்கள் செய்வதென்ன?

மற்றொரு சமயம் தனித்தனியாக இவர்களது சதிகளையும் வஞ்சகங்களையும் சுயநல வேட்டைகளையும் எடுத்துக் காட்டுவோம். இனி அடுத்தாப்போல் தமிழன் என்ற காரணத்தால் உத்தியோகம் பெற்று மேற்பதவி அடைந்து பெரிய பட்டம் பெற்ற தமிழனும் இன்று பெரும் பதவியில் இருக்கும் தமிழனும் இந்நெருக்கடிக்கு என்ன உதவி செய்கிறார் என்று ஒவ்வொரு பெரிய (தமிழ்) உத்தியோகஸ்தனையும் பற்றி நினைத்துப் பாருங்கள். அதைப்பற்றியும் பின்னால் எழுதுவோம்.

இன்று இரு சட்டசபையிலும் தமிழனுக்கு பிரதிநிதியாய் பார்ப்பானுக்கு காங்கரசுக்கு எதிர்க்கட்சியில் இருப்பதாய் சொல்லிக் கொள்ளும் தமிழர்களின் யோக்கியதைதான் என்ன? அதையும் பற்றி பின்னால் குறிப்பிடுவோம்.

காங்கரஸ் தமிழர்கள் நிலை என்ன?

“மற்றும் தேசத்துக்கு விடுதலை சம்பாதிக்கும் கட்சி காங்கரஸ்தான்” என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ் மக்கள் ஸ்தாபனத்தையே சீர் குலையச் செய்ய சம்மதித்து பார்ப்பனர்களை தஞ்சமடைந்து வயிறுவளர்க்கும் தமிழ் மக்கள் தானாகட்டும் தமிழனுக்கு ஏற்பட்ட இந்த மிகமிக நெருக்கடியான சமயத்தில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். தோழர் டி.ஏ. ராமலிங்க செட்டியார் முதற்கொண்டு ஒவ்வொருவருடைய யோக்கியதையை முதலில் எடுத்துக்கொள்ளுவோம். இவர்கள் தான் என்ன செய்கிறார்கள்? தோழர் செட்டியார் தன்னை தமிழ் மகன் என்றும் தான் தமிழபிமானி என்றும் சொல்லிக்கொண்டு எவ்வளவு பெருமை பெற்றார் என்றெல்லாம் பார்ப்போமானால் தமிழனின் நிர்க்கதி விளங்கவில்லையா என்று கேட்கின்றோம். ஏன் இதை குறிப்பிடுகிறோம். ஏன் நமது பலவீனத்தையும் குறைகளையும் குற்றங்களையும் எடுத்துக்காட்டுகிறோம் என்று சிலர் கருதக்கூடும். ஏனெனில் நம் காலிலேயே நாம் நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை ஞாபகமூட்டவும் பாமர மக்களும் நம் வீர வாலிபர்களும், நேரடியில் அப்பெரியார்கள், பிரமுகர்கள் என்பவர்களை எதிர்பாராமல் இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கவுமே இதை எழுதுகிறோம்.

தமிழன் செய்ய வேண்டியதென்ன?

தமிழன் என்கின்ற உண்மை உணர்ச்சி யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் ஒவ்வொருவரும் இந்நெருக்கடி தீரத் தங்களால் என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றி தீவிர யோசனை செய்ய வேண்டும். ஹிந்தியை ஒழிப்பதற்கு மாத்திரமல்ல நாம் செய்யப் போகும் போராட்டம் என்பதையும் தாங்கள் யோசனை செய்வதற்கு முன் மனதிலிருத்திக் கொள்ள வேண்டும். பார்ப்பனீயக் கொடுமையில் இருந்து நாமும், நம் பின் சந்ததிகளும் தப்புவதற்கு ஆக செய்ய வேண்டிய அரிய முயற்சிகளைப் பற்றி யோசிக்கிறோம் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கருதி சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆசைப்படுகிறோம். அப்படி சிந்திக்கும்போது ஒவ்வொரு தமிழ் மகனும் தனது தன்மானத்தையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

பார்ப்பனர் தமிழரை அடிமையாக்குவதெப்படி?

அதாவது 100-க்கு 3 பேராயுள்ள ஒரு சமூகம் அதாவது பார்ப்பன சமூகமோ, ஆரிய சமூகமோ, வைதீக சமூகமோ அல்லது பிச்சையெடுத்து வயிறு வளர்க்கும் புரோகித சமூகமோ எதுவானாலும் சரி அந்தச் சிறு சமூகம் இவ்வளவு பெரிய மாபெரும் சமூகமாகிய பழம் பெரும் குடிகளாகிய தமிழ் மக்களை சமுதாயத்தில், பொருளாதாரத்தில் ஆத்மார்த்தம் என்பதில் இவ்வளவு கீழாக இழிவாக தாழ்மையாக அழுத்தி வைத்து ஆதிக்கம் செலுத்த முடிகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும். இக்கூட்டம் 100க்கு மூன்றே எண்ணிக்கை கொண்டதாக இருந்தாலும் இந்த 100க்கு மூன்றும் கெட்டியாகவும் – கட்டுப்பாடாகவும் – தன் சமூக நலனுக்கு உயிரைத் தவிர வேறு எதையும் தியாகம் செய்து பாடுபட வேண்டும் என்கின்ற ஒரே கொள்கையை உண்மையாய் கடைப்பிடித்து கட்டுப்பாடாய் உழைக்கும் சமூகமாய் இருந்து வருவதினாலேயே 100க்கு 97 கொண்ட சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தமிழன் நிலைமை:

தமிழன் எண்ணிக்கையில் 100க்கு தொண்ணூறாய் இருந்தாலும் என்ன பயன்? அவன் பொருளாதாரத் துறையில் சர்வத்தையும் பார்ப்பானுக்கு அழுது விட்டு “மோக்ஷத்தில் இடம்” தேடிக்கொள்ள கற்பிக்கப்பட்டவனாகி விட்டான். சமுதாயத் துறையில் பார்ப்பானுக்கு தொண்டு செய்து தன்னையே பார்ப்பானுக்கு அற்பணமாக்கி பார்ப்பான் கால் கழுவிய நீரை தீர்த்தமாக உட்கொண்டு அதன் மூலம் தான் தினந்தோறும் செய்யும் “பாவத்துக்கு” மன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டியவனாக ஆகிவிட்டான்.

பார்ப்பனர் உயர்வுக்குக் காரணம்

அரசியல் துறையிலும் பார்ப்பானையே தலைவனாக்கி பார்ப்பானுக்கு ஊழியனாக இருந்து பார்ப்பானை தலைமை மந்திரியாக்கி அவன் மூலம் ஆட்சி “விடுதலை” பெற அடிமைத்தொழில் செய்ய வேண்டியவனாக ஆகிவிட்டான். இப்படிப்பட்ட இந்த கேவல நிலையிலும் ஒரு தமிழனுக்கு தோன்றும் எண்ணம் மற்றொரு தமிழனுக்கு பிடிக்காது, ஒரு தமிழன் மேல் நிலையில் இருப்பது மற்றொரு தமிழனுக்கு சகிக்காது. எந்த நிலைமையிலும் ஒருவனுக்கொருவன் ஏறுமாறு நடத்தையை கொண்டவனாக இருக்கிறான். ஆனால் பார்ப்பானோ, ஆரியனோ, புரோகிதனோ அப்படியில்லை. தென்கோடி கன்னியாகுமரியில் உள்ள “ஒரு ஒழுக்கங் கெட்ட” பார்ப்பானுக்கு தன் சமூக பாதுகாப்பு விஷயமாய் மற்ற சமூக மக்களை அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செலுத்தும் விஷயமாய் “ஒரு அபிப்பிராயம் தோன்றுமேயானால் அதே சமயத்தில் வடகோடி இமயமலை உச்சியில் இருக்கும் ஒரு “தவசிரேஷ்ட” பார்ப்பானுக்கு அதே அபிப்பிராயம் தோன்றி செயலில் இறங்கி விடுவான். இந்த ஒரு குணமே பார்ப்பனர் எண்ணிக்கையில் உழைப்பில் முறையே எவ்வளவு சிறிய தொகையாகவும் சோம்பேறிகளாகவும் இருந்தாலும் அவர்கள் பாடுபடாமல் மேன்மையான நிலையில் இருந்து கொண்டு மற்ற சமூகங்களின் மீது ஆதிக்கம் செலுத்தவும் மற்ற சமூகங்களை என்றென்றும் தலையெடுக்க வொட்டாமல் செய்து அழுத்தி வைக்கவும் முடிகின்றது.

ஹிந்திப்போர் நோக்கம்:

இதிலிருந்து தமிழ் மக்கள் தப்பவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டே இந்த ஹிந்திப் போரை நடத்த வேண்டுமேயொழிய கேவலம் ஹிந்தி ஒழிந்தால் மாத்திரம் போதும் என்கின்ற அற்ப ஆசையால் அல்ல என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் உணரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

ஹிந்திப் போரானது பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க தமிழனின் தன்மானத்தைக் காக்க கிடைத்த ஒரு ஒப்பற்ற ஆயுதம் என்பதாகக் கருதி ஒவ்வொரு தமிழனும் அதில் பங்கு கொண்டு அந்த ஆயுதத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

1922-ல் ஆச்சாரியார்

இன்று இந்நாட்டு அரசியல் தலைவராகவும், அரசாங்க முதல் மந்திரியாகவும், சமுதாயத்தில் மேல் ஜாதிக்காரர் என்பவராகவும் இருக்கிற நமது தோழர் கனம் ஆச்சாரியார் அவர்கள் ஒரு காலத்தில் அதாவது 1922ம் வருஷத்தில் திருப்பூரிலும், தர்மபுரியிலும் சொன்ன சில அகம்பாவமான வார்த்தைகளை இன்று தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறோம். (இவை முன்னமும் இரண்டொரு சமயம் எடுத்துக் காட்டிய விஷயங்களேயாகும்.)

அதாவது 1922-ல் திருப்பூர் தமிழ்நாடு மாகாண மகாநாட்டில் கோவில் பிரவேச சம்மந்தமாக வந்த தீர்மான விவாத விஷயமாகவும் தோழர் வரதராஜúலு நாயுடு அவர்கள் தலைமையில் நடத்த தர்மபுரி தாலூகா அரசியல் மகாநாட்டில் கோவில் பிரவேச விஷயமாய் வந்த தீர்மான சம்மந்தமாகவும் நடந்த வாதப்பிரதி வாதங்களில் பார்ப்பனீயத்தைத் தாக்கிப் பேசிய விஷயங்களைப் பற்றி அங்கேயே பின்னால் சாவகாசமாக நடந்த சம்பாஷணைகளின் போது ஆச்சாரியார் அவர்கள் சொன்ன வார்த்தைகளை ஞாபகமிருக்கும்வரை அப்படியே எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம். அதாவது “பார்ப்பன ஆதிக்கம் நீங்கள் கருதுகிறபடி அவ்வளவு சுலபத்தில் ஒழிக்கக்கூடியதல்ல. அதை ஒழிக்க சரித்திர காலங்களில் புத்தரால் ஒரு கை பார்த்தாய்விட்டது, புராண காலங்களில் மகாவலிமை பெற்ற பல அரசர்களாலும் ஒரு கை பார்த்தாய்விட்டது. இவ்வளவையும் சமாளித்துக்கொண்டு நீங்கள் ஒழிக்க கருதும் பார்ப்பன ஆதிக்கம் இன்று உயிர் வாழ்கின்றது. அப்படிப்பட்டதை நீங்கள் ஒழிக்க வேண்டுமென்று கருதினால் அது ஆகக்கூடிய காரியமா” என சொன்னதோடு “அப்படி பார்ப்பனராதிக்கத்தை அழிக்கும் வேலையில் ஈடுபடுகிறவர்கள் தங்களைத்தான் ஒழித்துக் கொள்வார்கள்” என்றும் சொன்னார். இவ்வளவு வலிமையுடன் அவர் பேசிய காரணம் பார்ப்பன சூழ்ச்சிக்கு இருக்கும் சக்தியையும் (தமிழ் மக்களுக்குள் இருக்கும் தன்மானமற்ற தன்மையையும்) தமிழ் மக்களுக்கு மதத்தின் பேரால் பார்ப்பனீயம் ஊட்டி இருக்கும் அடிமைத் தன்மையையும் நன்றாய் உணர்ந்து பார்த்துக் கூறியதேயாகும்.

தமிழர் விடுதலை பெற வேண்டுமானால்?

இந்த ஹிந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால் அவன் சரீரத்தில் ஓடும் பார்ப்பன மத உணர்ச்சி ரத்தம் அவ்வளவும் வெளியாக்கப்பட்டு புதிய சுதந்திர அறிவு ரத்தம் பாய்ச்சப்பட்டு ஆகவேண்டும்.

ஏனெனில் பார்ப்பனீயம் இன்று ஹிந்தியை தமிழ் மக்களுக்குள் கட்டாயமாக புகுத்த வேண்டும் என்கின்ற மூர்க்கப் பிடிவாதத்தைக் கொண்டிருப்பதின் உண்மைக் கருத்து என்ன வென்றால் அரசியலுக்கு அல்ல, பொருளியலுக்காக வல்ல அல்லது பார்ப்பனர்களுக்கு வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிப்பதற்கு என்பதற்காக அல்ல இவைகளுக்காக என்று சொல்லுவதும் நம்மை கருதும்படி செய்வதும் நம்மை ஏமாறச் செய்வதற்காகவே யாகும்.

ஹிந்தி புரட்டின் அந்தரங்க நோக்கம்

மற்றபடி உண்மையான காரணம் என்னவென்றால் இன்று தமிழ் மக்கள் பெரும்பாலோருக்குள் ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்து இருக்கும் பார்ப்பனீய மத உணர்ச்சியை தமிழ் மக்களுக்குள் மறுபடியும் சரியானபடி புகுத்தி அதை கெட்டிப் படுத்தி பார்ப்பனீயத்துக்கு தமிழ் மக்களை புராண காலம் போல நிரந்தரமாய் அடிமையாக்குவதற்காகவேயாகும். அதனால்தான் சோழவந்தான் ஹிந்தி எதிர்ப்பு மகாநாட்டில் அதன் தலைவர் “ஹிந்தியை கட்டாய பாடமாக ஆக்கப்படுவதை ஒழித்தால் போதாது. ஹிந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்பதற்கு உள்ள உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

அரிய சந்தர்ப்பம்

ஆதலால் தமிழ்மக்களுக்கு ஹிந்திப் போர் ஒரு கிடைத்தற்கரிய பாக்கியம் என்றே ஒவ்வொரு தமிழ் மகனும் கருத வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இது போன்ற ஒரு பயனளிக்கத்தக்க போராட்டம் இனி சுலபத்தில் ஏற்படும் என்று எந்த தமிழ் மகனும் லேசில் கருதமுடியாது என்பதோடு இது அவ்வளவு சுலபமானதும் அவ்வளவு பெரிய பயனை அளிக்கக்கூடியதுமான ஒரு அரும்பெரும் போராட்டமாகும். அதிக காலம் நீடிக்காது அதிக துன்பமும் தொல்லையும் இருக்காது. அதிக பண நட்டமும் கூட இருக்காது என்று சொல்லத் தகுந்த ஒரு போர் என்றே சொல்லுவோம். ஆகவே இப்படிப்பட்ட ஒரு அருமையான சந்தர்ப்பத்தை எந்த தமிழ் மகனும் இழந்துவிடாமல் ஆங்காங்கு உள்ள தமிழ் மக்கள் ஆங்காங்கு அதாவது எந்த எந்த ஊர்களில் உள்ள பள்ளிக் கூடங்களில் ஹிந்தி புகுத்தப்படுகிறதோ ஆங்காங்குள்ள தமிழ் மக்கள் இப்போதே ஹிந்தி எதிர்ப்பு கமிட்டி போட்டு அங்கத்தினர்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு ஹிந்தி எதிர்ப்புத் தலைமைக் கமிட்டியாரிடமிருந்து என்ன கட்டளை வருகிறதோ என்று எதிர்பார்த்துக் கொண்டு சகல தியாகத்துக்கும் தயாராய் இருக்க வேண்டுகிறோம்.

சென்னை எதிர்ப்பு
சென்னையில் ஒரு தோழர் உண்ணாவிரதம் என்னும் பட்டினி நோன்பு இருக்கிறார். மற்றும் பல தோழர்கள் கிளர்ச்சிக் கூட்டம் முதலியன போட்டு பேசி கிளர்ச்சி ஊர்வலம் முதலியன செய்கிறார்கள் – கூடிய சீக்கிரத்தில் இவைகள் இன்னும் ஒவ்வொரு துறையிலும் பெருகலாம். நடைமுறைக்காகவும் கிளர்ச்சிக்காகவும் என்று பல தக்க வழிகளை கமிட்டியார் ஆராய்ந்தெடுப்பார்கள். அனேகமாக சென்னை காரியங்கள் தோழர் சி.டி. நாயகம் அவர்களது ஆலோசனையிலும் மேற்பார்வையிலும் நடைபெறக் கூடும்.

இம்மாதம் முடிவுக்குள் ஹிந்தி எதிர்ப்பு கமிட்டி கூட்ட தோழர் விசுவநாதம் அவர்கள் நாள் குறிப்பார். அதற்குள் இன்னும் அனேக தொண்டர்கள் பதிவு செய்து கொள்ள ஆசைப்படுகிறோம். பெண்மணிகளும் தாராளமாய் வேண்டும்.

பண உதவி

பண விஷயத்தில் ஒவ்வொரு தமிழ் மகனும் தாராள நோக்கம் கொண்டு பணத்தை காரியதரிசி விசுவநாதம் அவர்களுக்கு அனுப்பி கொடுக்க வேண்டும். பொதுவாக காரியங்கள் ஒரு கை முறையாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது ஆசை. தனித்தனியாக பணம் வசூலிப்பது தனித்தனியாக அறிக்கைகள் விடுவது தனிதனியாக காரியங்கள் துவக்கப்படுவது முதலிய காரியங்கள் அவ்வளவு வலுவைக் கொடுக்கும் என்று கருத முடியவில்லை.

எதிர்ப்பு முறை:

ஒவ்வொரு ஊரிலும் ஹிந்தி எதிர்ப்பு சங்கம் இருக்க வேண்டும். அவை தலைமை சங்கத்துடன் சம்மந்தம் வைத்துக் கொள்ள வேண்டும். தீவிர செயல்கள் ஆற்றுவதற்கு துணிவும் சக்தியும் உள்ள அங்கத்தினர்கள் அக் கமிட்டிகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கமிட்டிகள் பேரால் தொகை வசூலித்து பத்திரப்படுத்தி சிக்கனமாய் செலவழிக்கவேண்டும். தொண்டர்களையும் அவர்கள் ஆற்றும் செயல்களையும் அவர்கள் மற்ற ஜனங்களிடம் நடந்து கொள்ளும் நடத்தைகளையும் பொதுஜனங்கள் கண்ணியமாகவும் பச்சாதாபப்படும் படியாகவும் அன்பும் ஆதரவும் காட்டும்படியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்து வணக்கத்தோடு கேட்டுக் கொள்ளுகிறோம். தயார்! தயார்!! போர் நெருங்கி விட்டது!!! வெற்றி நிச்சயம்!!!!

குடி அரசு – தலையங்கம் – 15.05.1938

தமிழா என்ன செய்யப்போகிறாய் இந்தி வந்து விட்டது! – 15.05.1938

தமிழா  என்ன செய்யப்போகிறாய் இந்தி வந்து விட்டது!


பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த – தமிழனின் தன் மானத்தை அழித்து தமிழனை ஆரியருக்கு என்றென்றும் நிலையான அடிமையாக்க ஹிந்தி தமிழ் மக்களுக்கு கட்டாயப் படிப்பாக ஏற்படுத்தப்பட்டாய் விட்டது.
யாரால்? ஆரியரால்
எப்படி? தமிழ் மக்களின் ஒன்றுபட்ட கூக்குரலைச் சிறிதும் மதியாமல்
தமிழா இனி என்ன செய்யப்போகிறாய்?
தலை வணங்கி வரவேற்கப் போகிறாயா?
எதிர்த்து நின்று விரட்டி அடிக்கப்போகிறாயா?
இதில்தான் தமிழன் இருப்பதா இறப்பதா என்கின்ற முடிவு இருக்கிறது.
தலை வணங்குவதானால் காங்கரசில் இரு. எதிர்த்து நிற்பதானால் உன் பெயரை எதிர்ப்புக் கமிட்டிக்குக் கொடு.
குடி அரசு – அறிவிப்பு – 15.05.1938

Wednesday 26 April 2017

ஹிந்தி வந்துவிட்டது இனி என்ன? ஒருகை பார்க்க வேண்டியதுதான் – 08.05.1938

ஹிந்தி வந்துவிட்டது இனி என்ன? ஒருகை பார்க்க வேண்டியதுதான்


தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு ஹிந்தி பாஷையை கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டுமென்று பார்ப்பன மந்திரி தோழர் ராஜகோபாலாச்சாரியார் பிடிவாதமாக முடிவு செய்துவிட்டார். தமிழ் மக்கள் எவ்வளவோ தூரம் முயன்றும், எத்தனையோ கூட்டங்கள் மூலம் தங்களது அதிருப்தியையும், ஆத்திரத்தையும் காட்டியும் கனம் ஆச்சாரியார் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. உண்மையில் தமிழ் மக்களுக்கு ஹிந்தி நஞ்சு என்பதை எடுத்துக்காட்ட தமிழ் மக்கள் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல. இன்று கனம் ஆச்சாரியார் மாத்திரமல்லாமல் கல்வி மந்திரியார் உள்பட மற்ற மந்திரிகளும் அவர்களது காரியதரிசிகளும் தமிழ் நாட்டில் பொதுக் கூட்டங்களில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் இந்த ஹிந்தியை கட்டாயமாக நுழைக்க முயற்சித்ததுதான் என்பதை மனப்பூர்த்தியாக ஆச்சாரியார் உணர்ந்தும் அறைக்குள்ளாகவே இருந்து கொண்டாவது ஹிந்தியை புகுத்திவிட்டுத் தான் மறு காரியம் பார்ப்பது என்கின்ற விரதம் பூண்டு விட்டார். எனவே இனி கேட்டுக் கொள்ளுவதாலோ கெஞ்சிக் கொள்ளுவதாலோ சமாதானமான முறையில் வேறு ஏதாவது முயற்சி செய்வதாலோ எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்கின்ற நிலைமை காணப்படுகிறது.
முயற்சி எல்லாம் பாழாய் விட்டது
இம்மாதிரி காரியங்களுக்குப் பரிகாரம் தேட இந்த முறை ஒருபுறமிருக்க வேறு ஒரு வழியிலும் முயன்று பார்க்கலாம் என்கின்ற எண்ணத்தினால் சர்க்கார் தலைமை அதிகாரி என்பவரான கவர்னர் பிரபுவையும் அணுகத் துணிந்து அவருக்கும் இது சம்மந்தமான குறைகளை எடுத்துக்காட்டியாய் விட்டது. கவர்னர் பிரபுவும் தன்னால் ஆவதொன்றுமில்லையென்று கையை விரித்துவிட்டார். நேரில் சென்று குறைகளை சொல்லிக் கொள்ள பல பெரியார்கள் முன்வந்து விண்ணப்பித்துக் கொண்டும் கூட அதற்கும் முடியாது என்று முடிவு கூறிவிட்டார்.
இனிச் செய்ய வேண்டியது என்ன?
இனி தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன என்பதுதான் இப்போது முக்கிய பிரச்சினையாயிருக்கிறது. இதைப் பற்றி யோசிப்பதற்குமுன், இந்நாட்டு மாபெரும் சமூகமும் பழம்பெரும் குடிகளுமாகிய, இந்தியாவிலேயே இணையிலா வீரமும் மானமும் பெற்றுள்ள தமிழ் மக்களுக்கு பார்ப்பனர்களால் இக்கதி நேரக் காரணம் என்ன? இத் தமிழ் மக்களின் கூப்பாடும் அழுகையும் கேள்வி கேப்பாரற்றுப் போனதற்குக் காரணம் என்ன? கவர்னர் பிரபுவும், இத்தமிழ் மக்களின் குறைகளை இவ்வளவு துச்சமாய் கருதி நேரில் வந்து கண்டு கொள்ளக் கூட தரிசனம் அளிக்காமல் அலட்சியப்படுத்தக் காரணம் என்ன? என்பன போன்ற விஷயங்களை மனதில் இருத்தி அவற்றிற்கு சமாதானம் தெரிந்த பிறகே மேலால் என்ன செய்வது என்பதைப்பற்றி யோசித்தால் ஏதாவது ஒரு சரியான வழி கிடைக்கலாம் என்று கருதுகிறோம். அதல்லாமல் வெறும் கோபத்திலோ ஆளுக்கு ஒரு யோசனை சொல்லுவதினாலோ ஆத்திரப்படுபவர்கள் அத்தனை பேரும் தனித்தனி வழியில் தங்கள் கடமை ஆற்ற எண்ணுவதினாலோ ஒரு வித பரிகாரமும் ஏற்பட்டு விடாதென்றே கருதுகிறோம்.
அலச்சியத்திற்கு காரணம்
தமிழ் மக்களை இன்று பார்ப்பனர்களும், கவர்னர் பிரபுவும் மதிக்காமல் அலட்சியமாய்க் கருதி இழிவுபடுத்தி வருவதற்குக் காரணம் மக்களில் எவரும் இதுவரை தனக்கு மானமோ வீரமோ இருப்பதாக காட்டிக் கொள்ளவே இல்லை. தமிழனுக்குள் ஒற்றுமை இல்லை; தமிழனுக்கு பொதுநல உணர்ச்சி இல்லை; தமிழன் ஒரு வேளை கூழுக்கு மானத்தை விற்பான்; தமிழன் கூலிக்கு மாரடிக்க அருகனே ஒழிய தலைப் பதவிக்கு அருகனல்ல. எதையும் விற்று தனது தனிவாழ்வுக்கு வழி தேடுவான் என்று பார்ப்பனரும், பிறநாட்டு மக்களும் கருதும்படியாகவே பெரும்பாலோர் நடந்து வருகிறார்கள்; நடந்தும் வந்திருக்கிறார்கள். தமிழன் பெருமைக்கு இன்று ஏதாவது சான்று வேண்டுமானால், புராணங்களில் இருந்தும் பழம் பெரும் காவியங்களிலிருந்தும் தாள் ஆதாரங்கள் காட்டலாமே ஒழிய பிரத்தியக்ஷ அல்லது சமீப சரித்திர சான்றுகள் ஒன்றையும் காணோம். தமிழ் மக்கள் புராண காலம் தொட்டு சூத்திரனாக மதிக்கப்பட்டு அந்தச் சூத்திரப் பட்டம் தமிழ் மக்களாலேயே ஏற்கப்பட்டு சில தமிழ் மக்களால் தாங்கள் மாத்திரம் சற்சூத்திரரானால் போதும் என்று தனி முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன என்றுதான் சொல்ல இடமிருக்கிறது.
50 வருஷகால வாழ்வு
இவை தவிர நாமறிய இந்த 50 வருஷகால வாழ்வில் தமிழ் நாட்டில் ஒரு தமிழ் மகனாவது பிரபலஸ்தனாக இருந்து தமிழ் நாட்டை நடத்தினான், தமிழ் மக்களை நடத்தினான் என்று சொல்லத்தக்க ஆதாரமும் இல்லை.
தமிழ் நாட்டு ராஜாக்கள், ஜமீன்தார்கள், பெருத்த செல்வந்தர்கள் ஆகியவர்களின் சமீபகால சரித்திரமும் வாழ்க்கைக் குறிப்புகளும் தற்கால நிலையும் அவர்களது தன்மையும் ஆகியவற்றை கவனிப்போமேயானால் அது மிக மிகக் கேவலம் என்று தான் சொல்லத்தக்க வண்ணம் ஆதாரங்கள் கிடைக்குமே தவிர வீரனென்றோ மானியென்றோ தமிழ் நாட்டிற்கோ, தமிழ் மக்களுக்கோ, உழைத்தவர் உதவினவர் என்றோ, தமிழ் மக்களை நடத்தினவர் நடத்தத் தகுதி உடையவர் என்றோ சொல்ல எதையும் காண முடியாது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.
இன்று தானாகட்டும் தமிழ் நாட்டில் மானமுள்ள பொது நல உணர்ச்சியுள்ள தனி சுயநலமற்ற ஒரு தமிழ் மன்னனோ, தமிழ் ஜமீன்தாரனோ, தமிழ் செல்வவானோ யார் இருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. இதுதான் போகட்டுமென்றாலோ இன்று தமிழ் மக்களுக்கு பூர்வகாலந் தொட்டு, வேத புராண சரித்திர காலந்தொட்டு எதிரியாய் – பிறவி வைரியாய் இருந்து தமிழ் மக்களை தாழ்த்தி, அழுத்தி, இழிவுபடுத்தி வரும் பார்ப்பனருக்கு அடிமையாய் ஒற்றனாய் காட்டிக் கொடுத்து ஈன வயிறு வளர்க்கும் இழி குணம் இல்லாத தமிழ் மக்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கிட முடியுமா?
மாபெரும் விரோதி
ஆகவே இவையும் இவை போன்ற இன்னும் பல காரணங்களும் ஏராளமாய் இருக்கும்போது தமிழ் மக்கள் மானம், கல்வி, கலை, வீரம், அறிவு ஆகியவைகளுக்கு மாபெரும் விரோதியாய் “எம”னாய் “உளைமாந்தையாய்” இருக்கும் ஹிந்திபாஷையை பார்ப்பனர்கள் கட்டாயமாக தமிழ் மக்களுக்குள் செலுத்தும் அடாத கொடுங்கோன்மை காரியத்தை எப்படி தடுக்கமுடியும் என்று கேட்கின்றோம்.
கனம் ஆச்சாரியார் பார்ப்பனராய் இருந்தாலும், ஹிந்தியை ஒரு தமிழ் மகனை அதுவும் இந்நாட்டுப் பழங்குடி – பெருங்குடி மக்கள் சமூகத்தைச் சேர்ந்த, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் வேளாள வகுப்பைச் சேர்ந்த ஒரு தனித்தமிழ் மகனாகும் தோழர் டாக்டர் சுப்பராயனைக் கொண்டு அவர் கையில் கூரிய வேலை கொடுத்தல்லவா தமிழ் மக்கள் கண்களைக் குத்தும்படி கட்டளையிடுகிறார்.
ஆச்சாரியார் மூர்க்க பலம்
மற்றும் கனம் ஆச்சாரியார், என்றும் பார்ப்பனர் தனித்த முறையில் தமிழ்மக்கள் சமூகத்தையே என்றும் தங்களுக்கு அடிமையாக இருக்கும்படி சூத்திரர்களாக ஆக்க ஹிந்தியைப் பலவந்தமாக நுழைக்கிறார் என்றாலும் அவரது அரசியல் சபையில் “ஆம், ஆம்” “நன்று, நன்று” “நடத்து நடத்து” என்று சொல்லி கைதூக்கித் தலையாட்ட எத்தனை தமிழ் மக்கள் கைகூப்பி சிரம் வணங்கக் காத்திருக்கிறார்கள்? இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த நாம் எந்த முறையில் தமிழ்மக்களுக்கு பிடித்தமில்லாத – தமிழ்மக்களுக்குக் கேடு சூழும்படியான ஹிந்தியை கனம் ஆச்சாரியார் (பார்ப்பனர்கள்) மூர்க்க பலத்தில் புகுத்துகிறார் என்று சொல்லுவது என்று கேட்கிறோம்.
ஆகவே, தமிழ் மக்களின் பழம் பெருமைகளும், பாட்டிக் கதைகளும் எவ்வளவு மேன்மையாக இருந்தபோதிலும், தமிழ் மக்களின் இன்றைய நிலைமை பூர்வ பெருமைக்கேற்றதாக இல்லை என்பதோடு தமிழ் மக்கள் பார்ப்பனக் கொடுமையிலிருந்து அதி இலேசாக தப்புவதற்குத் தகுதியான நிலையிலும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கு ஆகவே இவற்றைக் குறிப்பிட்டோம்.
இதனால் எந்த தமிழ் மகனும் பயந்துவிட வேண்டியதில்லை. அவநம்பிக்கை கொண்டுவிட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக ஹிந்தியை தடுப்பதற்காக நாம் செய்யப் போகும் காரியங்களை திட்டப்படுத்துவதற்கு முன் நம் நிலையை நன்றாக உணர்ந்து அதற்கு ஏற்றபடி அதாவது மாற்றான் வலியையும் நம் வலியையும் அளவு கண்டு மேலால் சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்த இவற்றைக் குறிப்பிட்டோமே ஒழிய நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்ளவல்ல. இனி நாம் செய்ய வேண்டியது என்ன?
நாம் வேண்டுபவர்
உண்மை தமிழ் ரத்தம் அதாவது சிறிதும் கலப்பற்ற சுத்த தமிழ் ரத்தம் ஓடும் வாலிபர்களே ஹிந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு வேண்டும்.
எப்படிப்பட்ட பார்ப்பன தந்திரத்துக்கும் இணங்க முடியாத பெரியவர்களே நமக்கு வேண்டும்.
பார்ப்பன தயவு இல்லாது வாழ முடியாது என்கின்ற தமிழ்மகன் முடிபுனைந்த மன்னனாயிருந்தாலும் அவனிடம் காசு பெறலாமே ஒழிய அவனது நிழலும் இம்முயற்சியில் பட இடம் கொடுக்கக் கூடாது.
இரண்டிலொன்று அதாவது இந்தி பலாத்காரத்தை ஒழித்தாலொழிய தனது சொந்த வாழ்வை கவனிப்பதில்லை என்கின்ற முடிவுக்காரர்கள் மாத்திரமே எதிர்ப்பு முயற்சி நிர்வாகத்தில் அங்கத்தினராய் இருக்க வேண்டும்.
அடுத்தபடியாக பொருளாதார விஷயத்தில் போதுமான பொருள் உதவி கிடைக்கலாம் என்றாலும் ஒரு சமயம் கிடைக்காமல் போய்விட்டாலும் கிடைத்ததைக் கொண்டு கிடைக்காவிட்டால் பிச்சை எடுத்தாவது பசியை ஆற்றிக்கொண்டு உழைப்பதற்கு உறுதி செய்து கொண்டவர்களே செயலில் கலந்து கொள்ள வேண்டும்.
ஏற்படுத்திக் கொள்ளும் திட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஒரு கை முறையாய் பின்பற்றி ஒழுங்காகவும், ஒழுக்கமாகவும் நடந்து வருவதாக ஒவ்வொரு இளைஞனும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகேதான் இம்மாபெரும் முயற்சிக்கு ஏதாவது திட்டம் வகுப்பது பயன்படத் தக்கதாகும்.
அப்படிக்கு இன்றி ஆளுக்கொரு உபாயம் (ஆளுக்கு ஒரு அபிப்பிராயம்) ஆளுக்கு ஒரு அறிக்கை என்பது போன்ற காரியங்கள் நடைபெறுமானால் ஆய்ந்தோய்ந்து செய்யப்படாத காரியம் போல் முடியவேண்டியதாகிவிடும்.
காலம் அடுத்து விட்டது
கோடை விடுமுறை முடிந்த உடன் ஹிந்தி கட்டாய பாட முறை அமுலுக்கு வரப்போகிறது. ஆகையால் அதிக சாவகாசம் இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். சகல பொறுப்புகளும் மானமுள்ள பரிசுத்த இளைஞர் கையில் இருக்கிறது என்பதையும் அவர்கள் சரியாய் நடத்தப்பட வேண்டும் என்பதையும் யாவரும் உணர வேண்டும்.
தோழர்கள் எஸ். எஸ். பாரதியார், உமாமகேசுவரம் பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம், வள்ளல் சிவஞான தேசிகர் போன்றவர்கள் கீழிறங்கி வந்து வினைஞர்களாகி மற்ற வாலிபர்களுக்கு வழிகாட்டிகளாகச் செல்ல வேண்டும்.
சிறை புகுவது அற்ப விஷயம்
தாங்கள் முடிக்க எண்ணும் கருமத்திற்கு சிறை செல்லுவது என்பது மிக சாதாரண காரியம் ஆகும். அதுவே கடைசிக்காரியமாகவும் கருதிவிடக் கூடாது. ஆச்சாரியார் அதை சுலபத்தில் கையாள சம்மதிக்க மாட்டார். ஆதலால் சிறை செல்லத் தயாராய் இருந்தால் போராதா என்று எண்ணிவிடக் கூடாது. சிறை செல்லுவது ஒரு அற்பக் காரியமேயாகும். அதில் யாதொரு கஷ்டமோ நஷ்டமோ கிடையாது. அதை 3 – ந் தரக் காரர்களுக்கு விட்டுவிட வேண்டும். பிரமுகர்களும், பொறுப்பாளிகளும் அடிபடவும், உயிர் விடவும் தயாராய் இருக்க வேண்டும். ஏனெனில் நாம் போராடக் கருதுவது நெஞ்சிரக்கமற்ற மறத்தன்மை கொண்ட மக்களோடு என்பதை ஒவ்வொருவினைஞரும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதிலும் நாம் போராடக் கருதுவது எவ்வித இழிவான காரியத்தையும் செய்யத் துணிபவர்களும், சூழ்ச்சியில் திறமை உடையவர்களுமான மகா கொடியவர்களுடன் என்பதையும் ஒவ்வொரு எதிர்ப்பாளனும் மனதில் இருத்த வேண்டும்.
இந்த நிலைமைகளை நன்றாக உணர்ந்து இதற்கேற்றபடி நமது திட்டங்களை வகுத்துக் கொண்டு கருமத்தில் இறங்கி விடுவோமேயானால் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பது நமது அபிப்பிராயம். தமிழ் இளைஞர்களுக்கு ஒரு விண்ணப்பம்.
இளைஞர்களுக்கு வேண்டுகோள்
இளைஞர்களே! இதுவரை உங்களில் சுமார் 200, 300 பேர்கள் வரை ஹிந்தி எதிர்ப்புப் போருக்கு “நான் தயார்” “நான் தயார்” “நானும் என் மனைவியும் தயார்” “உண்ணாவிரதத்துக்கு தயார்” “உயிர் விடத் தயார்” என்பதாக தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவரவர்கள் கஷ்ட ஜீவனம் நடத்தவும், அடிபடவும் ராப்பட்டினி பகல் பட்டினி கிடக்கவும், துலைவழி நடக்கவும் தயார் செய்து கொள்ளுங்கள். போர் முனை சிப்பாய் போல் ஆக்கினைக்கு அடிபணியவும் தயார் செய்து கொள்ளுங்கள்.
பெரியோர்களுக்கு விண்ணப்பம்
பெரியோர்களே! முன்மாதிரி காட்ட வாருங்கள். உங்களுடைய உள்ளங்களுக்கு புதிய அங்கியை மாட்டிக் கொள்ளுங்கள். தனியுரிமை வாழ்க்கைக்கு கருதப்படும் மானம் அபிமானம் வேறு பொதுநல தொண்டுக்கு கருதப்படும் மானம், அபிமானம் வேறு என்பதை மனதிலிருத்தி அதற்குத் தகுந்தபடி உங்களது மானம், அபிமானம் ஆகியவற்றை மாற்றி அவைகளை உயிராய் கருதுங்கள். உங்கள் மார்பைப் பார்க்காதீர்கள், அடிச்சுவட்டைப் பாருங்கள், வீர இளைஞருக்கு நீங்கள் வழி காட்டுகிறவர்கள் என்பதை ஒவ்வொரு அடிவைக்கும்போதும் ஞாபகத்தில் வையுங்கள்.
செல்வர்களுக்கு ஒரு வார்த்தை
தமிழ்ச் செல்வர்களே உங்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்கள் பழைய நடத்தைகளை மறந்து விடுகிறோம். இப்போது தமிழர் இருப்பதா இறப்பதா என்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைக்கு நீங்களும் பங்காளிகள் என்று நாம் சொல்வதால் நீங்கள் முனிவு கொள்ளாதீர்கள் நடந்தது நடந்து விட்டது. அதை பரிகரிக்க உங்களால் செய்யக் கூடியது நீங்கள் மானத்திலும் உயிரிலும் பெரிதாக மதிக்கும் உங்கள் செல்வத்தை தாராளமாக இக்கருமத்திற்கு உதவி, பெரிய வீரராகுங்கள். இவ்விஷயத்தில் உங்கள் கை நீளுவதற்கேற்ற பயனை அடைவீர்கள்.
பொது மக்களுக்கு மாபெரும் விண்ணப்பம்
பொதுத் தமிழ் மக்களுக்கு மாபெரும் விண்ணப்பம் தமிழ்த் தோழர்களே இந்த 50 வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இன்று நடப்பது பிரிட்டிஷ் ஆட்சியல்ல. வருணாச்சிரம புரோகித ஆட்சியாகும். அதன் ஒவ்வொரு மூச்சும் தமிழ் மக்களை விலங்குகளாக்குவதற்காக விடப்படும் மூச்சாகும். விலங்குகளாக வாழ்வதை விட மடிவது மேலான காரியம். ஏதோ விளக்கமுடியாத பல காரணங்களால் தமிழ் மக்களில் பலர் புரோகித ஆட்சிக்கு அடிமைப்பட்டு கிடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அவர்களும் நாமும் நம் பின் சந்ததியும் மனிதர்களாக வாழ முயற்சிக்க வேண்டியது நமது கடமை என்பதை உணருங்கள். இதை ஒரு கட்சி போராக, முயற்சியாக கருதுங்கள். உங்கள் செளகரியங்களுக்கு அடங்கின சகல பரிசுத்தமான ஆதரவுகளையும் அளியுங்கள். உங்களது வாலிப இளைஞர்களை போருக்குக் கச்சை கட்டி விரட்டி அடியுங்கள்.
மடாதிபதிகளுக்கு மன்னிப்பு
தமிழ் மடாதிபதிகள் என்பவர்களே, நீங்கள் இது வரை நடந்து கொண்டதையும் மறந்து விடுகிறோம். இந்த சமயத்தில் தைரியமாய் முன்வந்து உங்களாலான காசு உதவுவதோடு உங்களிடம் பக்தி, விசுவாசம் காட்டுபவர்களை எங்களிடம் விரட்டி விடுங்கள். தமிழ் நாட்டில் மானமுள்ள சுத்தத் தமிழ் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை உலகம் உணர இதைவிட வேறு தக்க சமயம் இனி சுலபத்தில் கிடைக்காது, கிடைக்காது.
ஆகவே பொதுமக்களே, இளைஞர்களே தயாராகுங்கள். முன் வாருங்கள், ஒரு கை பாருங்கள்.
குடி அரசு – தலையங்கம் – 08.05.1938

நன்நிலம் மகாநாடு ஹிந்தி கண்டனம் – 14.06.1931

நன்நிலம் மகாநாடு ஹிந்தி கண்டனம்


தஞ்சை ஜில்லா நன்நிலத்தில் இம்மாதம் 7-ந் தேதி கூடிய நன்னிலம் தாலூகா மகாநாட்டில் ஹிந்தி பாஷையைக் கண்டனம் செய்து ஒரு தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது.  அத்தீர்மானமாவது:-
“பழைய புராணக் கதைகளைச் சொல்லுவதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்கும் மற்ற பொது விஷயங்களுக்கும் உதவாத சமஸ்கிருதம், ஹிந்தி முதலிய பாஷைகளைத் தேசீயத்தின் பேரால் அரசியல் காரணங்களுக்காக வென்று படிக்கச் செய்வதானது பார்ப்பனீயத்திற்கு மறைமுகமாக ஆக்கம் தேடுவதாகுமென்று இம்மகாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடம் பரப்பவும், நவீனத்தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற தேசங்களில் எழும்பியிருக்கும் சீர்திருத்த முற்போக்கு உணர்ச்சிகளை நமது மக்களிடம் தோற்றுவிக்கவும், உலக பாஷையாக வழங்கிவரும் இங்கிலீஷ் பாஷையையே நமது வாலிபர்கள் கற்க வேண்டு மென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது” என்ற தீர்மானமாகும்.  இதைபற்றி நாம் 1926 ம் வருஷத்திலேயே “குடி அரசு” பத்திரிகையில் “தமிழுக்குத் துரோகமும், ஹிந்தியின் இரகசியமும்” என்பதாக ஒரு வியாசம் எழுதி இருக்கின் றோம்.  அது மாத்திரமல்லாமல் “இந்து மதப் புராண இதி காசங்களை உண்மை யாய் உணரவேண்டுமானால் – துளசிதாஸ் இராமாயணத்தை நன்றாய் அறிய வேண்டுமானால் ஹிந்தி படிக்கவேண்டும்” என்று சென்னை திருவாளர் கே. பாஷ்யம் அய்யங்கார் என்ற “ஒரு தேச பக்தர்” சென்ற வாரத்தில் கூட பேசி யிருக்கின்றார்.  இதிலிருந்தும் ஒருவாறு ஹிந்தியின் இரகசியம் அறியலாம்.
அன்றியும் ஹிந்தி பாஷையைப் பொது பாஷையாக ஆக்குவது முடியாத காரியமென்றும், அது கூடாத காரியமென்றும் பார்ப்பனீயப் புராணக் கதைகளை பரப்பத்தான் முடியுமென்றும் வங்காளம் மாடர்ன் ரிவ்யூ பத்திராதி பரான பாபு ராமாநந்த சட்டர்ஜி அவர்கள் தமது பத்திரிகை யில் எழுதி இருக்கிறார்கள்.
 இதிலிருந்தும்  ஒருவாறு ஹிந்தியானது பார்ப்பனப் பிரசாரபாஷை என்றும், அரசியலுக்கு அது சாத்தியப்படாத பாஷை என்றும் விளங்கும்.
இந்நாட்டில் பார்ப்பனீயம் தாண்டவமாடத் தொடங்கிய காலம் முதல் ஏதாவது ஒரு வகையில் புராணங்களையும், பார்ப்பனீயங்களையும், பரப்பும் நோக்கத்துடனேயே எல்லாப் பாஷைகளும் ஆதிக்கம்பெற்று வந்திருக் கின்றன.  உலக வழக்கில் ஒரு சின்னக்காசுக்கும் பயன்படாத சமஸ்கிருத பாஷைக்கு இன்றைய தினம் இந்நாட்டில் இருக்கும் ஆதிக்கமும், அதற்கெ னவே பல ஏற்பாடும், செலவும், மெனக்கேடும் பார்ப்பனீயத்தைப் பரப்பவே செய்யப்பட்டு வருகின்றன.  சமஸ்கிருத காலேஜ், சமஸ்கிருதப் பாடசாலை, மற்றும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஏற்ற முயற்சிகள் முழுவதும் சமஸ்கிருதம் வாழ்க்கைக்கு சிறிது பாகமும் வேண்டிய அவசியமில்லாத மக்களின் செல விலேயே நடைபெற்று வருகின்றன.  இது இந்த நாட்டு மக்களின் சுய மரியாதையற்ற தன்மைக்கு ஒரு பெரும் உதாரணமாகும்.  இதை தட்டிப்பேச இன்றைய சட்டசபை, மந்திரிசபை ஆகியவைகளில் ஒரு சிறு மூச்சுவிடவும் ஆள்கள் இல்லை.  போதாக் குறைக்கு இன்று ஹிந்தி பாஷை ஒன்று புதிதாக முளைத்து இந்தியமக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் வெகு பலமாய் செய்யப்பட்டு வருகின்றது.  இது இந்நாட்டு மக்களுக்கு பாஷை விஷயத்திலும் சுயமரியாதையில்லையென்பதற்கு ஒரு உதா ரணமாகும்.
தமிழ்நாட்டுக்கு ஹிந்தி என்ன அவசியத்திற்கு என்று கேட்க ஒரு தேசபக்தராவது இன்று தேசீய வாழ்வில் இல்லை . தேச பக்த குழாம் பெரிதும் கூலிக்கு மாரடிப்பவர்களாலேயே நிறப்பப்பட்டுவிட்டதால் பார்ப்பனத் தலைவர்களுக்கும் பார்ப்பனர்களால் பிடித்து வைக்கப்பட்ட தலைவர் களுக்கும் அடிமைகளாய் இருந்து அவர்கள் உபதேசித்த தேசீய மந்திரத்தை உருப்போட்டு ஜெபித்து வயிறு வளர்ப்பதைவிட வேறு யோக்கியதை இல்லாமல் போய்விட்டது.
இந்த நாட்டில் இன்றைய தமிழ் பாஷையே தமிழ் மக்களின் சுயமரியாதைக்கும், மனிதத் தன்மைக்கும், சுதந்திரத்திற்கும் நேர் விரோதமாக விருக்கின்றது என்பதைப் பல தடவை சொல்லி வந்திருக்கின்றோம்.  இன்றைய தமிழ் பாஷையில் பெரிய இலக்கியமாய் பாவிக்கப்படுவதாகிய கம்பராமாயணம் பெரிய புராணம் ஆகிய இவ்விரண்டும் கூட மானமுள்ள, சுயமரியாதை – வீரம் ததும்பிய, இரத்த ஓட்டமுள்ளதமிழ் மக்களால் சுட்டுப் பொசுக்க வேண்டிய புஸ்தகமாகும்.  தமிழ் மக்கள் என்று சொல்லிக் கொள்ளு கின்றவர்களுக்கு போதிய மான உணர்ச்சி இல்லாததாலேயே அவற்றிற்கு தமிழ் நாட்டில் இன்னமும் இடமிருக்க வேண்டியதாகிவிட்டது.  இன்றைய தினம் தமிழ் படித்து தமிழ் பாஷையில் பற்றுகொண்டு தமிழைத் தாய் பாஷை யாய்க் கொண்ட ஒருவனாவது தன்னுடைய தமிழ் தாய்  வடமொழிப் புருஷனுடன் சோரத்தனம் செய்து கொண்டிருக்கின்றாளா? இல்லையா வென்றும் பிள்ளை களையெல்லாம் கூட வடமொழிப் புருஷனுக்கு உதவும்படியாகவே அவனைப் போலவே பெற்றுக்கொண்டுமிருக்கின்றாளா? இல்லையா வென்றும், அப்படிச் சோரத்தனம் செய்ததில் முதல்தரப் பிள்ளை களாயும் சிரஞ்சீவி பிள்ளைகளாயும்  இந்தக் கம்பராமாயணமும் பெரிய புராணமும் இருக்கின்றதா இல்லையா? என்றும் கேட்பதோடு இந்த வடமொழிப் புருஷனுக்கு தங்களது தமிழ்த்தாயை கூட்டிவிட்டு பெருமை யடைவதன் மூலமே தமிழ் பண்டிதர்கள் இன்று உயிர் வாழ்ந்து ஜீவனம் செய்து வருகின்றார்களா? இல்லையா வென்றும் கேட்கின்றோம்.
தமிழ்த்தாய் தானாகவே சமஸ்கிருதப் புருஷன் மீது ஆசைப்பட்டு “விபசாரம்” செய்வதில் நமக்கு ஆnக்ஷபணை இல்லை.  ஆனால் இந்தப் பண்டிதர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு, தங்கள் சுயநலப் பெருமைக்கு தமிழ்த்தாயை கூட்டி விட்டுப் பிழைப்பதைத்தான் நாம் வெறுக்கின்றோம்.  அப்படிக் கூட்டிவிடுவதாவது தமிழ்த்தாயின் மக்கள் சமூகத்திற்காவது அவர்களது சுயமரியாதைக்காவது ஆபத்தில்லாமல் இருக்குமானால் நமக்கு ஆnக்ஷபணையில்லை.  அப்படிக்கின்றி இன்று நாட்டைப் பாழாக்கி விட்டது  இந்த சமஸ்கிருதப் புருஷனிடம் தமிழ்த்தாயை சம்பந்தப்படுத் தியதே என்று தெரிந்து இருந்தும், மறுபடி இதையே ஆதரித்தால் இதற்கு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.  இது இப்படியிருக்க   இப்பொழுது மற்றொரு புருஷனை (ஹிந்திப்பாஷையை) தமிழ்த்தாயிக்கு நமது தேச பக்தர்கள் கண்டு பிடித்து இருப்பது மிகவும் ஆச்சரியமாகவே இருக்கின்றது.  இனி தமிழ்த்தாயிக்கு தகுந்த புருஷன் வேண்டுமானால் மானத்துடனும் வீரத்துடனும் அறிவுடனும் பிள்ளைகளைப் பெற்று அவைகளை வைத்துக் காப்பாற்றும் புருஷன்தான் இருக்கவேண்டும்.  அதுவும் தகுந்தபடியான சுதந்திர காதல் மணமாகத்தான் செய்விக்க வேண்டுமேயொழிய இனியும் இம்மாதிரி வயிற்றுப் பிழைப்பை மாத்திரம் கருதிய சம்மந்தமாகவும், அதுவும் தமிழ்த்தாயிக்கு அல்லாமல் மற்றவர்களுடைய சுயநலத்திற்காகவும் இருக்கும் அடிமை மணமாகவும் இருக்கக்கூடாது என்றே சொல்லுவோம்.
தமிழ்த்தாயிக்கு யோக்கியதை இருந்து அவள் தகுந்த மானமுள்ள மக்களைப் பெற்று இருந்தால் நாட்டு நலனுக்கு ஏற்ற சகல விஷயத்தையும் தமிழிலேயே ஆக்கியிருக்கவேண்டும்.  நாட்டிற்கு தமிழே போதுமான தாயிருக்க வேண்டும்.  அப்படி இல்லையானால் தமிழ்த் தாயின் தகுதிக்கும் அவசியத்திற்கும் ஏற்றது எதுவோ அதைக் கொள்ளவேண்டும். இன்றையத் தினம் நாட்டிற்கு கவியழகு, கற்பனையழகு, புராண அழகு, மோட்ச அழகு, பகவான் வாக்கு அழகு. அவதாரப் பெருமை அழகு அல்ல வேண்டி யிருப்பது.  இவை சோம்பேரிகளுக்கும் மக்கள் கஷ்டத்தை உணராத வன் நெஞ்சகர்களுக்கும் ஊரான் உழைப்பில் வயிறு வளர்க்கும் அயோக்கியர் களுக்கும் அவசியம் உணரமுடியாத அறிவிலிகளுக்குமே இவை வேண்டிய தாகும்.  மற்றபடி மானமுள்ள மக்களுக்கு – பக்ஷhதாபமுள்ள மக்களுக்கு – யோக்கியர்களுக்கு அறிவாளிகளுக்கு இந்தியாவின் 35 கோடி மக்கள் சமத்துவ உணர்ச்சியுடன் இருக்கவும் வயிற்றுப் பிழைப்புக்கு மானத்தை விற்காமல் வாழவும், பணக்காரன், படித்தவன், மேல்ஜாதிக்காரன் என்கின்ற வஞ்சகர்களால் மிதிபட்டு நசுக்கப்படாமல் இருப்பதற்கும் குழந்தைகளுக்கு பூச்சாண்டியையும், காக்கையையும் பிராக்கு காட்டி கையில் இருப்பதை தட்டிப் பிடிங்கிக்கொள்வது போல் மோட்சத்தையும், காவியத்தையும், கவியழகையும், கடவுளையும், கலைகளையும் காட்டித் தட்டிப் பிடுங்கிக் கொள்ளாமல் அவரவர்கள் பாடுபட்டது அவரவர்களுக் காவது உதவவும்,  “நீ வீதியில் நடக்க வேண்டாம். அருகில் வரவேண்டாம், கண்களில் தென்பட வேண்டாம்,  படிக்க வேண்டாம் “சர்வ தயாபரனும் சர்வ கருணாமூர்த்தியும் சர்வ சக்தனும்” ஆகிய “கடவுளிடம்” கூட பக்கத்தில் நெருங்க வேண்டாம்” என்கின்ற அயோக்கியத்தனம் நீங்கவும் வேண்டியது முக்கியமாய் இருக்கின்றபடியால் அதற்கு எந்த பாஷை வேண்டும்? எந்த பாஷைப் படித்தால் இந்த மாதிரியான அற்பபுத்தி நீங்கும்? என்பதுதான் நமது கேள்வி.  ஆகவே இன்றைய இந்தத் தேவைக்கு – இன்று இந்த நாட்டிற்கு ஹிந்தி வேண்டுமா? இங்கிலீஷ் வேண்டுமா? என்பதை மானத்துடன் உள்ளவர்கள் நடு நிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்து சொல்லட்டும் என்றே வேண்டு கின்றோம்.  ஹிந்தி பாஷையை படிக்க வேண்டும் என்கின்ற நிர்பந்தத்தை காங்கிரசில் கொண்டு வந்து புகுத்தியதே வருணாச்சிரமத்தை நிலை நிறுத்தவும்  அதைக் கட்டாயப்படுத்தி மக்களுக் குள் புகுத்தவுமே செய்த சூக்ஷியான காரியமாகும்.  இந்த அயோக்கியத் தனத்திற்கு திரு. காந்தி அவர்கள் கண்டிப்பாய் உளவாளி என்றே சொல்லுவோம்.  இதனால் வாய் வெந்து போவதானாலும் சரி. தலையில் இடி விழுவதானாலும் சரி,  முன் காலத்து ரிஷிகளும், முனிவர்களும் நமக்கு எவ்வளவு கொடுமையை விளை வித்தவர்கள் என்பதாக இப்போதைய மானமுள்ள மக்கள் எப்படிக் கருது கின்றார்களோ அதற்கு ஒரு முந்திரி கூட குறைவல்ல இன்றைய மகாத்மாக் களால் நமக்கு வரும் ஆபத்தும் இழிவும் என்பதில் எமக்குச் சிறிதும் சந்தேக மில்லை.  யாருக்காவது சந்தேகம் இருந்தால் சென்ற வாரம் திரு. காந்தியவர் கள் யங்இந்தியாவில் “வர்ணாச்சிரம தர்மம்” என்கின்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தை யுற்று கவனியுங்கள்.
“வர்ணாச்சிரம தர்மங்களில் குறிப்பிட்ட நான்கு தர்மங்களில் எனக்கு நம்பிக்கையுண்டு. இந்தப்பாகுபாடுகள் பரம்பரைத் தொழில் சம்பந்தமாக ஏற்பட்டது.”
“பிராமணன் வித்தை கற்றுக்கொடுக்கவும், க்ஷத்திரியன் சக்தியற்றவர் களைப் பகைவரிடமிருந்து காக்கவும், வைசியன் உழவுத்தொழில் செய்யவும், சூத்திரன் உடலால் உழைத்து வேலை செய்யவும் என்று ஏற்பட்டவை களாகும்.”
“இந்து மதம் இவற்றை ஜனசமூக வாழ்வில் அங்கீகரித்து கிரமமாக நடத்தையிலும் அனுஷ்டித்து வருகின்றது”.
“இந்தப்படியான அவரவருக்கு உரிய காரியத்தை அவரவர் செய்யத் தவறியதால்தான் இப்போது வருண தருமம் அழிந்து பல ஜாதிகள் தோன்றின”.
“வகுப்பு ஒற்றுமைக்கும் கலப்பு விவாகம், சமபந்திபோஜனத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது எனது திடமான அபிப்பிராயம்.”
“கலப்பு விவாகங்களால் நாட்டில் வகுப்பு ஒற்றுமை ஏற்பட்டு விடு மென்று நான் நம்பவில்லை.”
“மனிதர் யாவருமே சமம்.  ஆனால் இந்த சமம் என்பது ஆத்மா வைப் பொறுத்த வரையில் தானேயொழிய சரீரத்தை பொறுத்த வரை சமமல்ல.”
என்ற குறிப்புகளை அதில் எழுதி இருக்கிறார்.  இந்த மாதிரியான வருண தர்மத்தை நிலை நாட்ட வந்த புருஷனை ‘பிராமணர்கள்’ மகாத்மா என்று கூறுவதிலும், அவரைப் பின் பற்றுவதிலும், அவர் சொல்லுகிறபடி யெல்லாம் ஹிந்தி படிப்பதிலும், கீதை படிப்பதிலும், ராமராஜ்ஜியம் ஸ்தாபிப் பதற்காக கள்ளுக்கடை, ஜவுளிக்கடை மறியல் செய்வதிலும் யாதொரு அதிசயமும் கொள்ளஇடமில்லை.  ஆனால் “நாங்களும் சுயமரியாதைக் காரர்கள்தான்” தமிழ்மக்கள் இந்த மாதிரியான வருணாச்சிரமத்திற்குக் கட்டுப் பட்டவர்கள் அல்ல…………. என்று சொல்லுகின்ற மக்கள் இந்த மகாத்மா வையும், அவர்களை மகாத்மாவாக்கின பார்ப்பனர்களின் வால்களையும் பிடித்துத் தொங்கிக் கொண்டு திரிவதில்தான் நமக்கு அதிசயம் காணப்படுகின்றது.
இதைப் பார்க்கின்றபோது “பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்” என்று சொன்ன வார்த்தை மிகவும் பொருத்தமும், அருத்தமும் கொண்ட வார்த்தை என்றே தோன்றுகின்றது.
குடி அரசு – தலையங்கம் – 14.06.1931

இந்தியை இன்று எதிர்க்கவில்லை 12 வருடங்களுக்கு முன்பிருந்தே எதிர்க்கிறோம் – 11.09.1938

இந்தியை இன்று எதிர்க்கவில்லை 12 வருடங்களுக்கு முன்பிருந்தே எதிர்க்கிறோம்


சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த அதாவது 1923-ம் வருடத்திலிருந்தே இந்தியைக் கண்டித்து வந்திருக்கிறது. அந்த இயக்கத்தின் சார்பில் கூடுகிற ஒவ்வொரு மகாநாடுகளிலும் இந்தியைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றியும் பட்டிருக்கின்றன.
உதாரணமாக 1931 வருடம் ஜúன் மாதம் 7-ந் தேதி கூடிய நன்னிலம் தாலூகா சுயமரியாதை மகாநாட்டில் இந்தியை கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
அந்த தீர்மானத்தை தோழர் சாமி சிதம்பரனார் அவர்கள் பிரேரேபித்தார். தோழர் கு. ராமநாதன் (இப்பொழுது விளம்பர மந்திரியாக இருப்பவர்) அவர்கள் ஆமோதித்து அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றிப்பேசி இருக்கிறார்.
அந்தத் தீர்மானத்தின் பேரில் 1931-ம் வருடம் ஜூன் மாதம் 14-ந் தேதி “குடி அரசு” பத்திரிகை ஒரு நீண்ட தலையங்கம் எழுதி இருக்கிறது. அந்தத் தலையங்கத்தில் பெரிதும், அந்தத் தீர்மானத்தை பிரேரேபித்தவரும் ஆமோதித்தவரும் பேசிய பேச்சுக்களையே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது பின்னார் பிரசுரிக்கப்படும்.
அந்த மகாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் வருமாறு:-
“பழைய புராணக் கதைகளைச் சொல்லுவதைத் தவிர வேறு அறிவை வளர்க்கும் விஷயங்களுக்குதவாத சமஸ்கிருதம், ஹிந்தி முதலிய பாஷைகளை நமது மக்கள் படிக்கும்படி செய்வது பார்ப்பனீயத்திற்கு மறைமுகமாக ஆக்கந் தேடுவதாகுமென்று இம்மகாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடை பரப்பவும், நவீன தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற தேசங்களில் எழும்பியிருக்கும் சீர்திருத்த உணர்ச்சியை நமது மக்களிடை தோற்றுவிக்கவும், உலக பாஷையாக வழங்கிவரும் இங்கிலீஷ் பாஷையையே நமது வாலிபர்கள் கற்க வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.”
பிரேரேபித்தவர்,
சாமி சிதம்பரனார்.
ஆமோதித்தவர்,
எஸ். இராமநாதன்.
குடி அரசு – கட்டுரை – 11.09.1938

Monday 24 April 2017

சென்னை லோகல் போர்டு சட்டம் ஸ்ரீமான். வீரையனின் திருத்த மசோதா – 25.10.1925

சென்னை லோகல் போர்டு சட்டம் ஸ்ரீமான். வீரையனின் திருத்த மசோதா


1920-ம் வருடத்திய ஸ்தல ஸ்தாபன போர்டு சட்டத்தைத் திருத்தும்படி, ஸ்ரீமான். வீரையன் எம்.எல்.ஸி. கீழ்கண்ட மசோதாவை அடுத்த சட்டசபையில் கொண்டு வரப்போவதாகவும், அதை எல்லா அங்கத்தினர்களும் ஆதரிக்க வேண்டுமென்றும் அறிவிக்கிறார்.
சென்னை ஸ்தல ஸ்தாபன போர்டு சட்ட திருத்த மசோதா
1920-ம் வருடத்திய சென்னை ஸ்தல ஸ்தாபன போர்டு சட்டத்தை அடியிற் கண்டவாறு மாற்றவேண்டும்.
(1) இந்தச் சட்டமானது 1925-ம் வருடத்திய சென்னை லோகல் போர்டு திருத்தப்பட்ட சட்டம் என்று அழைக்கப்படலாம்.
(2) 157-வது பிரிவுக்குப் பின் 17(ஏ) எந்த பொது ரஸ்தா, தெரு அல்லது பாதை வழியாக நடந்து போகிற அல்லது அதைச் சட்டப் பிரகாரம் உபயோகிக்கிற எந்த நபரையும்  எவரும் தடை செய்யக்கூடாது  என்னும் புதிய பிரிவு ஒன்று சேர்க்கப்படவேண்டும்.
(3)124 -1-பிரிவில் “குடியிருப்பவர்களின் சௌகரியம்” என்னும் வாசகத்திற்கு அடுத்தாற்போல் “மேற்கண்ட காரணங்களுக்காக அவை ஜாதி மத வித்தியாசமின்றி, சகல ஜனங்களாலும் தாராளமாய் உபயோகிக் கப்பட்டதாய் இருக்க வேண்டும்” என்னும் வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.
(4)167- பிரிவிலுள்ள, “பொது மார்க்கட்டுகள்” என்ற வார்த்தை களுக்கு அடுத்தாற்போல், “அந்த மார்க்கட்டுகளை சகல ஜனங்களும் ஜாதி, மத வித்தியாசமின்றி தாராளமாய் உபயோகப்படுத் தலாம்” என்னும் வார்த்தைகள் சேர்க்கப்படவேண்டும்.
8-வது ஷெடியூலில்
(1) 123(1)-வது பிரிவில் குறிக்கப்பட்டிருக்கிற  தண்டனைக்குப் பின் “எந்த ஜாதி, மதம் வகுப்பு முதலியவற்றைச் சேர்ந்த எந்த ஆளையானாலும் சரி தடை செய்தால் அபராதம் ரூ.50” என்று சேர்த்துக் கொள்ளவேண்டும்.
(2) 157-வது பிரிவில் குறிக்கப்பட்ட தண்டனைக்குப்பின் 157(ஏ) “எந்த பொது ரஸ்தா, தெரு அல்லது பாதையை உபயோகிக்கிற எந்த நபரையாவது, சட்ட விரோதமாய் தடை செய்தால், அபராதம் ரூ.50” என்று சேர்த்துக் கொள்ளவேண்டும்.
(3) 166(1)-வது பிரிவில் ஏற்படுத்தியிருக்கிற தண்டனைக்குப்பின் “எந்த பொது மார்க்கட்டையாவது உபயோகிக்கிற எந்த ஆளையாவது சட்டத்துக்கு விரோதமாகத் தடை செய்தால் அபராதம் ரூ.100” என்று சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எந்த நகரம் அல்லது கிராமத்திலுள்ள பொது ர°தா, தெரு அல்லது பாதை வழியாக எந்த வகுப்பைச் சேர்ந்த ஆட்களும் நடந்து போவதைப்பற்றி, தடையொன்றுமில்லையென்றும், மேலும் எந்த பொது ஆபீஸ் கட்டிடம், கிணறு, குளம் பொதுஜன வேலை நடக்கிற கட்டிடங்கள் முதலியவைகளை ஏனைய ஜாதி இந்துக்கள் எந்தவிதமாய்  உபயோகிக் கிறார்களோ, அதைப்போலவே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும், அவைகளை உபயோகித்துக் கொள்வதில் ஆட்சேபணை இல்லை யென்றும், சென்னை சட்ட சபையில் 1924 -ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதே தீர்மானத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு சென்ற செப்டம்பர் 25-ந்தேதி கவர்ன்மெண்டார் ஓர் உத்திரவு பிறப்பித்துள்ளார்கள்.  அந்த உத்திரவு ஸ்தல ஸ்தாபன போர்டு தலைவர்களுக்கெல்லாம் அனுப்பப்பட்டிருக்கிறது.  எனினும், அதனால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.  ஆகவே அந்த உத்திரவை சட்ட  ரூபமாக்கி ஊர்ஜிதப்படுத்தவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது.
குறிப்பு:-
ஸ்ரீமான். வீரையனின் சென்னை லோகல்போர்டு சட்டத்திருத்த மசோதாவை மேலே வெளியிட்டிருக்கிறோம்.  இம்மசோதா, இம்மாகாணத் திற்கு எவ்வளவு அவசியமென்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள்.  நமது தேசமக்களில் ஒரு சாராரை ஒடுக்கப்பட்டவர்களென ஒதுக்கி வைத்து, அவர்களுக்கு சமத்வம் காட்டாது, அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோ மென எதைப்பற்றி யெல்லாமோ பேசுவது வெறும் ஜம்பமேயன்றி வேறல்ல.  1924-ம் வருடம் ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி நடந்த சென்னை சட்ட சபையில் பொது ர°தா, வீதி, பாதை, குளங்கள், கிணறுகள் முதலியவைகளை எல்லா ஜாதியாரும், ஜாதி மத பேதமின்றி அநுபவித்துக்கொள்ளலாம் என ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஆனால், தண்டனையின் போக்கு காட்டப்படாத தால், அத்தீர்மானம் சாரமற்றதாகிவிட்டது.  அதனை ஊர்ஜிதத்துக்குக் கொண்டுவர வேண்டுமாயின்  இத்தகைய திருத்தம் முற்றிலும் அவசியமே யாகும்.  இம்மசோதாவை ஒத்துழைப்பை விரும்பும் சட்டசபை மெம்பர்கள் யாவரும் ஏகமனதுடன் ஆதரிப்பார்களென எதிர்பார்க்கிறோம்.
குடி அரசு – குறிப்புரை – 25.10.1925

Sunday 23 April 2017

குறளும் பக்தி - நூல்களும்! - தந்தை பெரியார் - 13.1.1951

குறளும் பக்தி - நூல்களும்! - தந்தை பெரியார்


இன்று குறள் மாநாடு என்னும் பேரால் இங்கு கூடியிருக்கிறோம். இன்று தமிழ் நாட்டில் திராவிடர் கழகங்களுக்கும் அதன் கூட்டங்களுக்கும் எப்படி ஒரு செல்வாக்கும், மக்கள் கூட்டங்களும் வருகிறதோ அதுபோல் குறளுக்கு, குறள் கூட்டங்களுக்கும் செல்வாக்கும், பெரும் கூட்டங்களும் வருகின்றன.

இல்லாவிட்டால் இந்தக் காலை நேரத்தில் விளம்பரம் இல்லாத இந்த மாநாட்டிற்கு, அதுவும் நான் இன்று இங்கு வருகிறேன் என்பதே யாருக்கும் தெரியாத நிலையில் இத்தனை பேர் இங்கு வந்து கூடுவதென்றால் முடியக்கூடிய காரியமா? தலைவர் அவர்களும், அறிஞர் முனுசாமி அவர்களும் குறளுக்கு இன்றுள்ள இந்த மாதிரியான செல்வாக்குக்கு என்னையும் ஒரு  காரணமாகச் சொன்னார்கள். நீங்களும் அதை ஆமோதிக்கும் அறிகுறியாய் ஆரவாரம் செய்தீர்கள். குறளுக்கிருக்கிற செல்வாக்கு, விளம்பரம் காரணமாக பல பேருக்குக் குறளின் பேரால் புத்தகம் போட, பத்திரிகை போட, பிரச்சாரம் தெரிய நல்ல வாய்ப்பு, வியாபாரம்,  வருவாய் இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். காங்கிரசுக்காரர்கள், காங்கிரஸ் பிரச்சாரகர்கள் பலர்கூட, தங்கள் ஸ்தாபனத்திற்கோ, தங்கள் பேருக்கோ கூட்டம் சேருவதில்லை என்கின்ற காரணத்தால் குறளின் பெயரை உபயோகித்துக் கூட்டம் சேர்த்துக் கொள்கிறார்கள். குறளின் பேரால் புத்தகம், பத்திரிகை, கூட்டம் நடத்துகிறார்கள். பல காங்கிரஸ் கூலிகள் காங்கிரசின் பேரால் தங்களுக்கு மதிப்பு போய்விட்டது கண்டு, தமிழ், தமிழ் கலை, தமிழ் இலக்கியம் என்னும் பேரால் விளம்பரம் பெற்று வாழ்க்கை நடத்துகிறார்கள். இந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம் என்னவென்றால், 1939 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியால் தமிழுக்கு ஏற்பட்ட செல்வாக்கேயாகும்.

குறளுக்கும், தமிழுக்கும் இன்றைய தினம் உள்ள உணர்ச்சிக்கு நான் காரணம் என்பதையும், நமது திராவிடர் கழகம் என்பதையும், அடியோடு நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஏதாவது சிறிது காரணம் இருந்தால் இருக்கலாம். ஆனால், பெரிதும் உண்மையானதுமான காரணம் இன்று மக்களுக்கு ஏற்பட்ட விஞ்ஞானமும், பகுத்தறிவும்,  சுயமரியாதை உணர்ச்சியுமேயாகும். 1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரசின் மாபெருந் தலைவர்களான பானர்ஜி, மாளவியா, நேதாஜி, தாதாபாய் நவுரோஜி, சங்கர நாயர், விஜயராக வாச்சாரியா, திலகர், பெசண்டு முதலிய தலை வர்கள் தலைமையில் கூட்டப்பட்ட காங்கிரஸ் மாநாடுகளில் பாராட்டப்பட்டு, நன்றி செலுத்தப்பட்டு, கடவுளுக்குப் பிரார்த்தனை செலுத்தப்பட்டு, காட்டி வந்ததான பிரிட்டிஷ் ஆட்சியானது சுமார் 200 வருட காலமாய் ஆட்சி  செய்ய நேர்ந்த காரணத்தால் நம்மக்களுக்கு ஏற்பட்ட விஞ்ஞான அறிவும், பகுத்தறிவு சுதந்திரமும் மக்களை சிந்திக்கச் செய்ததன் பயனாய் மக்கள் இன்று அந்தப் பகுத்தறிவுக் கண்களால் குறளைப் பார்க்க ஆரம்பித்ததால், இன்று குறளின் பெருமை மக்களுக்கு விளங்குகிறது.

குறள் இதுவரை ஒரு மத நூலாக, பக்தி நூலாக, பார்ப்பன நூலாகவே இருந்து வந்தது. சைவன் குறளை தங்கள் மதத்து நூல் என்றும், வைணவன் தங்கள் மதத்து நூல் என்றும், சமணன் தங்கள் மதத்து நூல் என்றும் சுய வயப்படுத்தி அதை ஒரு புராணமாகவும் பக்தி நூலாகவும் கருதியும் பிரச்சாரம் செய்தும் வந்தார்கள்.

அது மாத்திரமல்லாமல் குறளுக்கு ஆரிய மத சம்பிரதாயப்படியே உரை எழுதப்பட்டு, அந்த உரையையே தமிழ் மக்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ் சமயவாதிகள் ஆகிய எவரும் ஒப்புக்கொண்டு அந்த உரையே பள்ளிப்பாடமாகவும் ஆக்கப்பட்டு அதை மற்றொரு மனுதர்ம சாஸ்திரமாகக் கொள்ளும்படி செய்யப்பட்டுவிட்டது.

இந்தநிலையில்ஆக்கப்பட்டகுறளானதுபாரதம்,  இராமாயணம், கீதை, மனுதர்ம சாஸ்திரம் ஆகியவைகளைவிட எப்படி உயர்ந்ததாகக் கருதப்பட முடியும்?

குறளுக்கு மதிப்புரை எழுதியவர்களும், சில தமிழ்ப் பெரியார்களும் அதாவது, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்றவர்களும் குறளுக்கும் மற்ற மேற்கண்ட ஆரிய நூல்களுக்கும் உள்ள பேதத்தைத் தெளிவுற எடுத்துக்காட்டியிருந்தாலும், இந்த நாட்டில் பார்ப்பனர்களுக்கு இருந்து வந்த ஆதிக்கமானது குறளையும் ஆரியத்தையும் பிரித்துக் காணுவதே மாபெரும் துவேஷ புத்தி என்பதான நிலையை ஏற்படுத்தி விட்டதால் தமிழ் புலவர்கள் என்று வெளிவந்த எல்லா தமிழர்களும் ஆரியத்திற்கு அடிமையாகி குறளை மனுதர்ம சாஸ்திரம் போலவும், கீதைக்கு அடுத்த பெருமை பொருந்தியது போலவும் ஒப்புக்கொண்டு ஆரியக் கூலிகள் அதுபோல் பிரச்சாரம் செய்து வந்து விட்டார்கள்.

இந்த நிலையில் குறளுக்கு ஒரு தனிமதிப்பு எப்படி ஏற்பட முடியும்? ஒரு முஸ்லிமும் ஒரு கிறித்தவனும், ஒரு பகுத்தறிவுவாதியும் - ஒரு நாஸ்திக ஞானமுடையவனும் அதாவது ஒரு தத்துவவாதியும் இப்படி ஆக்கப்பட்ட குறளை ஏன், எதற்கு ஆக மதிக்க முடியும்?

அதிலும் ஆரிய மதமான இந்து மத பக்தன் ஒருவனுக்கு,  தன்னை ஆரிய இனம் என்று கருதி ஆரிய அடிமையாய் இருப்பவனுக்கு குறளை, பாரத இராமாயணத்தைவிட அதிகமான மதிப்பு தந்து எப்படி மதிக்க முடியும்?

ஆதலால் மக்களுக்குள் இன்று தோன்றி யிருக்கும் பகுத்தறிவு உணர்ச்சியும், திராவிட இன உணர்ச்சியும், தத்துவ வளர்ச்சியும் அதாவது ``நாஸ்திக’’ புத்தியுமே தான் குறளை ஆரிய வேத சாஸ்திர புராண இதிகாசத்தில் இருந்தும், அவை களை ஆதாரமாகக் கொண்ட தேவார, திருவாசக, பிரபந்தம் முதலிய சமயப் பக்தர்களின் கவிகளில் இருந்தும் பிரித்துக் காண முடிந்தது. இந்த முடிவின் காரணமாகவே குறளின் மேன்மை திடீரென்று விளங்கவும் மக்கள் பாராட்டவும் மதிக்கவும் அதனிடம் அன்பு செலுத்தவும் முடிந்தது.

குறள் பக்தி நூலல்ல;  கடவுளைக் காட்டும் எந்தவிதமான மத நூல் அல்ல, மதப் பிரச்சாரம் செய்யும் மதக்கோட்பாடு நூலல்ல. ஆனால், வேதசாஸ்திரம், புராணம், இதிகாசம், தேவாரம், திருவாசகம் பிரபந்தம் முதலிய எவையும் மத நூல்;  கடவுள் பெருமையைக் கூறும் வேத சாஸ்திர நூல்கள்;  பக்தி ஊட்டி மோட்சத்திற்கு அனுப்பும் பக்தி நூல்களே ஆகும்.

குறள் அப்படி அல்ல;  குறள் அறிவு நூலே ஆகும். மற்றும் கடவுளை அடைய மோட்சத்திற்கு போக மனிதனுக்கு ஒழுக்கம் தேவையில்லை. ஏனெனில் விபசாரம் புரட்டு பித்தலாட்டம் வஞ்சகம், சூது, கொலை, கொள்ளை முதலிய கூடா ஒழுக்கமான காரியங்கள் செய்வதும், பக்தியின் பாற்பட்டதாகவும் மோட்ச சாதனமாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன, பக்தி நூல்களிலும் சாஸ்திரங்களிலும் மத ஒழுக்க நூல்களிலும்!

இப்படிப்பட்ட காரியங்கள் எதுவும் வெறுக்கப்பட்டு உண்மையான ஒழுக்கத்தை அதாவது யாவருக்கும் பொருந்தும் சமத்துவமான ஒழுக்கத்தை போதிப்பதாக இருக்கின்றது குறள். ஆதலால்தான் குறளை பக்தி நூலல்ல, ஆஸ்திக நூலல்ல, மூடநம்பிக்கை நூலல்ல, அது ஓர் அறிவு நூல் என்றும், எல்லா மக்களும் ஏற்கக்கூடிய எல்லாமக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒழுக்க நூல் என்கின்றேன்.

எந்த நூலை எடுத்துக்கொண்டாலும் அதன் மதிப்பு அந்த நூலின் பயனை அளவாக கொண்டதே ஒழிய, அதை ஆக்கினவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மை’’ என்பதையோ, இலக்கண இலக்கிய அளவையோ அமைப்பையோ ``அற்புதத்’’ தன்மையையோ அளவாகக் கொண்டதாக ஆகாது?

ஆகவே, குறள் வெறும் ஒழுக்கத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய அனுபவபூர்வமான பிரதியட்ச வழியையும் கொண்டதாகும்.

அறிவு பெற்றவன், அறிவையே முதன்மையாகக் கொண்டவன், ஆலோசித்துப் பார்க்கும் ஆராய்ச்சித் தன்மை கொண்டவன் எவனும் குறளை மதித்தே தீருவான். குறளைப் பாராட்டியே தீருவான். சிறிதாவது பின்பற்ற குறளை வழிகாட்டியாய்க் கொண்டே தீருவான்.

ஆதலால் குறளுக்கு இன்று திராவிடர்கள் சிறப்பாக தமிழ் மக்கள் இடையில் பெருமையும் செல்வாக்கும் இருக்கிறது என்றால் இதுதான் காரணம். இந்தப் பெருமைக்கும் செல்வாக்குக்கும் நான் சிறிதும் காரணமான வனாகமாட்டேன் என்றாலும், எனக்கு ஏதாவது ஒரு சிறு பங்காவது கொடுக்கவேண்டுமென்று அறிஞர்கள் யாராவது நினைப்பார்களானால், அந்த சிறு பங்கு இந்த விஷயங்களை நானும் எனது கழகமும் மானாவமானத்தைக் கவனிக்காமல், சிறுமை - பெருமையைக் கவனிக்காமல்,  லாப, நஷ்டங்களை கவனிக்காமல், கஷ்ட சுகங்களை கவனிக்காமல், எழுதியும், பேசியும் வருகிறோமே அதற்கு ஆக இருக்கலாம். ஆனால், அதுவும் இன்று எங்களால்தான் முடிகிறது என்று சொல்ல முடியாது. அநேகர் புறப்பட்டு விட்டார்கள், இந்த வேலைக்கு. ஆதலால், குறளின் பெருமையைப் பற்றி இனி பேசுவதை நிறுத்திவிட்டு, இனி அதை காரியத்தில் கொண்டு வரும் பணியில் பிரவேசிக்கவேண்டியது தமிழர் - திராவிடர் ஒவ்வொருவரின் கடமையுமாகும். ஏனெனில், குறளுக்குப் பெருமை ஏற்பட்டு விட்டதால், இன்று குறளின் மூலக் கொள்கைகளுக்கு மாறுபாடாக நடந்து வருகிறவர்கள் எல்லாம்கூட இன்று குறள் பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

உதாரணமாக, சைவர் -வைணவர் பார்ப்பனர் - தாசிகள் - வியாபாரிகள் - வக்கீல்கள் - மந்திரிகள் - சட்டசபை மெம்பர்கள் - சில காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் குறளைப் பாராட்டவும், குறள் பிரச்சாரம் செய்யவும் புறப்பட்டுவிட்டார்கள். இந்தக் கூட்டத்தாருக்கும், குறளுக்கும் எதில் ஒற்றுமை என்பது நமக்கு விளங்கவில்லை.

ஒரு மனிதன் தன்னை இந்து என்றும், ஆரிய தர்ம புராணங்களை பின்பற்றும் சமயவாதி என்றும் சொல்லிக்கொண்டு, புராணக் கூற்றுப்படி, மனு கொள்கைப்படி நடந்துகொண்டு, அவரும் குறளைப் பாராட்டுகிறார், போற்றுகிறார், பிரச்சாரம் செய்கிறார் என்றால் இதற்கு ஏதாவது பொருள் உண்டா? இக்காரியத்தில் அறிவுடைமையோ அல்லது நாணயமோ உண்டா என்று கேட்கிறேன். குறள் பிரச்சாரம் போதும். இனி அது பயன்படும் காரியமும், குறளுக்கு முரண்பாடற்ற காரியமும், குறள் வெற்றி பெறும் காரியமும் ஒவ்வொரு குறள் பாராட்டுவாதியும் செய்யவேண்டும்.

எனக்குத் தெரிகிறது, சில குறள் பாராட்டு பக்தர்கள் நமது மேடையிலும் காணப்படுவது - கம்பராமாயண, பாரத, புராண மேடைகளிலும் காணப்படுகிறது. வள்ளுவரையும் பாராட்டுவது, கம்பனையும் -வால்மீகியையும் பாராட்டுவது; குறளையும் காலட்சேபம் செய்வது, திருவிளை யாடல், பெரிய புராணங்களையும் காலட்சேபம் செய்வது; குறளில் நுண்பொருள் காணுவது, தேவார திருவாசக பிரபந்தங்களில் நுண்பொருள் கண்டு கண்ணீர் சொரிவது.

குறளை தலைகீழ் பாடம் செய்து விஞ்ஞானத் துக்குப் பொருந்த பொருள் உழைப்பது, சாம்பல் பூச்சுடன், கொட்டை கட்டிக்கொண்டு கோவிலுக்குச் சென்று குழவிக் கல்முன் நின்றும்படுத்தும் - புரளுவது; ஆரிய மத தர்ம பண்டிகைகளைக் கொண்டாடுவது; ஆரிய மதக் குறிகளை அணிந்து மத வேஷத்துடன் திகழ்வது.

யாராயும் இருந்துகொண்டு, எந்த வேஷமும் போட்டுக் கொண்டு, என்ன காரியமும் செய்து கொண்டு குறளைக் கூறிக்கொண்டு திரிவ தென்றால் இவர்கள் உண்மையில் குறள் பக்தர்கள் ஆவார்களா?

ஒரு மனிதன் உண்மையான குறள் பக்தனாக இருப்பானானால், அவன் குறளுக்கு எதிரான எல்லாக் கொள்கைக்கும் எதிரானவனாக இருக்கவேண்டும். எந்தக் கருத்துகளை - கொள் கைகளை எதிர்க்க, ஒழிக்க குறள் ஏற்பட்டதோ - குறளைப் பயன்படுத்துகிறானோ, அந்தக் கருத்துகளை எதிர்த்து, கொள்கைகளை ஒழிக்க முயற்சிப்பவனாய் இருக்க வேண்டும்.

அதற்கு குறள் பக்தர்கள், குறளைப் பாராட்டுகிறவர்கள், குறள் கொள்கையைப் பரப்புகிறவர்கள், குறளுக்கு ஆக தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்தவர்கள் குறள் வெற்றிக்கு ஆக சில ஆக்க வேலை செய்ய வேண்டியது எப்படி அவசியமோ அதுபோல் குறள் வெற்றிக்கு எதிரான காரியங்கள், கருத்துகள், ஆதாரங்கள், நூல்கள் ஆகியவை ஒழிய அழிவு வேலையும் கூடவே செய்பவர்களாக இருக்கவேண்டும்.

எந்த ஒரு நல்ல, உயர்ந்த தத்துவங்கள் கொண்ட காரியத்திற்கும் நிர்மாண வேலை, நாச வேலை ஆகிய இரண்டும் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும். நாச வேலையை விட்டுவிட்டு நிர்மாண வேலை மாத்திரம் செய்தால் எதிர் சாதனங்கள், நிர்மாணத்தை அழித்துக்கொண்டே இருக்கும்.

கடவுளைக் காக்க கடவுளுக்கு எதிரான நாஸ்திகம் அழிக்கப்பட வேண்டியது எவ்வளவு அவசியமோ, பகுத்தறிவைக் காப்பதற்கு மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, சைவ, வைணவ, ஆரிய மதங்களைக் காப்பதற்கு பவுத்த மதத்தை அழிக்க வேண்டியிருந்தது எவ்வளவு அவசியமோ, தொழிலாளி ஆட்சி ஏற்பட முதலாளிகள் ஆட்சி அழிபடவேண்டியது எவ்வளவு அவசியமோ, முதலாளிகள் ஆட்சி ஆதிக்கம் நடைபெற தொழிலாளிகள் இயக்கம் அழிபட வேண்டியது எவ்வளவு அவசியமோ, தனி உடைமைவாதிகள் காப்பாற்றப்படுவதற்கு பொதுவுடைமை வாதிகளை நாசமாக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, ஆரிய ஆதிக்க மென்னும் காங்கிரஸ் ஆட்சி நிலைப்பதற்கு - ஆதிக்கத்திலிருப்பதற்கு திராவிடர் கழகம் ஒழித்துக்கட்டப்படவேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே குறள் கருத்து, கொள்கை ஆகியவைகளை மக்களிடம் பரவச் செய்ய அது அனுபவத்தில் நடைமுறையில் கொண்டு வருவதற்கு ஆரிய சாஸ்திர - புராணங்கள் அவைகளை பிரபல பிரச்சாரமாகக் கொண்ட தேவார, திருவாசகம், பிரபந்தங்கள், அந்த கருத்துகளை செய்கைகளை நடப்பாகக் கொண்ட மதக் கோட்பாடுகள், அவைகளின் மீது நிறுத்தப்பட்டிருக்கின்ற கடவுள்கள் முதலிய வைகள் ஒழியாமல் அழியாமல் - நாசமாக்கப்படாமல் எப்படி குறள் கொள்கை அனுபவத்தில் நடைமுறையில் ஆதிக்கம் செய்யமுடியும்?

ஆகவே, குறள் விஷயத்தில் குறளைப் பிரச்சாரம் செய்து மக்களிடையே பரப்புவது, குறள் நிர்மாண, குறள் ஆக்கவேலைகளாகும். அதற்கு (குறளுக்கு) எதிரான மேற்கண்ட கருத்துகளை, காரியங்களை, நூல்களை மறையச் செய்வது என்பது குறள் ஆக்கத்திற்கு ஆகச் செய்யப்படும் அழிவு வேலையாகும். ஒரு காரியத்திற்கு ஆக ஆக்க வேலையும் அழிவு வேலையும் ஒரு உடலுக்கு இரண்டு கைகளைப் போன்றதாகும். இரண்டு கையும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை உண்டாவதுபோல் - காரியம் நடைபெறுவது போல் - ஆக்கமும் அதற்கெதிரானவைகளின் அழிவும் சேர்ந்தால்தான் காரியம் வெற்றிபெறும். அழிவில் வெற்றி பெற்றவன்தான் ஆக்கத்தில் வெற்றிபெறுவான்.

ஆகவே குறளைப் பரப்ப குறளின் மேன்மையை எடுத்துச் சொல்வதும், குறள் மாநாடு கூட்டுவதும், குறள் புத்தகங்கள் - பத்திரிகைகள் நடத்துவதும் போலவே குறள் கருத்துக்கு எதிரான ராமாயணம், பாரதம், கீதை, மனுதர்மம் முதலாகியவைகளின் கேடுகளைப் பற்றி பிரசாரம்செய்ய, இவை ஒழிப்பு மாநாடு, இந்த கருத்துகளை நடப்புகளை எடுத்துக் கூறுதல் இந்த ஆதாரங்கள் ஒழியும் படி செய்தல், அதன் நடப்புகளை எதிர்த்து மக்களிடையிலிருந்து மறையும்படி செய்தல் முதலான காரியங்களை மக்கள் செய்ய வேண்டாமா?

குறளுக்கு எதிரான காரியங்களாகிய மேற்கண்ட தன்மைகளைப் பரப்புகிறவர்கள் - அதாவது மனுதர்மம், புராண, இதிகாசம் ஆகிய வைகளை பரப்புகிறவர்கள் அதற்கு ஆக எவ்வளவு முயற்சியுள்ள ஆக்கவேலையும், அதன் எதிர்ப்புகளை அழிக்கும் அழிவு வேலையும் செய்கிறார்கள் என்பதை சற்று கவனியுங்கள்.

முதலாவதாக பார்ப்பனப் பிரசாரங்களையும், பார்ப்பனப் பத்திரிகைகளின் பிரச்சாரங்களையும், பார்ப்பன அதிகாரிகள், வக்கீல்கள், டாக்டர்கள், ஓட்டல்காரர்கள், புரோகிதர்கள் அர்ச்சகர்கள் முதலியோரின் வேலைகளையும் சற்று கவனித்துப் பாருங்கள். அவர்கள் நம்மையும், நமது முயற்சிகளையும் நமது பண்பு, முன்னேற்றம், சுதந்திரம், உரிமை ஆகியவைகளை ஒழிப்பதையும் அழிப்பதையுமே அதாவது, மாபெரும் நாச வேலையையே தங்கள் ஆக்கவேலைப் பணியாகக் கொண்டிருக்கிறார்கள்.

அய்க்கோர்ட் ஜட்ஜ் பார்ப்பனர் முதல் நமது முயற்சிகளை அழிக்கும் வேலையையே தங்கள் முக்கிய வேலையாகக் கொண்டு நடக்கிறார்கள்.

இராமாயணம், கீதை, பாரதம், புராணங்கள் பிரச்சாரமாகத்தானே இருக்கின்றது அவர்கள் வாழ்வு. பார்ப்பனர்கள் உத்தியோக முறையில் நமக்கு எவ்வளவு கேடு செய்கிறார்கள்? அவர் களது ஆட்சியில் நமது மக்களுக்கு எவ்வளவு கேடுகள் நடக்கின்றன?

ஒரு சங்கதி எடுத்துக் கொள்ளுங்கள்; உணவு விஷயத்தில் தொழில் விஷயத்தில், நமது மக்கள் ஏழைகள் - தொழிலாளிகள் எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள்?

இந்த நாட்டில் எந்தப் பார்ப்பனருக்காவது உணவு, உடை, வீடு, வேலை, கஷ்டம், உண்டா? நாம் தான் ``6 அவுன்ஸ்’’, ``வேலை இல்லை’’, ``கூலி இல்லை’’, ``பட்டினியால் சாகிறோம்‘’, ``பிள்ளையை விற்கிறோம்‘’ என்றெல்லாம் பரிதவிக்கிறோம்.

எந்தப் பார்ப்பனக் குஞ்சுக்காவது இவற்றில் ஏதாவது ஒரு விஷயத்தில் ஒரு சிறு குறைபாடோ அதிருப்தியோ கவலையோ உண்டா? காரணம் என்ன? அவர்களுக்கு மாத்திரம் எப்படி இவ்வளவு கஷ்ட காலத்திலும் அவ்வளவு நல்ல வாழ்வு நடந்து வருகிறது?

இதெல்லாம்,  மதமும் - மனுதர்மமும், இராமாயண, பாரத, கீதையும் தானே? அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? நிற்க. இராமாயணத்திற்கு நம் நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு மதிப்பு இருக்கலாமா? இராமனும், கிருஷ்ணனும், சீதையும், விபீஷணனும், அனுமாரும் நமக்குக் கடவுள்களாக இருக்கலாமா?

தேவாரம், திருவாசகம், பிரபந்தம் நமக்குப் பாராயணங்களாக இருக்கலாமா? நாமமும், விபூதிப் பூச்சும் நமக்கு பக்திச் சின்னமாகவும் இருக்கலாமா, அதுவும் இந்தக் காலத்தில்? குறள் பக்தர்களில் எத்தனை பேர் இவைகளை எதிர்த்து இவைகள் மறைந்து ஒழிய வேலை செய் கிறார்கள்? குறளைப் பேசிக்கொண்டு இந்த வேலைகளையும் செய்துகொண்டு இருப்பானானால் வலது கையால் செய்யும் காரியத்தை இடது கையால் அழித்துக்கொண்டு போகிறான் என்றுதானே அர்த்தம்.

அட முட்டாள்தனமே! இராமாயணம் நமக்கு ஒரு தெய்வ நூலா? அதில் என்ன இருக்கிறது? திராவிட நாசத்துக்கு வழிகாட்டியாகக் கற்பிக்கப்பட்ட நூல் அது. அதற்குத் தலையும் இல்லை, காலும் இல்லை. தேவர்களுக்கு ஆக அசுரர்களை, அரக்கர்களை, இராக்கதர்களை அழிக்க கடவுள் மனிதனாக - இராமனாகப் பிறந்து அரக்க வம்சத்தை அழித்தார் என்பதுதானே சுருக்கக் கருத்து. தேவர்கள் யார்? அசுரர்கள் யார்? எந்தத் திராவிடனாவது - தமிழனாவது சிந்தித்தானா? இராமயணப்படியே பார்த்தாலும் இராட்சதர்கள் என்கிற ஒரு ஜாதியோ இனமோ பிறவியோ காணப்படவில்லையே, தேவர்களுக்கு எதிரிதானே இராட்சதன் - அசுரன் - அரக்கன் - சூரன்களாகப் பெயரிடப்பட்டிருக்கிறார்கள்.

தேவர்களுக்கு எதிரிகள் யார்? மனு தர்மப்படி நடக்காதவன், வர்ணாசிரமத்தை ஒப்புக்கொள்ளாதவன், பார்ப்பனர்களுக்கு அடிமையாக இல்லாதவன் என்றுதானே புராண இதிகாசங்களில் மனுதர்மத்தில் கூறப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக விபீஷணனை எடுத்துக்கொண்டால் தேவர்கள் எங்கே? ராட்சதர்கள் அனுமார்கள் எங்கே? இவர்கள் எல்லோரும் சகோதரர்களுக்கு துரோகம் செய்து எதிரிகளிடம் சரணாகதி அடைந்து கூலி பெற்றதாலேயே தேவர்களுக்கு மேம்பட்ட ஆழ்வார்களாக ஆகி இருக்கிறார்கள். சென்ற வாரம் 2 நாள் சுதேசமித்திரனைப் பார்த்தேன். அதில் 1 நாள் மித்திரனில் விபீஷணன் சரணாகதியும். மற்றொருநாள் மித்திரனில் விபீஷணன் பட்டாபிஷேகமும் என்கிற தலைப்புகளில் 4 கலம் 5 கலம் இராமாயண பிரச்சாரம் இருந்தது. இதன் கருத்து என்ன வாய் இருக்க முடியும்? நீங்களே யோசித்துப் பாருங்கள். அதுவும் இந்த சமயத்தில் பார்ப் பனர்களுக்கு அடிமையானால் சரணாகதி அடைந்தால் பதவி கிடைக்கும் பட்டாபிஷேகம் பெறலாம் என்பதுதானே கருத்து.

அந்த விசயங்களை பார்ப்பனர் நம் மக்களுக்கு பச்சையாய் சொல்லுவதற்கு பதிலாக, முதல் நாள் சரணாகதி படலமும், 2 ஆம் நாள் பட்டாபிஷேகப் படலமும் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்குப் பேர் என்ன? நம் ஆக்க வேலைகளை அழிப்பதுதானே அவர்கள் நோக்கம். நாம் அந்த ஆயுதங்களை சாதனங்களை அழிக்க வேண்டாமா?

விபீஷணன் யார்? இராவணன் தம்பி - இராவணன் ஆபத்தான நெருக்கடியான நிலைமையில் இருக்கும்போது அவன் இராஜ்யத்தை அடைவதற்காக துர் எண்ணங் கொண்டு அண்ணனின் எதிரிக்கு, அண்ணனை காட்டிக் கொடுப்பதற்கு ஆக துரோக வஞ்சக எண்ணத்துடன் அண்ணன் எதிரியிடம் சரணாகதி அடைந்து காட்டிக் கொடுத்து கூலி பெற்றவன்தானே? இதை யாராவது மறுக்க முடியுமா? மறுக்க ஆசைப்படுபவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன் விபீஷணனைப் பற்றி மேலே நான் குறிப்பிட்ட சொற்கள் நான் சொல்லுவதல்ல, ``விபீஷணன் இராஜ்யத்திற்கு ஆக என்னிடம் வந்திருக்கிறான்’’ என்பதை மிகத் தெளிவாக இராமன் கூறுகிறான். ``என்றால் இராவணனை நாசமடையச் செய்து அவன் இராஜ்யத்தைத் தான் அடைய வேண்டுமென்று விரும்பி என்னிடம் வந்திருக்கிறான்’’

``தனது காரியம் கெட்டு விடுமே என்கின்ற பயத்தால் எனக்குக் கெடுதி செய்யாமல் இருப்பான் ஆகையால் இவனை சேர்த்துக் கொள்ள லாம்.’’

``இவன் பலவானான இராவணனிடமிருந்து தனக்கு ஆபத்து வருமே என்று அறிந்து பயந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இங்கே வந்திருக்கிறான் என்று இவனுடைய தொனியாலும் வார்த்தைகளாலும் தெரிகிறது. ஆதலால், இவனை ஒப்புக் கொள்ளுவதால் யாதொரு கெடுதலும் வராது.’’

``தனது மூத்தவன் துஷ்டனாயிருந்தாலும் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்கின்ற எண்ணம் எல்லோருக்கும் வராது.’’

``உடன்பிறந்தவர்கள் எல்லோரும் பரதனைப்போல் ஆவார்களா?

``ராஜ்யம் பரதனுக்கு நியாயமாய் கிடைத்ததாகும். அதை வேண்டாம் என்று கருதி என்னைக் கண்டுபிடித்துவந்து எனக்கு கொடுப்பது என்றால் இது பரதனைத் தவிர வேறு யார் செய்வார்கள்?’’ என்று சொல்லி விபீஷணனை ஏற்றுக்கொண்டு இருக்கிறான். இந்த வாக்கியங்கள் இந்தப்படியே வால்மீகி ராமாயணம் யுத்தகாண்டம் சருக்கம் 17-இல் இருக்கிறது. (சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு யுத்த காண்டம் பக்கம் 76, 77-இல் உள்ளதாகும்.)

சுக்ரீவன் சொல்கிறான்: இந்த விபீஷணன் நன்றியற்றவன். தன் தமையன் இப்படிப்பட்ட ஆபத்தில் இருக்கும் போது அவனைக் கைவிட்டவன் - எவனைக் கைவிட மாட்டான்? என்கிறான்.

அனுமான் சொல்லுகிறான்: இராவணனுடைய முயற்சி தோல்வி அடையுமென்பதையும் தங்கள் முயற்சி வெற்றி அடையு மென்பதையும் தாங்கள் வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு இராஜ்யத்தைக் கொடுத்ததையும் பார்த்து, தானும் இலங்கா இராஜ்யத்தை அடையவேண்டுமென்ற எண்ணத்துடன் இங்கே வந்திருக்கிறான். ஆகவே இவனை அங்கீகரிக்கலாம் என்கிறான்.

சாம்பவன் கூறுகிறான்: விபீஷணன் நம்மை வந்தடைவதற்கு ஏற்ற காலமல்ல இது. தனது எஜமானும் சகோதரனுமான இராவணனுக்கு ஆபத்து நேர்ந்திருக்கையில் அவனைக் கைவிட இதுதானா சமயம்? எப்படி யோசித்தாலும் இவனை நம்பக்கூடாது. என்கிறான். விபீஷணன் இராமனைப்பார்த்து சொல்லுகிறான், ஸ்வாமி என்னை நம்புங்கள். ராட்சதர்களை நாசஞ் செய்வதிலும் இலங்கையைப் பிடிப்பதிலும் என் உயிருள்ள மட்டும் என்னால் கூடியதைச் செய்கிறேன். தங்கள் சைன்னியத்தில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறான்.

(சருக்கம் - 18 பக்கம் 92)

இவ்வளவு சங்கதி எதற்கு ஆக? விபீஷணன் வாயாலேயே அவன் மனதில் இருந்த பேராசை துரோகக் கருத்துகளைப் பச்சையாகக் கொட்டி விட்டான். அதாவது, இராமனும் லட்சுமணனும் நாகபாசத்தால் கட்டுண்டு மூர்ச்சையான சமயத்தில், ``இராம - லட்சுமணர்களுடைய வீரியத்தை அண்டிநான் க்ஷேமமடையலாம் என்று இருந்தேனே, என் எண்ணங்கள் எல்லாம் வீணாகி ராஜ்யம் கிடைப்பதும் போய்விட்டதே, இராஜ்யத்தை இழந்து பரிதவிக்கிறேனே, இனி எனக்கு விபத்து ஏற்படுமே. என் சத்துருவான இராவணன் வெற்றி பெற்றுவிட்டானே!’’ என்று புரண்டு அழுகிறான்.

``சுக்கிரீவன் தேற்றுகிறான்; ``விபீஷணா, துக்கப்படாதே!  இலங்கா இராஜ்யம் உனக்குக் கிடைப்பதில் சந்தேகமில்லை’’ என்று சொல்லி சமாதானம் சொல்லித் தேற்றினான்.

(இவை வால்மீகி இராமாயணம் யுத்த காண்டம், சருக்கம் 49 இல் 203-ஆம் பக்கம்)

இது மாத்திரமல்லாமல் அண்ணன் உயிருடன் இருக்கும்போதே அவன் இராஜ்ஜியத்தை அண்ணன் எதிரிகளால் தனக்கு பட்டாபிஷேகம் செய்யும்படி செய்துகொண்டு, அண்ணனின் உளவுகளையெல்லாம் இராமனுக்குச் சொல்லிக் கொடுக்கிறான். இப்படியான துரோகியும் அயோக்கியனுமான விபீஷணனைப் பார்ப்பனர்கள் அந்தக் குணங்களுக்கும் காரியங்களுக்கும் ஆகவே எவ்வளவு போற்றி புகழ்ந்து விபீஷணத் தன்மையை பிரசாரம் செய்கிறார்கள்? அதனால் எத்தனை விபீஷணர்களை உண்டாக்கிக் கொண் டார்கள். மற்றும் இராமாயணக் கதை முழுவதும் இதுபோலவேதான் துரோகம், வஞ்சனை மயமாய் இருக்கும்.  இது மாத்திரமல்லாமல் பாரதம்,  கீதை முதலியவைகளும் இப்படியே ஆபாசங்களாக இருக்கும். கீதையைப் பற்றி பேசுகையில் டாக்டர் அம்பேத்கர் ``கீதை முட்டாள்களின் பிதற்றல்கள்’’ என்றார். இவற்றை யெல்லாம் நாம் நம்மிட மிருந்து அழிக்க வேண்டாமா? குறளுக்கு மதிப்பு வந்து விட்டது என்றால், மற்றவைகளை - அதாவது குறளுக்கு எதிரானவை ஒழிய வேண்டும். ஆகவே அவற்றை ஒழியுங்கள். நாமத்தையும் விபூதியையும் நாட்டை விட்டு விரட்டுங்கள். 1951 ஆம் ஆண்டு குறள் பிரச்சாரமாக இவற்றைச் செய்யுங்கள்.’’

6.1.1951 அன்று திருச்சி தென்னூர் குறள் மாநாட்டில் தந்தை பெரியார் உரை (`விடுதலை', 13.1.1951).

Friday 21 April 2017

நான் கண்ட புரட்சிக்கவிஞர் - 29.04.1971

நான் கண்ட புரட்சிக்கவிஞர்



நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது. கடவுளைப் பற்றி பாடுவதும், புராணங்கள், ஸ்தல புராணங்கள் பாடுவதும், புலமைக்கு அழகு என்று எண்ணி வந்தார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள், பட்டினத்தார், தாயுமானவர், ராமலிங்கர் இவர்கள் எல்லாம் தமிழ்ப் படித்த புலமையினால் சாமியார் ஆனவர்களே. ராமனுடைய கதையைப் பாடியதற்காக கம்ப நாட்டாழ்வார் ஆனான்.



நான் போட்ட போட்டில் தப்பினார்

அதிகம் போவோனேன்! என் கண்ணெதிரே வாழ்ந்த பிரபலமான தமிழ்ப் புலவர் வேதாச்சலம். “சாமி வேதாச்சலம்’’ ஆகி, மறைமலையடிகள் ஆகவில்லையா?

நாடகங்களுக்குப் பாட்டு, கதை முதலியன எழுதிவந்த சங்கரன் என்பவர் சங்கரதாஸ் சுவாமிகள் ஆகவில்லையா?

முத்துசாமி கவிராயர் அவர்கள் முத்துசாமி சாமிகள் ஆகவில்லையா? இவர்களையெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். நன்கு பழக்கமானவர்கள். நமது திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் சாமியாராகத்தான் போக முற்பட்டார். நான் போட்ட போட்டிலே அவர் தப்பித்தார்.

முதன்முதலாகப் புரட்சி!

நமது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்தாம் முதன்முதலாக புரட்சிகரமான கருத்துகளை, பகுத்தறிவுக் கருத்தகளை வைத்துப் பாடியவர் ஆவார். அவரே என்னிடத்தில் கூறினார், “அய்யா, நமது சுயமரியாதை இயக்கத்திற்கு நான் வருவதற்கு முன்பு மற்ற புலவர்களைப் போலத்தான் நானும் இருந்தேன்.  ‘சுப்பிரமணிய துதியமுது’ போன்ற பாடல்களைத்தாம் பாடினேன்.’’ என்று கூறி இசையுடன் பாடியும் காண்பித்தார்.

பீரங்கி வைத்துப் பிளப்பது என்னாள்?  

கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எல்லாத் துறைகளிலும் பகுத்தறிவுக் கருத்துகளை, சீர்திருத்தக் கருத்துகளை அமைத்து ஆணித்தரமாகப் பாடியுள்ளவர் ஆவார். புரட்சிக்கவிஞர் என்பதற்கு ஏற்ப அவரது பாட்டுகள் இருப்பதைக் காணலாம்.

“சிறீரங்கநாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் என்னாளோ?’’ என்று பாடியிருக்கின்றவர் ஆவார் அவர்.

வள்ளுவனை வென்றவன்

வள்ளுவனைவிட புதுமையான, புரட்சியான கருத்துகளை _ மக்களை பகுத்தறிவுவாதி களாக்கக்கூடிய கவிதைகளை எழுதியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டு-கின்றன; முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும், முற்போக்கு சமுதாயத்திற்கு ஏற்றதாகவும், அவரது கவிதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு துறையிலும் சிறந்த கருத்துகளை நம்முடைய இயக்க முறையைவிட தீவிரமாகக் கூட எடுத்து விளக்கி இருக்கிறார்.

கடுகளவு அறிவுள்ளவன்கூட அவர் கவிதையைப் படித்தால் முழு பகுத்தறிவு-வாதியாகி விடுவான்.

வண்டி வண்டியாக தமிழர் பிணம் போனாலும் பார்ப்பனருக்கு எந்த குணம் இருக்கும் என்றால், இதில் எத்தனைப் பேருக்கு திவசம் செய்வார்கள் என்று கணக்குப் போடுவதாகத்தான் இருக்குமே தவிர அதுபற்றி வருத்தப்படுவதாக இருக்காது என்றும் தனக்கு எந்தெந்த வகையில் வரும்படி நிறையக் கிடைக்கும் என்றும் இப்படிப் புரட்சிகரமாக கவிதைகளை எழுதிய பாரதிதாசன் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.

- ‘விடுதலை’ - 29.04.1971

Tuesday 18 April 2017

நம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும் - 1.5.1969



நம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்!

தோழர்களே, நமக்கு நம் சமுதாய இழிவு நீங்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர, நம்மை யார் ஆள வேண்டும், ஆட்சி செலுத்த வேண்டும் என்பது முக்கிய மல்ல என்பது தான் சென்னையில், சென்ற 20-4-1969 இல் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களின் முக்கிய குறிக் கோளாகும்.

அந்நிய ஆட்சியானது எவ்வளவு நல்ல ஆட்சியாக இருந்தாலும், எவ் வளவு மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய ஆட்சியாக இருந்தாலும், இந்த ஆட்சியானது  ஒழிக்கப்பட்டுத் தங்கள் ஆட்சியானது வரவேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் ஆசையாகும்.வெள்ளைக்காரன் இந்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது, வெள்ளைக்காரன் ஆட்சியானது ஒழிக்கப்பட வேண்டும், சுய ஆட்சி வரவேண்டும் என்று (காங்கிரஸ் காரர்கள்) பார்ப்பனர்கள் முயன்ற போது, சத்தியமூர்த்தி அவர்களிடம் வெள்ளைக்காரர் ஆட்சியின் சிறப் பையும், சுய ஆட்சி ஏற்படுவதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்து விளக்கிச் சொன்னபோது, சத்திய மூர்த்தி அவர்கள் சுய ஆட்சியால் எவ்வளவு கேடு ஏற்படும் என்பது எனக்கும் தெரியும்; என்றாலும் சுய ஆட்சிதான் இந்நாட்டிற்கு வேண்டும் என்று சொன்னாரே ஒழிய, அதனால் இன்ன நன்மை என்று அவரால் சொல்ல முடியவில்லை.பல ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக இருந்து வரும் தீண்டாமை, வெள்ளையன் ஆட்சி செய்த போதும் ஒழிக்கப்படவில்லை; ஜனநாயகம், சுதந்திரம் வந்து 22 ஆண்டு கால மாகியும் இந்தத் தீண்டாமையானது ஒழிக்கப்படவில்லை என்றால், இந்த ஆட்சியில் நாம் எதற்காகத் தீண்டப் படாத மக்களாக இருந்து கொண் டிருக்க வேண்டும்? அதற்கென்ன அவசியம் என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.

நம் ஜனநாயகம், சுதந்திர ஆட்சி யின் மூலம் இந்தத் தீண்டாமையை ஒழிக்க முடியாது. இப்போதிருக்கின்ற இந்த அரசமைப்புச் சட்டத்தின் மூலமும் ஒழிக்க முடியாது என்பதால், அயல்நாட்டுக்காரன் ஆட்சி வந்தா வது இந்த இழிவை, தீண்டாமையை ஒழிக்க முன்வர மாட்டானா? அவனாலாவது நம் மக்களின் இழிவு தீண் டாமை ஒழிக்கப்படமாட்டாதா? என்பதால் அயல்நாட்டுக்காரன் அந்நியன் ஆட்சி அது எவனுடையதாக இருந்தாலும், நம் இழிவைப் போக்க முன் வருகின்றவனை ஆதரிப்ப தோடு அவனை வரவேற்க வேண்டி யது நம் கடமை என்கின்றோம்.அந்நியன் ஆட்சி என்றதும் நம் மக்களுக்கு ஏதோ வேண்டாத உணவைத் தின்பது போல் இருக் கிறது. நம் மக்கள் மீன், ஆடு, கோழி, பன்றி இவற்றின் மாமிசங்களை உணவாக உட்கொள்ளுகின்றனர். ஆனால், மாட்டு மாமிசத்தை உட் கொள்ள மறுக்கின்றனர். மற்ற கோழி, பன்றி, மீன் ஆகிய இவற்றைப் போன்று அசிங்கமானவற்றை மாடு உண்ணவில்லை. என்றாலும், மதம் காரணமாக, மதத்திற்கு விரோதம், சாஸ்திரத்திற்கு விரோதம் என்று மாட்டு மாமிசத்தை உட்கொள்ள மறுக்கின்றார்களோ, அதுபோல இழிவு ஒழிய வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொள்கிற மக்கள்- தேசபக்தி என்கின்ற காரணத்தால், அயல் நாட்டுக்காரன் ஆட்சி என்றதும் பயப் படுகின்றனர். இத்தனை காலமாக நமக்கிருந்த தேசபக்தியால், தேசாபிமானத்தால் நம் இழிவு நீக்கப்படவில்லை; தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என்னும் போது, இந்த தேசபக்தியாலும், தேசாபிமானத்தாலும் நாமடைந்த பயன் மானமற்றவனாக, இழிமகனாக இருப்பது தானா? என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.இந்தத் தீண்டாமையானது அறவே ஒழிய வேண்டுமானால், நமக் கிருக்கிற இந்தக் கடவுள் ஒழிக்கப்பட வேண்டும்; மதம் ஒழிக்கப்பட வேண்டும்; சாஸ்திர, சம்பிரதாயங்கள் ஒழிக் கப்பட வேண்டும்; இதிகாச, புராண தருமங்கள் ஒழிக்கப்பட வேண்டும். இவை இருக்கிற வரையிலும், இந்த டில்லி ஆட்சி இருக்கிற வரையிலும் தற்போதிருக்கிற இந்த அரசமைப்புச் சட்டம் இருக்கிற வரையிலும், இந்தப் பார்ப்பான் இருக்கிற வரை, பார்ப்பானின் சித்திரம் இருக்கிறவரை இந்தத் தீண்டாமையானது ஒழிக்கப் படவே முடியாது.

இன்று இங்கு இருக்கின்ற இந்த ஆட்சி நம் நாட்டு ஆட்சி; நம் தமிழர்களின் ஆட்சி. என்றாலும், இந்த ஆட்சியால் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதோடு, தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று சட்டம் கூடச் செய்ய முடியாதே! அப்படிச் சட்டம் செய்வதற்கு இந்த மந்திரிகளுக்கு உரிமை இல்லையே? மீறிச் செய்தால் அரசமைப்புச் சட்டப்படி இந்த ஆட்சியை மாற்றக்கூடிய அதிகாரம் டில்லியிடம் இருக்கிறதே! எனவே இந்த ஆட்சியால் இதனைச் செய்ய முடியாது.இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான வெற்றிச் செய்தியைச் சொல்ல வேண்டும். சமீ பத்தில் நடைபெற்ற 73 நகரசபைத் தேர்தல்களில் 56 நகரசபைகளில் தி.மு. கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. மீதி 9 நகர சபைகள் அப்படியும், இப்படியுமாக இருக்கின்றன. பொதுவாகப் பார்த்தால் காங்கிரஸ் மிகக் கீழ்நிலைக்கு, இழிதன்மைக்குப் போய் விட்டது; அது மாற்றமடைய வேண்டும்.எந்தக் கட்சி ஆட்சியில் இருக் கிறதோ, அந்தக் கட்சி நகர சபையில் வருவது தான் நல்லது; ரகளை இல்லாமல் காரியம் நடக்கும்; அப்படியில்லாமல் வேறு கட்சி நகர சபையில் வந்தால், ரகளைக்குதான் நேரம் இருக்குமே தவிர, காரியம் ஒன்றும் நடைபெறாது; எனவே நடக்க வேண்டிய முறைப்படிதான் நடந்திருக் கிறது. என்றாலும், நம் மக்கள் ஊர் தோறும் பாராட்டுக் கூட்டம் போட்டு ஓட்டுப்போட்ட மக்களைப் பாராட்டுவதோடு, தி.மு.க., ஆட்சியைப் பாராட்ட வேண்டும்.அத்தோடு இந்த ஆட்சியிடம் நாம் எதிர்பார்ப்பது, செய்யச் சொல்ல வேண்டியது, நம் மக்களுக்குரிய ஜாதி, மத விகிதாச்சாரப்படிப் பதவிகள், உத்தியோகங்கள், உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தானாகும்; இவற்றை வலியுறுத்த வேண்டும்.

இந்த மந்திரி லஞ்சம் வாங்கினான்; அந்த மந்திரி குடித்தான்; அவன் பொம்பளையோடு போனான் என்பதெல்லாம் சாதாரணமானது. ஜனநாயகத்தில் லஞ்சம் என்பது சாதாரணம்; இதுவரை இலஞ்சம் வாங்காமல் இருந்தவன் எவன்? பணமாக வாங்க வில்லை என்றால் ஓட்டாவது லஞ்சம் வாங்கித்தானே இருப்பான்? எனக்கு ஓட்டுப் போட்டால் இன்னது கொடுக்கின்றேன், இன்னது செய் கிறேன் என்று உத்தரவாதம் கொடுத்துத் தான் ஓட்டுப் பெற்றிருப்பான். பதவிக்கு வந்ததும் ஓட்டுப் போட்டவன் தயவு வேண்டும் என்பதால், அவனுக்கு ஏதாவது வசதி செய்து கொடுத்திருப்பான். இது ஜனநாயகத்தில் சாதாரணமாக நடக்கக் கூடியதே யாகும். இதை ஒரு பெரிய குற்றமாகவோ, குறையாகவோ கருத வேண்டிய அவசியமில்லை. இந்த ஆட்சியால் நன்மை என்ன என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.இந்த அரசாங்கம் மக்களுடைய ஆதரவு இருக்கிறது என்று மேலே பார்க்காமல், எந்த மக்களுடைய ஆதரவு அதிகமிருக்கிறதோ, அந்த மக்களுடைய உரிமையைக் கொடுக்க முன்வர வேண்டும்; எந்த மக்கள் அதிகமாக ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்தார்களோ, அவர்களுடைய பங்கு விகிதாச்சாரம் கொடுக்க முன்வர வேண்டும்; சிறுபான்மையான சைவனும், பார்ப்பானும், கிறிஸ்தவனும் தனது விகிதாச்சாரத்திற்கு மேல் அனுபவிக்கவும், ஆதரவு கொடுக்கிற பெரும்பான்மையான மக்கள் தங்கள் விகிதாச்சாரத்திற்குப் பல மடங்கு குறைவாக அனுபவிக்கவுமான நிலையை மாற்ற வேண்டும். அவரவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்பப் பதவி, உத்தியோகங்கள், உரிமைகள் வழங்க முன்வரவேண்டும். இது தான் யோக்கியமான ஜனநாயகப் பண்பாகும்.

நம் நாட்டிலிருக்கிற போலீஸ் வேலை அத்தனையையும் சப்-இன்ஸ்பெக்டர் வரை, ஆதிதிராவிடர் களுக்கே கொடுக்க வேண்டும். மற்ற எவனையும் அதில் உள்ளே நுழைய விடக் கூடாது. அப்படிச் செய்தால் தீண்டாமை இழிவு தானே நீக்கப்படும். உயர் சாதிக்காரன் என்பவன் தானாகவே மரியாதை கொடுக்க ஆரம்பித்து விடுவான். அரசாங்கம் வெற்றி பெற்றதற்கு நீதி செலுத்த வேண்டுமானால் ஓட்டளித்த மக்களுக்கு நீதி காட்ட வேண்டும். காங்கிரஸ் ஏன் தொலைந்தது? ஏன் சாகிற மாதிரி இழுத்துக் கொண்டு கிடக்கிறது என்றால், அது பதவியில் இருக்கும்போது மிக ஆணவத்தோடு, பதவி- உத்தியோகங்களை எல்லாம் தனக்கு ஓட்டளித்த பெரும் பான்மையான மக்களுக்குக் கொடுக்காமல், சிறுபான்மையான பார்ப்பான், சைவன், கிறிஸ்தவன் என்று தேடிப்பார்த்துக் கொடுத்ததாலேயே ஆகும். அத்தோடு ஓட்டுப் போட்ட பெரும்பான்மையான மக் களை மதிக்காததாலேயே ஆகும்.இந்த ஆட்சியும் அதுபோல் நடந்து கொள்ள முன்வந்தால், அதன் கதிதான் இதற்கும் ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

மற்றொரு மகிழ்ச்சிக்குரிய சேதி என்னவென்றால், நம் இன்றைய ஆட்சியானது சென்னை அய்க் கோர்ட்டுக்கு இப்போது ஒரு தமிழரை சீஃப் ஜட்ஜாக- பிரதம நீதிபதியாகப் போட்டிருக்கின்றது. இது பாராட்டக் கூடியதாகும். அவர் எப்போதோ வந்திருக்க வேண்டியவர்; முன்னிருந்த ஆட்சியினால் இவர் வேண்டு மென்றே புறக்கணிக்கப்பட்டவர் ஆவார். தமிழ்நாட்டில் அய்க்கோர்ட் ஏற்பட்டு 107 வருடங்கள் ஆகின்றன. அதற்கு இப்போதுதான் ஒரு தமிழர் சீஃப் ஜஸ்டிஸ் ஆக வரமுடிந்தது! இதுவரை இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். இல்லாவிட்டால் மலையாளி, கிறிஸ்தவர், முஸ்லிம் , கன்னடக்காரர், ஆந்திராக்காரர் என்று இருந்தார்களே ஒழிய, தமிழர் எவரும் சீஃப் ஜஸ்டிஸாக இருந்தது கிடையாது. நம் நாட்டிற்கு ஒரு தமிழர்- தமிழ் நாட்டினர் அய்க் கோர்ட் தலைமை நீதிபதியானது பாராட்டுக்கு உரியதாகும். நம் கோர்ட்டுகளின் நீதி நிலை மிகமிக மானக்கேடானதும், கொடுமையானதுமாகும். ஒரு கேஸ் முடிய 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. என்னுடைய கேஸே 4, 5, ஏழுட்டு வருஷங்களாக முடிவு பெறாமல் நடந்து கொண்டிருக்கிறது என்றால், மற்றச் சாதாரண ஏழை, எளிய, பாமர மக்களுடைய நிலை எப்படி இருக் கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் நீதி கெட்டதற்கும், புரட்டு, பித்தாலட்டம் அதிகமான தற்கும் மக்களிடையே நாணயம், ஒழுக்கம் கெட்டதற்கும் காரணம் இந்தக் கோர்ட்டுகளே ஆகும்.

நம் கோர்ட்டுகள் குச்சுக்காரி வீடுகளை விட, சூதாடும் இடங்களை விட மகாமோசமானவை ஆகும். இந்தக் கோர்ட்டுகளில் யோக்கியனுக்கு நீதிக்கு இடமில்லை; அவை அயோக்கியர்களுக்கே வெறும் புகலிடமாகி விட்டன.

மற்றும் இந்த நாடு 4 கோடி மக்களைக் கொண்ட, தென்மேற்கில் சுமார் 500 மைல் நீளமுள்ள நாடாகும். இப்படிப்பட்ட இந்த நாட்டிற்கு ஒரே இடத்தில் ஒரே அய்க்கோர்ட் இருப்பது, மக்களுக்குப் பெரிய அசவுகரியமாகும்; குறைந்தது இரண்டு அய்க்கோர்ட்டுகளாவது வைக்கவேண்டும். அதாவது மற்றொரு அய்க்கோர்ட் மதுரையிலாவது, திருச்சியிலாவது, கோவையிலாவது வைக்க வேண்டும்; ஒரே ஒரு அய்க்கோர்ட் சென்னையில் மட்டும் இருப்பதால், கன்னியாகுமரியிலே இருக்கிறவன் நீதிபெற வேண்டுமானால், 450 மைல் கடந்து போக்குவரத்துக்கு 75 ரூபாய் செலவு, செய்து 2 நாள், 4 நாள் மெனக்கெட்டுக் கொண்டு வரவேண் டியிருக்கிறது. இது ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல 5, 6 தடவை யாகும். இது ஏழை, எளிய, பாமர மக்களால் எப்படி இவ்வளவு தூரம் செலவு செய்து கொண்டு வர முடியும்?

வக்கீல்கள் இடித் தொல்லை, பீசு தொல்லை, குமாஸ்தாக்கள்- அபிட விட்கள் தொல்லை வேறு; பணக்கார னுக்குக் கவலையில்லை அவனால் எவ்வளவு தூரமானாலும், செலவா னாலும் முடியும். ஏழைகளால் எப்படி முடியும்?

நமக்கு இன்னொரு கேடு என்ன வென்றால், சுப்ரீம்கோர்ட் டில்லியில் இருப்பதாகும். 2000 மைல்களுக்கு அப்பால் சென்று நீதிபெற வேண்டு மானால், அது பணக்காரன் ஒரு வனால் தான் முடியும். அதுவும் பெரிதும் அயோக்கியர்களுக்குத் தான் வசதி அளிப்பதாகும். ஏழைகளால் முடியாது. எனவே பணக்காரனுக்கும், அயோக்கியனுக்கும் அனுகூலமானதாகத் தான் இருக் கிறதே ஒழிய, ஏழை, எளிய, பாமர மக்களுக்கு நீதி கிடைக்க வழி யில்லை. இதை உணர்ந்து இந்த அய்க்கோர்ட் தலைமை நீதிபதி ஏதாவது செய்வார் என்று நினைக் கின்றேன்.இன்னொரு காரியம் என்ன செய்ய வேண்டும் என்றால், செய் வார்களோ- செய்யமாட்டார்களோ, ஆனால் செய்ய வேண்டியது அவசியமாகும் என்பது எனது கருத்து.

அதாவது ஒரு ஊருக்கு ஒரு கோர்ட் தான் இருக்க வேண்டும். ஒரு கோர்ட்டுக்கு மேல் ஒரு ஊரில் இருக்கக்கூடாது. எதற்காக ஒரே ஊரில் 2, 3 சப்-கோர்ட்டுகள், 2, 3 முனுசீஃப் கோர்ட்டுகள், அடிஷனல் கோர்ட்டுகள், சப்-கோர்ட்டுகள் என்று ஒரே ஊரில் பல கோர்ட்டுகள் இருக்க வேண்டும்? வெளியூரில் இருப்பவன் இதற்காகச் செலவு செய்து கொண்டும் மற்ற ஊருக்கு வரவேண்டும்? இவை அந்தந்த தாலூக்காக்களில் மத்திய இடங்களில் கோர்ட்டு இருந்தால், குறைந்த செலவில், எளிதான போக்குவரத்தில் நீதி கிடைக்கும். ஏழை, எளிய, பாமர மக்களுக்கும் வசதியாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட ஊரில் இருப்பதால் பணக்காரன் செலவு செய்து கொண்டு வந்து விடுகின்றான்; ஏழையால் அவ்வளவு செலவு செய்து கொண்டு வரமுடியாமல் போவதோடு, அவர் களுக்கு நீதியும் கிடைப்பதில்லை. மற்றும் ஒரு கேடு என்னவென்றால் வெளி ஊர்களில் இருக்கும் வக்கீல் களுக்குப் பீசு கொடுப்பதோடு, அப்பீல் கோர்ட்டில் உள்ள வக்கீல்களுக்கும் பீசு கொடுக்க வேண்டியி ருக்கிறது. வெளியூர் வக்கீலுக்கு, கிடைக்க வேண்டிய பீசு, அப்பீல் கோர்ட்டு உள்ள ஊர் வக்கீல்கள் அடைகிறார்கள். இது மொபசல் வக்கீல்களுக்கு அநியாய நட்டமாகும்.உடனுக்குடன் வழக்கு முடிவடையாததற்கும் இது ஒரு காரணமாகும். வக்கீல்களின் சூழ்ச்சி தான் வெளி இடங்களில் கோர்ட்டுகள் ஏற்படாததற்குக் காரணமாகும்.குறைந்தது மூன்று மாதத்திற்குள் கேசு பைசல் செய்யப்பட வேண்டு மென்று சட்டம் போட வேண்டும். அதற்கு ஏற்றப்படி விசாரணை முறை அமைக்கப்பட வேண்டும். அப்படி இல்லாததால் ஒருவன் கேஸ் போட் டால், அதை எடுக்க 2 மாதமாகிறது. பிறகு ஸ்டேட்மென்ட் இஷூ கொடுக்க 3 மாதம்; அதில் வாய்தா வேறு; இப்படி இழுத்துக் கொண்டே போவதால், இந்த முறைகள் சில வக்கீல்கள் பிழைப்பதற்கு உதவியாக இருக்கிறதே ஒழிய, நீதி கிடைக்க வழி இல்லாமல் போகிறது. நீதி கிடைக்க நாளாவதால் மக்களுக்குக் கோர்ட்டுகளின் மீது பயமில்லாமல் போய்விடுகிறது. நீதி சீக்கிரம் கிடைத்தால், மனிதனுக்குப் பயம் இருக்கும். நாளாவதால் எந்தக் காரி யத்தையும் துணிந்து செய்துவிட்டு, கோர்ட்டுக்கு போ, ``கோர்ட்டில் போடு பார்த்துக் கொள்ளலாம் என் கின்றான். நீதி கிடைக்க நாளாவதால் மக்களிடையே ஒழுக்கம், நாணயம், நேர்மை என்பது இல்லாமல் போய் விடுகிறது. எந்த ஒழுக்கக்கேடான, நாணயக் கேடான, நேர்மைக் கேடான காரியத்தையும் செய்ய மனிதன் பயப்படுவது கிடையாது. இதையெல்லாம் இப்போது வந்திருக்கிற புதிய ஜட்ஜ்- பார்ப்பனரல்லாத தமிழ் ஜட்ஜ் கவனிப்பார் என்று கருதுகின்றேன்.

1.5.1969  அன்று சென்னை - திருவல்லிக்கேணியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு