Sunday 17 September 2017

தந்தை பெரியார் 95-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 95-வது பிறந்தநாள் செய்தி


எனது பிறந்தநாள் செய்தி
எனது 95ம் ஆண்டு பிறந்தநாள் துவக்கத்துக்கு வழமைபோல் ஆண்டு மலரில் ஒரு கட்டுரை எழுதவேண்டி யிருக்கிறது. அதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன். அப்படி எழுதப்படும் இக்கட்டுரை என்னால் ஆண்டு மலர்களுக்கு எழுதப்படும் கட்டுரைகளில் இதுவே கடைசியான கட்டுரையாக இருந்தாலும் இருக்கலாம் . ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால், அடுத்த ஆண்டு மலர் எழுதப்பட வேண்டிய காலத்தில் நான் இருப்பேனோ, இல்லையோ என்கிற பிரச்னை மாத்திரமல்லாமல், எழுதும்படியான வாய்ப்பு இருக்குமோ, இருக்காதோ என்பதே முக்கிய காரியமாகும்.
ஏனெனில், இன்னும் நாம் இருப்பது போலவே அதாவது, இந்திய ஆட்சி என்பதற்குள் பிரஜையாகவும், சமுதாயத்தில் நாலாஞ் சாதி (சூத்திர மக்களாகவும்) சட்டப்படி, சாஸ்திரப்படி பார்ப்பானின் தாசி மகன் என்னும் பெயருடன் நமது தாய்மார்கள் பார்ப்பானின் தாசிகளாவும் இருக்கும் தன்மையாலேயே இருப்போமா என்கின்ற கருத்தைக்கொண்டே இப்படி எழுதுகிறேன்.
நம்மில் பலர் சிறையில் இருக்க நேரிடலாம்

இந்திய அரசியல் சட்டப்படி நாம் இந்திய ஆட்சியில் பிரஜையாக இருக்கும் வரை இந்துவாய் அதாவது, கிறிஸ்துவனாகவோ, முஸ்லீமாகவோ நாம் மதம் மாற்றிக் கொள்ளாதவரை நாம் நமது பண்டார சன்னதிகள் உட்பட பவுத்தனுக்கும், ஜெயினனுக்கும் சமானாக இருக்கும்படியாக இருந்தாலும் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், வேறு எந்தப் பெயரில் வாழ்ந்து வருவபவனாக இருந்தாலும் சூத்திரர்களாகத்தான், பார்ப்பானின், தாசி மகனாகத்தான் இருந்தாக வேண்டும்.
இது தான் இன்றைய இந்திய அரசியல் சட்டமாகும். இந்த சட்டத்தைப் திருத்தவோ மற்றவோ நம் மக்களுக்கு ஒருநாளும் சக்தியோ, உரிமையோ ஏற்படும் என்று கருதவே முடியாத
நிலையில் இருக்கிறோம். அதுமாத்திரமல்லாமல் இந்திய ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை விலக்கிக்கொள்ள முயற்சி செய்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயமான-நிர்பந்தமான நிலையில் இருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் இந்திய ஆட்சியிலிருந்து விலகிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமா என்பது பற்றி நமக்கு முடிவு செய்துகொள்ள முடியாமல் இருந்தாலும் இம்முயற்சியில் நாம் பலர் சிறையில் இருக்க நேரிடலாம் என்கிறதாலேயே தான் இந்தப்படி எழுதுகிறேன்.

உடனடியாக விடுதலை முயற்சியில் ஈடுபடவேண்டும்

நமக்கு இன்றைய இந்திய ஆட்சியில் அரசியல் பிரச்னை எப்படி இருந்தாலும், சமுதாயப் பிரச்னையில் நாம் இன்று இருக்கும் இழிதன்மையில் இருந்து, அதாவது சூத்திரனாக, தாசி மகனாக நம் தாய்மார்கள் தாசிகளாக சட்டப்படி, சாத்திரப்படி இருக்கும் நிலைமையை மாற்றிக்கொள்ள முயற்சிக்காமல் நாம் இருக்க முடியுமா ?
இந்தியாவில் நாம் இருக்கும் வரை இந்துவாகத்தான் இருந்து ஆகவேண்டும். இந்து என்றாலே, முஸ்லீம், கிறிஸ்துவம் தவிர மற்ற யாவருமே சூத்திரர் தாசிமக்கள் தான் என்று இருப்பதால், ஏதாவது முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.
நம் மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள். மதம் மாறுவதை இழிவாய்க கருதுபவர்களாவார்கள்.
ஆதலால் நாம் உடனடியாக விடுதலை அதாவது இந்தியக் கூட்டாச்சியிலிருந்து விலகி சுதந்திரத் தமிழ் நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம்முயற்சிக்கு இன்றைய நம் தி.மு.க. ஆட்சி இணங்கும் என்று கருதமுடியாது. ஏனெனில், தி.மு.க. ஆட்சி விரும்புவதெல்லாம் இந்திய கூட்டாச்சி ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுயாட்சி தான் அது விரும்புகிறது.
மாகாண சுயாட்சி என்றால், அரசியலில் தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு காரியமும் செய்ய முடியாது.

இந்து என்றால் சட்டப்படியான விளக்கம்
இந்திய அரசியல் சட்டத்தில் சமுதாய (மத) சம்பந்தமான காரியங்களைப் பற்றி பழைய மனுதர்ம நிலையை மிகமிகப் பலப்படுத்திக் கொண்டபடியிருக்கிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமானால், கர்ப்பகிரகத்திற்குள் சூத்திரன், அதாவது பண்டார சன்னமி உட்பட இந்து என்ற தலைப்பில் வரும் எவருமே, பார்ப்பான் தவிர்த்து எவருமே செல்ல முடியாதென்று உயர்நீதி (சுப்ரீம்) மன்ற தீர்ப்பு இருப்பதினாலும், இன்னும் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கென்று போகும் யாருமே தீண்டத்தகாதவர்கள் போல் வாயில்படிக்கு வெளியில்தான் எட்டி நிற்கவேண்டும் என்றால், மற்றபடி எதில் நாம் மாறுதலைக் காணமுடியும் ?
இதை அமுலில் இருக்கும் இந்து லா என்னும் சட்டத்திலும், பல உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பிலும், பார்ப்பனரல்லாத இந்து மக்கள் என்பவர்களைக் மிகமிக இழிவாகக் கூறி, நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இந்து என்னும் சொல்லுக்கு சட்டத்தில் கொடுத்திருக்கும் விளக்கம் என்னவென்றால்கிறிஸ்துவர்கள்-முஸ்லீம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள் ஆவார்கள்இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று ஆகிவிடுகிறார்கள்.

சுயமரியாதை இயக்கத்தின் 50 வருட சாதனை

நான் முதலில், நான் இந்து அல்ல என்று சொல்லிவிட்டால் இழிவு நீங்கிவிடும் என்று தானட கருதினேன். பிறகு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் தவிர்த்த, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள்-இந்துக்கள் என்றால் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. ஆதலாலேயே தீவிர முயற்சி எடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
இன்று நம் நாட்டில் இந்துக்கள் எல்லோருக்குமே அரசியலில்தான் முக்கியகவனம் இருக்கிறது. அன்றியும் நாட்டுப் பிரிவினை என்றால், எல்லா மக்களுமே பயப்படுகிறார்கள். காரணம் பதவி கிடைக்காதே என்கின்ற காரணம் மாத்திரமல்லாமல், சிறைக்குச் செல்ல வேண்டுமே என்று பயப்படு கிறார்கள், 50 வருட காலமாக சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு-பல பதவி உத்தியோகம் பெற நேர்ந்ததோடு அரசியலில் பார்ப்பனர் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்கிற்று என்பதல்லாமல் சமுதாயத் துறையில் உள்ள அடிப்படை இழிவு நல்ல அளவுக்கு பலம் பெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பதினாயிரக்கணக்கில் பாட்ஜிக்கு ஆர்டர்

எனவே, நாம் சட்டத்தைப் பற்றி பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும், சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்துகொண்டு முன்வர வேண்டியது ஒவவொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்
என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். புதினாயிரக் கணக்கில் பாட்ஜிக்கு ஆர்டர் கொடுத்து தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல் (கூப்பாடாக)லாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொது மக்களே ! இளைஞர்களே ! பள்ளி, கல்லூரி மாணவர்களே !மாணவிகளே ! 

உறுதி கொள்ளுங்கள் !

உறுதி கொள்ளுங்கள் !!
உறுதி கொள்ளுங்கள் !!!.

ஈவெராமசாமி

No comments:

Post a Comment